வெள்ளி, 28 மார்ச், 2014

சேது...

சேது... நினைவு தெரிந்த நாளிலிருந்தே பிடித்துப் போன ஒரு பெயர்.
இந்தப்  பெயரில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் எங்கேயோ எதன் காரணமாகவோ அல்லது காரணமேயின்றியும் கூட  எனக்குள் புதைந்து போயிருக்கலாம்.

மகன் பிறந்திருக்கிறான் என்றவுடன், அவனுக்கானப் பெயரைத் தேர்ந்தெடுக்கையில் வருண் என்ற பெயருக்கு இணையாக சேது என்ற பெயரும் விருப்பத்திற்குரியதாய்  இருந்திருக்கிறது.

உச்சரிக்கவே அழகாக இருக்கும் பெயராக தெரிகிறது. வாய்விட்டு மகிழ்ச்சியோடு கூப்பிடுவதற்கு என யாருமில்லை. சமயங்களில், வருணிலிருந்து பிடித்தவர்கள் சிலரை பொதுவாக அழைக்க பொதுப் பெயராக "சேது" என கூப்பிடலாம் என்று கிறுக்குத்தனமாக கூட தோன்றியது உண்டு.. :)

நான் நேரிலே பார்த்திராத, அப்பாவின் இரண்டாவது அண்ணன், அவரது இருபத்தாறாவது  வயதிலேயே மறைந்து விட்டார். அவரின்  பெயர் சேதுராமன்.

பனிரெண்டாம் வகுப்பில் ஒரு திருப்புதல் தேர்வை முடித்துவிட்டு, தாத்தா இறந்துவிட்டதாக வந்த மரண செய்தியைக் கேட்டு, மதியமே விரைந்து சென்று பார்த்த அம்மாவின் அப்பா பெயரும் சேது ராமன். (இந்த தாத்தா சற்று  தொலைவில் வசித்து வந்ததால், பார்த்துப் பழகிய நேரங்கள் குறைவே என்றாலும், மற்ற பேரன், பேத்திகளைப் போல சமமான அன்பையே எனக்கும் வழங்கி இருந்திருக்கிறார். ஏதோ ஒரு நாள் அம்மாவிடம் தாத்தா பேசுகையில், வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்ததில் புரிந்தது என்னவென்றால், என்னைப் பற்றிய அவரது அதிகபட்ச கவலையே இந்த உயரத்திற்கு மாப்பிள்ளைத் தேடணும் என்பதே)
பெரிய அளவில் இவர்கள் இருவரும் அகத்திற்குள் நெருங்காவிட்டாலும், இந்த பெயர் அதிகமாகப் பிடித்தே இருக்கிறது.


இறந்து போன இந்த இருவரைத் தவிர, சேது என்ற பெயரில் உறவோ, நட்போ இல்லை. ஆயினும், இந்தப் பெயர் இனம் புரியாத ஒரு வசீகரத் தன்மையோடு இருப்பதாகவே தோன்றுகிறது. இயக்குனர் பாலாவின், "சேது" படம் வெளியான மூன்றாவது நாளே, அந்தப் படம் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே, பெயருக்காக மட்டுமே மினிப்ரியா தியேட்டர் சென்று படம் பார்த்திருக்கிறேன்.


விஜய் டிவியில், ஒரு காலத்தில் மிமிக்ரி செய்து கொண்டிருந்தவர் பெயர் சேது என்று தெரிந்ததிலிருந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். மம்மூட்டி போல சேது பேசும் பொழுது, மம்மூட்டி பேசுவதை விட கேட்க நன்றாக இருக்கும். :)


அத்தனை எளிதில் நடிகர்களை கொண்டாடிப் பழகி இருக்காத எனக்கு, சமீபத்தில் அதிகமாய் பிடித்துப் போன நடிகர்களில் விஜய் சேதுபதி, வந்து சேர்ந்ததில், அவரது பெயரில் இருக்கும் சேதுவும் ஒரு காரணம் என்றால், அது பொய்யில்லை.

இதன் பின்னணியில் பலமான எந்த ஒரு காரணமும் இல்லை. இத்தனை வருடங்கள் கடந்தும், இந்தப் பெயரின் மீது இருந்த ஈர்ப்பு, அப்படியே உயிர்ப்போடு இன்றும் இருக்கிறது. இருக்கும் காலம் வரை, இவ்வீர்ப்பு தொடரும் என்ற நம்பிக்கையும் உண்டு.

மிரட்டும் வெயிலில், ஒரு கண்ணாடிக் கடையில் சில நிமிடங்கள்...!



அடிக்கிற வெயிலில், கண் கண்ணாடி விற்பனை செய்யும் கடையின்  உள்ளே நுழைந்ததும் பாய்ந்து சூழ்ந்து கொண்ட குளிர்ச்சியை, அதே வேகத்தில் அனுபவித்தவாறே தேர்ந்தெடுத்த நாற்காலிகளில் அமர்ந்தோம். மெல்லியப் புன்னகையின் ஊடே எங்களை வரவேற்றவாறே, என்ன மாதிரியான கண்ணாடி வேண்டும் என்று கேட்டார் கடைக்காரர்.

" கண்ணாடி போட்டு இருக்கதே தெரியக்கூடாத மாதிரி ஃப்ரேம் இருக்கணும் ", என்றதும் பதினைந்து வகைக்கும் மேற்பட்டக் கண்ணாடிகளை வரிசைப் படுத்தினார்.

" ஆனா, சைட் ல உள்ளக் கம்பி கொஞ்சம் பட்டையா இருக்கணும் ", என்றவுடன் பலவித வண்ணங்களில் பக்கவாட்டில் இலேசாக பட்டையாக உள்ள கண்ணாடிகளை அடுக்கினார்.


" கருப்பு இல்லாட்டி காப்பி கலர் ல தான் இருக்கணும்", சொன்னவுடன், மீண்டும் நான் கேட்ட வண்ணங்களில் தேர்ந்தெடுத்த சில கண்ணாடிகளை பிரித்து காண்பித்தார். அதில், சிறப்பாகத் தெரிந்ததை, கிட்டத்தட்ட ஏற்கனவே ராம் அணிந்திருந்தது போன்ற ஒன்றை தேர்ந்தெடுத்து அணிய சொன்னேன்.

" கண்ணாடி உங்களுக்கு இல்லையா?" என்று கேட்ட கடைக்காரரிடம்
" இருக்கிற ரெண்டு கூலர்ஸ் வச்சு இன்னும் பத்து வருஷம் ஓட்டிருவேன்", என்றேன்.

கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த ராமிடம்,
" சரி சார், உங்களுக்குப் பிடிச்சிருக்குல, அப்போ இதே கண்ணாடியை பேக் பண்ணிடலாமா?,",
" அதான் சொல்லிட்டாங்கல்ல, பில் கொண்டுவாங்க", என்றார்.


பில் கொண்டு வந்து கொடுத்த கடைக்காரரிடம், உரியத் தொகையைக் கொடுத்து, கண்ணாடிப் பெட்டியை வாங்கிய பிறகு,
" கண்ணாடி போட்டு இருக்கவங்க, கண்ணாடில அவங்க முகத்தை ஒரு நாளைக்கு 1,2 வாட்டி தான் பாப்பாங்க, மீதி நேரம் சுத்தி இருக்கவங்க/கூட இருக்கவங்க தானே பாக்கணும், அப்போ எங்க சாய்ஸ் தான் பர்ஸ்ட்", என சிரித்தவாறே சொன்னதிற்கு பலமாக சிரித்தார்.


கடையை விட்டு வெளியே வந்ததும்,
" இதே மாதிரி கண்ணாடி வேணும்னு வந்ததும் முதலேயே சொல்லியிருக்கலாம்ல", என்ற ராமிடம், " வெயில்ல அலைஞ்சு திரிஞ்சதில சரி டயர்ட், கூட்டமே இல்லாத இந்த கடைல ஒரு பத்து நிமிஷம் சில்லுனு ரிலாக்ஸ் செய்திட்டே, புதுசா வந்திருக்கிற மாடல் எல்லாம் ஒரு பார்வையும் பார்த்திட்டு நம்ம வேலையையும் முடிக்கத்தான் ", என்றேன்.


வெளியே வந்த சில நொடிகளிலேயே, அதெப்படி என்னிடமிருந்து தப்பிக்க முடியும் என ஆக்ரோஷத்துடன் வேகமாக பாய்ச்சிய வெயிலை, மெது மெதுவாக உடல் தாங்கிக் கொள்ளப் பழகிக்கொண்டிருந்தது. இன்னுமும் இரண்டு, மூன்று மாதங்கள் தொடரவும், அதிகரிக்கவும் தயாராயிருக்கிற வெப்பத்தை சமாளிக்கப் போவதை நினைத்து எழுந்த அச்சம், கூலர்ஸ் அணிந்த கண்களுக்குள் மிதந்தது. போக்குவரத்து நெரிசலில், சாலையில் பயணித்தவர்களிடம் பகிர்ந்து வாங்கிய வெக்கையுடன், வீடு வந்து சேர்ந்தோம்.