சனி, 20 பிப்ரவரி, 2016

மங்களூரு!



மலைப்பிரதேசம், மிகக்குறைவான தூரத்தில் கடல், அருகில் ஆறு, எங்கு பார்த்தாலும் மரங்களும், பூக்களும் என  பசுமையும், அழகும் கண்களை நிரப்பும் இடங்களை பாஸில் படங்களில் பார்த்திருப்போம். இவை அனைத்தையும் நேரில் அனுபவித்து மகிழும் அனுபவத்தை மங்களூரு வழங்கியது. 

மேலே ஏறும், பக்கவாட்டில் இறங்கும், என கிளைகளாகப் பிரிகின்ற சாலைகள் நம் நாகர்கோவிலின் சாலைகளை நினைவுபடுத்துகின்றன. 

மூடபித்ரி ... மங்களூருவில் இருந்து 37 கி.மீ தூரத்தில் இருக்கிறது சமணர்களின் காசி என அழைக்கப்படும் மூடபித்ரி கோவில். மிக உயரமான, வலுவான கோட்டை சுவர்கள், வேலைப்பாடு மிகுந்த கதவுகள், தூண்கள் அதில் நாளெல்லாம் ரசிக்க செய்யும் நுண்ணிய வேலைப்பாடுகளாலன எண்ணற்ற சிற்பங்கள் கண்களை குதூகலப்படுத்தும். சிறிய தூண்கள் அனைத்தையும் சேர்த்து, ஆயிரம் தூண்கள் உள்ள கோவில் எனவும் இதை அழைகின்றனர். சற்று அண்ணாந்து பார்த்தால், கொஞ்சம் பருமனான தூண்களை குறுக்காக அடுக்கி, அதனை விட எடை குறைந்தவற்றை அதற்கடுத்து அடுக்கி என முற்றிலும் பாறைகளால் வேயப்பட்டுள்ள நேர்த்தி மிக்கக் கூரை பிரமிக்க செய்கிறது.

அதற்கடுத்து  கர்காலா செல்லும், வழியிலேயே, முந்திரிப்பருப்பை சுத்தப்படுத்தி பிரித்து அனுப்பும் தொழிற்சாலைக்கு சென்றோம். எடையை சோதித்த, பெரிய சாக்குப் பைகளைக் கிழித்து அவற்றில் இருக்கும் நிறம் கருத்திருக்கும் முந்திரிகளை கொட்டுகின்றனர். அதை அப்படியே உள்ளே இழுத்துக் கொள்கிறது உருளை வடிவில் இருக்கும் ஒரு இயந்திரம். சிறிது நேரத்திற்கு பின் அவித்த முந்திரிக்கொட்டைகளை கீழே தள்ளுகிறது. அவற்றை வாரி அள்ளி, பெரியப் பாத்திரங்களில் சேகரிக்கின்றனர். கொஞ்சம் தள்ளி சில பெண்கள் குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தனர். தங்களது கைகளில் இருந்த திருப்புளி அல்லது அதைப் போன்ற இரும்பு கம்பிகளால் வேகவேகமாக இந்தக் கொட்டைகளை உடைத்து வெளியே வரும் பருப்புகளை தங்களது பக்கத்தில் இருக்கும் டப்பாக்களில் சேமித்தனர். ( இதை அளவிட்டு தான் சம்பளம்) இன்னும் உள்ளே சென்றால் வரும் அறையில் ஒரு இயந்திரம் முந்திரிப்பருப்புகளை வெளியே தள்ளுகிறது சில அடிகள் நீளும் அதன் பாதையில் வரிசையாக அமர்ந்திருக்கின்ற பெண்கள், ரக வாரியாப் பிரித்து தங்கள் அருகில் உள்ள கூடைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர். சந்தை விலையை விட அங்கு விலைக் குறைவு என்பதால் முந்திரிப்பருப்புகளை தேவைக்கு ஏற்ப வாங்கலாம்.

அடுத்து சென்ற இடம் கர்கலாவில் உள்ள பாகுபலி கோமதீஸ்வரா கோவில், நாற்பத்தி இரண்டு அடி உயரமுள்ள இந்த சிலை ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்டதாகும்.  கர்நாடகாவில் இரண்டாவது உயரமான சிலை இது. ( முதல் இடத்தில் இருப்பது சிரவனபெல்கோலா) 500 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த சிலையின் பின்னால் சில தீர்த்தங்கரர்களின் சிலைகளும் அட்டென்சனில் வரிசையாக நிற்கின்றன. வெவ்வேறு பெயர்களிட்டு இருந்தாலும், என் கண்ணுக்கு ஒரு வித்யாசமும் தெரியவில்லை. அப்பிராணியான எனக்கு தெரிந்ததெல்லாம் உட்கார்ந்திருந்தால் புத்தர், நின்றால் மகாவீரர் அவ்வளவுதான். 

தெற்கு கனரா மாவட்டத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணன் கோவில் பற்றி கேள்விப்பட்டு அங்கும் சென்றோம். கோவிலை சுற்றிலும் விளக்குகள் இருக்க, வரிசையில் சென்றால், ஜன்னல் வழியே உள்ளே இருக்கும் கிருஷ்ணன் சிலையைப் பார்க்கலாம். 

அங்கிருந்து மீண்டும் மங்களூர் திரும்பும் வழியில் வருகிறது மால்பே கடற்கரை. தந்நிர்பவி, கௌப், பனம்பூர், சுரத்கல், உல்லால் என பல கடற்கரைகள் இங்கு இருந்தாலும், இந்த மால்பேக்கே மக்கள் அதிகம் வருகின்றனர். தூய்மையாக காட்சியளிக்கும் கடற்கரையில், ஒரு ஓரத்தில் பாராஷூட், இன்னொரு பக்கம் குதிரை சவாரி, சற்று தள்ளி பெரிய, பெரிய ராட்டினங்கள், தவிர்த்து அருகில் இருக்கும் செயின்ட் மேரி தீவிற்கு செல்ல படகு சவாரி என கலகலக்கிறது கடற்கரை. புதிதாகப் பிடித்த மீன்களை வறுத்து தருவது, வேகவைத்த நிலக்கடலைப்பருப்பு, சுட்டசோளக்கருது என நாக்கிற்கு தேவையானவையும் கிடைக்கின்றன.

அடுத்த நாள் சென்ற 104 கி.மீ தொலைவில் இருந்தது குக்கே சுப்ரமண்யம் கோவில். திருவிழாக்காலம் என்பதால், கோவிலின் முன்ன இருந்த தேர்கள், வண்ண வண்ண முக்கோணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவற்றுக்கு இடையே சீரியல் விளக்குகளும் இணைந்திருந்தன. இதற்கடுத்து சென்ற,  தர்மசாலா (மங்களூருவில் இருந்து 75 கி.மீ) மஞ்சுநாதர் கோவிலிலும் கூட்டம். உடுப்பி மற்றும் இந்த கோவில்களிலும் நீண்ட வரிசை இருந்தது. இந்தக் கோவில்களில் எல்லாமே உள்ளே இருக்கும் சிலை மிக சிறிய அளவில் ( 1 -11/2 அடிக்குள் ) இருக்கின்றன. பொதுவாக அன்னதானம் நடைபெறுகிறது. உடுப்பி தவிர்த்து மீதி இரண்டு கோவில்களும் மலைப் பாதையில் தான் செல்ல வேண்டும். ஆனாலும், அத்தனைக் கூட்டம். யாராவது தன்னை, தன் குடும்பத்தை சரி படுத்தமாட்டார்களா என்ற ஏக்கமும், இந்தக் கோவில்களாலேயே முடியும் என்ற நம்பிக்கையுமே அத்தனை ஜனத்திரளை அங்கே இழுத்து வந்திருக்கும். 

சுற்றுலாப் பயணம் என திட்டமிட்டு ஆன்மீகப் பயணமாகிவிட்டதோ எனக் குழம்பிவிட்டோம். 

அதற்கு அடுத்த நாள் சுல்தான் பத்திரி ( Sultan Bathery ) சென்றோம்.
குர்பூர் ஆற்றில் வரும் போர்க்கப்பல்களை தடுக்க, திப்பு உருவாக்கியது இந்தக் கட்டிடம். படிகளில் மேலேறி செல்ல வட்டமான பகுதி வருகிறது. ஓரடி இடம் இடைவெளி விட்டு, விட்டு அமைக்கப்பட்டிருக்கிறது சுவர்.  ஏறுகின்ற வழியிலும், சுற்றிலும் இருக்கின்ற சுவரிலும் தூரத்தில் வருபவர்களை, அவர்கள் அறியாவண்ணம் பார்க்க நீளவடிவில் துளைகள் உள்ளன. இந்த கண்காணிப்புக் கட்டிடம், பீரங்கித் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படிகளின் பக்கவாட்டில் உள்ள இரும்புக் கதவின் உள்ளே சுரங்கப் பாதை இருப்பதாக சிலர் சொன்னார்கள். திப்புசுல்தான் ஏறியப் படிகளில் ஏறி, மேலிருந்து எப்படித் தாக்குதல் நடத்தி இருப்பார் என மனம் போன போக்கில் கற்பனை செய்து இறங்கிய போது, என்னுள் ஒருவித பெருமிதம் படர்ந்திருந்தது. 


சயத் மதானி தர்ஹா... 500 வருடங்களுக்கு முன்பு மதினாவில் இருந்து வந்தவர். பல அற்புதங்களை நிகழ்த்தியதாக சொல்லப்படுபவரின் தர்ஹா உல்லால் கடற்கரை அருகில் இருக்கிறது. அதற்கு முன்பாக சதுர வடிவில் நிதானமாக இறங்கி செல்ல எதுவாக படிக்கட்டுகளால் சூழப்பட்டுள்ளக் கிணறு கால்களை சுத்தப்படுத்தி செல்வதற்கு கட்டப்பட்டிருக்கிறது.

மதநல்லிணக்கம் எங்களுக்கும் இருக்கிறது என்பதற்காக விடுபட்டிருந்த ஒரு தேவாலயத்திற்கும் சென்று வந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகிலேயே இருக்கிறது மிளக்ரேஸ் சர்ச் ( Milagres church). 300 வருடங்களுக்கு முன்பு, கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் st Antony of paduva, உருவ சிலை இருக்கிறது.

மங்களூரை உள்ளால் பகுதியுடன் இணைக்கும் பகுதியில் ஓடும் நேத்ராவதி ஆறு அத்தனை அழகு. பாலத்தில் செல்லும் போதும் பார்க்கலாம். தெற்கு கனரா மாவட்டத்தில் இருந்து கிளம்பி வருகின்ற இந்த நதி கேரளாவிற்குள் செல்கிறது.

பெஜாய் அரசு அருங்காட்சியகம்...
ஓலைச் சுவடிகள், காசுகள், செப்புப் பட்டயங்கள் எல்லாம் கால வாரியாக அடுக்கப்பட்டிருக்கின்றன.  இவற்றைத் தவிர, கொகாலு போன்ற இசைக்கருவிகள், மரங்களில் செதுக்கிய சிலைகள், விதவிதமான வாள்கள்,  பீரங்கிகள், குண்டுகள், வகைவகையான விளக்குகள் என நிறைந்து கிடைக்கிறது இங்கு. 11வது நூற்றாண்டில் செதுக்கப்பட்ட பார்சவநாதசிலை ஹொய்சாளர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. 12 வது நூற்றாண்டில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிற சரஸ்வதியின் சிற்பம் கொள்ளை அழகு. நுணுக்கமாகப் பார்த்தால் நுண்ணிய வேலைப்பாடுகள் பிரமிக்கவைக்கின்றன. சிலையை சுற்றிலும் இடைவெளி, அதனை ஒட்டி மிக சிறிய சிற்பங்கள், அற்புதமான அணிகலன்கள் என மெருகேற்றப்பட்டிருக்கும் சிலை நம்மை எளிதில் நகரவிடுவதில்லை. 13வது நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ள யோகா நிலையில் உள்ள சிவன் சிலை சாளுக்கியர் காலத்தியது. 

இந்த அரசு அருங்காட்சியகத்தின் வெளியே வந்தால், திறந்த வெளியில் கை, கால், மூக்கு உடைந்து, சிதைந்த நிலையில் இருக்கின்ற சில சிற்பங்கள் இடைவெளி விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே சிதைந்தவைதானே, இன்னும் சிதைந்தால் என்ன என்ற எண்ணமோ என்னவோ...

பிலிகுலா ( Pilikula Nisargadhama ) துளு மொழியில் பிலி என்றால் புலி, குலா என்றால் ஏரி, முன்பு, புலிகள் இங்கிருக்கும் ஏரியை பயன்படுத்தி இருப்பதால் இப்பெயர் வந்தது. 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சி சாலையில் குழந்தைகள் ரசிப்பதற்கென்று வாகனத்தில் சென்று விலங்குகளை கண்டு ரசிக்கும் வசதி,  படகு சவாரி போன்றவை  உள்ளன. 

உணவகங்களில் சாப்பாடு டோக்கனை கொடுக்கும் போது சிவப்பு அரிசியா, வெள்ளை அரிசியா என கேட்கின்றனர். ஒரு சிலரைத் தவிர பலரும் சிவப்பு அரிசி சோற்றையே சாப்பிட்டுக் கொண்டு இருப்பது தெரிந்தது. குழந்தைக்கு உணவூட்டும் அளவில் வருகின்ற வெள்ளை அரிசி சோறு, கொளகொளவென வைத்துள்ள கூட்டுகளில் பிசைந்து ஊறுகாயை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இத்துடன் கொடுக்கப்படும் சிறிய மூன்று பூரிகளே வயிற்றை நிரப்பிவிடும் எனக்கு.

நான்கைந்து கிலோமீட்டர் வரை மாலை வேளைகளில் நடந்த போதும் சரி, வாகனத்தில் சுற்றும் போதும் சரி, ஒரே ஒரு டீக் கடை கூட தென்படவில்லை. ஒரு டீக்கடை, ஓரத்தில் தட்டிப்போடும், வடை, பஜ்ஜி, போண்டா இல்லாமல் ஒரு ஊரா என அதிர்ச்சி, விரட்டி விரட்டி விசாரித்ததில்,  சிறிய உணவங்களில் உள்ளேயே அமர்ந்து நொறுக்குத் தீனிகளுடன் காபி,டீ போன்ற பானங்களை அருந்துகின்றனர். கோலி பஜே, (கோதுமை மாவு போன்டா) , பொடி ( பஜ்ஜி) இவற்றுடன் பேல் பூரி, பாவ்பாஜி போன்ற வகைகளும் அதிகம் விற்பனை ஆகின்றன. இது வரை கர்நாடகா ஸ்பெசல் என நினைத்திருந்த பிஸிபேளாபாத், வாங்கிபாத் மங்களூரில் தேடிய அளவில் கிடைக்கவேயில்லை. 

ஊரெல்லாம் தென்னை மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், குழம்பு, சட்னி, கூட்டு, பொரியல் என அத்தனையும் தேங்காய் அரவைக்கு மத்தியிலேயே தட்டுப் படுகின்றன. நாக்கில் படர்ந்த மழுமழுப்பு மிளகாய் சட்னிக்கு ஏங்கியது சோகக்கதை.

சுத்தமான சாலைகளில், ஒரே ஒரு சிலை கூட இல்லையே என யோசித்துக் கொண்டிருந்தேன். உல்லால் கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்த சிலையை, Rani Abbakka Chowta என்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை என்றனர். உல்லாலின் அரசியாக இருந்த இவர், போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக 16வது நூற்றாண்டிலேயே போராடியிருக்கும் முதல் சுதந்திரப் போராட்டப் பெண்மணி. உள்ளுக்குள் மெல்லிய மகிழ்ச்சி பரவியது. 

சிம்லா, கேங்டாக், பெங்களூர் போலவே இங்கேயும் உள்ள MG ரோடு, மக்கள் பொருட்களை சுற்றிப் பார்த்து வாங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது.

புது சூழல், காலநிலை, மக்கள் எல்லாம் சேர்ந்து அடர்ந்து போய் மனதின் உள்ளே கிடந்த சோர்வை நீக்கியது. இது தான் என இலக்கின்றி மூன்று நாட்களும் மனம் போல நடந்தும், வாகனத்திலும் சுற்றிய பயணம் கொடுத்த புத்துணர்வு பல நாட்களுக்கு நீடிக்கும்.


பிப்ரவரி 21 - தீக்கதிர் - வண்ணக்கதிர் இணைப்பில் வெளியான கட்டுரை. 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

மரணத்தில் மிதக்கும் சொற்கள்

மரணத்திற்கு அப்பால், மரணத்திற்கு பின்...
போன்ற புத்தகங்களை ஆர்வ மேலீட்டால் படித்திருக்கிறேன். சில வினாக்கள் மறைந்தன. புதிதான பல கேள்விகளை உள்ளே கொண்டு வந்து சேர்க்கவும் செய்தன...
அந்த வரிசையில்,
மரணத்தில் மிதக்கும் சொற்கள்' சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே வாசிக்கத் தூண்டியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வாசித்துவிட்டு நூலாசிரியரிடம் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். விரைவில் இந்தப் புத்தகத்திற்கான விமர்சனத்தை எழுத இருக்கிறேன் என சொன்னேன். இந்த தகவல் எப்படி எட்டியதோ தெரியவில்லை, சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற பொங்கல் புத்தகத் திருவிழாவில், சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதை இப்புத்தகம் பெற்றது. :P   

தனக்கே உரிய புதிர்த்தன்மையை காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற மரணம் மைய இழையாக  சில கதைகளில் ஓடுகிறது. மீதி கதைகள் அதற்கு இணையான வலியை சொல்வதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும், பல இடங்களில், வழக்கமாக கலக்கும் நையாண்டியுடன் விரியும் புதுவிதமான அனுபவங்கள் வாசித்த இடத்தை விட்டு நகர  மறுக்கிறது  . தொடர்ந்து வாசிக்கின்ற வரிகளில் வழியும் துயரம் நம் உள்ளே ஊடுருவுவதைத்  தவிர்க்க முடியவில்லை. அதே நேரம் மாறுபட்ட கதைக்களங்களும், கதாப்பத்திரங்களும் புத்தகத்தை கீழே வைக்கவும் விடவில்லை. 

இதில் கதாப்பாத்திரங்கள் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பதும், நடந்து கொண்டிருக்கின்ற நிஜத்துக்கும் இடையே காட்சிகளாக நம் முன்னே ஓடிக்கொண்டிருப்பதை  இக்கதைகளின் பொது அம்சம் எனலாம். 

கண் நிறையத் தெரியும், ஜிகர்தண்டா, பிரியாணியைத் தாண்டி தொங்க விடப்பட்டுள்ள பர்தாவை ஒதுக்கிப் பார்த்தால், புதிதாய் தென்படுகின்ற பல காட்சிகள் வியப்பூட்டுகின்றன.  




நிகழும் சம்பவங்கள் மூலம் தெரிய வரும் அவர்களின் வாழ்வியல் முறை, தட்டுப்படும் மெல்லிய வேறுபாடு பல இடங்களில் ரசிக்கவைக்க செய்கிறது.   

இதுவரை அவ்வளவாக கண்டிராத கோணத்தின் பக்கங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை, ரத்தமும், சதையுமாக கண் முன்னே பார்த்ததில் சிலரைப் பற்றி சில வரிகளைப் பகிர நினைக்கிறேன்...  பெரும் செல்வாக்கு, பண பலம் உள்ள ஒருவரின் மகள் மாற்று மதப் பையனைத் திருமணம் செய்து கொண்டதற்குப் பின் சில வருடங்களில் இறந்து விடுகிறாள். எவ்வாறேனும், அவளது உடலைத் தருவித்து தங்களது வழக்கப்படி அடக்கம் செய்ய நினைக்கும் தந்தையின் வலியை விட அதிகமாக இருக்கிறது அந்த மகளின் உடலுக்காக கபர் குழியைத் தோண்டி வைத்துவிட்டு தனது மகளின் கல்வி செலவிற்காக அல்லாடும் தந்தையின் வலி. 
மௌனச்சுழி என்றொரு கதையில்  தங்கள் பள்ளிவாசலில் பயான் செய்வதற்காக வந்த உலகப் பிரசித்த பெற்ற ரஹ்மானியைத் தன் மகளாகவே பாவிக்க, வந்த அவரோ மரித்துப் போகிறார். அதன் தாக்கத்தால்,  தன் மகளை அவளுக்குத் தெரியாமல் பார்த்துவிட்டு வர வேண்டும் என்ற தந்தையின் தவிப்பில் தெரியும் பெரும்பிரியம் மகள் மீது பிரியம் கொண்ட அத்தனைத் தந்தைகளுக்குமான உணர்வு...

மாற்றம் தேவைப்படும் வழக்கத்தை துணிச்சலுடன் மாற்ற நினைக்கும் அஸ்கர், அவனது முடிவு வீட்டினராலேயே வேறுவிதமாக தடுக்கப்படும் நிலையின், எதார்த்தம் மனதை வருத்துகிறது.

ஒருவனது இறப்பை ஊரில் உள்ள உறவும் நட்பும் சொல்லி சொல்லி அழுகிறது. ஒவ்வொருவரின் ஒப்பாரியின் போதும் தனது கடந்து காலத்தில் நடந்த அதற்கொப்பான சம்பவங்களை ஓட விட்டுக் கொண்டிருப்பாள். தூக்கிக் கொண்டு போகும் போது, ' அண்ணன், அண்ணி, தங்கச்சி அவங்க பிள்ளைகனு இருந்த நீங்க என்னைக்காச்சும் என்னை நெனச்சாவது பார்த்திருக்கீங்களா?  எல்லாருக்கும் நல்லவரா இருந்த நீங்க எனக்கு எப்படி இருந்தீங்க?  என பெருங்குரலெடுத்து பொங்குகிறவளின் வலிக்கான காரணம், அவளது கணவனின் மரணத்தை விட, அவன் வாழ்ந்த காலத்தில் அவளை சக உயிராக பாவிக்காமை தரும் ரணமே. 

கழைக்கூத்தாடிப் பெண்ணிடம் பார்க்கும் பலரின் பார்வைக்கு மத்தியில், அந்த குடும்பத்தின் தேவைக்காக, திருடனாக இருந்தாலும் நல்ல நோக்கத்தில் மட்டுமே ஐநூறு ரூபாயைத் தரும்  சேதுராமன் கதாப்பாத்திரம் சமகால தமிழ் சினிமாவில் நம் மக்கள் ரசிக்கும் கதாநாயகனின் பிம்பம்.

ஒரு கதையை மட்டும் எடுத்து ஒரு மணிநேரம் விவாதிக்கலாம். ஒவ்வொரு கதையிலும் கதாப்பாத்திரங்களின் அருகாமையில் நம்மை  நிற்க வைக்கும் விறுவிறுப்பான நடை. கதையின் ஓட்டத்தில் எங்கேனும் ஓரிடத்தில் நாமும் நிற்பதை அரிதான எழுத்துகளில் மட்டுமே காண முடியும். இரு முறை எழுத முயற்சித்த போது தொடர்ச்சியாக வந்த காய்ச்சல், இருமல் மூன்றாவது முறை எழுத அமர்ந்த போது, பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டது.

ஒரு சொல்லுக்கு இணையான மாற்று சொற்கள், அங்கங்கே நீளும் கவித்துவமான வரிகள், வித்தியாசமான உவமைகள், இவற்றுடன் மதுரையில் விடிய விடிய எங்கெங்கே, என்னென்ன சிறப்பான உணவுகள் கிடைக்கும் என்பது மாதிரியான பல  தகவல்கள்,  எழும் கலவையான உணர்வுகளுடன்  கலந்து மொத்தப் புத்தகத்தின் கனத்தைக் கூட்டுகின்றன. ஒரே மாதிரியான விஷயம், அலுப்பூட்டும் சொற்கள் என்ற வழமையிலிருந்து மாறுபட்டு நிற்கும்  ' மரணத்தில் மிதக்கும் சொற்கள்', வித்யாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.


ஆசிரியர் : அர்ஷியா 
பதிப்பகம் : புலம் 

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சாவி - முதல் சிறுகதை

( என்னுடைய முதல் சிறுகதையான  'சாவி', இன்று வெளியிடுகின்ற 'மேடை' காலாண்டிதழில் வந்துள்ளது. க.சீ. சிவகுமார், அப்பணசாமி, ம.காமுத்துரை, குமாரநந்தன், ஆதிரன் இவர்களின் கதைகளுடன் என்னுடைய சிறுகதை வந்திருப்பதில் பெருமிதம் கலந்த மகிழ்ச்சி. :)
மேடை இதழ் பற்றிய விவரங்களுக்கு விசாகன் தேனியைத் தொடர்பு கொள்ளவும். ) 

ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் பால்யத்தில், தெருவின் குறுக்கேயும் நெடுக்கேயும் நகர்ந்து கொண்டிருக்கும் மிதிவண்டி எப்போதுமே கண்களை ஈர்க்கும். விளையாட்டை நிறுத்திவிட்டு, பெடலை மிதிக்க மிதிக்க இரண்டு சக்கரங்களும் முன்னோக்கி சுழல்வதை ஆசையுடன் பார்த்திருக்கிறேன். இரண்டு பக்கமும் உள்ள ஹேண்டில் பாரை அழுத்திப் பிடித்தவுடன், ஓட்டம் நின்று போய் நிற்கும் சைக்கிளின் மீதான பிரியம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. வீட்டிலோ உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் போது வாங்கிக்கொள்ளலாம் என உறுதியாக தெரிவித்துவிட்டனர். பள்ளிக்குப் பேருந்தில் உடன் வரும் மாலாவிடம் பார்க்கின்ற சைக்கிளை எல்லாம் ரசித்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பேன். அவளுக்கும் சைக்கிள் வாங்க வேண்டும் என கொள்ளைப்பிரியம். புதிதாக வந்திருக்கும் சைக்கிள்கள் அவற்றுக்கான விளம்பரங்கள் என சுற்றி சுற்றி வரும் எங்கள் பேச்சு. குறிப்பாக, ஈலு, ஈலு ( ilu ) என தொடங்கும் விளம்பரப்பாட்டு, ஈலுக்கா மத்லப் ஐ லவ் யூ... பி எஸ் ஏ எஸ் எல் ஆர் ... ஐ லவ் யூ', என முடியும் அந்த விளம்பரத்தை, ஏதோ மனப்பாட செய்யுளை கேட்பது போலான மரியாதையுடன் ஒளிபரப்பும் நேரத்திலெல்லாம் மிக கவனமாக ரசித்துக் கேட்போம்.

சைக்கிளைப் பற்றி பேசினால் நேரம் செல்வதே தெரியாத அளவு போய்க் கொண்டே இருக்கும் பேச்சு. நமக்கே நமக்கு என ஒரு சைக்கிள். அதன் பின்னால் உள்ள கேரியரை இழுத்துப் புத்தகப்பையை பாதுகாப்பாக வைத்து, ஹேண்டில் பார்க்கு மத்தியில் டிபன் பாக்ஸ், தண்ணீர் போத்தல் அடங்கிய மதிய உணவுக் கூடையை தொங்கவிட வேண்டும். ஏறி உட்கார்ந்து, பிடித்தமான வேகத்தில், அவசியம் ஏற்படின் மணி அடித்துக் கொண்டே பள்ளிக்கு செல்ல வேண்டும். சைக்கிள் நிறுத்தத்தில், நிழல் தேடி நிறுத்தி, பத்திரமாகப் பூட்டி சாவியை பக்கவாட்டில் உள்ள பையில் போட்டுக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாளும் சைக்கிள் மீதான விருப்பம் அதிகமாகிக் கொண்டே சென்றது. அரக்கு வண்ணத்தில் நிற்கின்ற பெண்கள் விடும் சைக்கிள்களைப் பார்க்கின்ற பொழுதெல்லாம் வாஞ்சையுடன் தடவிக் கொடுப்பேன். அந்த வயதில் எப்படியாவது ஒரு சைக்கிளை சொந்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதே ஆகப் பெரும் கனவாக இருந்தது.
பாட நோட்டு, புத்தகங்களில் மட்டுமின்றி கிடைக்கின்ற தாள்களில் எல்லாம் அனிச்சையாக கைகள் சைக்கிளை வரைய ஆரம்பித்தன. வாசலில் சைக்கிளை கோலமாக வரையப் பிரயத்தனப்படுவதைப் பார்த்து வீட்டில் ஏதேனும் பேச்சுவார்த்தை நிகழ்ந்ததா என தெரியவில்லை.
அதற்கடுத்த சில நாட்களிலேயே நீண்ட நாள் கனவு மெய்யானது. 'இந்தா சாவி', என அப்பா கொடுத்தவுடன், வாங்கிய வேகத்தில் வெளியே நிற்கின்ற சைக்கிளை பார்த்த கண்களின் வெளிச்சத்தை இன்று வரை எந்த ஒரு பொருளும் வழங்கியதில்லை. சாவியால் திறந்த வண்டியின் மீது ஏறி, எனக்கே எனக்கான சொந்த வண்டி என்ற பெருமிதத்துடன் முழுத் தெருவையும் சில முறை சுற்றி வந்தேன். அன்றைய தினத்தில் பலமுறை துடைத்து, மேலே தூசி அடையாமல் இருக்க ஒரு துணியால் போர்த்திய சைக்கிளை நினைத்தபடி மிகத் தாமதமாக தூங்கி, அதிகாலையில் எழுந்து ஆசை தீர பார்த்தபடியே பல் துலக்கி, பாடம் படித்து, எழுதி, உணவு உண்டு, ஒரு வழியாகப் பள்ளிக்கு கிளம்பினேன். உடன் படித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம், மதிய உணவு இடைவேளையில் அழைத்துக் கொண்டுவந்து காண்பித்த என் பெருமிதம் அவர்களில் சிலருக்கு பொறாமையை கூட உண்டு பண்ணியிருக்கலாம்.




மாலை பள்ளிக்கூடம் முடிந்த பிறகு, உள்ளே இருந்த மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சி முடிந்த பின்னர் வீடு திரும்புவது வழக்கம். உடன் விளையாடிய மாலாவை, ' என் பின்னால உக்கார்ந்துக்கோ, உங்க வீட்டில இறக்கி விடறேன்', என்றேன். அவளோ,' வேணாம், வேணாம், எனக்கு பஸ் பாஸ் இன்னும் முடியல', என்றாள். கிளம்பும் போது மணியை அடித்துப் பார்த்த மாலா, ' இதே மாடல், இதே கலர்ல நானும் வாங்கப்போறேன் மீரா', என்றாள். சீக்கிரம் வாங்கினால், இருவருக்குமே நல்லது என எண்ணியபடி பெடலை அழுத்தினேன். தனியாகப் பள்ளிக்கு செல்வது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பள்ளியில், மைதானத்தில் நடந்ததை அசை போட்டு பேசி மகிழ மாலா இல்லாதது மனதை வருத்த ஆரம்பித்தது.

ஒரு மாதம் கூட ஆகி இருக்காத நிலையில், ஒரு நாள் காலையில், அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்கையில், சைக்கிளின் பின்னால் உள்ள டயர் பஞ்சர் ஆகி இருந்தது. கிட்டத்தட்ட கண்கள் கலங்க, அருகில் உள்ள சைக்கிள் கடைக்கு பதட்டத்துடன் சைக்கிளை உருட்டிக் கொண்டே வேகமாக சென்றேன். ' புது சைக்கிள், புது டயர், யாரோ வேணும்னே ஊசி வச்சு குத்தி இருக்க மாதிரி இருக்கு', என்றபடி பஞ்சர் ஒட்டித் தந்தார் கடைக்காரர். மிக வேகமாக அழுத்தியபடி, சற்று தாமதமாக பள்ளிக்கு சென்றேன் அன்று. அதற்கடுத்த சில நாட்களில் பள்ளியில் இருந்து கிளம்பும் போது, சாவியைத் துழாவினால், பக்கவாட்டுப் பையில் அகப்படவில்லை. மொத்த நோட்டு புத்தகங்களையும் கொட்டி, பிரித்துப் பார்த்து, தேடியும் சாவியைக் காணோம். கண்களில் தேங்க ஆரம்பித்தது நீர். 'சாவியை பொறுப்பா வச்சுக்காம இப்படியா தொலைப்பாங்க, உங்க வீட்டில சாத்து வாங்க போற', என என்னைத் திட்டியபடி மீண்டும், மீண்டும் பையை சோதனை போட்டாள் மாலா.
' என்னது எதுவும் தொலையாது, அவ்வளவு பத்திரமா வச்சுக்குவேன், இப்போ நான் உயிரா நினைக்கிற சைக்கிள் சாவியை காணாம போட்டத நானே தாங்க முடியாம இருக்கேன் ', என விரக்தியில் சொன்னேன். அதிகரித்த என் முகவாட்டம் அவளுக்குள் பரிவை உண்டாக்கி இருக்கக்கூடும். ' கவலைப்படாதே மீரா, சாவி எப்படியும் கெடச்சிடும்', என்ற அவளின் வார்த்தைகள் வெகு நேரத்திற்கு என்னைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன. வாடிய முகத்துடன், புலம்பியபடி வகுப்பறையிலும், மைதானத்திலும், நடந்து வரும் வழியெல்லாம், தேடியும் விசாரித்தும் கிடைக்காமலே போனது சாவி. என்னுடன் தேடிய மாலா, ஐந்து மணியானதும், கேண்டீனில் காபி வாங்கி குடிக்க செய்து, வீட்டிற்கு செல்ல பயணச்சீட்டிற்குரிய காசை கொடுத்து உதவினாள்.
மாலாவுடன் பேருந்தில் வீட்டிற்கு சென்று மாற்று சாவியை பெற்றுக் கொண்டு, மீண்டும் பள்ளிக்கு வந்து சைக்கிளை எடுத்து சென்றேன். அதன் பிறகு சாவியை மிக கவனமாக பத்திரப்படுத்தி வைக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது மாலாவும் சாவி பத்திரமாக இருக்கிறதா எனக் கேட்டபடி பையை சோதனையிட சொல்வாள். அந்த ஆண்டு முடிவதற்குள் மாலாவும், என்னுடையதைப் போலவே ஒரு சைக்கிள் வாங்கி விட்டாள். அதீத உற்சாகத்துடன், இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டே பள்ளிக்கு சென்று வரத் தொடங்கினோம். எங்களுடைய பெரும் கனவான சொந்த சைக்கிள், கைக்கு கிடைத்த மகிழ்ச்சியில், ஊரெல்லாம் சுற்றத் தொடங்கினோம். சாலையில் யார் முதலில் செல்வதில் தொடங்கி, இரண்டு கைகளை விட்டுவிட்டு எவ்வளவு தூரம் ஓட்டி செல்ல முடியும் வரை விதவிதமானப் போட்டிகளை எங்களுக்குள் நடத்திக் கொள்வது, ரசனையாக சென்றன பொழுதுகள். சில நாட்களில் வீட்டிற்கு தெரியாமலே சென்ற சினிமா தியேட்டர், தொலைவில் இருந்த தோழிகளின் வீடுகள், சர்க்கஸ் என நீண்டது எங்கள் சைக்கிள் சக்கரங்கள் உருண்ட பாதைகள். இன்றும் சேமித்து அசைபோடும் பல்வேறு நிகழ்வுகளை சாத்தியப்படுத்தியத்தில் சைக்கிளின் பங்கு முதன்மையானது.

அதற்கடுத்த சில மாதங்கள் கழித்து... ஒரு நாள் மாலா வீட்டில், காபி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருப்பதாக சொல்லியபடி அவளின் அறைக்குள் சென்ற மாலா, கையில் ஒரு சைக்கிள் சாவியுடன் வந்தாள். ' இது நேத்து கோவிலுக்கு போற வழில கெடச்சது மீரா, உன் காணாம போன சாவிக்கு பதிலா இது பூட்டோட பொருந்துனாலும், பொருந்தலாம்னு எடுத்து வச்சேன்', என்றதும், வேகமாக சாவியை வாங்கி வெளியில் நின்ற சைக்கிளின் பூட்டில் நுழைத்துப் பார்த்தால், கச்சிதமாகப் பொருந்தியது சாவி. தொலைந்த சாவி வேறொரு வடிவத்தில் கிடைத்ததைக் கண்டு பொங்கிய மகிழ்ச்சியில், அவள் கைகளைப் பிடித்து பல முறை நன்றி சொல்லியபடி வீட்டிற்கு திரும்பினேன். என்னுடைய அறையில் புதிதாகக் கிடைத்த சாவிக்கு என ஒரு சாவிக்கொத்தைத் தேடிக் கண்டுபிடித்தேன். மாலா கண்டுபிடித்த சாவியை எடுத்து அதில் ஏற்கனவே இருந்த சிறிய வளையத்திலிருந்து தனியாக கழற்ற ஆரம்பித்தேன். ஏதோ சரியில்லாதது போல ஓர் உணர்வு உள்ளே உதைக்க, சிறிய வளையத்தில் தொங்கிக்கொண்டிருந்த சாவியுடன், அடையாளத்திற்கு என நான் முன்னர் மாட்டியிருந்த மிகச்சிறிய இரும்பு வளையமும் அப்படியே இருந்தது.