செவ்வாய், 8 ஜூலை, 2014

மனதுக்கும் கூடுதல் வலிமை அளிக்கும் உதிரம்!

முதல் நாள் வரை எங்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அக்காவை, திடீரென ஒரு நாள், அவளது வீட்டிற்குள் உலக்கையை கிடத்தி எல்லைக் கோடு வகுத்து, பெரியவளாகி விட்டாள் என பிரித்து வைத்தனர். தனித் தட்டு, டம்ளர் உடன், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ஓரமாக ஒதுங்கி சொந்தபந்தங்கள் கொண்டு வந்த, சிறப்பான உணவு வகைகளை சாப்பிடுவதைப் பார்த்த பொழுது, இந்தப் பிரத்யேக கவனிப்பிற்காக நாமும் எப்பொழுது பெரியவளாவோம் என்று எண்ணியிருக்கிறேன்.

ஆரம்பப்பள்ளியில் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்று, சடங்காகி விட்டாள் என்று சொல்லி, உடன் இருந்த ஒருத்திக்கு பூவெல்லாம் அணிவித்து, எங்களுக்கு நடுவில் உட்கார வைத்தது  ஞாபகத்தில் வருகிறது.  சடங்கு ஆகிவிட்டாள், ஆளாகிவிட்டாள், வயதுக்கு வந்து விட்டாள், பெரிய மனுஷி ஆகிவிட்டாள் என பூப்பெய்துவதைக் குறிக்க மேற்கூறியதைப் போன்ற சில வாக்கியங்களைப் பயன்படுத்துகின்றோம் .

ஆறு, ஏழாம் வகுப்புப் படிக்கையில், உடையில் கறை இருந்தால், வீட்டில் சொல்ல வேண்டும். அது தான் பெரியவளானதற்கு அடையாளம் என்று மட்டுமே மாணவிகள் மூலம் அறிந்திருந்தேன். ஏழாம் வகுப்பில் மட்டுமே, வகுப்பில் பாதி மாணவிகளுக்கு மேல், பூப்பெய்தியதைக் காரணம் காட்டி சிலநாட்கள் விடுப்பு எடுத்தனர். அதிலும், வகுப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே, சில மாணவிகளிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டறிந்த உடன் அவர்களை, பள்ளியிலிருந்து ஆட்டோ பிடித்து ஆசிரியைகள் துணையுடன் வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர். இப்படியாவது வகுப்பிலிருந்து சில நாட்கள் தப்பிக்கும் வாய்ப்பு எப்பொழுது வரும் என்று எங்களுக்குள் பேசி இருக்கிறோம்.

எட்டாம் வகுப்பில் ஆர்வத்துடன் இது சம்பந்தமான பல செய்திகளை பள்ளியில் மானவிகளுக்குள் பகிர்ந்துள்ளோம். ஒற்றைப்படையில் வரும்படி, ஐந்தாம் நாள் அல்லது ஏழாம் நாள் தலைக்கு ஊற்றுவார்கள்... இடுப்பு எலும்பை வலுப்படுத்துவதற்காக உளுந்தங்களி, முட்டை, எல்லாம் நிறைய தருவார்கள். இனிப்பு, பலகார வகைகள், அசைவ உணவு வகைகள் என்று பல நாட்கள் கழியும் என்றெல்லாம் எனக்கு சொல்லப்பட்டு இருந்தது. இதெற்கெல்லாம் விலையாக மனம் போல ஓடி,ஆடி, சுற்றித் திரியும் சுதந்திரம் குறையும் என்பதுவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆட்டை வெட்டுவதற்கு முன்னர் மஞ்சள் நீர் தெளித்து, மாலை போடுவதற்கு இணையாக கற்பனை செய்துள்ளேன். பெண்ணாகப் பிறந்த எல்லோரும் கடந்து கொண்டிருக்கின்ற தடம் என்ற வகையில், என்னென்ன நடக்கும், எப்படியெல்லாம் கவனிக்கப்படுவோம் என்ற மெலிதான ஆர்வமிருந்ததையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் இந்தத் தேதியை மனதில் குறித்து வைத்துக் கொண்டு, அதற்கேற்றார் போல முன்னெச்சரிக்கையுடன் கைப்பையில் சிறிய அளவிலான துணி எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே, மிரட்டியது. அதுவும் சில தடவை அந்தத்  தேதிக்கு முன்னால் வரும், சில தடவை பின்னாலும் வரும். வரும் வரை எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசிய பொழுது, 'கழுதை, வருஷத்துக்கு ஒரு வாட்டி  வந்தா என்ன, இப்படியா மாசமாசம்?, அதுவும் இந்த கலர்ல தான் வரணுமா வேற கலர்ல வரக்கூடாது ', என்பதை மட்டுமே என்னளவில் பிரச்சனையாக யோசித்துள்ளேன்.

பூப்புனித நீராட்டு விழா என்ற வைபவம் மகிழ்ச்சிகரமான விஷயமாக பகிரப்பட்டு கொண்டாடப்பட்டாலும், சில இடங்களில் இந்தப் பெண் பிள்ளைகள் அழுது, அவர்களைப் பெற்ற அம்மாக்களும் அழுது, தாங்க முடியாத பெரிய பொறுப்பு வந்து விட்டது என்று புலம்புவதையும் கேட்டு இருக்கிறேன். மணமுடித்து பிரிந்து செல்வதையும், அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்தலையுமே பெரிய சுமையாக அவர்கள் எண்ணி இருந்தது தாமதமாகவே புரிந்தது.

எனக்கு ஏற்பட்ட மாதிரியான சோதனை யாருக்கும் ஏற்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன். பள்ளிநாட்களில் ஏதோ ஒரு வாரம் விடுப்பில் வீட்டில், விரும்பியதை சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டாடலாம் என்ற கனவு, கனவாகவே போனது. சரியாக எட்டாவது வகுப்பில் ஆண்டுத்தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பித்த முதல் நாள், ஞாயிற்றுக் கிழமை காலையில் பெரியவளாகிவிட்டேன் என்று தெரிந்தது.  மீதி விடுமுறை நாட்களெல்லாம் வீட்டில் உலக்கைக்குப் பின்னால் மட்டுமே வசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும் அச்சம் தந்தது. எவரையும், எதனையும் தொடக்கூடாது என்று வேறு  சொல்வார்களே என்ற கடுப்பும் வந்தது.
தீவிரமாக யோசித்து செயல்படுத்திய திட்டத்தின் படி, யாரிடமும் உடனே சொல்லாமல் ஆசையாக பாட்டியின் கன்னத்தைக் கிள்ளி, அது பிசைந்து கொண்டிருந்த மாவில் ஜீனியைக் கொட்டி பூரி செய்ய சொல்லி சாப்பிட்டேன். சலிக்க சலிக்கக் காலையிலிருந்து விளையாடிவிட்டு, ஓய்வெடுக்க ஆரம்பித்த மதியப் பொழுதில் வீட்டில் விஷயத்தை சொன்னேன். தொடர்ச்சியாக சில கேள்விகளை சந்தித்தப்பின், மூலையில் சாய்க்கப்பட்டிருந்த உலக்கையை, எல்லையாகப் பிரித்து, அதற்கு அப்பால் என்னை அமர செய்தனர். தொடர்ந்த சில நாட்கள் சரியான கவனிப்பு. ஆனாலும் அந்த குறுகிய எல்லையை விடுத்து எப்பொழுது வெளியே வருவோம்  என்ற ஆவல் பெரிதாகிக் கொண்டே வந்தது. ஐந்தாம் நாள் மாலைப் பொழுதில், தலையில் நல்லெண்ணை தடவி, சீயக்காய்த் தேய்த்து, தண்ணீர் ஊற்றியதில் தீட்டு என்று கருதியவை கரைந்து விட்டதாக எண்ணி, பட்டுப்புடவையை கட்டி விட்டனர் அத்தைகள்.

மாம்பழவண்ணத்தில் அரக்குசிவப்புக் கரை வைத்து உடுத்தி இருந்த புடவை,  ஈரக்கூந்தலை லேசாக மட்டுமே உலர செய்து பின்னிய ஜடை, தலை கொள்ளாமல் வைத்த மல்லிகை, கனகாம்பரப் பூக்கள், கழுத்தில் விழுந்திருந்த ரோஜா மாலை, கை நிறைய வளையல்கள், புதிதாக அணிவிக்கப்பட்டிருந்த நகைகள், கன்னங்களில், நெற்றியில் அப்பியிருந்த சந்தனம், குங்குமம் எல்லாமே வேறொரு கதாப்பாத்திரத்திற்கு நான் மாற்றப்பட்டுவிட்டதைப் போன்ற மெலிதான மகிழ்ச்சி கலந்த பயத்தை கொடுத்தன.

அக்கம் பக்கம், உறவுகள் நட்புகள், வாங்கி வந்த முட்டைகள், பால், இனிப்பு வகைகள், பூக்கள் என்று வீடு ஒரு புது மாதிரியான சூழலில் இருந்தது. அதன் பின்னர் வந்த மாதங்களில்,  அந்த நாட்களின் தேதியை அடுத்த மாதத்தில் நினைவுபடுத்திக் கொள்வதற்காக, காலண்டரில் பென்சிலால் எனக்கு மட்டும் புரியும்படியாக குறித்துக் கொள்வதை வழக்கமாக்கி இருந்தேன். எல்லா நாட்களைப் போல தான் இந்த நாட்களும் என்று கொஞ்சம் கொஞ்சமாக எளிதாக கடந்து போக பழகிக் கொண்டிருந்த காலம் அது.

கல்லூரிக்கு செல்லும் வரை கடையில் விற்கும் நாப்கினை உபயோகிப்பது குறித்து கூட தெளிவற்று இருந்தேன். பருத்தியாலான துணிகள் தான் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்று போதிக்கப்பட்டு இருந்ததால், அசௌகர்யமாக இருந்தாலும், காட்டன் சேலைத் துணிகளையே பயன்படுத்தியிருக்கிறேன். மாலை நேரங்களில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில், சந்தேகம் வந்துவிடும். இன்னும் ஒரு மணி நேரத்தை கடத்த வேண்டும். பின்னால் எதுவும் கறை பட்டிருந்தால் என்ன செய்வது என்ற அச்சம் பெரும்பாலும் இருக்கும். பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம் தான் என்றாலும், சைக்கிள் ஸ்டாண்ட் வரை செல்ல வேண்டுமே என்ற பதட்டம் இருக்கும். அப்படி சந்தேகம் எழும் நேரங்களில், எங்களுக்குள் ' தெரியுதா பின்னால, நல்லா பார்த்து சொல்லு', என்ற கேட்டு திருப்தியான பதிலைப் பெற்றே வீட்டிற்கு கிளம்புவோம். 5000 மாணவிகள் படித்தப் பள்ளிக்கூடம்  என்றாலும், மிகக் குறைவான எண்ணிக்கையிலே கழிப்பறைகள் இருந்தன. அசுத்தமான சூழல் காரணமாக, எங்களில் பலரும் கூடுமானவரை கழிப்பறைக்கு செல்வதை தவிர்த்திருக்கிறோம். அதுவும், இது போன்ற சூழல்களில், துணியை மாற்றும் நேரங்கள் நரகத்திற்கு ஒப்பானது.

டூர், கேம்ப், விளையாட்டுப் போட்டிகள், திருவிழாக்கள், உறவினர்களின் விஷேசங்கள் என்று வெளியே செல்ல திட்டமிடும் நாட்களில் இந்த மூன்று நாட்கள் வரக்கூடாது என்பது பிரார்த்தனையாகவே இருக்கும்.

கல்லூரியில் உபயோகிக்கத் தொடங்கியிருந்த ஸ்டே ஃப்ரீ நாப்கின், அந்த நாட்களை சற்று எளிதாக்கத் தொடங்கி இருந்தது. எப்பொழுதாவது எழும் தவிர்க்க முடியாத அடி வயிற்று வலி, அந்த நேரங்களில் மனதையும் சோர்ந்து போக செய்யும் உடல்நிலை, என்று பழகிவிட்டேன் மற்றவர்களைப் போல.

ஒரு வருடம் முன்பு கீதா இளங்கோவன் அக்கா,  இயக்கியிருந்த "மாதவிடாய்" ஆவணப்படம் பார்த்தேன். மாதவிலக்குப் பற்றிய அடிப்படை சந்தேகங்களிலிருந்து, இந்த விஷயத்தில் பெண்களின் குறைந்தபட்ச தேவைகளை அழகாக விளக்கியது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து  விவாதிக்க இருந்த தேவையற்றத் தயக்கங்களை உடைத்தெறிய உதவியப்படம் இது. சரிபாதியாக இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட  மாதவிடாய் விஷயத்தில், எத்தனை அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் மக்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது. நவீன வசதி உள்ள கழிப்பறைகளில் கூட உபயோகித்த நாப்கினை எறிவதற்கென்று எந்த தொட்டியோ, கூடையோ இல்லை. பயண நேரங்களில் படும் சிரமமோ சொல்லி மாளாது. எத்தனையோ அசௌகர்யங்களுடன் தங்களுக்கான பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, இந்த சமுதாயம் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பொறுப்பான பார்வை தேவை  என்பதை அழகாக வெளிப்படுத்திய படம். அத்தனை மக்களும் அவசியம் பார்த்தே ஆக வேண்டிய ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியேறுகின்ற கழிவை உறிஞ்சும் மேற்பரப்பு உலர்ந்தே இருக்கும், என பேசும்  நாப்கின் விளம்பரங்கள் நம் கூடத்தின் நடுவில் ஒளிபரப்புவதை ஓரளவு எளிதாகவே கடந்த போக பழகி இருக்கின்றன நம் குடும்பங்கள். கடைகளில் நாப்கினை பேப்பரிலோ, கருப்பு கவரிலோ வைத்து சுற்றிக்கொடுக்கும் வழக்கம் குறைந்துள்ளது. சூப்பர் மார்க்கெட மற்றும் பெரிய கடைகளில், மற்ற பொருட்களுடன் ஒன்றாகவே கலந்து கேட்கவும், கொடுக்கவும் படுகிறது நாப்கின். ஆனால், இன்னும் திரைப்படங்களில் வயிற்றைப் பிடித்துக்கொண்டே உட்காரும் கதாநாயகி வயதுக்கு வந்துவிட்டாள் என்பது இன்னுமும் மாறாத காட்சிகளில் ஒன்றாக உள்ளது. :P

உதிரம் வெளியேற ஆரம்பிக்கின்ற பனிரெண்டு, பதிமூன்று வயதிலிருந்து மெனோபாஸ் வரை தொடர்கின்ற இந்த காலகட்டத்தில் தான், பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. ஒவ்வொரு மாதமும் வெளியேறுகின்ற ரத்தப்போக்கு, வருடங்கள் அதிகரிக்க,அதிகரிக்க, மனதிற்கு கூடுதல் வலிமை தந்து, பெண்களை மனரீதியாக முதிர்ச்சி அடைய செய்கிறதோ என்று கூட தோன்றும். :)

பயம், திகில் கலந்து, சந்தேகம் எழுப்பும் பொழுதெல்லாம் , இதெல்லாம் உனக்கெதுக்கு என்று கேட்ட மூத்தவர்களுக்கு மத்தியிலேயே ஆரம்பித்தன எங்களுடைய அந்த மூன்று நாட்கள். தற்பொழுது பெரும்பாலும், ஐந்து, ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுதே போதிய தெளிவை ஊட்டும் அம்மாக்களும், மூத்தவர்களும் நிறைந்திருக்கின்றனர். எங்களை விட ஓரளவு முதிர்ச்சியுடன் இந்தப் பருவத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றனர் இந்தக் கால பெண் குழந்தைகள் என்பதில் சந்தேகமில்லை.  தீட்டு என்ற பெயரில் நடந்த ஒதுக்கி வைத்தல் என்பதெல்லாம் நிறைய இடங்களில் குறைந்து வருவதுடன், அத்தனை சிறிய வயதில் சேலையை சுற்றி தன்னிலிருந்து அன்னியப்படுவதை பார்க்கும் சடங்கு வைபவங்களும் குறைந்து வருகின்றன. வயதிற்கு வந்து விட்டோம் என்பதை கூடுதல் பாரமாக சுமக்காமல், ஒரு பெரிய பூங்கொத்தை பெற்று பயணிப்பது போல எளிதாக கடந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்க்கையில் மனம் நிறைந்து போகின்றது.

என்னவென்றே தெரியாமல் இருந்தது. சிறிது நாட்களில் அரைகுறையாக தெரிய வந்தது. அச்சத்தை மீறிய சுவாரசியத்துடன் அதை எதிர் நோக்கியது. வந்த பிறகு, அதற்கேற்றார் போல நம்மை பழக்கிக்கொண்ட பிறகு, எளிதில் கடக்கும் வழக்கமான ஒன்றாகிப் போனது மாதவிடாய்!
(குங்குமம் தோழி ஜூன் 16 -30 )

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனைவியையும் வாசிக்க வைத்தேன்... நன்றி...

thambu சொன்னது…

பருவமாற்றம் மற்றும் அது சார்ந்த உளவியல் மாற்றத்தை புரிந்து கொள்ள இதை போன்ற பதிவுகள் பெருமளவில் உதவும். ஒரு முக்கியமான அனைவரும் தெரிந்து,புரிந்து கொள்ளவேண்டிய நிகழ்வை மிக நேர்த்தியாகப் பதிவு செய்தமைக்கு பாராட்டுகள் பல உங்களுக்கு. நீங்கள் கூறியதைப் போன்ற ஆவணப் படங்கள் குடும்ப அங்கத்தினர் அனைவரும் அமர்ந்து பார்க்கத்தக்க மன நிலை மாற்றம் நிகழும் காலம் வரை இது சார்ந்த பிரச்சனைகள் குறையுமே அன்றி முற்றிலும் நீங்காது என்பது என் எண்ணம்.
இவ்வாறான உடல், மனம் சார்ந்த நிகழ்வுகளைப் பற்றிய தெரிதல், புரிதல், தெளிதல் பற்றி கவலை கொள்ளாத கல்வி முறை பற்றிய ஆதங்கமும் மனதில் எழுகிறது .வீட்டில் இப்படிப்பட்ட நேரத்தில் தேவையான உடல் ரீதியான போஷாக்கும் , சமுதாயம் சார்ந்த உணர்வுகளுமே பெரும்பாலும் கற்பிக்கப்படுகின்றன. அதையும் தாண்டிய உளரீதியான முக்கியமான அம்சங்கள் அவரவர்களாகவே சரி/தவறு முறையில் கற்றுக் கொள்ள வேண்டியிருப்பது முறையான கல்வி இல்லாதிருப்பதால் தான்.
உங்கள் பதிவுகளில் இது ஒரு முக்கியமான ஒன்று .இதனால் ஓரிருவராவது விழிப்புணர்வு (ஆண் /பெண் இருபாலாரும் ) பெறுவார்கள் என நான் நம்புகிறேன். வாழ்த்துக்கள் தீபா .

'பரிவை' சே.குமார் சொன்னது…

அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பகிர்வு...
வாழ்த்துக்கள் சகோதரி.