புதன், 8 அக்டோபர், 2014

மதுரை to சென்னை


மாட்டுத்தாவணியில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட பேருந்தில் கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் சற்றே சாய்ந்து அமர்ந்திருந்தேன். கால்களை நீட்டியும் அசௌகர்யமாக இருந்ததால்  மடக்கி உட்கார்ந்திருந்த நிலையில் கண்ணாடி ஜன்னல் வெளியே தெரிந்த சாலையை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன். குளிர்சாதன வசதி இருந்ததால், ஜன்னல் ஓரம் கிடைத்தும் அதனை திறக்க முடியாத சூழல் கடுப்படித்தது. மெதுமெதுவாக வேகமெடுத்து ஓடத்துவங்கிய வண்டி மேலூரில் சில நிமிடங்கள் நின்றது. செமி ஸ்லீப்பராக இருந்தாலும், இரவில் பேருந்துப் பயணம் பழக்கமின்மையால் இமைகள் ஒட்டிக் கொள்ள மறுத்தன. பக்கத்தில் இருந்த மார்வாடிப் பெண் என் இருக்கைக்கு நேராக மேலே இருந்த சுவிட்சை சரி பார்த்தபடி, ஏசி சரியா வேலை செய்யவில்லை என்ற தகவலை வருத்தத்துடன் பகிர்ந்தாள். எனக்கெல்லாம் சரியாக வேலை செய்தால் தான் நடுங்கிக் கொண்டே இருக்கும் என்று பதிலுக்கு சொல்லாமல் பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு ஆமோதித்தேன். நான்கு வழி சாலையில் விரைந்து கொண்டிருந்த பல்வேறு பதிவு எண்களைக் கொண்டிருந்த பேருந்துகள் சென்னையை நோக்கியே சென்று கொண்டிருந்ததை பேருந்தின் பின்புறம் எழுதி இருந்ததின் உதவியால் தெரிந்து கொண்டு அவைகள் எந்த நேரத்தில் அந்தந்த ஊர்களில் இருந்து கிளம்பியிருக்கும் என அனாவசிய கணக்கு உள்ளே ஓடியது . 

அதிசயமாக யாரும் பேருந்தில் மொபைலை நோண்டிக் கொண்டிருக்கவில்லை. உள்ளே இருட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை விட, நீண்டு கொண்டே செல்லும் சாலை தன்னை நோக்க செய்தது. மழைச்சாரல் காரணமாக ஏற்பட்ட ஈரம் சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் அழகாக மின்ன எதிர் வரிசையிலும் அவ்வப்பொழுது வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. ஊர்களைக் கடக்கையில் தென்பட்ட பலவகை மரங்களும் ஒரே மாதிரி நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தன. பார்க்கும்  சாலையும் ஊரும் வேறுபாடில்லாமல் விரிந்து கொண்டே சென்றது. அவ்வப்பொழுது வேகத்தடையில் ஏறி இறங்கும் பொழுதுகளில் கூடுதல் விழிப்புடன் பராக்குப் பார்ப்பது தொடர்ந்தது. அடங்கி இருக்க ஊரால் முடியலாம், நெடுஞ்சாலையால் பரபரப்பாகவே இருக்கவே முடியும் போல :)

அலாரம் வைத்த மொபைல் தேவைப்படாது என தெரிந்ததும் கீழே இருந்த பையில் வைத்தேன். சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் கட்டி வைத்திருக்கும் சாமான்கள் என்னவாக இருக்கும் என நீண்டது யோசனை. ஒன்றரை மணிக்கு பெயர் தெரியாத ஊரில் நிறுத்தியவுடன், பத்து நிமிடங்கள் நிற்கும் என்று ஒரு பையன் பலத்த குரலில் அறிவிப்பு செய்தான். நல்ல உறக்கத்தில் இருந்த பக்கத்து இருக்கைப் பெண்ணை தட்டி எழுப்பிய பிறகே வெளியே வர முடிந்தது. கொஞ்சம் வெளிக்காற்றை வாங்கவே இறங்கினேன். அங்கிருந்த கழிப்பறை அருகில் நின்ற சில வண்டிகளில் வந்த பிரயாணிகளுக்கும் உபயோகப்பட்டது.

 பேருந்தின் உள்ளே இருந்த பெயரளவு குளிர்ச்சியை விட வெளியில் மழை நின்ற ஈரம் தந்த குளிர்ச்சி அதிகமாக இருந்ததை உணர்ந்ததும், உள்ளே போய் உடன் அமர்ந்திருந்த பெண்ணை வெளியே போக சொல்லலாம் என நினைத்தால், பாவம் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். இலேசாக கண் சுழலும் போதெல்லாம் ஏதாவது ஒரு டோல்கேட்டில் நின்ற பேருந்து 5,6 வாகனங்களைக் கடந்த பிறகே கண்ணாடிக் கூண்டின் அருகே நின்றது. அந்த நேரத்திலும் அத்தனை பரபரப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக அத்தனை அதிக சம்பளம் கிடைக்காது என்று ஓரத்தில் ஓடியது. வேகமெடுத்து சீறிப் பாயத்தொடங்கிய பேருந்தின் வேகத்தை வெளியில் வேடிக்கைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே அனுபவிக்க முடிந்ததை சீரான சாலைகள் செய்தன. ஏதோ ஓர் ஊரில் இரண்டு மணிக்கு ட்யூப் லைட் வெளிச்சத்தில் திறந்திருந்த டீக்கடைக்கு வெளியே கிடந்த இருக்கையில் கால் நீட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர், அவர் கமிஷன் கொடுக்கும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கலாம். நான்கு மணியைத் தாண்டும் பொழுது ஆவின் பால் வண்டிகள், தண்ணீர் கேன் ஏற்றி செல்லும் வண்டிகள் எங்கள் உடன் பயணிக்க ஆரம்பித்தன. தாம்பரத்தை தாண்டும் பொழுது ஆட்களை நிறைத்துக் கொண்டு செல்லும் பேருந்துகள், சாலையை கடக்கும் மக்கள் என வழக்கமான ஒரு நாள் விடிய ஆரம்பித்திருந்தது. 

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஒரு பயணத்தின் பார்வை...
அருமை...

thambu சொன்னது…

பராக்கு பார்த்தல் ஒரு கலை. சொந்தப் பிரச்சனையை மனம் மறந்து அந்தக் கண ரசிப்பை, விடை தெரியா, விடை தேவைபடாத கேள்விகளும், சுவாரசியமான கற்பனைகளும் மனம் முழுக்க நிரம்பியிருக்கும் பொழுது அது. அதை வார்த்தைகளில் வடிப்பது கடினம். அறியாத,சில நேரங்களில் புரியாத நிகழ்வுகளை சுவாரசியாமாக உங்கள் பாணியில் பதிந்தது நானே பராக்கு பார்த்த உணர்வை தந்தது என்றால் மிகையில்லை.நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் புரிந்த உலகம் பிரயாணத்தின் போது தான் நாம் தெரிந்து கொண்ட உலகத்தின் அளவு எவ்வளவு சிறியது என்று புரியும். கடந்து செல்லும் காட்சிகள் தரும் கேள்விகள் விடை தேடத் தேவையில்லா படிப்பினைகள்.பேருந்துப் பிரயாணம் மிகுதியாக வெளிப்புற உலகையும் ரயில் பிரயாணம் உடன் பயணம் செய்வோரின் மூலம் மனிதர்கள் பற்றியும் நம் சிந்தை நிறையும் என்பது என் கருத்து. சுவாரசியமான பதிவுக்கு நன்றி :)