வெள்ளி, 13 டிசம்பர், 2013

ஏதோ ஓரிடத்தில் விதைத்த அன்பை, வேறொரு இடத்தில் அறுவடை செய்கிறோம்...!

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மையப்படுத்தியே பேசும் தோழர் Kumaresan Asak இங்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை மாறாத ஒரே அன்பினை எங்கள் மீது செலுத்துகிறார்.

ஸ்டேடஸ் சரி இல்லாம இருக்கே, என்ன ஆச்சு என்று அக்கறையுடன் விசாரிக்கும் Shah Jahan சார், என் தம்பியின் இரண்டாவது குழந்தையும் இறந்து துயரத்தில் இருந்த நேரத்தில், அது தொடர்பான அவரது குடும்பத்தில் நிகழ்ந்தவற்றை கூறி, பெரும் ஆறுதலாய் இருந்திருக்கிறார்.
அதே காலத்தில் மருத்துவமனைக்கும் வந்து நேரில் பார்த்து, அவ்வப்பொழுது ஆலோசனைகள் சொல்லிய Dr. Nallini Arulக்காவின் அருகாமை என்றும் மறக்க முடியாது.

மிக அபூர்வமாக சரியானது என்று தெரியும் பட்சத்தில், சரியான இடங்களில், சரியான நபர்களிடம் நிதி உதவி செய்ய சொல்வது வழக்கம். அது மாதிரி நேரங்களில் சொன்னவுடன் செய்த Shaji Chellan Lawyer, Rama Subramaniaraja , தவிர, இப்பொழுது வரை, தவறாமல் உதவி செய்கின்ற Harishkumar Pandian இவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மதிக்கிறேன்.

காலில் காயம் என்று இங்கு எழுதியதை வாசித்துவிட்டு வீட்டுக்கு மாத்திரை வாங்கிகொண்டு வந்த Palani Kumar, காயத்தை பார்த்து விட்டு, இது சுளுக்குக்கு தான் போடணும் என்று சொல்லியபடி கொடுத்தவனிடம், இதுக்காக எல்லாம் சுளுக்கு வேற தனியா வரணுமா , நீயே வச்சுக்கோ என்றதை வழக்கம் போல எளிதாக எடுத்து கொண்டான். (நண்பேன்டா..! :P)

வழக்கம் போல இல்லியே முகம், என்னாச்சு, டல்லா இருக்க, என்று மிக சரியாக கூட்டங்களில் கலந்து கொள்ளும்பொழுது கேட்கும் Swathi Sa Muhil க்காவிடம், கொஞ்ச நேரத்தில சரியாகிட்றேன் என்று சொல்லியபடி, அது ஏன் எனக்கு மட்டும் நடிக்க தெரியல என்று நினைத்துள்ளேன்.

அம்மா என்று அழைக்கும் Shanmuga Vadivu, Isha Mala இருவரும் கொங்கு தமிழில் அன்பாக கொஞ்சப்படுவதற்காகவே , சமயங்களில் நானே அழைப்பு விடுப்பேன். இருமலுக்கு கொள்ளு ரசம் வைத்துக்குடி என்று அவ்வப்பொழுது ஆலோசனைகளும் தவறாமல் வரும்.

மிட்டாயாக இருந்தாலும், எளிதில் வாங்கி விட மாட்டேன். என்றோ கேட்டதற்காக அம்மாவுடன் நேரில் வந்து பேசிக்கொண்டிருந்து விட்டு, கொடுத்த பொழுது மறுக்க முடியாத அன்பு Damodar Chandruஅப்பாவினுடையது.

எந்த நல்ல நாளாக இருந்தாலும், முதலில் அழைத்து வாழ்த்து சொல்லி, ப்ளாக் எழுத காரணமாக இருந்த N.Rathna Vel அப்பா, அம்மா இருவருமே எங்கள் மீது எப்பொழுதும்  பேரன்பை செலுத்துபவர்கள்.

'அந்த போட்டோல டிரஸ் கலர் நல்லா இல்ல', என்று சொன்னால் எனக்கு கோவம் வரும். ஆனால் செல்வி, 'அடுத்து மதுரைக்கு வர்றேன் நீ தான் செலக்ட் பண்ற', என்று சொல்லி, சொன்னபடி செய்ததோடு.......... ஒரே மாதிரி இரண்டு பேரும் எடுப்போம் என்றவுடன் சரி என்று, செந்தாமரை, கிளிப்பச்சை வண்ணங்களின் கலவையில் எடுத்ததில், எனக்குப் பிடித்த பூக்கள் எம்ப்ராய்டிரி செய்யப்பட்டிருந்த ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, 'உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க', என்று விட்டுக் கொடுத்து ரசித்த Sakthi Selviான் நான் தடுத்தும் கேளாமல், அதற்கும் சேர்த்து பில் கொடுத்தது. ( அந்த உடை தான் பிறந்த நாளுக்கு செல்வி :)  )

மதுரை வந்த பொழுது நேரில் சந்தித்து, அவ்வப்பொழுது நலம் விசாரித்தபடி, தன்னை ஓட்டுவதற்கு சிறிய அளவில் கூட எதிர்ப்பு காட்டாத நட்பு தம்புசாமி ஞானராஜ் ......... உடையது.

இன்று கல்யாண நாள், பிறந்த நாள், கொலு வைத்திருக்கிறோம் என்று தகவலுடன், வாழ்த்துகளை மட்டும் பெற்றுக்கொண்டு ட்ரீட் வைக்கும் ரேவதி அண்ணாதுரை அக்கா... ( உங்களுக்கு ஒரு ட்ரீட் சீக்கிரம் வைகறேன் :)  )
எப்பொழுதும் என் எழுத்தை கொண்டாடிப் பேசும் Geeta Ilangovan க்கா, நேரிலும் அதே உற்சாக மனநிலையோடு பேசுவார்.

வீட்டிற்கு வந்து சென்ற பிறகு பேசும் பொழுதெல்லாம, வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் நலத்தையும் விசாரிக்கும் காயத்ரி, Magudapathi Govindaraj ,  எப்பொழுது சென்னை க்கு வருவீங்க என்று கேட்டு முடிப்பதே bye க்கு முந்தைய கேள்வியாக இருக்கும்.

சும்மா போன என்னை, கடங்கநேரியானின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில், நீ தான் நிகழ்ச்சி தொகுக்கனும் என்று சொல்லி, என்றோ மண் மூடி சென்ற செடி துளிர் விட காரணமான Muthu Krishnan நம்பிக்கை அபாரமானது.

மல்லிகை புக் சென்டர் ல, பட்டு னு ஒரு மொழி பெயர்ப்பு புத்தகம் வந்திருக்கு பட்டுனு வாங்கிப் படிங்க, G . N , ல இந்த கதை நல்லா இருக்கும் என்று ஆலோசனை சொல்லும் Ernesto Guvera, வார்த்தைகளில்,புத்தகத்தை நான் தவறவிட்டுவிடக்கூடாது என்ற அக்கறை இருக்கும்.
வீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க என்று ஆரம்பித்து, பல தகவல்களை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளும் கடங்கநேரி யான் னின் நட்பு ஆழமானது.

சின்ன அளவில் கூட மனம் கோணி விடக்கூடாது என்று கவனமாக வார்த்தைகளை அடுக்கும் Parimelazhakan Pariின் நட்பு இலக்கிய சந்திப்புக் கூட்டங்களில் என்றும் என்னை உற்சாகப்படுத்தும்.
கடந்த மாதம் நேரில் வந்த Kani Mozhi G' இதெல்லாம் கண்டுக்காத', என்று அங்கு அப்பொழுதே வாடிய முகத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லும் கனிவுக்கு உரியவர் கனி மொழி. அன்று மதிய உணவிற்கு பின், வீட்டிற்கு செல்ல கிளம்பிய என்னிடம் அங்கு இருந்த, வேறு ஒரு பெண்மணி என் கண்ணைப் பார்த்து, 'உங்க கண் ரொம்ப பவர்புல்', என்றதும், விழித்த நொடிகளில் வேகமா Yazhi Giridharan,  'இன்னைக்கு ட்ரீட் பில் கொடுத்தது இவங்க இல்ல கனி', என்று கலாய்த்ததை இப்பொழுது வரை நினைக்கும் பொழுதெல்லாம் சிரிக்கிறேன்.
இரண்டு, மூன்று முறைகள் மட்டுமே பேசி இருந்தாலும், உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்கும் நேரில் சந்தித்த நந்தன் ஸ்ரீதரன் னின் நட்பு மரியாதைக்கு உரியது.

சீரான இடைவேளைகளில் அழைத்து நலம் விசாரிக்கும் Selvi Shankar அக்காவின் அன்பு, வம்பு இல்லாத அன்பு.
சமீபத்தில் அறிமுகமானாலும், பிரியமுடன் பேசும் தங்கை ஸ்ரீதேவி செல்வராஜன், நேரில் ஒரு திருமண விழாவில் சந்தித்த பொழுது அத்தனை மனம் திறந்து பேசியவை, எளிதில் எல்லோராலும்   முடியாதது.

வீட்டிற்கு வருகை தந்து வருணுடன் வெளியே ஒரு சுற்று சுற்றிவிட்டு இறக்கி சென்ற Guru Ji யின் அன்பை வருண் இன்றும்  தேடுகிறான்.
கிரீன் வாக், கூழாங்கற்கள் என்று தொடர் சந்திப்புகளில் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதுடன், எவ்வளவு கலாய்த்தலும் சிரிப்புடன் மட்டுமே எதிர் கொள்ளும் Selvam Ramaswamy அண்ணன்.

நீங்க, வர்ரீங்களா சேர்ந்து போவோமா என்று புத்தகத் திருவிழாவிலிருந்து, உள்ளூர் சுற்றலா வரை கேட்கும் பிரியத்திற்கு உரிய ரேவா பக்கங்கள்...
ஓரிரு முறைகள் புத்தக திருவிழாவின் போது மட்டும் நேரில் சந்தித்தாலும்,'பேசிக்கிட்டே இருந்ததில இங்க நிறுத்தி இருக்கோம், அடுத்த சந்திப்பில் இதில இருந்து ஆரம்பிப்போம்', என்று நிறுத்திய தலைப்பின் கீழ் உள்ள வரியை SMS அனுப்பும் Sam Raj உடைய நட்பு எளிமையானது.

நேற்றைய மழையில் நனைந்து மண்டபத்திற்குள் சென்றவுடன் , வேகமாக கைப்பையில் இருந்த துண்டை எடுத்து துடைத்து விட்ட சுபா வள்ளிஅக்காவின் அன்பு வலிமையானது.

அத்தனை தொலைவில் இருந்தாலும் பண்டிகை நாட்களில் தவறாமல் அழைத்து வாழ்த்தும்  Vaduvur Rama க்கா, நான் மதுரையில் இல்லாமல் இருந்தும் அம்மா, அப்பாவை சந்தித்து இனிப்பை கொடுத்து விட்டு ஏதோ அடுத்த ஊருக்கு வருவது போல, மலேசியா வர்றப்போ வாங்க என்று அழைத்த Sriviji Vijaya, Santhy Shanஇரண்டு வரிகளுக்கு மேல் வாசிக்க சோம்பேறித்தனம் அதிகரிக்கும் காலகட்டத்தில், அதே மாதிரி எழுது, இதே மாதிரி எழுது என்று பக்கம் பக்கமாக எழுத சொல்லி கேட்கும் தைரியம் உடைய Kayal Mira ஸ்டேடஸ் பார்த்தேன், நல்லா இருக்கல என்று அழைத்துப் பேசும் Kalpana Shriஅக்கா, தேனியை கடக்கும் பொழுது வீட்டில மாப்பிளைக்கு கொடு என்று சொல்லி இனிப்பை வாங்கி பையில் திணித்த ஆனந்தன் அமிர்தன்அண்ணன், என்ன ஆச்சு? எங்க போனீங்க என்று ஒவ்வொரு முறையும் ஆர்வமுடன் விசாரிப்பதுடன் போகாதீங்க என்று சொல்லும் Sabeeram Sabeera கொட்டாவி விட்ட சத்தத்தை கேட்ட பிறகு, 'தூக்கம் வர்ற அளவு பேசிட்டேன் போல', என்று சொல்லும் Rajsiva Sundar அண்ணன், நம்ம ட்வின்ஸ் என்று சொல்லி, அவ்வப்பொழுது காணாமல் போய் திரும்பும் பெரும் பிரியத்துடன் இருக்கும் Charan Shiva Shiva வின் குடும்பம், குற்றாலம் தானே கூட்டமா இருந்தா என்ன,தனியார் அருவி எல்லாம் இருக்கு நானாச்சு கூட்டிட்டு போறதுக்கு என்று சொல்லும் Ram Kumar அண்ணன், இல்ல, இல்ல, இது கவிதை தான் என்று சான்றளித்து பெருமைப்படுத்தும் Gauthaman DS Karisalkulaththaan, ரேஷன் கார்ட் தானே நான் பார்த்துகிறேன் என்று சொல்லி அதற்கான வேலைகளை செய்த Ananth Madurai Ananth சென்ற முறை பாபநாசம் வந்த பொழுது உடன் வந்த Shiva, சதுரகிரிக்கு உன்னோட போகணும் என்று நேரில் சந்தித்த பொழுது சொன்னதை  கடந்த மாதம் மொபைலில் பேசும் பொழுதும் சொல்லும் Jeya Anand அக்கா, deactivate செய்து மீண்டும் வரும் பொழுதெல்லாம், அக்கறையுடன் விசாரித்து விட்டு ஆன்மீக கேள்விபதில்களில் அவ்வப்பொழுது விளக்கும் அளிக்கும் NC Ravindra Kumar .......... எழுத்தை பாராட்டியே விமர்சிக்கும் Venpura Saravanan, இந்த வாரத்துக்கு எழுதலையா என்று, என்னை, ஏதோ பெரிய அளவில் எண்ணிக்கொண்டு கேட்கும் கார்த்திகை நிலவன் அறிவு, இன்னும், இன்னும் இந்த நேரத்தில் நினைவில் கொண்டு வர மறந்த, விடுபட்ட பலரையும் அறிமுகப்படுத்தியது பேஸ்புக்...!

இது கனவுலகம், என்று உள்ளுக்குள் எங்கேயோ சொல்லிக்கொண்டே இருக்கும். என்னுடைய நிலைத்தகவல்களின் மூலமாக என்னை அறிந்தவர்கள் நீங்கள். மிக சிலருக்கு கூடுதலாக ஓரிரு பக்கங்கள் தெரிந்திருக்கலாம். ஆனாலும், எதிர் பார்ப்பின்றி அன்புடன் பழகுகின்ற உங்கள் அனைவரின் அன்பும், கடந்து வந்த பாதையில் கூடுதல் வலிமையை எனக்கு அளித்தது என்பது உண்மை. என்னவோ, இன்று பகிர தோன்றியது!

என் மீது காட்டப்பட்ட, காட்டப்படும் இத்தனை அன்பும் எங்கேயோ, எப்பொழுதோ நான் விதைத்ததுக்காக இன்று அறுவடை செய்து கொண்டிருக்கலாம்!

திங்கள், 2 டிசம்பர், 2013

எங்க ஊரு ஆறு! :(

நவம்பர் 24, பசுமை நடைக்காக சோழவந்தான்க்கு அருகில் உள்ள திருவேடகம் ஏடகநாதர் கோவிலுக்கும், அதன் இன்னொரு புறத்தில் வைகை ஓடிய ஆற்றுமணலுக்கும் சென்றோம். இக்கோவில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்.13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் இக்கோவிலை விரிவாக்கமும், புனரமைப்பும் செய்தார்கள். இக்கோவிலில் உள்ள 13 கல்வெட்டுகள் பிற்காலப் பாண்டியர் காலத்தை சேர்ந்தவை.  அதில் ஒன்று விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயர் காலத்தது. திருஞான சம்பந்தர் ஆற்றிலிட்ட ஏடு, அவர் "வன்னியும்மத்தமும்", என்னும் பதிகம் பாடியவுடன் ஏடு எதிரேறி ஒதுங்கி நின்றத்தலம். (சமணர்களுக்கும், சைவர்களுக்கும் தங்கள் மதமே சிறந்தது என்று எழுந்த சர்ச்சையில் ஏட்டில் தாங்கள் எழுதியப் பாடல்களை ஆற்றில் விட்டு, திரும்பி வரும் ஏட்டிற்கு உரிய மதமே சிறந்தது என்ற முடிவிற்கு வருவராம். இதன் பெயர் புனல்வாதம். அனல்வாதம் என்பது நெருப்பில் இட்டு முடிவு செய்வது.)

மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் வைகை, இந்த ஊரின் அருகிலே வடதெற்காக திரும்பி மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. இதன் காரணமாக இறந்து போனவர்களுக்காக செய்கின்ற காரியங்கள், காசியில் செய்ததற்கு ஒப்பான பலனை அளிப்பதாக இவ்வூர் மக்கள் நம்புகின்றனர். சரி நாம் ஆற்றுக்கு வருவோம்.

இலக்கியங்களில் அதிக முக்கியத்துவம் பெற்ற வைகை, நம் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் இருந்த ஆறு இந்த நவம்பர் மாதத்திலும் வெறும் மணலாகவே காட்சி அளிக்கிறது. இத்தனைக்கும், சித்திரைத் திருவிழாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வைகை, அந்த மாதத்தின் குறிப்பிட்ட அழகர் ஆற்றில் இறங்கும் நாட்களை ஒட்டி சுத்தப்படுத்தப்படுவதோடு, வேலை முடிந்ததாக நினைக்கும் மக்களையும் அரசையும் கொண்டே இருக்கிறது மதுரை.

ஆற்றின் ஓரங்களில் போடப்பட்டுள்ள தார்சாலைகளை உபயோகப்படுத்தி எளிதாகக் குப்பைகளை கொட்டிச்செல்லும் பல்வேறு வாகனங்கள். ஊருக்குள்ளேயே PTR, ஆல்பர்ட் விக்டர் போன்ற முக்கியப் பாலங்களில் ஏறி இறங்கும் பொழுதே இரண்டு பக்கங்களும் சிறிய குட்டையாகத் தேங்கிய கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், நிறைய செடிகளும், கூடவே மண் தரையையுமே பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்கு, ஊருக்கு சற்று முன்பே உள்ள இடத்திலாவது, பாடல்கள் பலவற்றிலும் கண்ட வைகையை நீருடன் கண்டுவிடமாட்டோமா என்ற ஏக்கத்துடன் சென்றது பெரும் ஏமாற்றத்தையே தந்தது.

ஆற்றின் கரையில் அமரலாம் என்று எண்ணியிருந்த எங்களுக்கு, ஆற்றின் உள்ளேயே மணல் தான் உள்ளது என்று வரவேற்ற வைகையின் ஓரங்களில் இருந்த பசுமையான மரங்களே சற்று ஆறுதல் அளித்தன.

என்ன ஒரு வேறுபாடு என்றால், நகரின் உள்பக்கத்தில் ஆற்றின் உள்ளே கொட்டப்படும், கலக்கும் கழிவுகளுடன் ஒப்பிடுகையில், கிராமங்களின் பங்கு கொஞ்சமே கொஞ்சம் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்த்து, எளிதில் மட்கிப்போகும், நிலத்தை மாசுபடுத்தாதக் கழிவுகளை மட்டுமே ஆற்றிற்கு அளிப்பது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு ஆற்றை மாசுபடுத்தி, கிட்டத்தட்ட தொலைத்துவிட்டு திருவிழாக் காலங்களில் மட்டும் மெனக்கெட்டு நீரை வரவழைக்கும் குற்றவுணர்வு அற்றவர்களாகவே இருக்கின்றோம்.

தாமிரபரணியோ, காவிரியோ அவ்வூர் மக்களின் தெய்வமாக கொண்டாடப்படுகிறது. அங்கெல்லாம் பாலங்களை கடக்கையில் இத்தனை கழிவுகளைத்  தாங்கிய அவலக் காட்சியைக் கண்டதில்லை. நம்மூரிலும், அழகர் இறங்குகிறார் என்கிற போது, அந்தக் காரணத்திற்காகவாவது, சுத்தமாக வைத்திருக்கலாம். ஊர் பெருமை பேசிக் கொண்டிருக்கும் நாம், நம் வைகைக்காக என்ன செய்தோம்? குறைந்தபட்சம் கழிவுகளைக் கலக்க விடாமல் செய்யக்கூட இயலவில்லை.

என் வீடு சுத்தமாக இருக்கிறது. போதுமான அளவில் நிலத்தடியில் தண்ணீர் கிடைக்கிறது, என்பதனையே  போதுமானதாக எண்ணுகிறோம். பாடங்களில் படித்த நம் ஆறு, மழை அதிகமாகப் பெய்கையில் மட்டும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து, மறுபடி குப்பைகள், கழிவுகள் என்று வழக்கமான முகத்திற்கு திரும்புகிறது.

என்னென்னவோ புயல்கள் வந்து போனதென்று சொன்னாலும், கடந்த சில நாட்களாக மழை வருவதற்கான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. ஒரு சொட்டு மழையையும் காணோம் எங்கள் ஊரில். மழை தொடர்ச்சியாகப் பெய்து ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடாவிட்டாலும், ஆறு என்றால் இது தான் என்கின்ற அளவிலாவது தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், அதைப்போலவே ஆற்றை அசுத்தப்படுத்துதல், தன் வீட்டை அசிங்கப் படுத்துவதற்கு சமம் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்ற ஆசை  எழுகிறது........

எதனையும் தீர்வாக சொல்ல முடியவில்லை....
என்ன செய்யலாம் இதற்கு என்பதே கேள்விக்குறியாக பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.....
எங்கேயாவது, யாராவது இதற்கான பதிலை செயலாகவே நடைமுறைப்படுத்தலாம் என்ற பேராவலின் ஊடே......... இந்தக் கேள்வியை இந்த சின்னஞ்சிறியப்பதிவில் அடக்கி இருக்கிறேன்.


வெள்ளி, 29 நவம்பர், 2013

தேங்காய் பப்ஸ் கூடவே என்னோட தோழியும்!

நேற்றையப் பதிவின் நீட்சியாக தொடர்ந்த எண்ணங்களை வரிசைப்படுத்தி உள்ளேன். ஓரளவு என்னைப் பற்றி நான் பகிர்ந்து கொண்ட ஓரிருவரில் குழந்தைப் பருவத்தில் இருந்தே பள்ளிவகுப்பு வரை உடன் வந்த நட்பு தமிழரசி. ( அதன் பிறகு லதா....... லதா பற்றி தனியாகவே ஒரு பதிவு எழுத வேண்டும்) நான் வாங்கினேன் என்பதற்காக அதே மெரூன் வண்ணத்தில் BSA SLR சைக்கிள் வாங்கியவள்.


93 - 95, மேல்நிலை வகுப்பு படிக்கும் காலங்களில், பள்ளிக்கு செல்கையில், தினமும் ஐம்பது பைசா கிடைக்கும். இதை சேர்த்து வைத்து, அதற்குள் சஞ்சாயிகா சிறுசேமிப்பு திட்டத்திலிருந்து, சைக்கிள்க்கு காற்றடிப்பது, பஞ்சர் பார்ப்பது என்று அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இத்தோடு, எங்கள் சத்துக்கு நாங்கள் செய்யும் சின்ன சின்ன உதவிகளுக்கும் இதிலிருந்தே செலவு செய்ய வேண்டும். கொஞ்சம் பெரிய அளவில் தேவை என்றால் மட்டுமே பாட்டியிடம் செல்வது, மற்றபடி, வீட்டில் கூடுதலாக கேட்பது கிடையாது.


இப்படி மிச்சம் பிடித்து மிச்சம் பிடித்து மாதத்திற்கு ஒன்றிரண்டு முறை பள்ளியில் உள்ள கேண்டீனில் தேங்காய் பப்ஸ் வாங்கி சாப்பிடுவோம். இந்த பப்ஸ், சின்ன வட்டமாக, உள்ளே அளவான தேங்காய்த் துருவலுடன், சுட்டெடுக்கப்பட்டு ஆங்காங்கே மெலிதாகக் கருகி, உச்சியில் ட்யூட்டி ப்ரூட்டியில் உள்ள சின்ன சிவப்பு சதுரம் பதிக்கப்பட்டு இருக்கும். அன்றைய விலை எழுபத்தைந்து காசு. இன்றைக்கும் மதுரையில் பல டீ கடைகளில் உள்ள கண்ணாடி பாட்டில்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பேக்கரி வகையறாக்களில் இதுவும் இருக்கும். இதே பப்ஸ் பெரிய பேக்கரிகளில் கூடுதல் தேங்காயுடன், எந்த கருகலும் இல்லாமல், உச்சியில் செர்ரிப் பழத்தை தாங்கிக்கொண்டு கிடைக்கும், ஆனால் சுவை அதில் பாதி கூட இருக்காது. கொஞ்சம் சாப்பிட்டாலும் திகட்டி விடும். சரி மேட்டர்க்கு வருகிறேன்.


வகுப்புகள் மூன்றரை மணிக்கு முடிந்தாலும், ஐந்து மணி வரை ஸ்டடி என்று எல்லோரும் வகுப்பில் உட்கார்ந்திருக்க, விளையாட்டில் இருப்பவர்கள் மட்டும் மைதானத்திற்கு சென்று விடுவோம். ஐந்தரை மணி வரை பயிற்சி எடுத்தப் பிறகு வீட்டிற்கு கிளம்புவோம். தமிழரசி ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்து எனக்காக மைதானத்தின் அருகே காத்திருப்பாள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வாங்கி சாப்பிடுவதற்கு, முதல் நாளே திட்டமிடுவோம். சமயங்களில் பழச்சாறும் சேர்த்து வாங்குவோம்.



ஐந்தரை மணிக்கு மேல் மிகமிகக் குறைவான மாணவியரே இருப்பர். தேங்காய் பப்ஸ் வாங்கி வைத்துக் கொண்டு, வழக்கம் போல உட்காரும் மரத்தடியில் அமர்ந்து, பல கதைகளை பேசிக்கொண்டே இருப்பது எங்களுக்கு அடுத்த பல நாட்களுக்கான உற்சாகத்தை தருவதாக எண்ணியிருக்கிறேன். இதில் மற்றைய உணவுகளைப் போலவே, ருசியை உணர்ந்து கொண்டே, வேகவேகமாக காலி செய்துவிடுவேன் பப்ஸை, அவளோ எலிக் கருமுவது போல, மிக மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். ' அங்க பாரு ஹாஸ்டல் பிள்ளைக வர்றாங்க, அவங்களுக்காக தான் இம்புட்டு மெதுவா சாப்பிடறியா,' என்றால், 'என்னதை தரமாட்டேன், நாம ஷேர் பண்ணி இன்னொன்னு வாங்கிக் கொடுக்கலாம்', என்பாள்.


இதில் ஒன்றிரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. சண்டை என்று சில நாட்கள் பேசாமல் இருப்போம். அப்பொழுதும் சேர்ந்து சைக்கிளில் செல்வதற்காக காத்திருப்பாள். எனது வீட்டிற்கான திருப்பத்தில் வளைவது வரை எதுவும் பேசிக்கொள்ளாமலே சேர்ந்தே ஓட்டிக் கொண்டு வருவோம். :P

இன்னொன்று..... பாட்டு. சில விருப்பமான பாடல்களை பாடுகிறேன் பேர்வழி என்று வாசிப்பும் இல்லாமல், பாட்டாகவும் இல்லாமல் என்னுடன் போட்டிப்போடும் அளவிற்கு கத்திக் குவிப்பாள். சில நேரங்களில், 'ப்ளீஸ் இது என் பேவ்ரட் பாட்டு, கொலை பண்ணாதே, நானும் உனக்குப் பிடிச்சப் பாட்டை கொலை பண்ணல', என்ற டீலிங் பரஸ்பரம் எங்கள் காதுகளை காப்பாற்றி இருக்கிறது. :P


இன்று காவல் துறை அதிகாரியின் மனைவியாக, சராசரி குடும்பத்தலைவியாக இருக்கும் தமிழரசி, தேங்காய் பப்ஸை பேக்கரி செல்லும் நேரங்களில் எல்லாம்  கேட்டு வாங்குவதாக சொன்னாள், அடுத்த தடவை டீ கடைகளில் தேடு. அதே சுவையோடு கிடைக்கும் என்றேன்.



அன்றைய நாட்களில், ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு திருப்தியான பதில்கள் தரப்படாமல், எளிதில் காசு கிடைத்ததில்லை. கல்லூரி சென்றவுடன் வீட்டில் ட்யூசன் எடுக்க ஆரம்பித்தப் பிறகு ஓரளவு மாதவருமானம் வந்து கொண்டிருந்தது. ஐந்தரை வருடங்களில் அந்தப் பணத்தை சேமிப்பது போக, மனது சரி என்று சொல்பவைக்கு கொடுத்தது போக, தனிப்பட்ட முறையில் எனக்கென்று எதுவும் சிறப்பாக வாங்கிக்கொண்டது இல்லை. அப்படி வளர்க்கப்பட்டதாலோ என்னவோ, அனாவசியம் என்று நினைப்பதற்கு கிள்ளிக் கூட கொடுக்க மனது வருவதில்லை.


எதுவும் அபூர்வமாக கிடைக்கும் பட்சத்தில் அதன் மதிப்பு கூடுதல். காணும் இடங்களில் எல்லாம் தாராளமாகக் கிடைத்தாலும், எப்பொழுதேனும் வாங்கிக் கொள்ளும் நேரங்களில், அதன் மதிப்பை தொடர செய்யலாம். எல்லாவற்றையும் எளிதாக கிடைக்கும் என்ற அட்டவணையின் கீழ் உட்படுத்தும் பொழுது, அலுப்பும் சலிப்பும் போட்டி போட்டுக் கொண்டு வந்து விடுகின்றன. ஒன்றிரண்டையாவது, கொண்டாடுவதற்கு என்று விட்டு வைக்கும் மனநிலை, என்னை கூடுதல் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.