திங்கள், 23 ஜூன், 2014

ஒரு வார்த்தை - ஒவ்வொரு காலத்திலும் அர்த்தம் மாறும் விசித்திரம்!



ஒரு சில வார்த்தைகள், பலவித உணர்வுகளையும், செயல்களையும், அனுபவங்களையும், நம் நினைவுப் பரப்பில் சேமித்து வைத்திருக்கும். அவ்வார்த்தைகளை, விளக்கி எழுதினாலோ, பேசினாலோ எளிதில் முற்றுப் பெறாமல் நீண்டு கொண்டே போகும். அப்படிப்பட்ட வார்த்தைகளில், கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் ஈர்ப்பை ஏற்படுத்திய ஒரு வார்த்தை காதல்.



ஐந்தாம் வகுப்பில் வரும் ஆங்கிலப் பாடத்தை ஆசிரியையின் ஆணைக்கு இணங்க வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது இருந்த உற்சாகம், இரண்டாவது பத்தியில் இருந்த love என்ற சொல்லை உச்சரிக்க வேண்டி இருக்குமே என்று சரியாக அந்த வார்த்தைக்கு முன்பு பதட்டமாகி, அந்த சொல்லை மட்டும் விட்டுவிட்டு அதற்கடுத்த சொல்லில் இருந்து வாசிக்க, வகுப்பறையில் பலத்த சத்தம். ஒரு வார்த்தையை விட்டுவிட்டு வாசிக்கிறாள் என்று மற்ற மாணவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்த ஆசிரியை அப்பொழுது தான் கையிலிருந்த புத்தகத்தை நோட்டமிட்டார்.
எந்த சொல்லை விட்டாள் என்று கேட்டபடி வகுப்பைப் பார்த்தார். அதுவரை தயங்கி நின்று கொண்டிருந்த நான், எங்கே நீங்களே சொல்லுங்க பார்ப்போம் என்றேன். மெலிதான சிரிப்புகளும், குசுகுசு வென்று பேச்சுகளும் நீடித்த தொடர்ச்சியான நொடிகளை, ஆசிரியையின் அதட்டல் முடிவுக்குக் கொண்டு வந்தது. அப்படி என்ன வார்த்தை அது என்று மீண்டும் புத்தகத்தைப் பார்த்த பொழுது, ஒரு மாணவி மட்டும் எழுத்துகளை உச்சரித்தாள். இதுக்காகவா இவ்ளோ சத்தம், லவ் னு சொன்னா என்ன? அது அம்மா, அப்பா மேல நமக்கு இருக்கிற அன்புன்னு அர்த்தம் வர்ற இடத்தில இருந்து எல்லா இடத்துக்கும் பொருந்தும். என்று நீண்ட விளக்கம் அளித்தார். அத்தனை நெளிந்து தவிர்க்க வேண்டிய சொல் இல்லை என்ற எண்ணம் அந்த கணம் ஏற்பட்டது என்னவோ உண்மையே.

வீட்டில் இது போன்ற சொற்களுக்கு விளக்கம் கேட்டால், தெரிய வேண்டிய வயதில் தெரிந்து கொள் என்பது மட்டுமே பதிலாக  இருக்கும் என்பதால், இது சார்ந்த கேள்விகளைத் தவிர்த்திருக்கிறேன். அந்த வயதில் மிக அபூர்வமாக வீதிகளில் விழிகளால் பேசிக்கொள்ளும் ஒரு சில காதல் கதைகளை, சம்பந்தப்பட்டவர்களை விட அத்தனை வெட்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் வேடிக்கைப் பார்த்துள்ளோம். இவை பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்தலே அந்த நாட்களில் பெரிய  சுவாரசியத்தை அளிக்கும் ரகசியங்களாய் இருந்துள்ளன.
ஏழு, எட்டாவது படிக்கும் பொழுது, சித்ரகார், சித்ரமாலா என்று இரவு எட்டு மணிவாக்கில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் சில பாடல்களைப் பார்த்து விட்டு, ' அதெப்படி இத்தனை பேர் இருக்கிற இந்த பார்க்ல யாரையும் கண்டுக்காம ஹீரோ, ஹீரோயின் பாட்டெல்லாம் பாடி கை எல்லாம் பிடிச்சுக்கிறாங்க , நம்புறமாதிரியே இல்லியே ', என்றெல்லாம் பேசி உள்ளோம்.

பத்தாவது படிக்கையில் ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில் ஒரு மாணவியைத் தனியாக அழைத்த ஆசிரியை பேசிக்கொண்டிருந்ததில் தெரிந்தது, அவள் யாரையோ காதலித்துக் கொண்டிருப்பது. "சீ, அவள் மோசமானவ அதான் லவ் எல்லாம் பண்றா", என்று வகுப்பில் பெரும்பாலான மாணவிகள் அவளை ஒதுக்கி வைத்த பொழுது, நானும் அந்தக் கூட்டணியில் இருந்திருக்கிறேன்.

பதினோராம் வகுப்பின் ஆண்டு இறுதித் தேர்வு நேரத்தில் எனது வகுப்பை சேர்ந்திராத, ஹாக்கி விளையாட்டில் உடன் விளையாடிய தோழியான சத்யா, மாலை பயிற்சி முடிந்த நேரத்தில் தனியாகக் கூப்பிட்டு, தான் ஒருவனைக் காதலிப்பதாகக் கூறிய பொழுது, கோபம்  வருவதற்கு பதிலாக ஆள் சரியானவனா என்று மட்டும் பார்த்துக் கொள் என்பதை மட்டுமே நீண்ட நேர யோசிப்பிற்கு பின் பதிலாக சொல்ல முடிந்தது. மெது மெதுவாக ஒவ்வொரு வகுப்பிலும் இது போன்று சில மாணவிகள் இருந்ததை, அவர்கள் தாங்கள் காதலிக்கிறோம்/ காதலிக்கப்படுகிறோம் என்பது குறித்துப் பெருமையுடன் திரிந்ததை  பயமும், ஆர்வமும், கொஞ்சம் பொறாமையும் கலந்து வேடிக்கைப் பார்க்கிற பெரும்பான்மைக்  கூட்டத்திலேயே இருந்திருக்கிறேன்.


பனிரெண்டாம் வகுப்பில் ஆண்டுத்  தேர்வு நெருகிக் கொண்டிருக்கின்ற வேளையில், இருக்கின்ற சில முக்கிய  வீதிகள் மற்றும் ஒன்றிரண்டு சந்திக்கும் இடங்களை மட்டுமே கொண்ட மதுரையில் சுற்றிக் கொண்டிருந்த சத்யா, ஒரு நாள், அவள் காதலனுடன் வண்டியில் பயணிக்கையில் அவளது பெற்றோரால் நேரடியாக பார்க்கப்பட்டாள். அதற்கடுத்த நாள், கை, கால் என்று உடலின் பல பாகங்களிலும் ரத்தம் கன்றிப் போய் இருக்கும் அளவு அடிபட்டு, மதிய உணவு இடைவேளையில் தேடி வந்து, தேம்பியபடி கதை சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்து பரிதாபமாக இருந்தது.

வீட்டில் உள்ளோர் தன்னை அதிகப்படியாகக் கண்காணிப்பதையும், தான் மிரட்டிக் கொண்டிருந்த தங்கை எல்லாம் ஏளனமாக தன்னைப் பேசுவதாகவும் சொல்லி அழுதவள், ' என்ன இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தா ஒன்னு அவன் விட்டுருப்பான் இல்லாட்டி நானே விட்டிருப்பேன், அதுக்குள்ளே பெரிசா கண்டுபிடிச்ச மாதிரி இவிய்ங்க கொடுக்கிற டார்ச்சர் தாங்க முடியல', என்ற பொழுது என்னால் அதிர்ச்சியைக் கண்களில் காட்டாமல் தொடர்ச்சியாக கேட்க முடியவில்லை. பனிரெண்டாம் வகுப்பில் அதிகமாக நடத்தப்பட்ட வகுப்புத் தேர்வுகளில், திருத்தித் தரப்பட்ட பரீட்சைத் தாள்களுக்கு இடையே மறைத்து பைலில் அவளுக்கு வந்திருந்த காதல் கடிதங்கள் இருந்தன. ட்வைன் நூலால் கட்டப்பட்ட தேர்வு விடைத் தாள்களை விட கூடுதல் பக்கங்களைக் கொண்ட,  எழுத்துக்களின் ஆயுள் அத்தனைக் குறைவானதா என்று எனக்குள் மட்டும் கேள்வி எழுப்பிக் கொண்டேன்.

கல்லூரியில் சேர்ந்த பொழுது இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் உள்ள மாணவியர் இதில் விழுந்திருந்தனர். இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது, நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் கலந்து கொள்ள வந்த வேறொரு கல்லூரியை சேர்ந்த சுப்பிரமணி ஏதேனும் விவாதம் என்று வந்தால், அத்தனை விரக்தியாக தொடர்ந்து எதிர்த்துப் பேசுவான். என் உடன் படித்த தோழி கோகிலா மிக சாதாரண எளிய தோற்றம் உடையவள். சமயங்களில் தன் தோற்றம் குறித்துத் தாழ்வு மனப்பான்மையையும் பகிர்ந்துள்ளாள். அவளின் முகவரியை பதிவேட்டில் இருந்து குறித்துக் கொண்டு அவள் வீடு இருக்கும் வீதியில் தினந்தோறும் முகத்தைக் காட்டுவதை, தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக மாற்றி இருந்தான் சுப்பிரமணி. கோகிலா ஒவ்வொரு தினமும் பதட்டத்துடன், அவன் வந்து போனதை விவரிப்பாள். மெலிதாக உண்டான மகிழ்ச்சியை, அவள் கவனமாக, தவிர்ப்பது தெரிந்தது. ஒரு நாள் வழியை மறைத்து சுப்பிரமணி கொடுத்தான் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்து காண்பித்தாள். அழகாக அட்டைப் போட்டு முதல் பக்கத்தில் வண்ண வண்ணப் பூக்கள் வரையப்பட்டு அன்பு கோகிலாவிற்கு என்று இருந்தது.....
அடுத்தடுத்த பக்கங்களில் பெரிய பெரிய எழுத்துகளில் கவிதை என்ற பெயரில் எழுதித் தள்ளி இருந்தான்...

ஒன்றிரண்டு மட்டும் இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது.....
' எல்லா விதமான உடைகளும் பொருந்தும் ஒரே பெண் இந்த உலகத்திலேயே இவள் தான் என்று தொடங்கும் ஒரு கவிதையாவது மன்னித்து விடலாம்...... ஆனால்,
மதுரையின் புகழ் பெற்றக் கோவிலை சொல்லி....
கும்பிடுவதற்காக சென்றேன்
அங்கு தெய்வமில்லை
என்று ஆரம்பித்து
கோகிலா வீட்டின் எண், தெருவைக் குறிப்பிட்டு,
தெய்வம் இங்கு இடம் மாறி இருக்கிறது ....
என்பதை படித்து அனைவரும் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்தாலும், என்ன தைரியம் இருந்தால்  இவன் நம் கடவுளை எல்லாம் இழுப்பான் என்று லேசாக கோபமும் வந்தது.
கடைசியாக எழுதி இருந்த கவிதையில்
இவள் தான் தேவதை........ தேவதை தான் இவள் என்று முடித்திருந்த பொழுது..................
தேவதைகளுக்கான இலக்கணம் மெலிதாக புரியத் தொடங்கி இருந்தது. ஏதோ ஒரு நாளில் காதலிக்கத் தொடங்கியவர்கள், சேராமல் பிரிந்து போன பெருங்கூட்டத்தில் கடைசியில் சேர்ந்து போனார்கள்.
கல்லூரிக்குப்  பின் சில நாட்கள் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பொழுது அஸ்வினி பக்கத்திலிருந்து வகுப்பிற்கு ஆசிரியையாக இருந்தாள். காலை இடைவேளை, மதிய உணவு இடைவேளையின் பொழுது, குழந்தைகளை கவனித்துக் கொண்டே அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம், அவளின் தலை தரையை நோக்கியே இருக்கும். நிமிர்ந்திருக்கும் முகத்தைப் பார்க்கையில், வருத்தம், கவலை, எரிச்சல், இவற்றை எல்லாம் இவள் ஒருத்தி மட்டுமே இந்த உலகத்தில் குத்தகைக்கு எடுத்திருப்பது போல இருக்கும். ஒரு நாள் அஸ்வினியின் மதிய உணவு டப்பாவில் இருந்த உணவு கீழே கொட்டியிருந்ததை, அவள் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது, ' என் லஞ்ச் ஷேர் பண்ணிக்றீங்ளா?", என்று கேட்டதும், '  நோ, தேங்க்ஸ்', என்று லேசாக புன்னகைத்தாள். சில நாட்கள் கடந்து நட்பாகிய பிறகு அவள் பகிர்ந்தது, "அந்தமானில் குடியிருக்கையில் பக்கத்து வீட்டில் குடியிருந்த வட இந்தியனை காதலித்து இருக்கிறாள். அவன் வேலை விஷயமாக மும்பை சென்றிருக்கையில், அஸ்வினியை மிரட்டி, மதுரையில் உள்ள அத்தை, மாமா இருக்கும் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு சென்ற அவளது பெற்றோர், இன்னும், சில மாதங்களில் நிரந்தரமாக இங்கு வந்துவிடுவர். இந்தப் பள்ளிகூடத்திற்கும் கொண்டுவந்து விடுவது, பிறகு அழைத்து செல்வது அவளின் மாமா தான். மும்பையில் அவன் எங்கு இருக்கிறான் என்பதுவும் தெரியாமல், அவனின் அந்தமான் வீட்டிற்கு அழைத்த பொழுது, அவனுடைய அம்மா இனி தொடர்பு கொள்ளக் கூடாது என்று திட்டியதையும் அழுகையினூடே சொல்லி முடித்தாள். " 2,3 மாசம் தானே ஆகுது பிரிஞ்சு, இன்னும் 4,5 மாசம் போகட்டும், நீ வேணும்னு உறுதியா இருந்தா அந்தப் பையன் தேடி வருவான், இல்லாட்டி காலம் சரிப்படுத்திடும் உன்னை", என்றேன். சில நாட்களிலேயே வேலையை விட்டு விலகி விட்டேன். இரண்டு வருடங்கள் கழித்து அஸ்வினி அவளது திருமணப் பத்திரிகையை கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்தாள். பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளை பற்றி பெருமையாக ஓரிரு விஷயங்களை சொல்லிவிட்டு, மெலிதாக புன்னகைத்து விடைபெற்றாள். அழுது, புலம்பி குணமாகிய காயத்தின் வடுவை மறைக்க செய்த முயற்சி அந்தப் புன்னகையில் ஒளிந்திருந்து இருக்கலாம்.

இன்று பள்ளிக்கு செல்லும்  குழந்தைகள் கூட வெகு சாதாரணமாக புழங்கும் வார்த்தைகளில் ஒன்றாக லவ் என்ற சொல் மாறிவிட்டது. தெளிவான நிலையிலோ தெளிவற்ற நிலையிலோ  மனதில், உடலில் தோன்றும் மாற்றங்களை ஏற்று காதலாகி கசிந்து உருகியதெல்லாம், ஏதோ ஒன்றை அடைந்தபின், மெல்லிய முரண்பாடுகளைக் கூட சகிக்காமல் விலகியோ, சுற்றத்தில் எதிர்ப்பு வந்ததும்  பிரிந்து செல்வதையும்  நிறையப் பார்க்கிறோம். காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்த பின், அவர்களுக்குள் இருந்த காதலை தொலைத்தவர்களையும் பார்க்கிறோம். கூடுதல் புரிதலுக்கு இணையாக, சுயநலம் தூக்கலாக இருக்கும் இந்த தலைமுறையினருக்கு கூடுதல் விரைவாக அலுத்துப் போய் விடுகின்ற ஒன்றாக இந்த காதல் மாறி வருகிறதோ என்றும் தோன்றும்.

எது எப்படி எனினும்......
இரு புறங்களிலும்
ஒரே நேரத்தில் மலர்ந்து
ஒரே நேரத்தில் உதிரும்
பூக்களால்
துன்பங்கள் குறைவு .... என்பதை மறுக்க முடியாது.
சொல்வதை விட செயலில் காதலை நிரூபிக்கும் அரிய நல்லவர்கள், தங்கள் செயல்களின் மூலமாக முன்னுதாரணமாக வாழ்கின்றார்கள் என்பதையும் ஒத்துக் கொள்ளவேண்டும்.

ஏதேனும் இது போன்று ஒரு வார்த்தை தயங்கி உச்சரித்து, ஒரு கட்டத்தில் இயல்பாக உபயோகப்படுத்தப்படும் காலத்தில், சாதாரண வார்த்தையாகிவிடலாம். அத்தனை வேகமாக பிரியமான வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்தி, சாதாரண சொற்களாக்கி, களைத்துப் போய் அமர்ந்து இருக்கும் பொழுது, வேறொரு சொல்லுக்காக காத்திருக்கிறோமா என்றும் தெரியவில்லை.

ஒரே ஒரு வார்த்தை......
ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான அனுபவங்களை இன்று வரை என்னுள் நிறைத்துக் கொண்டே வருகிறது.

  (ஜூன் 1 - 15 ... குங்குமம் தோழியில் வெளியானது )

வியாழன், 12 ஜூன், 2014

"அரிதானது - அபாரமானது" - கிடைக்கும் வரையில் மட்டுமே!



எல்லா காலங்களிலும் ஒரு பொருள் தன் மீதான ஈர்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதென்பது கடினமே. நேற்றைக்குப் பிடித்தது, இன்றைக்குப் பிடிக்காமல் போகிற காலகட்டத்தில் இருக்கிறோம். ஏதேதோ காரணங்களால் கொண்டாடிய மனிதர்களை எளிதில் புறக்கணிப்பதை பார்க்கும் பொழுது, பொருட்கள் முக்கியத்துவம் இழந்து போதல் தேவலை என்றே தோன்றுகிறது. கண்களை அகல விரித்து காட்டிய ஆச்சர்யம், வேறொரு பொருளால் ஈர்க்கப்பட்ட பிறகு, அங்கு தாவுகிறது. கிடைப்பதற்கு அரிதாய் இருக்கும் வரையில் மட்டுமே பிரமிப்புகள், பிரமிக்க வைக்கின்றன.

ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில், தமிழில் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது என்ற செய்தியே எங்கள் பகுதியில் இருந்தவர்களுக்குப் பெரிய அளவில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனினும் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை.

ஞாயிற்றுக் கிழமைக்காக காத்திருந்து பார்த்தப் படங்களின் வரிசை இன்னும் நினைவில் உள்ளது. முதலில் ஒளிபரப்பானப்படம் "ஆயிரத்தில் ஒருவன்", அடுத்து, "நான், சாந்தா சக்குபாய்", போன்ற படங்கள் என நினைக்கிறேன். அப்படியே வெள்ளிக்கிழமையில் ஒளியும் ஒலியும், கொஞ்சம் கொஞ்சமாக நாடகங்கள், வயலும் வாழ்வும், காண்போம் கற்போம், சிறுவர் பூங்கா என்று நம் கண் முன்னே வளரத்தொடங்கியக் குழந்தையைப் போல வளர்ச்சியடைந்தது சென்னைத் தொலைகாட்சி நிலையம். ஞாயிற்றுக் கிழமை மதியவேளைகளில் ஒளிபரப்பப்படும் விருதுபெற்றத் திரைப்படங்களே, மற்ற மாநிலத்தின் திரைப்படங்களை முதன்முதலில் கண்களுக்கு அறிமுகப்படுத்தியது. சனிக்கிழமை மாலை நேரத்தில் ஹிந்தித் திரைப்படத்திற்கு முன்பே தமிழில் கதைச் சுருக்கம் சொல்லியது எல்லாம் ஏதோ பழங்கதை போல நினைவில் தங்கி உள்ளது.

 எங்கள் தெருவில், முதன் முதலாக தொலைக்காட்சி வாங்கிய வரலாற்றில் இடம் பெற்றவர் எதிர் வீட்டு லக்ஷ்மி அம்மா. ஆரம்ப நாட்களில், ஞாயிற்றுக் கிழமை படத்தின் இடையே செய்திகளும் இடம் பெற்றன. அவரோடு இணக்கமாக இருக்கும், யாருக்கும், வாரம் ஒரு முறை ஒரு திரைப்படம் முழுவதும்  காண  இவர் வீட்டில் இடம் உண்டு. இந்தக் காரணத்திற்காகவே எங்கள் தெருவில் உள்ள பலரும், அந்த அம்மா என்ன சொன்னாலும் ஆமோதிப்பர். திரைப்படத்தில் வருகின்ற வில்லன்களை, கதாநாயகிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் ஏசுகின்றனரோ  இல்லையோ இந்த அம்மாவின் வாயில் இருந்து சகட்டுமேனிக்கு திட்டுகள் விழுந்து கொண்டே இருக்கும். செய்திக்குப் பின் திரைப்படம் தொடரும் என்று போட்ட நொடியில், 'டிவி ய அமத்து, டிவிய அமத்து  கரண்ட் பில் கூட வந்துடும்',  என்று கத்துவார். அதன் பின், நான்கு மாதங்கள் கழித்து எங்கள் வீட்டிலும் தொலைக்காட்சி வந்த பிறகு தான், "செய்தி", என்ற ஒன்றை முதன்முதலில் முழுவதுமாக பார்த்துக் கேட்டேன்.
நாட்கள் செல்லச் செல்ல, தொலைக்காட்சி என்பதே அந்தஸ்தோட தொடர்பு படுத்தி பார்க்கப்பட்ட அவசியமான ஒரு சாதனமாக பெரும்பாலானோருக்கு பட ஆரம்பித்தது. அம்மா பிறந்த அனுப்பானடியில் எங்கள் மாமா வசித்த தெருவில், அங்கு முதன் முதலில் தொலைக்காட்சி வாங்கியப் பெருமையை, மாமா வீட்டினர் பெற்றனர். நல்ல நீள, அகலத்தில் அமைந்திருந்த முற்றம் உட்பட்ட வராண்டாவில் உட்கார்ந்து,  ஞாயிறு காலையில் " யஹ் ஹை மஹாபாரத் கதா" என்ற பாடலுடன் ஆரம்பிக்கும் மகாபாரதத்தையும், ஞாயிறு மாலை வேளைகளில் திரைப்படத்தையும், ரசித்து விட்டு வெளியேறும் சொந்த பந்தங்களைப் பார்ப்பது ஏதோ தியேட்டரில் இருந்து வெளியேறும் கூட்டத்தைப் பார்ப்பது போல இருக்கும்.


அன்றெல்லாம், ஆன்டெனா இல்லாத கூரை அழகில்லாதக் கூரையாகவே பார்க்கப்பட்டது. நிறுத்தப்பட்டிருக்கும் கம்பியின் உச்சியில் வரிசையாக உள்ள ஏழெட்டு கம்பிகளில் இரண்டாவது உள்ள ஒரு கம்பி மட்டும் சற்று வளைந்து நீண்டிருக்கும். அத்தனைத் துல்லியமாகப் படங்களை வாங்கிய  இந்தக் கம்பி, கருப்பு நிற பட்டையான வயரால், பெட்டிக்கு பத்திரமாகக் கடத்தி, அதை எப்படி நம்மால்  பார்க்க முடிகிறது என்று ஆச்சரியத்துடனே இருந்திருக்கிறேன். சில நேரங்களில் அக்கம் பக்கம் வீடுகளில் சரியாக தொலைக்காட்சி தெரியவில்லை என்றால், இந்த ஆன்டெனாவை பிடித்து ஆட்டி, திருப்பி ஏதேதோ செய்து, கீழே டிவி தெரியுதா என்று கேட்பதை அந்த நாட்களில் அடிக்கடிக் கேட்டு இருப்போம். சமயங்களில் காகம் இந்தக் கம்பிகளில் அமரும் பொழுது, கம்பிகளில் ஏற்படும் அதிர்வால் ஏற்படும் சின்னச்சின்ன மாற்றங்கள் கூட சரியாக தொலைக்காட்சித் தெரியாமல் போக காரணமாக இருக்கலாம் என்று ஒவ்வொரு வீட்டிலும் இருந்த யாராவது ஒரு விஞ்ஞானி சொல்வர். ஒரு வேளை காகங்களிடம் கேட்டு இருந்தால், இருக்கிற மரங்களை வெட்டிக்கொண்டே இருக்கிறவர்கள், அவற்றைப் போன்ற பறவைகள் வந்து அமர ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் வைத்த இயந்திர மரம் என்று எண்ணினோம், என்று அவைகள் சொல்லியிருக்குமோ?!. :)

அப்பொழுதெல்லாம், திரைப்படமும், ஒளியும் ஒலியும் ஒளிபரப்பாகும் நேரங்களில் சாலைகளில் போக்குவரத்துக் குறைவாக இருக்கும். கடைகளில் கூட்டமில்லாமல் இருக்கும். முடிந்த அளவு அந்த நேரங்களில் தங்களுக்கென்று எந்த ஒரு வேலையும் வைத்துக் கொள்ளாமல், முழு மனதுடன் தொலைக்காட்சி முன்பே அமர்ந்திருக்க அனைவருமே பிரியப்படுவார்கள்.
எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வாங்கியப் புதிதில், பாட்டிக்கு ஆர்வம் அதிகம்.
பகலிலேயே
 ' தீவா....டிவியை போடு', என்பார். '
' இந்தில யாராச்சும் பேசுவாங்க, உனக்கென்ன புரியப்போவுது, நீ சாயங்காலம் பாரு',
' பரவாயில்ல, டிவி போடு', என்று விடாப்பிடியாக கேட்பார்.

தொலைக்காட்சியை இயக்கி எதுவும் வராமல் வெள்ளைப் பின்னணியில், கறுப்புப் புள்ளிகள் ஒரு வித இரைச்சலுடன் தெரியும்.
'இதென்ன புள்ளிபுள்ளியா ஆயுது'
' நாந்தேன் சொன்னேன்ல அவ்வா, கேட்டியா நீ ',
'ஹ்ம்ம்.. இருக்கட்டும் கொஞ்ச நேரம் பொறு', என்று தளராத உறுதியுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கையில், சில,பல நிமிடங்கள் கழித்து, கறுப்பு வெள்ளைக் கட்டங்கள் சூழ நடுவில் வண்ண,வண்ணக்கட்டங்கள், "ங்", என்ற ஒரே வித சத்தத்தோடு மாறும் சின்னத்திரை ஒளிரும்.
'சொன்னேன்ல, வந்திருச்சு, பார்த்தியா', என்று வெற்றிப் புன்னகையோடு காத்திருப்பார். அதன் பிறகு, அரைமணி நேரம் கழித்து ஒளிபரப்பாகும் UGC நிகழ்ச்சியை ஹிந்தியில் பார்க்க ஆரம்பித்த உடனேயே கண்கள் சொருக அப்படியே தூங்கி விடுவார் பாட்டி.
புரிகிறது, புரியவில்லை என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, நம் வீட்டில் இருந்தபடியே , எங்கேயோ நடப்பதை எளிதில் பார்க்க முடிகிறது என்பதே மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும், என நினைக்கிறேன்.

போட்டிப் போட்டுக் கொண்டு மாறி மாறி செய்தி வாசிப்பவர்கள் தரும் செய்திகள், ரயில் சிநேகம் போன்ற மறக்க முடியாத நாடகங்கள் என பலவற்றைத் தந்திருக்கிறது சென்னைத் தொலைக்காட்சி நிலையம். சற்று பின்னர் ஒளிபரப்பான சன் சேனலில் வாரமொரு முறை ஒளிபரப்பான மர்மதேசம் போன்ற தொடர்கள், ஒலிக்கின்ற தொலைபேசியை கூட எடுக்கவிடாமல் செய்திருக்கின்றன. அடுத்த நாள் பள்ளி/கல்லூரி/அக்கம்பக்கம் ரசித்து பகிர்ந்து கொள்ளப்படும் விஷயங்களில் மெதுமெதுவாக முக்கியமான இடத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிடித்தன. செய்தித்தாள்களும் இவற்றின் நிகழ்ச்சிநிரலை வெளியிடுவதற்காக தனிப் பகுதியை ஒதுக்க ஆரம்பித்தன. பத்திரிக்கைகள் கூடுதலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி விமர்சனமும் எழுத ஆரம்பித்தன.
தொலைக்காட்சிப் பார்ப்பதால் படிப்பில் கவனம் சிதறுகிறது என்று திட்டு வாங்கிய முதல் தலைமுறை நாங்கள் தான் என நினைக்கிறேன்.
கிரிக்கெட் என்ற விளையாட்டை பட்டித்தொட்டிக்கெல்லாம் கொண்டு சேர்த்து, பெரிய அளவிலான ரசிகர்களை பெற்று தந்ததில் மிக முக்கிய இடத்தைப் பெற்ற தொலைக்காட்சியை இந்த விளையாட்டு விஷயத்தில் வரம்,என்பதா சாபம் என்பதா, எனத் தெரியவில்லை.

பலவருடங்கள் அசைக்க முடியாத தூர்தர்ஷனை, படிப்படியாக வந்த தமிழ் சேனல்கள், பிற மொழி சேனல்கள், அதிலும் இன்று எண்ணிக்கைக்குள் எளிதில் அடக்க முடியாத அளவு உள்ள விதவிதமான சேனல்கள் பின்னுக்கு தள்ளிவிட்டன. திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவை, விளையாட்டு, செய்தி, சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள், ஆன்மீகம், விலங்குகள், என்று கிட்டத்தட்ட எல்லாவற்றையும், ரசனைக்கேற்றபடித் தனித்தனியாகப் பார்ப்பதற்கென்று பல்வேறுபட்ட மொழிகளில், வரிசையாக பல சேனல்கள் உள்ளன. இவை அனைத்தையுமே கைக்குள் கட்டுப்படுத்திப் பார்க்க இருக்கும் ரிமோட், என தொலைக்காட்சி விஸ்வரூப வளர்ச்சியடைந்து இருந்தாலும்  தொடர்ச்சியாக அரை மணி நேரம் ஒதுக்கி ஒரே சேனலைப் பார்க்கும் பொறுமை நம்மிடம் குறைந்து வருவது உண்மையே.

குட்டிக்குட்டிக் கதைகளை அடக்கிய விளம்பரங்களை ஆவலுடன் ரசித்துப் பார்த்த காலம் நினைவில் மங்கியிருக்கையில், விளம்பரம் வந்த நொடியில் சேனலை மாற்றிக் கொண்டிருக்கின்றன விரல்கள். பேஸ்புக் கில், விளையாட்டாக ஒரு முறை நிலைத்தகவலாக நான் பதிந்தது, "தொலைக்காட்சியில்  சுவாரசியமான நிகழ்ச்சிகளின் பொழுது அடிக்கடி வரும் ஒரே விளம்பரத்தைக் கண்டால்,  இந்தப் பொருளை, எக்காலத்திலும் வாங்கவே கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்".  :P
உலகின் பல் வேறு மூலைகளில் நடை பெறும் விளையாட்டு நிகழ்சிகளை நேரடியாக கண்டு களிக்க, அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளை  உடனுக்குடன் கூர்ந்து கவனிக்க, பொழுதை போக்க பாடல், திரைப்படம் பார்க்க, சமைத்தும் பார்க்க, என நம்மில் பலரும் சும்மாவே இருக்க இயலாத கட்டை விரலால் சில நிமிட இடைவெளியில் அழுத்தி, அழுத்தி கண்ணாடித் திரையைப் பார்க்கிறோம் . குட்டித்திரையிலிருந்து, LCD, LED, என்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகளை உபயோகிக்கிறோம். வித்தியாசம் என்னவென்றால், தொலைக்காட்சி சரியாக தெரியாவிட்டால் ஆன்டெனாவிற்கு பதிலாக இப்பொழுது  ரிமோட் அடி வாங்குகிறது.

ஒருவர் பார்க்கும் நிகழ்ச்சியையே இன்னொருவரும் பார்க்கும் பொறுமை குறைந்து வருவதால், இன்று சில இடங்களில் ஒரு வீட்டிலேயே ஒன்றிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன.

புகைப்பிடிப்பது, மது அருந்தும் காட்சிகளின் பொழுது உடல் நலத்திற்கு கேடு என்று எச்சரித்து கீழே வாசகங்கள் ஓட, திரையில் ஏதேனும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளின் பொழுது இது போல ஒரு ஆலோசனை, அறிவுரை வாசகம் வருவதில்லை என்று நினைப்பேன். அட்டையின் மேற்புறத்தில் அறிவுறுத்தி இருந்தாலும், அதனை சட்டை செய்யாமல், புகைக்கும், மது அருந்தும் கூட்டம், இப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்று பெண்கள் விஷயத்தில் சொல்வதை மட்டும் கேட்டு விடுமா என்ன என்று எனக்குள்ளேயே பதில் சொல்லிக் கொள்வேன்.

கேபிள் டிவி, DTH, ஏதாவது ஒன்றின் வழியாக உள்ளே நுழைந்து, சின்னத்திரை, வரிசையாக, வகைவகையாக கொண்டு வந்து கொட்டும் நிகழ்சிகளை நாம் பார்க்கிறோமோ, இல்லையோ, அமைதியாகவாவது நம் உடன் இருந்தே ஆக வேண்டிய பொருட்களில் ஒன்றாகி விட்டது தொலைக்காட்சி .

அரிதான ஒன்று, கொண்டாடப்பட்ட ஒன்று, மலிந்து கிடைக்கும் நிலையில், முக்கியத்துவம் குறைந்து போவது தவிர்க்க முடியாதது. விரும்பிக் கிடைப்பவற்றை சிறிது சிறிதாக அனுபவிப்பதின் மூலமாக சுவாரசியத்தை நீட்டிக்கலாம்.

 (  மே 16 - 31 ... குங்குமம் தோழியில் வெளியானது )