புதன், 5 பிப்ரவரி, 2014

குட்டிக் கதை முயற்சி...!



'ப்ளீஸ்', என்று கேட்டும் செல்பேசி எண்ணைத் தரவில்லை அவள். பொதுவான கேள்விகளுக்கு மட்டும் மையமாக பதில் சொல்வாள். தொடர்ச்சியாக கேட்டும், அவனது எண்ணைக் கொடுத்தும் தொடர்பு கொள்ளாத காரணத்தாலேயே அதிசயப் பிறவியாக தெரிந்தாள். அடுத்தடுத்து வந்த நாட்களில் நேரடியாகவே எண்ணைத் தரவேண்டும் என்று மிரட்டலாகவே கேட்டான். அப்பொழுதும் கூட அவள் வெகு சாதாரணமாக பூனைக்குட்டிப் படத்தைப்போட்டு காலை வணக்கத்தை சுவற்றில் தெரிவித்திருந்தாள். எரிச்சலுற்ற அவன் மதிய நேரத்தில், உள்பெட்டியில், ' நம்பர் வராட்டி, ஸ்யூசைட் செய்துக்குவேன்', என்று அனுப்பிய செய்திக்கு கீழ் seen என்று மட்டுமிருந்தது. அவளோ வழக்கம் போல நகைச்சுவை என்ற பெயரில் எதையோ சுவற்றில் இரவு வேளையில் பதிவு செய்திருந்தாள். உச்சிக்கு ஏறிய கோபத்தில் ' ஏண்டி, திமிர் பிடிச்சவளே, என் உயிர் உனக்கு வெளையாட்டாப் போச்சா?' என்று ஆரம்பித்து ஏழெட்டு வரிகளில் கோபத்தைக் கொட்டிய வேகத்தில் பேஸ்புக்கை விட்டு வெளியேறினான். காலையில் உள்ளுணர்வு ஏதோ சொல்ல,  பேஸ்புக் உள்ளே நுழைந்ததும், தகவல் பெட்டியில் சிவப்பு வண்ணத்துடன் ஒன்று என இருந்ததை, ஆர்வமாக அழுத்திய பொழுது அவளிடம் இருந்து பத்திலக்க எண் நடுநிசியில் வந்திருந்தது. உற்சாகத்துடன் எண்களை அழுத்தி, எதிர் முனையில் கேட்ட குரலிடம், அவள் பெயரை சொன்னான். அந்தக் குரல், ' நேத்து நைட் ஸ்யூசைட் செய்துட்டா, கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல  இப்போ வச்சு இருக்காங்க. அவங்க அம்மா, அப்பா ஊரில இருந்து வந்துகிட்டு இருக்காங்க. நீங்க? ' ....

# குட்டிக் கதை முயற்சி!

5 கருத்துகள்:

thambu சொன்னது…

வார்த்தைகளில் உள்ள வீரியம் செயலில் இல்லாத ஒரு மனம், வார்த்தைகளை அளந்து செயலை முந்திச் செய்யும் ஒரு மனம்., என்ன இரண்டுமே முதிர்ச்சியடையாத சிறுபிள்ளைத்தனமான குணங்கள் .
இவர்களைப் பற்றி மிக இயல்பாய் விவரித்திருக்கிறது உங்கள் கதை.அருமையான முயற்சி .வாழ்த்துக்கள் தீபா .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல செயல்...

முயற்சி தொடர வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

முதல் குட்டிக்கதை முயற்சி...

அருமை...
ஆனால் இப்படி சோகமா முடிச்சிட்டிங்களே...

தொடருங்கள்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

குட்டிக் கதை மிக மிக
வித்தியாசமாகவும் அருமையாகவும் .....
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சொன்னது…

நச் தீபா.