ஞாயிறு, 26 மே, 2013

TN - 72

உள்ளேயும், வெளியேயும் அதிகரித்த புழுக்கத்தை தீர்த்து வைக்க ஒரே ஒரு அருவி தேவைப்பட்டது.அதனை செயல் படுத்த, முந்தாநாள், காலையிலேயே திருநெல்வேலி சென்றடைந்தோம். அங்கிருந்து, ஐம்பதாவது கிலோமீட்டரில் பாபநாசத்தில், அகஸ்தியர் அருவியில் இல்லை என்று சொல்ல முடியாதவாறு எப்பொழுதும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும் என்று கிடைத்த தகவல், மெய் என்பதை, நேரில் பார்த்து மகிழ்ச்சியுடன் உறுதி செய்து கொண்டோம்.

சீசன் நேரங்களில், மதுரையில் மாலை ஐந்தேகால் மணிக்கு கிளம்பும் செங்கோட்டை பாசெஞ்சர் வண்டியை பிடித்தால், எட்டே முக்காலுக்கு தென்காசி சென்று விடுவோம். பின்பு, அங்கிருந்து ஆட்டோ பிடித்து குற்றாலத்தை அடைந்து, விடுதி அறையில் துணிமணிகளைப் போட்டுவிட்டு, மெயின் அருவிக்கு, பத்து மணிக்கு செல்வோம். இரவு வேளைகளில் கூட்டம் குறைவாக இருப்பதால் பேச்சு சத்தமும் குறைவாக இருக்கும்..
விருப்பம் போல, எந்த தொந்தரவுமில்லாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், நிற்கலாம். அருவியின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க, எதைப்பற்றியும் சிந்திக்காமல், ஒரு தியானம் போல நின்று கொண்டிருப்பதில், உள்ளே உள்ள, கசடுகள் அனைத்தும் வெளியேறிக் கொண்டே இருக்கும். இரண்டு மணி நேர குளியலில், உள்ளே செல்வதற்கு முன் இருந்த எனக்கும், வெளியே வந்த எனக்கும், நல்ல ஒரு மாற்றத்தை உணர்ந்துள்ளேன். அதன் காரணமாகவே இப்பொழுதும், அகஸ்தியர் அருவி நோக்கிப்  பயணம்....

அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், ஐந்தடி அகலத்தில் விழ ஆரம்பித்து, சில அடிகளில் பதினைத்து அடியாகப் பிரிந்து விழுகிறது. குளிக்கிறவர்களுக்கும் நிழல் தருவதற்காகவோ என்னவோ, பாறை இடுக்குகளில், புங்கை, உட்பட பல செடி, மர வகைகள் செழிப்பாக வளர்ந்து இருந்தன. கீழே விழுந்து கொண்டிருந்த நீர் சில இடங்களில் சாதாரண டம்ளரில் இருந்து கொட்டுவது போலவும், சில இடங்களில் வாளியில் இருந்து கொட்டுவது மாதிரியும், ஓரிரு இடங்களில் அண்டா நீரைக் கவிழ்த்தது போலவும் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தது. கூட்டமான நேரங்களில் அருவிக்கென்று உள்ள கிளினிக் பிளஸ் ஷாம்பூ வாசத்தை நுகர்ந்துகொண்டே
அரை மணி நேரமாவது நின்றே ஆக வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டு நுழைந்தேன். ஆனால், அந்த சபதமே தேவை இல்லை என்பது போல, அங்கு குளித்துக் கொண்டிருந்த பலரும், ஐந்து நிமிடங்களில், தலையைக் காட்டினோமோ, நேர்த்திக் கடனை முடித்தோமோ என்கிற வகையில் கிளம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கையில், இதுக்கு நீங்கல்லாம், உங்க வீட்டு ஷவர் லேயே, குளிச்சிருக்கலாம்ல என்று கேட்க தோன்றியது.

லேசாக நீர் விழுந்த இடங்களில் தலையை மட்டும் காட்டிவிட்டு, உள்ளே புகுந்து, வாளி நீர் கொட்டும் அளவு வேகத்துடன் விழுந்த இடத்தில் நன்றாக நின்று கொண்டேன். தலையை சற்றுக் கவிழ்த்து கண்களை மூடிக்கொண்டு, பெரும் ஓசையுடன் விழும் அருவியின் மொழி, புரியாமல், தூய்மைப்படுத்தும், குளிர்ச்சியூட்டும் அதன் தன்மையை முழுவதுமாக உணர முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஒரு மிடறு நீரைத் தீர்த்தமாக விழுங்கிக்கொண்டேன். அருவிக்கென்று, இவ்வளவு சுவை எங்கிருந்து வருகிறதோ, திரும்ப திரும்ப பல முறை நீரைக் குடித்துக் கொண்டே இருக்க செய்தது. மெதுவாக கண்களை திறந்து பார்க்கையில் சுற்றி விழுந்து ஓடும், அதன் வெள்ளை நிறம், காலுக்கு கீழே செல்கையில் நிறம் மாறுவது போன்ற பிரம்மை ஏற்பட்டது. மீண்டும், கண்களை மூடி,சற்றே தலையை தூக்கும் பொழுது, காதுகளில், சங்கை காதில் வைத்தால் கேட்குமே அது போல ஒரு ஓசை. அதையும் ரசித்து விட்டு, விழுந்து கொண்டிருந்த நீரின் வேகம் இன்னும் கூடுதலாக வேண்டும் என்று, இருப்பதில் அதிக அளவு வேகத்துடன் விழும் இடத்தில் நகர்ந்து நின்றேன். டொம் டொம் மென்று விழுகிற நீர், இலேசாகவாவது உடலை அசைத்துக் கொண்டே இருந்தது. என்னவோ, அந்த அடி, இந்த, அடித்துத் துவைப்பது போல, இன்னும் இன்னும் மனதை இலேசாக்குவது போன்ற உணர்வு. அனுபவித்துக் கொண்டிருந்த சற்று நேரத்தில், அதே டொம், வலி தருவது போல உணர்வு. மிக வேகமாக கூடுதலாகிக் கொண்டே சென்ற வலியை உணர்ந்து, போதும் என்று வெளியே வந்து, அருவிக்கு, மனதார நன்றி சொல்லி, நேரத்தைப் பார்த்த பொழுது, நாற்பது நிமிடங்கள் கடந்து இருந்தன. புதிதான உற்சாகம் உள்ளே எங்கும் பரவிக் கிடக்க, மகிழ்ச்சியான துள்ளலுடன், கிளம்பினேன்.




அங்கு இருந்து, மேலே, எட்டாவது கிலோமீட்டரில், சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. அங்கு உள்ள விக்கிரங்கள் எல்லாமே, காவல் தெய்வங்கள் என்று சொல்லப்படுவை. குலதெய்வம் என்று இல்லாதவர்கள், இவரை கும்பிடலாம், என்ற தகவலைப் பெற்றுக்கொண்டு,  காரையாறு அணையில் நீர் இல்லாததால், மேலே செல்வது வீண் என்று சொல்லிய ஓட்டுனரின் பேச்சைக் கேட்டு, கீழே இறங்கி வந்தோம்.

திருநெல்வேலி...........
காந்திமதி, நெல்லையப்பர் கோவில்........ நேர்த்தியான அழகான சிற்பங்கள் பொலிவுடன் இருந்தன. பல தூண்களிலும் பார்க்கலாம் செங்குத்தான கோடுகளை , அந்த காலத்தில் சிற்பங்களை அமைத்தவர் கோடுகளின் பிரியராக இருந்திருப்பார் போல.
எவ்வளவு பெரிய பிரகாரம். ஊர் முழுவதும், ஒரே நேரத்தில் வலம் வந்தாலும், போதுமான இடம் இருக்கும். :)

தாமிரபரணி ... ஓடிக் கொண்டே இருக்கிறது. வைகையை பார்த்து நொந்து போன கண்களுக்கு, பாலங்களில் கடந்த சில இடங்களில், ஆறு என்று ஒப்புக்கொள்ளும் வகையில், அதன் ஓட்டம் இருந்தது. அதே போல, தூய்மையும் இருந்தது.

உணவு : தின்னே தீக்கலாம் கொண்டு போன காசெல்லாம். அவ்வளவு விலை, பெரும்பாலான  ஹோட்டல் களில், விலை, மதுரையோடு ஒப்பிடும் பொழுது மிக அதிகம். சாப்பாடு இன்னும், இன்னும் கேட்டு வாங்கி சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும், சுவை. நிச்சயம், சாப்பிட்ட இடங்களில் எல்லாமே காரம் மட்டும் சற்று குறைவாகவே இருந்தது, மதுரையோடு ஒப்பிடும் பொழுது.
இதுனால தெரிய வர்றது, காரத்துக்கும், கோவத்துக்கும் சம்பந்தமில்லை.  :)

சயின்ஸ் சென்டர் : பத்தரை மணிக்கு திறக்கும் என்று இருந்த பெயர் பலகைக்கு முன்னால், பத்தே காலுக்கு, 7,8 பேர் தான் நின்று கொண்டிருந்தாலும், உள்ளே கம்ப்யூட்டர் உட்பட அனைத்து பொருட்களையும் துடைத்துக் கொண்டிருந்த பெண், எத்தனை பேர் நின்றாலும், எனக்கென்ன என்று சரியாக பத்தரை மணிக்கே டிக்கெட் கொடுத்தார். (இம்புட்டு பங்க்சுவலா ?  ) வெளியில் நிற்கும் பொழுதே, வண்டியின் பின்னே சமோசா நிறைந்த பெரிய பிளாஸ்டிக் பெட்டியைக்கட்டி, அதன் மேலே காகிதத்தைப் பரப்பி, அந்த காகிதம் பறக்காமல் இருக்க, மூலைக்கு ரெண்டு ரெண்டு சமோசாவை வைத்து உள்ளே சென்ற கேண்டீன் காரரிடம், எப்படி இப்படி எல்லாம் கேக்கனும்னு ரொம்ப ஆசையா இருந்தது. நாம தான் இங்கே எதுவும் சாப்பிடப் போறதில்லை அப்புறம் என்ன என்று, அப்படியே உள்ளே சென்று வேடிக்கை பார்த்து விட்டு, 3D படம் பார்க்க சென்றோம். மேலை நாட்டு வட்டார வழக்கில் இருந்த ஆங்கிலம் ஒரு எழவும் புரியவில்லை எனக்கு. ஆனால், கார்ட்டூன் நெட்வொர்க் உட்பட, பல சேனல்கள் பார்த்து பழகிய குழந்தைகள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ( முடிந்தால், சப் டைட்டில் அல்லது, மொழி பெயர்த்து வெளியிடலாம், அந்த பதினைந்து நிமிடங்கள் ஓடக் கூடியப் படங்களை, எங்களை மாதிரி பெரிய குழந்தைகளுக்காகவும்.... அப்புறம், அந்த கண்ணாடியின், தரத்தை இன்னும் உயர்த்தினால், திருப்தியாக இருக்கும்) மற்றபடி அங்கு இருந்த ஒவ்வொரு அம்சமும், அருமை. ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல அறிவியல் மையங்கள் குழந்தைகளுக்காக கொண்டு வந்தால், உறுதியாக உபயோகமாக இருக்கும்.

அப்புறம்.... எங்க ஊர்ல, அங்க, அங்க கடைகளில மட்டும் கேட்கும் அண்ணாச்சிகள்  உச்சரிக்கும் பிரத்யேக திருநெல்வேலி வட்டார வழக்கு மொழியை , ஊரெங்கும் கேட்க முடிந்தது. 

அதிக அளவில் காணப்படும் பரோட்டக் கடைகள், எல்லா ஊர்களும், இந்த விஷயத்தில் ஒரே மாதிரி தான் மாறி இருக்கின்றன என எண்ண வைத்தது.

திருநெல்வேலில, மினரல் வாட்டர் வாங்க வேண்டாம். நீங்க, எங்க தண்ணி குடிச்சாலும், தீர்த்தம் மாதிரி தான் இருக்கும். அப்புறம், எதுக்கு காசை வீணாக்கிட்டு...

நல்லா, இருக்கு.... இந்த வெயிலுக்கு....
முடிஞ்சா........  ஒரு எட்டு போய்ட்டு வாங்க....  :)​

5 கருத்துகள்:

appu mahi சொன்னது…

சரி சரி ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம் என்னோட அக்கவுன்ட் க்கு எப்போ அனுப்புரிங்க

Rajkumar R சொன்னது…

//எதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)// தலைப்பு ரொம்ப சரி எதிர்பாராமல் நண்பரின் முகநூல் பக்கத்தின் வழியே உள் நுழைந்தேன்
அகஸ்தியர் அருவி பற்றிய புதிய தகவல் கிட்டியது நன்றி !!!

perumal karur சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க...

Unknown சொன்னது…

சரி போயிட்டு வருகிறேன்..

everestdurai சொன்னது…

அருமை அனுபவித்து இருக்கிறேன்