வியாழன், 4 ஜூலை, 2013

DDLJ

இன்று காலையில் பார்த்தப் படங்களில் பிடித்தவற்றை தேர்வு செய்து  பேஸ்புக்கில் சேர்த்துக் கொண்டே வந்த பொழுது வந்து நின்றது....
தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே...

தியேட்டருக்கு சென்று மூன்று முறை பார்க்க வைத்த ஒரே படம். முதல் மூன்று காரணம்.....
1. ஷாரூக்
2. ஷாரூக்
3. ஷாரூக்
தூர்தர்ஷனில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுதே அதிக துறுதுறுப்பின் காரணமாகவே வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் இவரை. அதே இயல்பில் கலக்கி இருக்கும் ஷாரூக்கின் குறும்பு, கிண்டல் பார்வை, சேட்டைகள் மிகுந்து மீண்டும் மீண்டும் ரசிக்கும்படியாக இருக்கும் இந்தப் படத்தில். அதே நேரத்தில், காதல் என்று வரும் பொழுது ( பாருங்க, யார்னாலும், இங்க மட்டும் ஒரே மாதிரி இருக்காங்க :P)  உருகும் இடங்களிலும், முழுதாக தன்னை அர்பணித்துக் கொள்ளும் இடத்திலும் நம்மையும் ரசிக்க வைத்து பார்க்க செய்வதே இவரின் சிறப்பு.

அடுத்து, இசை.... இன்றும் பலமுறை சலிப்படையாமல் கேட்க செய்யும் பாடல்கள் நிறைந்த படம்.


ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எல்லாம் நல்லா இல்லாமலா படம் ஓடி இருக்கும். ஹிஹி ,அவங்க பேரெல்லாம் மறந்து போயிடுச்சு.
அது சரி, தெரிஞ்சவங்களை தான் திட்டி விமர்சனம் பண்றோம். இதை படிக்கவே போகாத படத்தில சம்பந்தப்பட்டவங்களைப் பத்தி, நாலு வார்த்தை நல்லா தான் எழுதுவோமே :)  

கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். எது எப்படி என்றாலும், மாதத்திற்கு இரண்டு படங்கள் பார்ப்பது அப்பொழுதைய விருப்பத்திற்குரிய பொழுது போக்கில் ஒன்று. அந்த வகையில், ஒரு சனிக்கிழமையில் மதுரை, ராம் விக்டோரியா தியேட்டரில், உடன் படித்த ஒரு மாணவி கூட மிஸ் ஆகாமல் கவனித்த, மன்னிக்கவும், பார்த்த ஒரே படம் இது. :)

கதை என்று பார்த்தால், ஏற்கனவே  திருமணம் நிச்சயிக்கப்பட்டப் பெண், வேறொரு ஆணை திருமணம் செய்வது தான். இதற்கு பிறகு வந்த பர்தேஷ்
  படத்தில் அண்ணியாய் வரப்போகிற பெண்ணை, காதலித்து திருமணம் செய்வார். வரிசையாக, இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்ட இயக்குனர்களின் தேர்வு ஷாரூக் ஆக இருக்கலாம் என தோன்றுகிறது. (இதேஆரம்பத்தின், பல் வேறு அபாய முனைகளையும் தொடுவதோடு உள்ளே புகுந்து சாதனை செய்த தமிழ் இயக்குனர்கள் சிலர் இருக்கின்றனர், அது தனிக் கதை)

இதற்கு முன்பாக வந்து சக்கை போடு போட்ட, 'ஹம் ஆப்கே ஹைன் கௌன்', திரைப்படம் மாதிரி, பாதி நேரங்களில் திரை முழுவதும் குடும்ப உறுப்பினர்கள், வேலை வெட்டி இல்லாமல் ஏதாவது பண்டிகையைக் கொண்டாடுவதும், அடிக்கடி சிரித்துக்கொண்டே இருப்பதும், எதையாவது தின்று கொண்டே இருப்பதுமாக, படம் போகும். அதே ரீதியிலான, சில வழக்கமான காட்சிகள் இதிலும் உண்டு.

கல்லூரியில் பட்டம் பெறும் விழாவில் தேர்வில் தோல்வியடைந்த ஷாரூக் கலந்து கொள்வது, கஜோல், ஷாரூக் முதன்முதலில் பேசிகொள்வது போன்ற காட்சிகள் அப்போவே, இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது உண்டு.

தொடர்ந்து அவர்கள் ஊர் சுற்றி பார்க்கும் பொழுது நடக்கிற சின்ன சின்ன சம்பாஷனைகள், நிகழ்கிற சம்பவங்கள் ஆர்வத்தோடு அவர்களுடன் நம்மையும் பயணிக்க வைக்கும். எந்த இடத்திலும் நடிக்கின்றனரோ என கொஞ்சமும் யோசிக்க முடியாத அளவு கஜோலின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கும். இந்தியாவிற்கு கஜோலை தேடி வந்து, அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே நகரும் காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தவை போல இருந்தாலும், எப்படியாவது, இவர்கள் இணைய வேண்டும் என்ற ஆர்வம் மொழி தெரியாதவர்களுக்கும் அதிகரிக்கும். மிகப் பெரிய பட்ஜெட் படத்தில், இறுதி காட்சியில், நான்கில் ஒரு சினிமாவில் வருவது போலவே , ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்டிருப்பதை தவிர்த்து ஏர்போர்ட்டில் வைத்திருக்கலாம். :P

17 வருடங்களுக்குப் பிறகும், லதா மங்கேஸ்கர் - குமார் சானு வின், குரலில், 'துஜே, தேக்கா, தோ யே ஜானா சனம், .........', கேட்கும் பொழுது முதல் முறை ஏற்படுத்திய அதே சிலிர்ப்பு இப்பொழுதும் கூட. மனசெல்லாம் மகிழ்ச்சிப் பூக்கள் கூட்டம் கூட்டமாக, நொடியில் மலர்வதைப் போல இருக்கிறது. :)
( இன்று எத்தனை முறை இந்தப் பாட்டை தொடர்ந்து கேட்க போகிறேன் என்று தெரியவில்லை )

பிடித்தவர்களால் நடிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள், இப்படி எல்லாம் நடக்குமா என்ற ஆர்வமும், நடந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கமுமே இந்தப் படத்தின் வெற்றி என நினைக்கிறேன்.













கருத்துகள் இல்லை: