ஞாயிறு, 26 ஜனவரி, 2014

அமைதியாக பயணிப்பவர்களில் ஒருவர் ...

குதிகாலைத் தாண்டி மேல் எழும்பிய வெடிப்புகள் நிறைந்த பாதங்கள், தார் சாலையில் கொதித்துக் கொண்டிருந்த வெயிலைப் பொருட்படுத்தாமல் நிதானமாக நின்று கொண்டிருந்தன. மேல மாசி வீதியில் உள்ள ஒரு கடையின் முன்பாக காபி குடித்துக் கொண்டிருந்த பொழுது அவரைப் பார்த்தேன். மிக சாதாரண ஒரு லுங்கியும், சற்று தொளதொளத்த சட்டையும் அணிந்து கொண்டிருந்தவரின் முகத்தில் நெற்றியை நிறைத்து விபூதி அப்பி இருந்தது. அந்த முகத்தில் அவர் ஒரு ஆழ்ந்த தியான நிலைக்கு சென்றது போன்ற அமைதி இருந்தது போல எனக்கு பட்டது. நிறுத்தப்பட்டிருந்த மிதிவண்டியின் பின்புறத்தில் சாமான்கள் வைத்துக் கட்டுவதற்காக அகலமாக பொருத்தப்பட்டிருந்த ஒரு பெரிய தகரப் பெட்டி சீட்டின் அடிப்பகுதியுடன் இணைத்து நைலான் கயிறால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. திறந்திருந்த மேல் புறத்தின் வழியே ஒவ்வொரு துண்டு கேக் ஆக எடுத்து இடது கையில், தன் உடலோடு ஒட்டியாவாறு பிடித்திருந்த கண்ணாடி பாட்டிலில் நேர்த்தியாக அடுக்கிக் கொண்டிருந்தார். எண்ணிக்கொண்டே இருப்பது அவரது உதட்டின் முணுமுணுப்பில் தெரிந்தாலும், கைகள், பாட்டிலின் வெளிப்புறம் அழகாக தெரிவதற்காக ஒன்று விட்டு விட்டு அடுக்கி, மேல்புறம் வரை வந்ததும், சுற்றி பாதுகாப்பாக வைத்த கேக்குகளின் உட்புறத்தில் பாதி வரும் வரை அடுக்கி விட்டு, பெட்டியின் இன்னொரு புறத்தில் இருந்த மூடியால் நன்றாக மூடிவிட்டு, இந்தப் பெட்டியையும் அடைத்து விட்டு  பாட்டிலை டீக்கடையில் கொடுத்தார். எண்ணிக்கையை மேலோட்டமாக சரி பார்த்தக் கடைக்காரர் இரண்டு நோட்டுகளை மட்டும் நீட்டினார். எதுவும் பதில் பேசாமல், வாங்கியவற்றை சட்டைப் பையில் நிதானமாக திணித்து விட்டு, அங்கிருந்து எடுத்த ஒரு சின்ன குறிப்பேட்டில் ஏதோ எழுதி மீண்டும் பையில் போட்டுக்கொண்டார். ஸ்டாண்டை எடுத்துவிட்டு, இடது காலால் இரண்டு முறை பெடலை அழுத்தி, முன் புறம் நோக்கி வலதுகாலை தூக்கிப்போட்டு மெதுவாக அழுத்தத் துவங்கிய மிதி வண்டியுடன் எண்ணிக்கையற்ற வண்டிகள் பயணிக்கும் சாலையில் கலந்து நிமிடங்களில் பார்வையில் இருந்து மறைந்தும் போனார்.

அலுத்தும் சலித்தும் கொள்ள எதுவுமற்றது போல அமைதியின் உருவமாக இருந்த அவரின் முகம், செயல்கள் ஏதேதோ சொல்லி செல்வது போல இருந்தன.
மிக சாதாரண வேலையை அத்தனை நிறைவாக செய்து முடித்து, குறை என்று எதையும் அலுத்துக் கொள்ளாத அல்லது முகத்தில் காட்டிக் கொள்ளாத அந்த மனதுடன் பேசி இருந்தாலும், நிச்சயம் பணி சார்ந்து எந்த சலிப்பும்  சொல்லாமல் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

வீட்டில் தன்னை சார்ந்து உள்ளவர்களின் தேவை, அவற்றை நிறைவேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு, அதன் காரணமாக சீராக ஏதேனும் ஒரு வருவாயின் தேவையே இவரை அத்தனை ஈடுபாட்டோடு ரசித்து இந்தப் பணியை செய்ய வைத்திருக்கலாம். அதற்கு அடுத்து என்று வாழ்க்கையில் பெரிதாக முன்னேறாமல், தேங்கிப் போய் விடுகிறார்களோ என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், குறைந்தபட்ச தேவைகளைக் கூட சரிவர பெற்றுக் கொள்ளாதவர்களாக கவலையுடன் பார்க்கத் தோன்றினாலும், எத்தனைக் கொட்டிக் கிடந்தாலும் நிம்மதி இல்லை என்று சலித்துக் கொள்பவர்களுக்கு இடையில்  கைகூப்பித் தொழ தோன்றும் மனிதர்களாகவே இவர் போன்றவர்கள் தெரிகிறார்கள்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

ஒரு வாழை மரத்தின் கதை!


தேனியிலிருந்து நண்பர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வாழைக்கன்றின் கிழங்குகள் இரண்டு ராம் & வருணால், அம்மா வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் நடுவே காய்கறிக்கழிவு கொட்டப்படும் இடத்தில் ஊன்றி வைக்கப்பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக நல்ல இடைவெளியில் வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று ஒரு அதிகாலையில் மண்ணை முட்டி மேலே தலையைக் காட்டிய நாளில் குடும்பமே குதூகலித்தோம். வாழைக்கன்று மெதுமெதுவாக இலைகளின் எண்ணிக்கையை கூட்டி செல்வதை ஒவ்வொரு நாளும்  ரசித்தோம். சுருட்டி இருக்கும் இலை விரிகின்ற பொழுது பளிச்சிடும் சற்றே வெளிறியப் பச்சை வண்ணத்தின் குளிர்ச்சியை கண்கள் வாங்கிக்கொள்ளும் நேரங்களில் மனமும் குளிர்ச்சியால் நிரம்பியது. மேலே இலைகளின் எண்ணிக்கைக் கூடக்கூட இளம்பச்சையிலிருந்து கரும்பச்சை பச்சை வரை பச்சையின் அனைத்து நிறப்பிரிவுகளுடன், நேர்த்தியான கோடுகளால் நிறைந்த வாழையிலைகளை  வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருப்பது தினசரி பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.


வீட்டின் நேர் பின்னால் வைத்த வாழை, முன்னதை விட படு வேகத்தில் உயரம் அதிகரிக்க அதன் வளர்ச்சியை பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்குள், அதை சுற்றி நான்கைந்து கன்றுகள் பாதுகாப்பாக வளர ஆரம்பித்திருந்தன. ஒரு மாதத்திற்கு முன்பு கிழக்கு திசையில் குலை தள்ளியிருந்தது. அத்தனைப் பெரிய வாழைப்பூவை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்த நாட்களில் விறுவிறுவென தானாகவே ஒவ்வொரு அடுக்கின் தோலும் உரிந்து கீழே விழே விழ, ஒவ்வொரு பூவும் காயாக மாறுவதை வெளியில் தெரியும் மாற்றத்தை வைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. பூக்களைப் பார்த்த மாத்திரத்தில் நேந்திரம் பழமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசை இருந்தாலும், ஒட்டுக்காச்சியாக இல்லாமல் கற்பூரவல்லி, பூவன், ரஸ்தாளி என்று எதுவாக இருந்தாலும் சரிதான் என்று எண்ணிக்கொண்டேன். வாழைப்பூவை சமையலுக்காக சுத்தம் செய்யும் பொழுது நீக்கும், நீண்ட நரம்பு உட்பட மெல்வதற்கு கடினமான இரண்டு  பகுதிகளையும் மரமே வெளியே தள்ளி, தன் காய்களின் உருவத்தை பெரிது படுத்திக் கொள்ளும் அழகை தினமும் பார்ப்பேன்.

முதல் மூன்று, நான்கு சீப்புகள் வந்திருந்த நிலையில், இப்பொழுது பூவை வெட்டி எடுக்காவிட்டால் காய் பெருக்காது என்று ராம், அரிவாளைத் தேடிக்கொண்டிருக்கையில், 'பெருக்காட்டியும் பரவாயில்ல, கொஞ்ச நாள் இப்படியே இருக்கட்டும்', என்று சொல்லித்  தடுத்தேன். பத்து சீப்புகள் எண்ணிக்கையில் கூடிய பிறகு, நான் பார்க்காத ஒரு நாளில் வேகமாக ஏறி பூவை வெட்டி கையில் கொடுத்த பொழுது,           ' இத்தனை வருஷம் கழிச்சு இந்த பூ தான் கொடுக்கத் தோனுச்சா,' என்று வம்பிழுத்தபடி, வெட்டியது வெட்டியாகிவிட்டது இனி பேசி என்ன செய்ய என்று அம்மாவிடம் கொடுத்து சமைக்க சொன்னேன். காலை, மாலை என இருவேளைகளில் தவறாது மரத்தைப் பார்வையிடும் என் அப்பா, யார் பூவை வெட்டியது என்று சிறிது வருத்தம் கலந்த கோபத்துடன் என்னிடம் கேட்டு பதிலைப் பெற்ற பிறகு, ' இன்னும் 3,4 சீப்புகள் வந்திருக்கும், அது போக சரியாக வெட்டததால் கடைசி 2,3 சீப்புகள் இப்பொழுதே கருக்க ஆரம்பிச்சிடுச்சு,' என்றார்.

இது வரை மாமனாரும், மருமகனும் நேருக்குநேராக இரண்டு வரிகள் பேசியது கூட இல்லை (இதற்கு பின்னால் அப்படி எந்த ஒரு வரி பிளாஷ் பேக் கூட இல்லை). இதை சாக்காக வைத்தாவது பேசிக்கொள்ளட்டும் என்றெண்ணி, 'நீங்களே நேரா கேளுங்க,' என்றேன் அப்பாவிடம். நேரில் கேட்பதை மட்டும் தவிர்த்து பார்க்கும் நேரங்களில் எல்லாம் இரண்டு நாட்களாக அம்மாவும் சேர்ந்து கொண்டு 'அவசரப்பட்டுட்டீங்க,' என்கிற ரீதியில் புகார் வாசித்துக் கொண்டிருந்தார். எப்படியும் இரண்டு பேரும் பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாக தெரிந்த பிறகு, அப்பாவை சமாதானப்படுத்த, 'எத்தனை சீப்பு வந்தாலும், வீட்டுக்கு அளவா வச்சிட்டு சுத்தி இருக்கவங்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் பிரிச்சுக் கொடுக்கப் போறீங்க, அதில எண்ணிக்கை கொஞ்சம் குறையப் போகுது, போயிட்டுப் போகுதுனு இதோட விடுங்க, அடுத்த வாழை குலை தள்ளுறப்போ கடைசிவரை பூவோடவே இருக்கட்டும், அதுக்கு நான் பொறுப்பு,' என்றேன். அம்மாவும், அப்பாவும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர். எப்படியோ நான்கைந்து நாட்களாக, வாழைப்பூவை தவிர்த்த இயல்பான பேச்சிற்கு திரும்பி விட்டோம். வாழை மரங்களும் தங்களைப் பற்றிய ஒரே கதையை கேட்டுக் கொண்டிருந்ததில் தங்கள் இலைகளை தாங்களே மனம் போல கிழித்துக் கொண்டே இருப்பதை குறைத்து, சுற்றியிருந்த கன்றுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.  :)
 








புதன், 1 ஜனவரி, 2014

கடந்த சில நாட்களின், சில பக்கங்கள்...!

எது ஒன்றுடனும் இணைந்திருப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, அந்த ஒன்று இல்லாமலும் இயல்பாக நம்மால் இருக்க முடிகின்ற பொழுது அடையும் மகிழ்ச்சியின் அளவு முன்னதை விட அதிகம். அந்த வகையில், பேஸ்புக் இல்லாமல் இருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்பதை நடைமுறைப்படுத்திப் பார்க்க அவ்வப்பொழுது விடுப்பு எடுப்பது உண்டு. இந்த முறை எடுத்த நீள் விடுப்பில், குறுகிய வேகத்தில் நாட்கள் கடந்த சென்றது போல இருக்கிறது. கூழாங்கற்கள் இலக்கியச் சந்திப்பும், யானைமலைக்கு சென்ற பசுமை நடையும் ஒரே ஞாயிற்றுக்கிழமையில் அமைய, இரண்டிலும் கலந்து கொண்டே ஆரம்பமானது தற்காலிக விடுப்பு.

ஓரளவு நடைபயிற்சி, தேங்கிப்போய் இருந்த வீட்டு வேலைகள், பிடித்தப் பாடல்களைக் கேட்டல், கொஞ்சம் வாசிப்பு, வருடக்கணக்கில் பேசாமல் இருந்த சில உறவுகள் மற்றும் நட்புகள் உடன் மொபைல் உரையாடல்கள் மற்றும் நேரில் சந்தித்தல், கொஞ்சம் கோவில், கூடுதலாக வேடிக்கைப் பார்த்தக் கடைவீதி என்று நகர்ந்த நாட்களின் இறுதியில் மனதில் பின்னணி இசையாக கடந்த சில மாதங்களாக சோககீதம் இசைத்துக் கொண்டிருந்த குறுந்தகடுகளை, பல காகிதங்களை சுற்றி எளிதில் எட்டி எடுக்க முடியாத உயரத்தில் வைக்க முடிந்தது.

நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் சமையல் பதார்த்தங்களை விரும்பி செய்தேன். பழைய கோல நோட்டுகளை தூசி தட்டி எடுத்து, பெரியக் கோலங்களை வண்ணப்பொடிகளால் வாசலில்  வரைந்தேன். தொலைக்காட்சியில் நகைச்சுவை சானல்களை அதிசயமாகப் பார்த்தேன். ரசித்துப் பார்த்ததில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்திலிருந்து ஒளிபரப்பிய நகைச்சுவைக் காட்சி ஒன்றில், வகுப்பறையின் மேலிருந்து பார்க்கும் ஆசிரியையை கீழே தேநீர்க் கோப்பையுடன் திரும்பி சிவகார்த்திகேயன் பார்க்கையில் .... ஏ, தந்தானே தந்தானே தந்தானேனா தந்தானனா....... என்று குறுகிய நேரத்தில் ஒலித்த அந்தக் குரலும், இசையும் அப்படியே உள்ளே ஒட்டிக்கொண்டுவிட்டது. ( விஜய் சேதுபதி நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். :)  )

எங்கள் ஊரில் பொதுவாக எந்தப் பொருள் வாங்க வேண்டுமென்றாலும் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள வீதிகளிலேயே வாங்க வேண்டி இருக்கும். டவுன் ஹால் ரோடு போன்ற சற்று அகலமான வீதியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் பிடித்து விட்டால் போதும், நிதானமாக ஒவ்வொரு வீதியாக வலம் வரலாம். ஆனால் அது அத்தனை எளிதல்ல. பார்க்கிங்க்காக இடத்தைத் தேடும் நேரங்களில், இந்த நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ஊருக்குள்ளே ஷாப்பிங் செய்ய கிளம்புபவர்கள் நிலைமையை நினைத்து சிரித்துக் கொள்வேன்.
பெரும்பாலும், அதிக அளவு தங்கும் விடுதிகள் அமைந்திருப்பதாலும், ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருப்பதாலும், டவுன் ஹால் சாலையிலிருந்து, மேலக் கோபுர வாசல் வழியாக கோவிலுக்கு  செல்பவர்களின் எண்ணிக்கை, மற்ற கோபுர வாசல்களின் வழியாக செல்பவர்களை விட சற்று கூடுதலாக இருக்கும். ஒரு வேளை மிகக் குறுகலான அந்த வீதியும் அப்படி ஒரு தோற்றத்தைத் தந்திருக்கலாம். அதிலும் அத்தனை வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. எதிரில் வருபவர்களை இடிக்காமல் சென்றால் பெரிய ஆச்சர்யம் தான். கோவிலை சுற்றி உள்ள நான்கு சித்திரை வீதிகளில் அனைத்து வாகனங்களையும் தடை செய்தது போல, மேல கோபுர வாசல் போல முக்கிய அதே நேரம் குறுகலான வீதிகளிலும் வாகனப் போக்குவரத்தை தடை செய்யலாம், முடியாதபட்சத்தில், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் மட்டுமாவது தடை செய்யலாம். அவ்வளவாக அதிகம் புழங்காத வீதிகளை வாகனங்களை நிறுத்துவதற்கான பகுதியாக முற்றிலும் மாற்றலாம். (மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை கவனத்திற்கு... )

மேலக் கோபுர வீதியில் பாப்லி பிரதர்ஸ் என்ற விளையாட்டு சாமான்கள் விற்கும் கடை இருக்கிறது. சற்று விலை கூடுதலாக இருந்தாலும், தரமானவையாக இருக்கும் என்பதற்காக எப்பொழுதேனும் அங்கு செல்வதுண்டு. சென்ற வருடம் வாங்கிய கூடைப் பந்து விளையாடுவதற்காக சுவற்றிலேயே பொருத்திக் கொள்ள கூடையுடன் கூடிய பந்தும், பெரிய அளவில் சேதாரமில்லாமல் இன்று வரை நன்றாக இருக்கிறது. வருண் வீட்டில் தனியாக விளையாட இது போன்ற பொருட்களை விரும்பியே வாங்கித் தருவதுண்டு. அந்த வகையில் பாக்ஸிங் கிட் முன்னமே கேட்டு இருந்தான். உள்ளே ஏதேதோ வைத்து அடைக்கப் பட்ட மூட்டையை, க்ளாம்ப் அடித்து தொங்க விட்டு, கை உறைகளை மாட்டிக் கொண்டு இருக்கிற, வருகிற கோபத்தை எல்லாம் முறுக்கிய கைகளுக்கு கொண்டு வந்து, அந்த மூட்டைக்கு வேகவேகமாக ஓங்கிக் கடத்த வேண்டும். கூடுதல் டிப், இப்படி பெரியவர்களும் கோபத்தைக் கடத்தி ரிலாக்ஸ் ஆகலாமாம்.

கடந்த சில நாட்களாக பிடித்தப் பாடல்களை அலறவிடாமல் கேட்பதும், மற்றவர்கள் எத்தனை சத்தமாக தொலைக்காட்சியைப் பார்த்தாலும் எந்த எதிர் குரலும் எழுப்பாமல் இருப்பதுவும், சாலையில் பயணிக்கையில் மிக நிதானமான வேகத்தில் யாரிடமும் திட்டு வாங்காமல், யாரையும் திட்டாமல் பயணித்ததும், அமைதியாக இருந்த என்னை முற்றிலும் மாறிப்போனவளாக எண்ண வைத்திருக்கும் போலும். 


தொடர்ச்சியாக வந்த இருமலைக் கட்டுப் படுத்த முடியாமல் சத்தமாக அடிவயிற்றிலிருந்து எடுத்து இருமிக் கொண்டிருந்ததைப் பார்த்த ராம், 'இப்படி சத்தமா இருமக்கூடாது, அப்படி இருமல் வந்தா வாயை மூடிட்டு இருமனும்', என்றதும் அப்போ நமக்கு இருமல் இருப்பது பிரச்சனை இல்லை, ஆனால் அது வெளியே தெரிவது தான் பிரச்சனை என்ற ஸ்டேடசை நேற்று  உடனடியாக இங்கு பதிய முடியாமல், என்னால் என்ன செய்ய முடியும் என்று மூச்சை ஆழ்ந்து இழுத்து யோசித்தேன். சைகையில் அருகில் வரும்படி சொல்லி, சற்று குனிய சொல்லி காதின் அருகிலே இயன்ற அளவு பலமாக சத்தமாக இருமினேன். திரும்பி முறைத்த முறைப்பை திருப்தியாக ரசித்துவிட்டு வலது கை கட்டை விரலைத் தூக்கி காட்டிவிட்டு கடைக்கு வெளியில் வந்து நின்றேன். எங்கே சென்றாலும் திரும்பும் வீடாக....... எத்தனை உணர்வுகள் வந்து சென்றாலும் மீண்டும் நமக்கே உரிய இயல்பு நிலைக்குத் திரும்புதல் சௌகர்யமாக இருக்கிறது

கலவையானப் பக்கங்களாக சென்ற இந்த நாட்கள், என்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவின. மிக இலகுவான மனதுடன், புத்துணர்வுடன், உங்கள் கரங்களைக் குலுக்கி, முழுமையான மனதுடன் இந்த 2014, அனைவருக்கும் நிம்மதியாக  அமைய  வாழ்த்துகிறேன்!