புதன், 21 ஆகஸ்ட், 2013

நேற்றில் வாழ்வோருக்காக!



பிறப்பிலிருந்து இறப்பு வரை, பல நிலைகளை நாம் கடக்கிறோம், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு செல்லும் பொழுதும், சமயங்களில் அந்த நிலைகளில் முழு ஈடுபாடு இல்லாத பொழுதும், வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த இடைவெளியை நிரப்புபவர்கள் இன்பத்தாலும், துன்பத்தாலும் வரைந்து செல்கிறார்கள்.

தனியே எழுதி வகைப்படுத்தினால், துன்பத்திற்கு, இணையான அளவு இன்பத்தை கடந்து வந்திருப்போம். இயற்கை சமமாகவே நமக்கு பகிர்ந்து அளிக்கிறது.

இதோ, கடந்து கொண்டிருக்கின்ற இந்த காலமும் கூட நாளை திரும்பி பார்க்கும் பொழுது தவற விட்ட ஒன்றாக இருக்கலாம்.
இன்பம் என்ற பகுதியே, கடந்த காலத்தில் மட்டுமே உள்ளது என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. திரும்ப வராததாலேயே முடிந்த நாட்கள் சிறப்பு பெற்றவை.

தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டுக் கொண்டும், பிறரை திட்டிக் கொண்டும் காலத்தை கடத்துபவர்கள் பெரும்பாலும் கடந்த காலத்தில் வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களின் மகிழ்ச்சி அங்கேயே தேங்கியிருப்பதாக நம்புகிறார்கள்.

இன்றைய உணவின் சின்ன சொதப்பலில் கூட நேற்றைய அசத்தல் உணவின் நினைவில் வாழ்கிறோம்.


நிகழ் காலத்தில் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பவர்கள் யாரென பார்த்தால், இவர்களில் பலரும், ஏதேனும் ஒரு செயலிலோ அல்லது ஒரு மனிதரிடமோ முழுமையாக தம்மை ஒப்புவித்து தற்காலிகமான மகிழ்ச்சியில் இருப்பவர்கள். விரைவில் அவர்களும் அடிவாங்கி, கடந்த காலத்தை ரசிக்கின்ற கூட்டத்தினருடன் இணைந்து கூட்டணியை வலுப்படுத்துவர். 


நிகழ்ந்து கொண்டிருப்பதை, ஏற்று கொள்ளுதல்... வருவதை புலம்பாமல் அனுபவித்தல் என்று இருப்போமேயானால் எதையும் எதிர் கொள்ளலாம். நம்மை நோக்கிக் கற்களை வீசும் பொழுது, கவசம் அணிந்து கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முடியாததாலேயே பலரும் ஆன்மிகம் பக்கம் சாய்கின்றனர். இங்கு ஒன்றை தெளிவு படுத்த வேண்டும். மதம் என்பது வேறு. ஆன்மீகம் என்பது வேறு. மதவாதிகள் ஆன்மீகத்தை போதிக்கின்ற நேரங்களில் எல்லாம் நம்மை குழப்பி விடுகின்றனர். மதவாதிகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளோடு, விதி முறைகளோடு வாழ்க்கையை எதிர் கொள்கிறார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். ( இந்த மதவாதிகள் ஆன்மீகத்தை போதிப்பதற்கு பதில், மதம் சம்பந்தப் பட்டவற்றை மட்டும் பரப்பினால் நல்லது)

ஆன்மீகவாதிகளுக்கு என்று பெரிய கட்டுப்பாடோ, விதி முறைகளோ இருப்பதில்லை. வாழ்க்கையை புரிந்து கொண்டவர்கள் ஆன்மீகவாதிகள், ஆதலால் புலம்பல் இல்லாமல், எளிதாக, நடக்கின்ற எதையும் கடந்து செல்லும் திறன் பெற்றவர்கள். வருகின்ற பாதையில் வரும்
இன்பத்தைப் போலவே துன்பத்தையும் ஒரே மாதிரியாக எதிர் கொள்ளும் திறன் பெற்றவர்கள். வாழ்க்கையைப் பற்றி புரிதல் இருப்பதின் காரணமாக, சோகமோ, கவலையோ எரிச்சலோ, எதனையுமே எளிதாக கையாண்டு கொண்டே, நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழத் தெரிந்த வல்லமை பெற்றவர்களே ஆன்மீகவாதிகள். இந்த வகையில் பார்த்தால், பகுத்தறிவுவாதிகளும் ஆன்மீகவாதிகளே!

ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்று உண்மையை கடினமான முறையில் தராமல், எளிமைப்படுத்தி தரும் ஆன்மீகவாதிகளின் பேச்சும், எழுத்தும் எளிதில் பிடித்துப் போகின்றவையாக இருக்கின்றன.

பகுத்தறியும் பேச்சினை, கேட்பது, படிப்பது போன்றவை அந்தந்த நேரங்களில் மனதை மேம்போக்காக சுத்தம் செய்ததோடு நின்றுவிடும். உகந்தது/உசிதம் என்று முடிவு செய்தவற்றை, மிகக் கடினம் என்ற பொழுதிலும், தேவைப்படும் இடங்களில் பின்பற்றினால், நமக்கு உள்ளே மட்டமின்றி பின்னாலும் ஒரு ஒளி வட்டமிடும்! :)







2 கருத்துகள்:

Unknown சொன்னது…

neraya yosichu irukenga....
good article


neraya vishayangalai ore page la kodutha madiri iruku

Unknown சொன்னது…

neraya vishayangalai ore page la kodutha madiri iruku

neraya yosichu irukenga....
good article