வியாழன், 9 மே, 2013

பதினெட்டு வருட இடைவெளி...


பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான இந்நாளுக்கும், பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இதே மாதிரியான எளிதாக மனக்கண்ணில் கொண்டு  வரும் அந்த நாளுக்கும் இடையே, மாற்றங்கள் நினைத்தே பார்த்திராத அளவில் நிகழ்ந்துள்ளன.

அன்று, தேர்வு முடிவுகள் வெளியான முதல் நாள் தேறியவர்கள் விவரம் அடங்கிய நாளிதழ்களில், தங்களுக்குத் தெரிந்தவர்கள் எண்களைப் போட்டிப்  போட்டுக்கொண்டுத் தேடி, எண்களைக் கண்டால், அவன் பாஸ், இவன் பெயில் என்று அந்த அந்தப்பகுதிகளில் சிறிய அளவில் தகவல் ஒளிபரப்பை செய்து கொண்டு ஒரு குழு இருக்கும்.

தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் புத்தகத்தை உருட்டிக் கொண்டிருந்தாலும் கூட, தேறிவிடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்பொழுதும் இருந்தது எனக்கு. அடுத்த நாள் வெளியாகும்  மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டும்  இருக்கும். அதுவும் கூட, அதற்கு முன்னர் பலர் பகிர்ந்ததைப் போல, நாமும் பெருமையுடன் மதிப்பெண்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாகவே இருந்திருக்கலாம்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறு நாள், பள்ளிக்கு சென்று நீண்ட நாட்களுக்குப் பின் பார்த்த தோழிகளை, நலம் விசாரித்து மற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மொத்த மதிப்பெண்கள் அடங்கியப்  பட்டியலின் நகல் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும் . கூட்டத்தில் முண்டி அடித்து பசையின் ஈரம் முற்றிலும் உலராத காகிதத்தில், நமக்கான மதிப்பெண்களைத் தெரிந்துக்  கொள்ள, எண் வரிசையைத் தேடி, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும், சரியாக பார்க்கிறோமா என்று ஒன்றிற்கு இரண்டு முறை சோதித்து, பெயருக்குப்  பக்கத்தில் உள்ள மதிப்பெண்களை மனனம் செய்வதோடு, பாட வாரியாகப்  பெற்ற மதிப்பெண்களையும் வேகவேகமாக கண்களால் பதிவு செய்து கொண்டே, நெருங்கிய தோழிகளின் மதிப்பெண்களையும் ஒரு பார்வைப் பார்த்து விட்டு திரும்பும் த்ரில் அனுபவம், இணையத்தில் எளிதாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் மதிப்பெண்களில், குறைவு தான் என்றே தோன்றுகிறது.

அதே போல, தோல்வியுற்றவர்கள் அடுத்துப் போக வேண்டிய டுட்டோரியல் காலேஜ் க்கு, படை எடுப்பதும், அவளுக்கு நாலில போயிடுச்சு, பரவாயில்ல எனக்கு மூணு தான் என்று சகஜமாக எடுத்துக் கொண்டு கடந்து செல்வதையும் அதிகம் காணலாம். உறுதி ஆக சொல்ல முடியும், அன்றைய நாட்களில் தேர்வு முடிவுகளின் தோல்வி கண்டு, வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் மிக மிகக் குறைவே.

உடனுக்குடன் கிடைக்கும் வசதிகள்,
ஆசிரியரின் ஒரு சொல்லையோ, சின்ன அடியையோ கௌரவத்தோடு ஒப்பீடு செய்து கொள்ளும் குழம்பிய மனப்பான்மை,
கற்பிக்கப்பட்ட கல்வியை சரிவர படிக்காமல் இருந்தாலும், வெற்றியைத் தவிர வேறு எதோடும் சமரசம் செய்து கொள்ளாத பலவீனமான மனது,
சேவை என்பதை விட, தொழிலாக மட்டுமே கற்பிக்கும் பல ஆசிரியர்கள்,
எதையும் எளிதாகவும், வலிமையோடும் ஏற்றுக்கொண்டு நடைபோட பழகிக் கொடுக்காத கல்வி முறை,
சம்பாதிக்க வேண்டும், அதுவும் சமூகம் எந்தெந்தப் பணிகளை உச்சத்தில் வைத்துப் பார்க்கிறதோ அந்த ஒன்றில் நுழைய வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த உயரிய லட்சியமும் தராதப்  பள்ளிகள்......
சைக்கிள், லேப் டாப் போன்ற முதன்மை முக்கியத்துவம் இல்லாதவற்றை வழங்கி,
அதி முக்கியத்தேவையான, பண் பட்ட மனதுடன் கூடிய கல்வியை வழங்க ஆவன செய்யாத அரசு,
நம்மோட படித்தவர்களில், பெரிய அளவில் மதிப்பெண்களோடு வெற்றி பெற்றவர்கள் மிக சாதாரணமாக நாட்களை நகர்த்திக்கொண்டும், சுமாரான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், பல் வேறு துறைகளில் கலக்கிக் கொண்டிருப்பதை அறிந்தும் ,  மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விரட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர்,
இவை போன்ற பல காரணங்களால் மனதளவில் திடமில்லாத, சுயநலம் மிகுந்த ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது  என்பதை வருத்ததோடு ஒத்துக் கொள்ள வேண்டி உள்ளது.

எத்தனையோ நவீன வசதிகளை எளிதாக இவர்கள் அனுபவித்தாலும், அதன் ஊடே நாங்கள் ஆற, அமர நிதானமாக அனுபவித்து மகிழ்ந்தது என்று எண்ணியவற்றை எல்லாம் இழந்து, வெகு வேகமாகப் பயணிக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் பொழுது சில நேரங்களில் பரிதாபம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.


4 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

மனதளவில் திடமில்லாத, சுயநலம் மிகுந்த ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை வருத்ததோடு ஒத்துக் கொள்ள வேண்டி உள்ளது.

அருமையான பதிவு. வாழ்த்துகள் தீபா நாகராணி.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி.

A. Manavalan சொன்னது…

Nalla Pathivu Deepa.

dins சொன்னது…

arumaiyana padivu

dins சொன்னது…

வாழ்த்துகள்