ஞாயிறு, 31 ஜூலை, 2016


மழையோடும் பசுமையோடும் ஒரு பயணம்!




என் பள்ளிக்கூட சுற்றுலா நாட்களில் குருவாயூர் வந்த போது பெண்கள் சேலை
அல்லது தாவணி மட்டுமே உடுத்த வேண்டும் என கட்டுப்பாடு இருந்தது. அதன்
காரணமாக மறக்காமல் இந்த முறை சேலையை எடுத்து சென்றிருந்தேன். தூறலில்
நனைந்தபடி கோவிலுக்குள் நுழைந்தோம். வரிசையில் சிலர் சுரிதார்
அணிந்திருப்பதைப் பார்த்து விசாரித்த போது, 2009 இல் இருந்து முழங்கால்
வரை நீண்ட சுரிதாருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்றனர். ஏமாற்றத்தில்
வாடிப் போனது மனம். அரைமணி நேரம் கடந்த பிறகு நின்று கொண்டே தொடரும்
வரிசையில் நீள பலகைகள் சில போடப்பட்டிருக்கின்றன. தேவைப்படுவோர்கள்
அமரலாம். குடிப்பதற்கு சூடான தண்ணீரை குவளையில் ஊற்றித் தருகிறார்கள்.
யாரும் யாரோடும் பேசிக்கொள்ளாமல், அமைதியாகவே நகர்ந்தது வரிசை. நான்கு
முறை நிறுத்திவைத்தே, கோவிலின் உள்ளே அனுமதிக்கின்றனர். அதன் உள்ளே சென்ற
பிறகு ஊர்தலை விட மிகக் குறைவான வேகத்தில் இடம் பெயர்ந்து , தூண்களின்
அமைப்பையும், அழகையும் ரசித்தபடி சுத்தமான பிரகாரத்தை பார்த்தபடி உள்ளே
சென்றோம். இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின், நொடிக்கும் குறைவான
நேரத்தில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை விளக்கொளியில் பார்த்தோம்.
வழங்கப்பட்ட அரைத்த மணமான சந்தனம் நெற்றியில் ஏறியது.

கோவிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஆனைக்கோட்டா என்ற இடம்
உள்ளது. குருவாயூர் தேவசம் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இங்கு
பக்தர்கள் அளிக்கும் காணிக்கையின் மூலம் கோவில் யானைகளை
பராமரிக்கின்றனர். நாங்கள் சென்ற போது  ஆனைக்கோட்டா உள்ளும் மழை தூறிக்
கொண்டே இருந்தது. தற்சமயம் அங்கு 54 யானைகள் இருந்தன. ஒவ்வொரு யானையும்
நன்கு இடைவெளி விட்டு கட்டப்பட்டு இருந்தது. காட்டிற்கு நிகரான சூழலில்
மரங்கள் சூழ்ந்திருக்க, ஒவ்வொரு யானையும் இரும்பு சங்கிலியால்
பிணைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகில் உள்ள சிமெண்ட் தொட்டியில் நீர்
நிரம்பியிருந்தது. முன்னால் இருந்த தண்ணீரை தும்பிக்கையில் எடுத்து
பீய்ச்சவோ, அந்த இலைதழைகளை உண்ணவோ, ஈரமான மண்ணை அள்ளி தலையில் போட்டுக்
கொள்ளவோ என பரபரப்பாக இருந்தன யானைகள். குழந்தைகள் உற்சாகத்துடன்
பார்த்து மகிழ்கின்றனர். அழகழகான தந்தங்கள், பெரிய உருவம் என கம்பீரமாகக்
காட்சி தந்தாலும் அவைகளை பிணைத்திருந்த இரும்புச் சங்கிலி மெலிதான
பரிதாபத்தை வரவழைத்தது.

அன்று மதியமே  குருவாயூரில் இருந்து 45கிமீ தூரத்தில் உள்ள சாலக்குடிக்கு
ரயிலில் பயணித்தோம். இரண்டு  வழிப்பாதைகளாவே காட்சி அளிக்கின்ற கேரள
ரயில் தடங்கள், தாமதமின்றி மக்களை உரிய இடத்திற்கு கொண்டு போய்
சேர்க்கின்றன. சாலக்குடியிலிருந்து 30கிமீ தூரத்தில் அதிரப்பள்ளி அருவி
உள்ளது. பேருந்து வசதியும் உண்டு. நேரத்தை மிச்சப்படுத்த, ஒரு வாகனத்தை
வாடகைக்கு அமர்த்திப் பயணித்தோம். அதிரப்பள்ளி அருவிக்கு மிக அருகிலேயே
தங்குமிடத்தை பதிவு செய்திருந்தோம். அங்கு கொண்டு சென்ற பைகளை
விட்டுவிட்டு கிளம்பினோம்.

மாலை நான்கு மணி அளவில் அருவியை நெருங்கிவிட்டோம். விடாமல் தூறல்களை தூவி
வரவேற்றுக் கொண்டிருந்த மேகம், ஒரு கட்டத்தில் அன்பு அதிகமாகி சாரலாகக்
கொட்டத்தொடங்கியது. செவ்வகவடிவில் அழகிய சீரான இடைவெளி விட்டு
நேர்த்தியாகப் பதிக்கப்பட்டிருந்தக் கற்களின் வழியாக மேலேறினால் சற்று
நேரத்தில் , இரண்டு பாதை வரும். நேராக கொஞ்சம் சரிவாக உள்ள பாதையில் கீழே
சென்றால்,  அருவி விழுவதற்கு முன் ஓடி வரும் தண்ணீரைப் பார்க்கலாம். அதன்
ஓரங்களில் அமர்ந்து குளித்துக்  கொண்டிருப்பவர்களும் இருந்தனர்.
எங்கெங்கிருந்தோ சேகரமாகி வந்து கொண்டிருந்த தண்ணீர், பாறைகளின் முன்
சேர்ந்து அதி வேகத்துடன் கீழே விழுந்து கொண்டிருக்கும். இன்னொரு பாதையில்
ஏறி, பின் இறங்க ஆரம்பித்தால், சுற்றி  சுற்றி, வளைந்து வளைந்து கீழ்
நோக்கி சென்று கொண்டிருந்தது கற்கள் பாவிய பாதை. மழையில் நனைந்தவாறே
சுற்றிலும் உள்ள மரம் செடிகளை வேடிக்கை பார்த்தபடி கீழே இறங்கினோம்.
மூச்சு ஒரு புறம் வாங்கிக் கொண்டிருந்தது. சில, பல வளைவுகளைக் கடக்க
வேண்டும். அடர்ந்து தெரியும் கானகமும், அருவியைக் காணப் போகும் ஆர்வமும்
தான் நம் நடைக்கான முதன்மைத் துணை. கீழே இறங்கியதும் சில அடிகள்
எட்டுவைத்த பின் கிடக்கின்ற பாறைகளில் ஏறி நின்றால், அருவி தண்ணீர் நம்
மேல் பூப்பூவாய் சிதற, மழைத் தூறல் மற்றொரு புறம் நனைக்க பொங்குகிறது
குதூகலம். மேலே ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டிருந்த அருவியின்
பேரிரைச்சலால் உண்டான இசை அந்தப் பகுதி எங்கும் வியாபித்திருக்க
இயற்கையின் மீதான நன்றியுணர்வால் நிரம்பிக் கொண்டிருந்தது  மனம்.
விழுகின்ற அருவித் தண்ணீரில் குளிக்காமல், அதன் நீர் சிதறி நனைக்க, மழை
ஒரு பக்கம் குளிப்பாட்ட என புது அனுபவத்தைப்  பெற்றோம். ( தண்ணீர் விழும்
இடத்தில் அதன் வேகம் காரணமாக, விபத்தைத் தடுப்பதற்காக குறிப்பிட்ட தூரம்
வரை கம்பி கட்டப்பட்டிருக்கும் )



அடுத்த நாள் - ஆலப்புழாவில் உள்ள படகு வீடு. கிம் கி டுக் - இயக்கிய
கொரியப் படமான தி போ ( The Bow ) ... ஞாபகத்திற்கு வருகிறது. கடலில்
நிற்கும் கப்பல், அதிலிருந்து சிறு படகு மூலம் அவ்வப்போது நகரத்திற்கு
சென்று திரும்பும் அறுபது வயது மதிக்கத்தக்க மனிதர், கப்பலில் இருக்கும்
பதினாறு வயது சிறுமி. அவள் ஆறு வயதில் பெற்றோரிடம் இருந்து காணாமல் போன
போது கண்டெடுத்தப் பெரியவர் இவளை வளர்க்க ஆரம்பிக்கிறார். அவளது
பதினேழாவது பிறந்தநாளில் இருவரும் திருமணம் செய்வதாக திட்டம்
தீட்டியிருப்பார். அந்தப்  படகில் வரையப்பட்டிருக்கும் புத்தர்
படத்திற்கு முன் பக்கவாட்டில்  உள்ள ஊஞ்சலில் இந்த சிறுமி ஆடிக்
கொண்டிருப்பாள். சற்று தொலைவிலிருந்து புத்தரின் படத்தில் மூன்று
அம்புகள்  எய்வார் அந்த மனிதர். அபாயகரமான இந்த அம்பெய்தலின் முடிவில்,
பலன் கேட்டு வந்து நிற்பவர்களுக்கு ஜோசியம் சொல்வார். இப்படி ஆரம்பமாகும்
கதையில் வேறு யார் யார் வருகிறார்கள், இறுதியில் என்ன நடக்கிறது என்பது
மீதிக் கதை. படம் முழுவதுமே படகில் தான் பயணிக்கும்.


அடுத்த நாள் காலையில் சாலக்குடியிலிருந்து ஆலப்புழாவிற்கு தொடர்வண்டிப்
பயணம். பேக் வாட்டர் எனப்படும் கடல் தண்ணீரால் உருவான நீர்நிலைகள் இங்கு
நிறைய உள்ளன. ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து பத்து கிமீ தொலைவில் உள்ள
 போட்ஜெட்டி என்ற இடம் வரை நாம் செல்ல வேண்டும். ( இணையம் வாயிலாக இந்த
நாளுக்கு, ஒரு படகு வீட்டைப் பதிவு செய்திருந்தோம்) அங்கிருந்து  நம்மை
ஒரு படகில் வைத்து அழைத்து செல்கின்றனர். சில நிமிட பயணத்திற்கு பிறகு
பெரிய அளவில் மூடப்பட்டு இருக்கும் படகு வீடுகள் நிறைந்த  வேப்பநாடு
ஏரியில் எங்களை கொண்டு போய் விட்டனர்.( இங்கு மட்டும் தோராயமாக
இரண்டாயிரம் படகுவீடுகள் இருக்கலாம்)  படகு வீட்டில் ஏறிக்கொண்டோம். படகை
ஓட்ட, சமைக்க, உதவி செய்ய என மொத்தம் மூன்று பேர் அதனுள் இருந்தனர். ஒரு
வரவேற்பறை, மூன்று படுக்கை அறைகள், ஒரு சமையலறை, ஒரு உணவு பரிமாறும் அறை
என நீண்டு சென்ற அந்தப் படகின் உட்புறம் நட்சத்திர உணவகங்களுக்கு நிகராக
இருந்தது. முதல் நாள் மதியம் 12 மணியிலிருந்து அடுத்த நாள் காலை ஒன்பது
மணி வரை அது தான் எங்கள் வசிப்பிடம். ( மிக நிதானமான இருபத்தைந்து கிமீ
படகுப் பயணம் - ஓய்வு )  முதலில் ஒரு தீவுக்கு அழைத்து சென்றனர். அதன்
பெயர் குப்பப்புரா. அங்கு உயிருடன் வைக்கப்பட்டிருந்த நண்டு, இறால், மீன்
போன்றவற்றை நம் தேவைக்கேற்ப வாங்கி உள்ளே கொடுத்து சமைக்க சொல்லலாம்.
(விலை சற்று அதிகம் தான்) படகு செல்லும் வழியில் இரு புறங்களும்
வீடுகளைக் காணலாம். ஏரியிலிருந்து கிளம்பினாலும், ஒரு கட்டத்தில் பம்பா
ஆற்று நீரில் செல்லத் தொடங்குகிறது படகு (சராசரியாக இதன் ஆழம்
முப்பத்தைந்து அடி ) மிக மெதுவாக செல்வதால், கூர்மையாக
தண்ணீரையும், சுற்றி உள்ள சூழலையும் அவதானிக்கலாம். அதிசயமாக
தட்டுப்படும் பருந்து உள்ளிட்ட பல பறவைகளை கூடுதல் எண்ணிக்கையில் பார்க்க
முடிந்தது.

சுற்றிலும் 25 தீவுகள் வரை இருப்பதாக படகு ஓட்டுநர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தீவிலிலும் 100,150 வீடுகள் வரை இருக்கும். ஒவ்வொன்றிற்கும் ஒரு
பெயர் உண்டு. ஒவ்வொரு வீட்டிற்கும் என தனி படகு இருக்கும். துடுப்பு
போட்டு ஓட்டுவதை நாங்கள் பார்த்தோம். சற்று வசதி உள்ளவர்கள் மோட்டார்
படகு வைத்திருக்கின்றனர். படகு செல்லும் வழியில் தென்படும் வீட்டின்
எதிரே ஓடும் தண்ணீரை ஓட்டி ஒரு சில படிகள் இருக்கின்றன. அந்தப் படிகளில்
உட்கார்ந்து குளிப்பதற்கும், துவைப்பதற்கும் அடர் பச்சை நிறத்தில்
இருக்கும்  தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர்.  மொத்தத் தீவுகளுக்கும்
செல்வதற்கு அரசின் படகு சேவை தனியாக உள்ளது. பெரும்பாலும் அங்கு உள்ள
மக்கள் விவசாயத்தையும் (அரிசி, வாழை) மீன்பிடித்தலையும் தொழிலாக
கொண்டிருக்கின்றனர். மாலை ஆறு மணி அளவில், பெரிய நெல்வயலின் அருகே இருந்த
 C பிளாக் என்ற இடத்தின் அருகே படகு நிறுத்தப்பட்டது. அங்கே ஏற்கனவே சில
படகுகள் நின்று கொண்டிருந்தன. இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் நிரம்பி
இருக்க, ஆறடி அகலத்தில் நடுவில் சென்ற பாதையில் நடக்கத் தொடங்கினோம்.
களிமண் அதிகமாக இருக்க, தட்டுப்படும் செடிகள் எல்லாம் உபயோகமான கீரை
வகைகள், தென்னைக்கு நிகராக வாழை என இருந்தன. தேவையற்ற செடி என ஒன்றையும்
சொல்ல முடியவில்லை.

நடந்து சென்ற வழியில் வேறு படகுகளில் வந்தவர்களில் சிலர் தூண்டிலில் மீன்
பிடித்துக் கொண்டிருந்தனர். சப்பாத்திக்குப் பிசைந்த மாவிலிருந்து சிறிய
உருண்டையை எடுத்து தூண்டில் கம்பியில் வைத்து அழுத்தி தண்ணீருக்குள்
தூக்கி எறிந்தார் ஒருவர், சில நொடிகளில் இழுத்த அந்த கம்பியின் முனையில்
விரல் நீளத்தில் மீன் சிக்கி இருந்தது. அதை மிக சிறிய மீன் என சொல்லி
கையில் எடுத்து தண்ணீருக்குள் விட்டார். இதைப்பார்த்து வருண் ஆசைப்பட
எங்கள் படகில் கேட்டோம். தூண்டிலும், நிறைய சப்பாத்தி மாவும்
கொடுக்கப்பட்டது. மாவு தீர்ந்த பிறகு தான் தெரிந்தது, அந்தப்பகுதியில்
மீன்களுக்கான உணவை தூண்டில் வழியாக வழங்கி இருக்கிறோம் என.
பிறகு சில மீட்டர் நடைக்குப்பின் மீண்டும் படகிற்கு வந்து ஓய்வெடுத்தோம்.
தொலைக்காட்சியைப் பார்க்க விருப்பமில்லாததால்,கண்ணாடி சுவர்களின் வழியே
தெரிந்த இரவை பார்த்துக் கொண்டிருந்தேன். மனமெங்கும் அமைதி ஆளத்
தொடங்கியது.


குருவாயூரோ, ஆலப்புழாவோ கடற்கரை இல்லாத ஊர் பொதுவாகவே  கேரளத்தில் இல்லை
போல. அதற்கடுத்த நாள், கிடைத்த நேரத்தில் ஆலப்புழா கடற்கரைக்கு சென்றோம்.
சாலையிலிருந்து மிக அருகிலேயே ஆரம்பமாகும் கரையில் நடந்தால் சில அடி
எடுத்து வைத்தால் கடல் அலையில் கால் நனைக்கலாம். கடலின் அடி
ஆழத்திலுருந்து வருவது போல, கருப்பு நிற மண் துகள்களை அதிகமாக சுமந்து
ஆக்ரோஷமாக சேர்ப்பித்திக் கொண்டிருந்தன அலைகள். அலையின் வேகம் கணிக்க
முடியாத அளவில் கூடியும், மிகக் குறைந்தும் அச்சமூட்டிக் கொண்டிருந்தது.
கூடுதல் கவனமாகவே ரசிக்க வேண்டிய இடம். நடந்து கொண்டே இருக்கையில்
சடச்சடவென மழை கொட்டத் தொடங்கியது. நனைந்தபடி சாலைக்கு வந்தோம். சில
நிமிடங்களில் மழை நின்றாலும் தூறல் சில மணி நேரம் தொடர்ந்தது. தூறலோ,
சாரலோ, மழையோ... இடியோசை இன்றி மனதிற்கு நெருக்கமாகவே பெய்தது வியப்பு.

கேரளாவில் மூன்று நாட்களுமே ... கிட்டத்தட்ட ...
மழையோடு உறவாடி
மழையோடு விளையாடி
மழையோடு மல்லுக்கட்டி
ஊர் சுற்றினோம்...!

இங்கு தமிழ் பேசியே சமாளிக்க முடிகிறது. கூடுமான வரையில் நாம் பேசுவதை
பலரும் புரிந்து கொள்கின்றனர். அவர்களின் மலையாளத்தையும் ஓரளவு
அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது.

பார்த்த வரையில் பாலித்தீன் உபயோகம் மிகக் குறைவு. சென்ற வழிகளில் பெரிய
விளம்பரப் பலகைகளை அவ்வளவாக பார்க்க முடியவில்லை, மீண்டும் மீண்டும்,
இரண்டு, மூன்று நகைக்கடை,  துணிக்கடை விளம்பரங்கள் மட்டுமே இருந்தன. சில
சினிமா சுவரொட்டிகளையும் பார்க்க முடிந்தது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ்
கட்சி சார்பில் ஒரு சில இடங்களில் காணப்பட்ட பதாகைகளுடன் பாரதிய ஜனதா
கட்சியின் சார்பிலும் ஒன்றிரண்டை காண முடிந்தது. மற்றபடி எங்கெங்கும்
பசுமையே படர்ந்திருந்தது. கேரள மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட அங்குள்ள
தென்னை மரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

சாதாரணமாக உணவகங்களில் கோழி, ஆட்டிற்கு இணையாக மாட்டிறைச்சி
பரிமாறப்படுகிறது. காரம் சற்று குறைவாக இருந்தாலும் நாக்கிற்கு,
வயிற்றிற்கும் இணக்கமான உணவுகளே கிடைப்பது சிறப்பு. ( சீரகம், சுக்கு,
மிளகு போன்றவை உணவில் மிகுதியாக காணப்படுவது முக்கியக் காரணம் )

மீண்டும் ஆலப்புழாவிலிருந்து திருவனந்தபுரம் வந்து மதுரை பயணம்.

ரயில் பயணத்தில் இரண்டு புறங்களிலும் உள்ள கம்பிகளை பற்றியபடி வாசலின்
அருகே நின்று ஒரு சில மணி நேரங்களாவது பயணம் செய்வது தவறவிடாத வாடிக்கை.
கேரளாவைப் பொறுத்தவரை இப்படி நிற்பது கூடுதல் கொடுப்பினை. இலேசாக சிரசை
நீட்டி முன்னால்  செல்லும் ரயிலின் தலையையும் பின்னால் வரும் வாலையும்
ஒரே நேரத்தில் பார்த்தால் அது ஒரு ஆனந்தம். தூறலை, சாரலை முகத்தில்
வாங்கியபடி கண்களை திறக்காமல் இருப்பது ஒரு தவம். இண்டு இடுக்கு விடாமல்
பரப்பி நிற்கும் செடிகளும், மரங்களும் விட்டுக் கொடுத்த சில  இடங்களை
தண்ணீர் ஆட்சி செய்கிற நிலம் . இவற்றை பார்த்து வாழப் பிறப்பெடுத்தவர்கள்
அங்கங்கே வீடுகளைக் கட்டிக் கொண்டு வசிக்கின்றனர். நம்மைப் போன்றோருக்கு
பயணத்தில் வாய்க்கிறது. வேகமாக செல்லும் ரயிலில் ஒரு சில இடங்களின்
ஓரத்தில் இது வரையில் பார்த்திராத அரிய மலர்கள், திறன் இருந்தும் அறியப்
படாத நபர்களை நினைவுபடுத்தியது. உச்சி முதல் பாதம் வரை ஏறிக்கொண்டிருந்த
குளிர்ச்சியில் என்றோ உண்டான காயங்களின் தழும்புகள் கூட மறைந்தன.

கோவில் வளாகத்தின் குளிர்ச்சி, அருவியின் இசை, படகு வீட்டின் அமைதி என
அத்தனையையும் எங்களுடன் மதுரைக்கு எடுத்து வந்திருந்தோம்.

( 31.07.16 தீக்கதிர்-வண்ணக்கதிர் இணைப்பில் வெளிவந்தது.  )






திங்கள், 25 ஏப்ரல், 2016

பன்னீர்ப்பூவும் கந்தசாமியும்... (சிறுகதை)

கொட்டிக் கிடந்தப்  பன்னீர்ப் பூக்களை பார்வையால் சில நிமிடங்கள் ரசித்தாள் கயல்விழி.  குத்துக்காலிட்டு அமர்ந்தவள், கீழே கிடந்தவற்றில் ஒவ்வொன்றாக பதவிசாக எடுத்து, தனது நாசியில் வைத்து முகர்ந்த பின் இடது கையில் அடுக்க ஆரம்பித்தாள். பளீரென்ற வெண்மையிலும், அழகான தோற்றத்திலும் எண்ணற்ற பூக்கள் மயக்கும் வாசனையுடன் பூத்திருந்தாலும்,  கயலை எப்போதும் ஈர்க்கும் பூ பன்னீர்ப்பூ தான். நீண்ட வெளிறியப் பச்சை நிறக் காம்பும் உச்சியில் இதழ்களை விரித்து எளிமையான தோற்றத்துடன் இருக்கும் பன்னீர்ப்பூவின் வாசனை எப்போதுமே அவளை மயக்கி சொக்க வைக்கும். இந்தக் கல்லூரியில், கடந்த இரண்டு நாட்களாக, மரத்தின் அடியில் பரந்து கிடப்பவற்றில் சில பூக்களை சேகரித்து, அவளது புத்தகப் பையில் போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்தது. நாள் முழுவதும் வகுப்பில், தேவைப்படும்போதெல்லாம், பையைத் திறந்து, கண்களை மூடி முகர்ந்த வாசனையை, சில நொடிகள் தன்னுள்ளே வைத்துக் கொள்ள பிரயத்தனம் செய்வாள். வீட்டிற்கு சென்ற பின்,  தனது மேஜையில் பையைக் கவிழ்த்து  எஞ்சியிருக்கும் பூக்களின் வாசனையை தனது அறை முழுமைக்கும் அனுபவிக்கத் தருவாள். அவளது வீட்டின் அருகிலோ அல்லது கல்லூரியிலோ இந்த மரம் இருந்திருந்தால் கொண்டாட்டமாக இருந்திருக்கும் கயலுக்கு. இந்தக் கல்லூரியில், மதுரையில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும்,  நாடகத்தில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு, வீதி நாடகம் குறித்த பயிலரங்கத்தை ஒரு வார காலத்திற்கு பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. நூற்றி இருபது மாணவர்களுள் ஒருத்தியாக கயலும் இருந்தாள்.

பிரத்யேக வாசனைப் பூக்களுடன் கயல்  இருந்த மரத்தடியில், மிக அருகே பேன்ட் அணிந்த செருப்புக் கால்கள் வந்து நின்றன. அவற்றை கண்டு துணுக்குற்று, தலையை உயர்த்தினாள். இதே வகுப்பிற்காக வேறொரு கல்லூரியில் இருந்து வந்திருந்த கந்தசாமி புன்னகையுடன் நின்றிருந்தான். இதற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் கலந்து கொண்ட வகுப்புகள் உட்பட, எந்த வகுப்பிலும் கந்தசாமி எந்தப் பெண்ணுடனும்  பேசிப் பார்த்தது கிடையாது இவள். அப்படிப்பட்டவன் எதற்காக தன்னருகே வந்து நின்று புன்னகைக்கிறான் என பலத்த யோசனையுடன்  பதிலுக்கு முகத்தை அளவாக மலர்த்தினாள். 
' எனக்கும் பன்னீர்ப்பூ பிடிக்கும் கயல்விழி', எனஅவன் புன்னகைத்தபடி சொன்னதும்,
' உங்க வீட்டில மரம் இருக்கா?"
' இருந்துச்சு, வீட்டை பெரிசா கட்டுறப்போ மரத்தை வெட்டிட்டாங்க, மரத்தையும், பூவையும் பார்க்கறப்போ எல்லாம் எனக்கு பழைய ஞாபகமெல்லாம் வரும்', என்றான். ஒரு பூ மாத்திரம் அவன் இரு விரல்களுக்கு மத்தியில் நின்றபடி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது.  சில நிமிடங்கள் நீண்ட அவன் பேச்சு அத்தனையும் குவிந்திருந்த பால்ய நினைவுகளில் இருந்து சிலவற்றை உருவி எடுத்து வரிசைப்படுத்தியது. 'மலைல வளர்ற மரம் மாதிரி ரொம்ப உசரமா இருக்கிறதும் இந்த மரத்துக்கு கொள்ளை அழகு', என சொன்னவள்,  ' நேரமாச்சு, க்ளாஸ் ஆரம்பிக்க போது, போலாம்', என்றாள். இருவரும் சேர்ந்து வந்ததை வகுப்பில் இருந்த பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்த உணர்வு கயல்விழிக்கு. 

பெண்கள் படிக்கும் பள்ளியில் படித்தவள். இப்போது கல்லூரியும் கூட அப்படியே.  இது மாதிரி முகாம்களின் போது, தன்னுடன் பேசும் சக ஆண்களிடம், பயிலரங்கம் குறித்த  உணர்வுகளைப்  பகிர்தல், அறிந்து கொள்ளல், என சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இவள் பேச்சு. ஓரளவு நன்றாகப் படித்தாலும், நாடகத்தில் நடிப்பதில் மட்டுமின்றி, இயக்குவதிலும் பெரும் பிரியம் உண்டு என்பதால், வீதி நாடகங்கள் குறித்த இந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறாள்.  இது, அருகில் உள்ள கிராமங்களில் பத்து நாட்கள் நாட்டு நலப்பணித்திட்ட முகாமிடும் போது, விழிப்புணர்வுக்கான நாடகம் போடுவதற்கு உதவும். ஆதலால், இவளைப் போன்றே பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். செய்வன திருந்தச் செய், என்பதற்கேற்ப இங்கு தான் கற்றுக் கொண்டதை, திருப்தித் தரும் வரை வீட்டில் செயல்படுத்திப் பார்ப்பாள்.  வகுப்பு குறித்து எழும் சந்தேகத்தை வகுப்பிலேயே வினவுதல், திறம்பட கற்றுக் கொள்பவரை ஓரிரு வார்த்தைகளில் பாராட்டுதல், இவற்றை தாண்டி, ஆண்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்கிற எண்ணம் உள்ளவள். 

தன்னிடம் வந்து ஒருவன் தனியாகப் பேசுவதையே அனுமதிக்காத கயலுக்கு, யாருடனும் இல்லையில்லை எவளுடனும் பேசாத கந்தசாமி தன்னிடம் பேசியதில் உண்டான பெருமிதத்துடன் அன்றைய வகுப்பில் அமர்ந்திருந்தாள். தான் உண்டு தன் படிப்பு, குடும்பம்,நாடகம் உண்டு என்றிருந்தவளுக்கு, புத்தம் புதிதாக, சின்ன பயம் கலந்த, ஆர்ப்பரிப்பான ஆனந்த அலை மனம் முழுவதும் அடித்துக் கொண்டிருந்தது. இவற்றின் மத்தியில் வகுப்பையும் கவனித்துக் கொண்டிருந்தாள். இந்த உணர்வு சரியா, தவறா என்றெல்லாம் உள்ளே தாறுமாறாக ஆடிக் கொண்டிருந்தக் கேள்வியை புறந்தள்ளி விட்டு, வித்தியாசமாகப் பொங்கிக் கொண்டிருக்கும் களிப்பை, விருப்பத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தது மனம்.

அன்றைய தினத்தின் மதிய உணவு இடைவேளை. அடுக்கி வைக்கப்பட்டத் தட்டுகளிலிருந்து தங்களுக்குரிய ஒன்றை எடுத்து சோறு, குழம்பு, பொரியல் போன்றவற்றை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றனர் மாணவர்கள். சற்று தொலைவில் இருந்த ஒலிப்பெருக்கியிலிருந்து, ' 
'என்னைத் தாலாட்ட வருவாளா', என்ற பாடல் தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தது. சமீபத்தில் வந்த படங்களில் 'காதலுக்கு மரியாதை', சிறப்பான ஒன்றெனவும், விரைவில் தியேட்டருக்கு சென்று இரண்டாவது முறை பார்க்க வேண்டும் என்றும் சிலர் சிலாகித்துப்  பேசிக் கொண்டிருந்தனர். தேவைக்கு ஏற்ப பெற்ற உணவை மரநிழலைத் தேடி அமர்ந்து உண்ணத் தொடங்கினர்.  வலிய வந்து அவள் அருகில் உணவுத் தட்டுடன் அமர்ந்தான் கந்தசாமி. அப்பளத்தைக் கடித்தபடி  ' உங்க வீட்டில பன்னீர்ப் பூ மரம் வைக்கலாமே', என்றான். ' ம்ம்... மொதல வீடு வாங்கிட்டு ரெண்டாவது மரத்தை நடுற வேலைதான்', சொன்ன கயல் தண்ணீரைக் குடித்தாள். ' இவன் ஏன் வந்து எங்கிட்டயே பேசறான், இத்தனைக்கும் நாமளும் அப்படி ஒன்னும் இழுக்கிற அழகில்லையே' என்றெல்லாம் தனக்குள் குழம்பினாலும், அவன் தேடி வந்து பேசுவதை அவள் மிகவும் விரும்பத் தொடங்கினாள். அழகான உயரத்தில், வசீகரமான தோற்றத்தில் இருப்பவன், வகுப்பில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் சரியாக பதில் சொல்பவனுக்கு தன்னைப் பிடித்திருப்பதை பாக்கியமாக எண்ணினாள். ஆனாலும் தொடர்ந்து வந்த நாட்களில் அவன் பேச வரும்போது சில நேரங்களில் பிகு செய்து கொள்வதின் மூலம் தானும் உசத்தி என்பதை வெளிப்படுத்துவதாக நினைத்தாள்.

வகுப்பு முடிந்து சான்றிதழ் வழங்கும் தினத்தில், அவளின் முகவரியைக் கேட்டுப் பெற்றான் .
மாதம் இரண்டு, மூன்று முறையாவது கல்லூரி செல்லும் வழியில் வீட்டின் அருகே என தரிசனம் தந்தும்  பெற்றும் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான் கந்தசாமி. ஒருநாள், அவனது வீட்டிற்கு விண்ணப்பத்திருந்த தொலைபேசி இணைப்பு கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்தாலும், தன் வீட்டிற்கான இணைப்பிற்கு விண்ணப்பிக்காத குடும்ப சூழல் அவளை வருத்தியது. தன் வீட்டிலும் இணைப்பு கிடைத்த நாளில் கந்தசாமியின் தொடர்பு எண்ணை பெற்றுக் கொள்வதாக சொன்னாள்.

சில நாட்களுக்குப் பின் ஒரு நாள்,  தீபாவளி முடிந்து, கல்லூரி செல்லும் வழியில் எதிரில் வந்தவன், ஒரு சிறிய பை நிறைய பன்னீர்ப் பூக்களைப் பரிசளித்தான். மறுக்க யோசிக்க செய்யாத அன்பளிப்பாக இருந்தப் பூக்களை ஆசை தீர முகர்ந்து பார்த்த கயல், ' தீபாவளி டிரஸ் போடலையா? ' , 
' மழை பேஞ்சு ரோடெல்லாம் சகதியா இருக்கு, புதுசு போட்டுட்டு வெளில வந்தா எப்படியும்  
அழுக்காகும், தெரிஞ்சே எதுக்கு புதுசு போட்டு சகதியை பூசிக்கனும்?' , என்ற போது இத்தனை மென்மையான மனதா இவனுக்கு என யோசித்தக் கயல், தன்னையும் கூட எதிர் காலத்தில் எப்படி பாதுகாப்பான் என திடமாக தெரிந்து விட்டதாக பூரித்தாள். சமயங்களில் அவனின் முட்டாள்த்தனமான செயல்களுக்கும் கூட, தனக்கு சாதகமாக உருவாக்கிக் கொண்ட பதில்களால் திருப்தியுற்றாள். இருவரிடமும் சாதாரண நட்பைத் தாண்டி நிரம்பி ததும்பிக் கொண்டிருந்தது அன்பு, பன்னீர்ப் பூக்களின் வாசனையுடன், என நம்பினாள். ஒற்றை ரோஜா வேண்டாம் ஒற்றைப் பன்னீர்ப் பூவுடன் தன்னுடைய நேசத்தை கந்தசாமி உரக்க சொல்லும் நாளுக்காக காத்திருந்தாள். 


அழகாக சென்று கொண்டிருந்த கயலின் ஆரவார அத்தியாயத்தில், தொடர்ந்து பல நாட்களாக அவன் பார்க்க வரவில்லை. கடைசி செமஸ்டர் தேர்வு, விடுமுறை என சில வாரங்கள் தொடர்ந்து அவனைப் பார்க்காததில், இவளுக்குப் பித்துப் பிடித்து விட்டது. மூன்றாவது வருடப் படிப்பு முடிந்த பிறகு மேற்படிப்பிற்காக சென்னை செல்வதாக பேச்சின் ஊடே அவன் சொல்லியிருந்ததும் நினைவில் வந்தது.அவனது முகவரியைத் தான் பெற்றுக் கொள்ளாததற்கு தன்னையே நொந்து கொண்டாள். தன்னைப் பார்க்கவராமைக்கு செமஸ்டர் மட்டுமே உண்மையானக் காரணமா எனக் கேள்வி எழுப்பியவள், ' 
' இல்ல,  இல்ல, அவன் பச்சைக் குழந்தை, என்னைத் தவிர இந்த ஒலகத்தில  எந்தப் பொண்ணும் அவன் கண்ணுக்குத் தெரியாது', என சொல்லிக் கொண்டவள், அவனை தவறாக ஒரு நொடி யோசித்தமைக்கு தன் தலையிலேயே தானே ஓங்கி ஒரு கொட்டு வைத்தாள். வீட்டில் இருக்கும் பூஜை அறையிலும், அருகில் இருக்கும் கோவிலிலும் அவளது ஒரே பிரார்த்தனை   தன்னை நேரில் கந்தசாமி வெகு விரைவில் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே. கொஞ்சம் கூடுதலாக அவன் நினைவு துன்புறுத்தும் தினத்தில் உண்ணாவிரதம் இருந்து தொழுதாள். சில கிலோ எடை இழந்திருக்க, பார்ப்பவர்கள் எல்லாம் ' உடம்புக்கு என்ன?' என விசாரிக்க, நாட்கள் சீராக போய்க் கொண்டே இருந்தன. 

'இவ்ளோ பூ கெடக்கு, எடுத்து மோந்து பாக்காம எனக்கென்னனு போற', என கயலின் தங்கை சொன்ன போது தான் தெரிந்தது, உறவினரின் வீட்டு விழா நடந்த மண்டபத்திற்கு அருகில் இருந்த அத்தனை பெரிய பன்னீர்ப்பூ மரம். ' எப்படி தவறவிட்டேன், இந்தப் பூவையே பின்னுக்குத் தள்ளிடுச்சே அவனோட ஞாபகம்', என வருந்தியபடி திரும்பி மரத்தின் அருகே சென்றாள். ஒன்றிரண்டுப் பூக்களை எடுத்தவளுக்கு முகரத் தோன்றவில்லை. ' கந்தசாமி எப்படி இருக்கானோ, என்ன செய்கிறானோ, என யோசனையுடன் பார்த்தவள், ' ரொம்ப முக்கியம், இப்போ இந்தப் பூவோட வாசனை என எண்ணியவளாக அப்படியே கீழே போட்டுவிட்டு, மண்டபத்திற்குள் நுழைந்தாள். அவளது கைகளிலிருந்து விழுந்தப் பூக்கள்,  கீழேக் கிடந்த மற்ற பூக்களுடன் இணைந்து, வழக்கம் போல மண் தரையில் சுகமாக மல்லாந்தவாறே மரக்கிளைகளின் இடையேத் தெரியும் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தன. 



சில நாட்கள் ஏனோதானோவென சென்றன.
தேர்வு முடிவு வெளியான தினத்தில் கல்லூரி செல்லும் வழியில் பேரானந்தத்தின் மொத்த உருவமாக எதிரில் நடந்து வந்தான் கந்தசாமி. சற்று எடை கூடி, பளிச்செனப் புன்னகைத்தபடி அவன் வந்த போது,  உலகத்தையே வெற்றிபெற்ற புன்னகையுடன் எதிர் கொண்டாள். அவனின் திக் விஜயம், சோர்ந்து போயிருந்த உடலின் ஒவ்வொரு அணுவையும் உற்சாகம் கொள்ள செய்தது. பெருகிய நிம்மதியில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ' எப்படி இருக்க? எங்க போன?', என வார்த்தைகள் பெருமூச்சின் சத்தத்துக்கு இடையில் கயலிடமிருந்து வந்து விழுந்தன. ' என்னோட நட்பு வட்டம் பெரிசு கயல். மனசுக்குப் பிடிச்ச எல்லார் கிட்டயும் அவங்க அட்ரஸ், கூடவே அவங்க என்னைப்பத்தி என்ன நெனைக்கறாங்கனு எழுத்து வடிவத்தில என்கிட்டே இருக்க ஆசைப் பட்டேன். தூரத்தில இருக்கிற பிரெண்ட்ஸ் எல்லாம் தேடிப் போய் அவங்க கிட்ட எல்லாம் ஆட்டோக்ராப் வாங்க சில நாட்கள் ஆச்சு, நீ எப்படியும் ரிசல்ட் பார்க்க தான் வருவே, அப்போ பார்க்கலாம்னு தான் வரல,  அப்புறம்  சென்னை ல தான் பிஜி பண்ணப் போறேன், அதுக்கும் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வர்றேன்', என்றபடி ஒரு நோட்டை நீட்டினான். ' என்னைப் பத்தி நினைக்கிறதெல்லாம் நீயும் எழுதிக் கொடு, மதியம், இத வாங்கிக்கிறேன்', என விடைபெற்றான். 


சிவப்பு ரோஜாப் பூக்களால் நிரம்பிய நோட்டின் அட்டை இழுத்தாலும், கல்லூரியில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என கிளம்பினாள். இந்த நோட்டு எனக்காக மட்டும் வாங்கி இருப்பானோ?  என்னைப் பற்றி எதுவும் உள்ளே எழுதி இருப்பானோ? என நினைத்ததே பரவசப்படுத்தியது. என்னவெல்லாம் தான் எழுதலாம் என யோசித்தபடி இருந்தவளுக்கு ஏகப்பட்ட கவிதைகள் கொட்டியது. பன்னீர்ப்பூக்களை தேடி எடுத்து அவன் பெயரை  எழுதி, பூக்கள் மீது பசை தடவி ஓட்ட  வேண்டும் என தோன்றியது. வெள்ளைக் காகிதத்தில் எடுப்பாக இருக்காதோ என நினைத்தவள், சரி அடர் நீல நிறத்தில் கரைக்  கட்டி விடலாம் என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள். தேர்வு முடிவைப் பார்க்கும் முன்பே குதூகலத்துடன் உள்ளே சென்றவள் இவள் ஒருத்தியாக  மட்டுமே இருக்கும். கல்லூரியில் தகவல் பலகையை சுற்றிக் கூட்டம். அதில், ஓட்டப்பட்டிருந்த மதிப்பெண்களுடன் வெளியாகி இருந்த தேர்வு முடிவுகளை மாணவிகள் கூட்டம்  முண்டியடித்து பார்த்துக் கொண்டிருந்தது. தன் வகுப்பு மாணவிகள் அக்கூட்டத்தில்  இருந்தும், நேர் எதிர் திசையில் சென்றாள். சற்று மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார்ந்தபடி, வேகமாக ரோஜாக்கள் நிரம்பிய அட்டையைப்  புரட்டினாள். முதல் பக்கத்தில், ' கடந்த சில வருடங்களில் என்னுடன் பயணித்த பெண் தோழியர்களான நீங்கள், என்னைப் பற்றிய உங்கள் நினைவுகளை இங்கேப் பகிருங்கள், வாழ்நாள் முழுமைக்கும் பயணிக்கும் இந்தப் புத்தகம் என்னுடன்'. எனத் துவங்கிய புத்தகத்தின் அடுத்தடுத்து என நீண்ட பக்கங்களில் மொத்தம் முப்பத்தி நான்கு பெண்கள் தங்கள் முகவரியுடன், இவனைப் பற்றி ஆகா,ஓகோவென புகழ்ந்து தள்ளி இருந்தனர். கொட்ட ஆரம்பித்தக் கண்ணீரை, சற்று தள்ளி நின்றிருந்த பெண்கள் தேர்வு முடிவிற்காக வந்திருக்கலாம் என நினைத்தபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். மொத்த மகிழ்ச்சியும் தொலைந்து போய் நின்ற வெறுமையில் கோபமும் கவலையும் கைக் கோர்த்து பிரம்மாண்டமாக நின்றன. தனக்குப் பன்னீர்ப்பூ போல, மீதி உள்ளவர்களுக்கு என்ன செய்தான் என உள்ளே முளைத்தக் கேள்வி வேகமாக வளர்ந்து, படபடவென கிளை பரப்பி பெரும் விருட்சமாக விஸ்வரூபமெடுத்தது,  மிக மோசமாக ஏமாந்துவிட்டோமென எனப் பொங்கிய அழுகையைக் கட்டுப் படுத்தியபடி தேர்வு முடிவுகளை கூட பார்க்காமல் கல்லூரியை விட்டு வெளியேறினாள். அருகில் இருந்த தபால் நிலையத்திலிருந்து,  புத்தகத்தை முதல் பக்கத்தின் ஓரத்தில்   எழுதப்பட்டு இருந்த   கந்தசாமியின் முகவரிக்கு அனுப்பி வைத்தாள்... அனுப்புவதற்கு முன்... கடைசிப் பக்கத்தில்... ' விதவிதமான  பூக்களுக்கு மத்தியில் பன்னீர்ப்பூ இருக்காது',  எனக் கொட்டை எழுத்தில் எழுதியவள் கையெழுத்திட்டிருக்கவில்லை...

("தமிழின் அமுதம்" மார்ச் மாத இதழில் வெளிவந்தது...)

சனி, 20 பிப்ரவரி, 2016

மங்களூரு!



மலைப்பிரதேசம், மிகக்குறைவான தூரத்தில் கடல், அருகில் ஆறு, எங்கு பார்த்தாலும் மரங்களும், பூக்களும் என  பசுமையும், அழகும் கண்களை நிரப்பும் இடங்களை பாஸில் படங்களில் பார்த்திருப்போம். இவை அனைத்தையும் நேரில் அனுபவித்து மகிழும் அனுபவத்தை மங்களூரு வழங்கியது. 

மேலே ஏறும், பக்கவாட்டில் இறங்கும், என கிளைகளாகப் பிரிகின்ற சாலைகள் நம் நாகர்கோவிலின் சாலைகளை நினைவுபடுத்துகின்றன. 

மூடபித்ரி ... மங்களூருவில் இருந்து 37 கி.மீ தூரத்தில் இருக்கிறது சமணர்களின் காசி என அழைக்கப்படும் மூடபித்ரி கோவில். மிக உயரமான, வலுவான கோட்டை சுவர்கள், வேலைப்பாடு மிகுந்த கதவுகள், தூண்கள் அதில் நாளெல்லாம் ரசிக்க செய்யும் நுண்ணிய வேலைப்பாடுகளாலன எண்ணற்ற சிற்பங்கள் கண்களை குதூகலப்படுத்தும். சிறிய தூண்கள் அனைத்தையும் சேர்த்து, ஆயிரம் தூண்கள் உள்ள கோவில் எனவும் இதை அழைகின்றனர். சற்று அண்ணாந்து பார்த்தால், கொஞ்சம் பருமனான தூண்களை குறுக்காக அடுக்கி, அதனை விட எடை குறைந்தவற்றை அதற்கடுத்து அடுக்கி என முற்றிலும் பாறைகளால் வேயப்பட்டுள்ள நேர்த்தி மிக்கக் கூரை பிரமிக்க செய்கிறது.

அதற்கடுத்து  கர்காலா செல்லும், வழியிலேயே, முந்திரிப்பருப்பை சுத்தப்படுத்தி பிரித்து அனுப்பும் தொழிற்சாலைக்கு சென்றோம். எடையை சோதித்த, பெரிய சாக்குப் பைகளைக் கிழித்து அவற்றில் இருக்கும் நிறம் கருத்திருக்கும் முந்திரிகளை கொட்டுகின்றனர். அதை அப்படியே உள்ளே இழுத்துக் கொள்கிறது உருளை வடிவில் இருக்கும் ஒரு இயந்திரம். சிறிது நேரத்திற்கு பின் அவித்த முந்திரிக்கொட்டைகளை கீழே தள்ளுகிறது. அவற்றை வாரி அள்ளி, பெரியப் பாத்திரங்களில் சேகரிக்கின்றனர். கொஞ்சம் தள்ளி சில பெண்கள் குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தனர். தங்களது கைகளில் இருந்த திருப்புளி அல்லது அதைப் போன்ற இரும்பு கம்பிகளால் வேகவேகமாக இந்தக் கொட்டைகளை உடைத்து வெளியே வரும் பருப்புகளை தங்களது பக்கத்தில் இருக்கும் டப்பாக்களில் சேமித்தனர். ( இதை அளவிட்டு தான் சம்பளம்) இன்னும் உள்ளே சென்றால் வரும் அறையில் ஒரு இயந்திரம் முந்திரிப்பருப்புகளை வெளியே தள்ளுகிறது சில அடிகள் நீளும் அதன் பாதையில் வரிசையாக அமர்ந்திருக்கின்ற பெண்கள், ரக வாரியாப் பிரித்து தங்கள் அருகில் உள்ள கூடைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர். சந்தை விலையை விட அங்கு விலைக் குறைவு என்பதால் முந்திரிப்பருப்புகளை தேவைக்கு ஏற்ப வாங்கலாம்.

அடுத்து சென்ற இடம் கர்கலாவில் உள்ள பாகுபலி கோமதீஸ்வரா கோவில், நாற்பத்தி இரண்டு அடி உயரமுள்ள இந்த சிலை ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்டதாகும்.  கர்நாடகாவில் இரண்டாவது உயரமான சிலை இது. ( முதல் இடத்தில் இருப்பது சிரவனபெல்கோலா) 500 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த சிலையின் பின்னால் சில தீர்த்தங்கரர்களின் சிலைகளும் அட்டென்சனில் வரிசையாக நிற்கின்றன. வெவ்வேறு பெயர்களிட்டு இருந்தாலும், என் கண்ணுக்கு ஒரு வித்யாசமும் தெரியவில்லை. அப்பிராணியான எனக்கு தெரிந்ததெல்லாம் உட்கார்ந்திருந்தால் புத்தர், நின்றால் மகாவீரர் அவ்வளவுதான். 

தெற்கு கனரா மாவட்டத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணன் கோவில் பற்றி கேள்விப்பட்டு அங்கும் சென்றோம். கோவிலை சுற்றிலும் விளக்குகள் இருக்க, வரிசையில் சென்றால், ஜன்னல் வழியே உள்ளே இருக்கும் கிருஷ்ணன் சிலையைப் பார்க்கலாம். 

அங்கிருந்து மீண்டும் மங்களூர் திரும்பும் வழியில் வருகிறது மால்பே கடற்கரை. தந்நிர்பவி, கௌப், பனம்பூர், சுரத்கல், உல்லால் என பல கடற்கரைகள் இங்கு இருந்தாலும், இந்த மால்பேக்கே மக்கள் அதிகம் வருகின்றனர். தூய்மையாக காட்சியளிக்கும் கடற்கரையில், ஒரு ஓரத்தில் பாராஷூட், இன்னொரு பக்கம் குதிரை சவாரி, சற்று தள்ளி பெரிய, பெரிய ராட்டினங்கள், தவிர்த்து அருகில் இருக்கும் செயின்ட் மேரி தீவிற்கு செல்ல படகு சவாரி என கலகலக்கிறது கடற்கரை. புதிதாகப் பிடித்த மீன்களை வறுத்து தருவது, வேகவைத்த நிலக்கடலைப்பருப்பு, சுட்டசோளக்கருது என நாக்கிற்கு தேவையானவையும் கிடைக்கின்றன.

அடுத்த நாள் சென்ற 104 கி.மீ தொலைவில் இருந்தது குக்கே சுப்ரமண்யம் கோவில். திருவிழாக்காலம் என்பதால், கோவிலின் முன்ன இருந்த தேர்கள், வண்ண வண்ண முக்கோணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவற்றுக்கு இடையே சீரியல் விளக்குகளும் இணைந்திருந்தன. இதற்கடுத்து சென்ற,  தர்மசாலா (மங்களூருவில் இருந்து 75 கி.மீ) மஞ்சுநாதர் கோவிலிலும் கூட்டம். உடுப்பி மற்றும் இந்த கோவில்களிலும் நீண்ட வரிசை இருந்தது. இந்தக் கோவில்களில் எல்லாமே உள்ளே இருக்கும் சிலை மிக சிறிய அளவில் ( 1 -11/2 அடிக்குள் ) இருக்கின்றன. பொதுவாக அன்னதானம் நடைபெறுகிறது. உடுப்பி தவிர்த்து மீதி இரண்டு கோவில்களும் மலைப் பாதையில் தான் செல்ல வேண்டும். ஆனாலும், அத்தனைக் கூட்டம். யாராவது தன்னை, தன் குடும்பத்தை சரி படுத்தமாட்டார்களா என்ற ஏக்கமும், இந்தக் கோவில்களாலேயே முடியும் என்ற நம்பிக்கையுமே அத்தனை ஜனத்திரளை அங்கே இழுத்து வந்திருக்கும். 

சுற்றுலாப் பயணம் என திட்டமிட்டு ஆன்மீகப் பயணமாகிவிட்டதோ எனக் குழம்பிவிட்டோம். 

அதற்கு அடுத்த நாள் சுல்தான் பத்திரி ( Sultan Bathery ) சென்றோம்.
குர்பூர் ஆற்றில் வரும் போர்க்கப்பல்களை தடுக்க, திப்பு உருவாக்கியது இந்தக் கட்டிடம். படிகளில் மேலேறி செல்ல வட்டமான பகுதி வருகிறது. ஓரடி இடம் இடைவெளி விட்டு, விட்டு அமைக்கப்பட்டிருக்கிறது சுவர்.  ஏறுகின்ற வழியிலும், சுற்றிலும் இருக்கின்ற சுவரிலும் தூரத்தில் வருபவர்களை, அவர்கள் அறியாவண்ணம் பார்க்க நீளவடிவில் துளைகள் உள்ளன. இந்த கண்காணிப்புக் கட்டிடம், பீரங்கித் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படிகளின் பக்கவாட்டில் உள்ள இரும்புக் கதவின் உள்ளே சுரங்கப் பாதை இருப்பதாக சிலர் சொன்னார்கள். திப்புசுல்தான் ஏறியப் படிகளில் ஏறி, மேலிருந்து எப்படித் தாக்குதல் நடத்தி இருப்பார் என மனம் போன போக்கில் கற்பனை செய்து இறங்கிய போது, என்னுள் ஒருவித பெருமிதம் படர்ந்திருந்தது. 


சயத் மதானி தர்ஹா... 500 வருடங்களுக்கு முன்பு மதினாவில் இருந்து வந்தவர். பல அற்புதங்களை நிகழ்த்தியதாக சொல்லப்படுபவரின் தர்ஹா உல்லால் கடற்கரை அருகில் இருக்கிறது. அதற்கு முன்பாக சதுர வடிவில் நிதானமாக இறங்கி செல்ல எதுவாக படிக்கட்டுகளால் சூழப்பட்டுள்ளக் கிணறு கால்களை சுத்தப்படுத்தி செல்வதற்கு கட்டப்பட்டிருக்கிறது.

மதநல்லிணக்கம் எங்களுக்கும் இருக்கிறது என்பதற்காக விடுபட்டிருந்த ஒரு தேவாலயத்திற்கும் சென்று வந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகிலேயே இருக்கிறது மிளக்ரேஸ் சர்ச் ( Milagres church). 300 வருடங்களுக்கு முன்பு, கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் st Antony of paduva, உருவ சிலை இருக்கிறது.

மங்களூரை உள்ளால் பகுதியுடன் இணைக்கும் பகுதியில் ஓடும் நேத்ராவதி ஆறு அத்தனை அழகு. பாலத்தில் செல்லும் போதும் பார்க்கலாம். தெற்கு கனரா மாவட்டத்தில் இருந்து கிளம்பி வருகின்ற இந்த நதி கேரளாவிற்குள் செல்கிறது.

பெஜாய் அரசு அருங்காட்சியகம்...
ஓலைச் சுவடிகள், காசுகள், செப்புப் பட்டயங்கள் எல்லாம் கால வாரியாக அடுக்கப்பட்டிருக்கின்றன.  இவற்றைத் தவிர, கொகாலு போன்ற இசைக்கருவிகள், மரங்களில் செதுக்கிய சிலைகள், விதவிதமான வாள்கள்,  பீரங்கிகள், குண்டுகள், வகைவகையான விளக்குகள் என நிறைந்து கிடைக்கிறது இங்கு. 11வது நூற்றாண்டில் செதுக்கப்பட்ட பார்சவநாதசிலை ஹொய்சாளர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. 12 வது நூற்றாண்டில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிற சரஸ்வதியின் சிற்பம் கொள்ளை அழகு. நுணுக்கமாகப் பார்த்தால் நுண்ணிய வேலைப்பாடுகள் பிரமிக்கவைக்கின்றன. சிலையை சுற்றிலும் இடைவெளி, அதனை ஒட்டி மிக சிறிய சிற்பங்கள், அற்புதமான அணிகலன்கள் என மெருகேற்றப்பட்டிருக்கும் சிலை நம்மை எளிதில் நகரவிடுவதில்லை. 13வது நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ள யோகா நிலையில் உள்ள சிவன் சிலை சாளுக்கியர் காலத்தியது. 

இந்த அரசு அருங்காட்சியகத்தின் வெளியே வந்தால், திறந்த வெளியில் கை, கால், மூக்கு உடைந்து, சிதைந்த நிலையில் இருக்கின்ற சில சிற்பங்கள் இடைவெளி விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே சிதைந்தவைதானே, இன்னும் சிதைந்தால் என்ன என்ற எண்ணமோ என்னவோ...

பிலிகுலா ( Pilikula Nisargadhama ) துளு மொழியில் பிலி என்றால் புலி, குலா என்றால் ஏரி, முன்பு, புலிகள் இங்கிருக்கும் ஏரியை பயன்படுத்தி இருப்பதால் இப்பெயர் வந்தது. 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சி சாலையில் குழந்தைகள் ரசிப்பதற்கென்று வாகனத்தில் சென்று விலங்குகளை கண்டு ரசிக்கும் வசதி,  படகு சவாரி போன்றவை  உள்ளன. 

உணவகங்களில் சாப்பாடு டோக்கனை கொடுக்கும் போது சிவப்பு அரிசியா, வெள்ளை அரிசியா என கேட்கின்றனர். ஒரு சிலரைத் தவிர பலரும் சிவப்பு அரிசி சோற்றையே சாப்பிட்டுக் கொண்டு இருப்பது தெரிந்தது. குழந்தைக்கு உணவூட்டும் அளவில் வருகின்ற வெள்ளை அரிசி சோறு, கொளகொளவென வைத்துள்ள கூட்டுகளில் பிசைந்து ஊறுகாயை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இத்துடன் கொடுக்கப்படும் சிறிய மூன்று பூரிகளே வயிற்றை நிரப்பிவிடும் எனக்கு.

நான்கைந்து கிலோமீட்டர் வரை மாலை வேளைகளில் நடந்த போதும் சரி, வாகனத்தில் சுற்றும் போதும் சரி, ஒரே ஒரு டீக் கடை கூட தென்படவில்லை. ஒரு டீக்கடை, ஓரத்தில் தட்டிப்போடும், வடை, பஜ்ஜி, போண்டா இல்லாமல் ஒரு ஊரா என அதிர்ச்சி, விரட்டி விரட்டி விசாரித்ததில்,  சிறிய உணவங்களில் உள்ளேயே அமர்ந்து நொறுக்குத் தீனிகளுடன் காபி,டீ போன்ற பானங்களை அருந்துகின்றனர். கோலி பஜே, (கோதுமை மாவு போன்டா) , பொடி ( பஜ்ஜி) இவற்றுடன் பேல் பூரி, பாவ்பாஜி போன்ற வகைகளும் அதிகம் விற்பனை ஆகின்றன. இது வரை கர்நாடகா ஸ்பெசல் என நினைத்திருந்த பிஸிபேளாபாத், வாங்கிபாத் மங்களூரில் தேடிய அளவில் கிடைக்கவேயில்லை. 

ஊரெல்லாம் தென்னை மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், குழம்பு, சட்னி, கூட்டு, பொரியல் என அத்தனையும் தேங்காய் அரவைக்கு மத்தியிலேயே தட்டுப் படுகின்றன. நாக்கில் படர்ந்த மழுமழுப்பு மிளகாய் சட்னிக்கு ஏங்கியது சோகக்கதை.

சுத்தமான சாலைகளில், ஒரே ஒரு சிலை கூட இல்லையே என யோசித்துக் கொண்டிருந்தேன். உல்லால் கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்த சிலையை, Rani Abbakka Chowta என்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை என்றனர். உல்லாலின் அரசியாக இருந்த இவர், போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக 16வது நூற்றாண்டிலேயே போராடியிருக்கும் முதல் சுதந்திரப் போராட்டப் பெண்மணி. உள்ளுக்குள் மெல்லிய மகிழ்ச்சி பரவியது. 

சிம்லா, கேங்டாக், பெங்களூர் போலவே இங்கேயும் உள்ள MG ரோடு, மக்கள் பொருட்களை சுற்றிப் பார்த்து வாங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது.

புது சூழல், காலநிலை, மக்கள் எல்லாம் சேர்ந்து அடர்ந்து போய் மனதின் உள்ளே கிடந்த சோர்வை நீக்கியது. இது தான் என இலக்கின்றி மூன்று நாட்களும் மனம் போல நடந்தும், வாகனத்திலும் சுற்றிய பயணம் கொடுத்த புத்துணர்வு பல நாட்களுக்கு நீடிக்கும்.


பிப்ரவரி 21 - தீக்கதிர் - வண்ணக்கதிர் இணைப்பில் வெளியான கட்டுரை. 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

மரணத்தில் மிதக்கும் சொற்கள்

மரணத்திற்கு அப்பால், மரணத்திற்கு பின்...
போன்ற புத்தகங்களை ஆர்வ மேலீட்டால் படித்திருக்கிறேன். சில வினாக்கள் மறைந்தன. புதிதான பல கேள்விகளை உள்ளே கொண்டு வந்து சேர்க்கவும் செய்தன...
அந்த வரிசையில்,
மரணத்தில் மிதக்கும் சொற்கள்' சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே வாசிக்கத் தூண்டியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வாசித்துவிட்டு நூலாசிரியரிடம் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். விரைவில் இந்தப் புத்தகத்திற்கான விமர்சனத்தை எழுத இருக்கிறேன் என சொன்னேன். இந்த தகவல் எப்படி எட்டியதோ தெரியவில்லை, சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற பொங்கல் புத்தகத் திருவிழாவில், சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதை இப்புத்தகம் பெற்றது. :P   

தனக்கே உரிய புதிர்த்தன்மையை காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற மரணம் மைய இழையாக  சில கதைகளில் ஓடுகிறது. மீதி கதைகள் அதற்கு இணையான வலியை சொல்வதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும், பல இடங்களில், வழக்கமாக கலக்கும் நையாண்டியுடன் விரியும் புதுவிதமான அனுபவங்கள் வாசித்த இடத்தை விட்டு நகர  மறுக்கிறது  . தொடர்ந்து வாசிக்கின்ற வரிகளில் வழியும் துயரம் நம் உள்ளே ஊடுருவுவதைத்  தவிர்க்க முடியவில்லை. அதே நேரம் மாறுபட்ட கதைக்களங்களும், கதாப்பத்திரங்களும் புத்தகத்தை கீழே வைக்கவும் விடவில்லை. 

இதில் கதாப்பாத்திரங்கள் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பதும், நடந்து கொண்டிருக்கின்ற நிஜத்துக்கும் இடையே காட்சிகளாக நம் முன்னே ஓடிக்கொண்டிருப்பதை  இக்கதைகளின் பொது அம்சம் எனலாம். 

கண் நிறையத் தெரியும், ஜிகர்தண்டா, பிரியாணியைத் தாண்டி தொங்க விடப்பட்டுள்ள பர்தாவை ஒதுக்கிப் பார்த்தால், புதிதாய் தென்படுகின்ற பல காட்சிகள் வியப்பூட்டுகின்றன.  




நிகழும் சம்பவங்கள் மூலம் தெரிய வரும் அவர்களின் வாழ்வியல் முறை, தட்டுப்படும் மெல்லிய வேறுபாடு பல இடங்களில் ரசிக்கவைக்க செய்கிறது.   

இதுவரை அவ்வளவாக கண்டிராத கோணத்தின் பக்கங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை, ரத்தமும், சதையுமாக கண் முன்னே பார்த்ததில் சிலரைப் பற்றி சில வரிகளைப் பகிர நினைக்கிறேன்...  பெரும் செல்வாக்கு, பண பலம் உள்ள ஒருவரின் மகள் மாற்று மதப் பையனைத் திருமணம் செய்து கொண்டதற்குப் பின் சில வருடங்களில் இறந்து விடுகிறாள். எவ்வாறேனும், அவளது உடலைத் தருவித்து தங்களது வழக்கப்படி அடக்கம் செய்ய நினைக்கும் தந்தையின் வலியை விட அதிகமாக இருக்கிறது அந்த மகளின் உடலுக்காக கபர் குழியைத் தோண்டி வைத்துவிட்டு தனது மகளின் கல்வி செலவிற்காக அல்லாடும் தந்தையின் வலி. 
மௌனச்சுழி என்றொரு கதையில்  தங்கள் பள்ளிவாசலில் பயான் செய்வதற்காக வந்த உலகப் பிரசித்த பெற்ற ரஹ்மானியைத் தன் மகளாகவே பாவிக்க, வந்த அவரோ மரித்துப் போகிறார். அதன் தாக்கத்தால்,  தன் மகளை அவளுக்குத் தெரியாமல் பார்த்துவிட்டு வர வேண்டும் என்ற தந்தையின் தவிப்பில் தெரியும் பெரும்பிரியம் மகள் மீது பிரியம் கொண்ட அத்தனைத் தந்தைகளுக்குமான உணர்வு...

மாற்றம் தேவைப்படும் வழக்கத்தை துணிச்சலுடன் மாற்ற நினைக்கும் அஸ்கர், அவனது முடிவு வீட்டினராலேயே வேறுவிதமாக தடுக்கப்படும் நிலையின், எதார்த்தம் மனதை வருத்துகிறது.

ஒருவனது இறப்பை ஊரில் உள்ள உறவும் நட்பும் சொல்லி சொல்லி அழுகிறது. ஒவ்வொருவரின் ஒப்பாரியின் போதும் தனது கடந்து காலத்தில் நடந்த அதற்கொப்பான சம்பவங்களை ஓட விட்டுக் கொண்டிருப்பாள். தூக்கிக் கொண்டு போகும் போது, ' அண்ணன், அண்ணி, தங்கச்சி அவங்க பிள்ளைகனு இருந்த நீங்க என்னைக்காச்சும் என்னை நெனச்சாவது பார்த்திருக்கீங்களா?  எல்லாருக்கும் நல்லவரா இருந்த நீங்க எனக்கு எப்படி இருந்தீங்க?  என பெருங்குரலெடுத்து பொங்குகிறவளின் வலிக்கான காரணம், அவளது கணவனின் மரணத்தை விட, அவன் வாழ்ந்த காலத்தில் அவளை சக உயிராக பாவிக்காமை தரும் ரணமே. 

கழைக்கூத்தாடிப் பெண்ணிடம் பார்க்கும் பலரின் பார்வைக்கு மத்தியில், அந்த குடும்பத்தின் தேவைக்காக, திருடனாக இருந்தாலும் நல்ல நோக்கத்தில் மட்டுமே ஐநூறு ரூபாயைத் தரும்  சேதுராமன் கதாப்பாத்திரம் சமகால தமிழ் சினிமாவில் நம் மக்கள் ரசிக்கும் கதாநாயகனின் பிம்பம்.

ஒரு கதையை மட்டும் எடுத்து ஒரு மணிநேரம் விவாதிக்கலாம். ஒவ்வொரு கதையிலும் கதாப்பாத்திரங்களின் அருகாமையில் நம்மை  நிற்க வைக்கும் விறுவிறுப்பான நடை. கதையின் ஓட்டத்தில் எங்கேனும் ஓரிடத்தில் நாமும் நிற்பதை அரிதான எழுத்துகளில் மட்டுமே காண முடியும். இரு முறை எழுத முயற்சித்த போது தொடர்ச்சியாக வந்த காய்ச்சல், இருமல் மூன்றாவது முறை எழுத அமர்ந்த போது, பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டது.

ஒரு சொல்லுக்கு இணையான மாற்று சொற்கள், அங்கங்கே நீளும் கவித்துவமான வரிகள், வித்தியாசமான உவமைகள், இவற்றுடன் மதுரையில் விடிய விடிய எங்கெங்கே, என்னென்ன சிறப்பான உணவுகள் கிடைக்கும் என்பது மாதிரியான பல  தகவல்கள்,  எழும் கலவையான உணர்வுகளுடன்  கலந்து மொத்தப் புத்தகத்தின் கனத்தைக் கூட்டுகின்றன. ஒரே மாதிரியான விஷயம், அலுப்பூட்டும் சொற்கள் என்ற வழமையிலிருந்து மாறுபட்டு நிற்கும்  ' மரணத்தில் மிதக்கும் சொற்கள்', வித்யாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.


ஆசிரியர் : அர்ஷியா 
பதிப்பகம் : புலம்