வெள்ளி, 21 ஜூன், 2013

கொசு

என்னை, எப்பொழுதும் புருவம் உயர்த்த வைக்கும் உயிரினங்களில் முக்கியமான ஒன்று கொசு. சிறு வயதில், பார்த்த கொசுவின் உருவம், மிக பரிதாபமாக இருக்கும், லேசாக தட்டினாலே, பொசுக்கென்று போய் விடும். சமீப காலமாக, உருவத்தையே மாற்றி அமைத்துக் கொண்டதோ என்று எண்ணும் அளவு, வலிமையான, திடகாத்திரமான கொசுவாக மாறிவிட்டது. ஓங்கி அடித்தால் தான், உயிரை விடும். இன்னொரு விஷயம், ஆரம்ப காலத்தில் கொசுக் கடி, தாங்கிக் கொள்ளக் கூடிய அளவு சாதாரண அளவிலேயே இருக்கும். ஆனால், இப்பொழுது கடிக்கும் கொசுக்களின் வலியை, ஒரு திட்டோ, முகச்சுழிப்போ இல்லாமல் தாங்கிக் கொள்வது என்பது நம்ப முடியாத செயலாகவே இருக்கிறது.

நாங்களும் கொசுவை ஒழிக்கிறோம் என்று, வரும் மாநகராட்சி வண்டி கசிய விடும், மண்ணெண்ணெய் நெடிக் கலந்தப் புகைக்கு, மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டும் தங்கள் இன்னுயிரை இழந்து, பெரும்பான்மையானவை பாதுகாப்பான, இடங்களுக்கு சென்று திரும்புமோ என்று யோசிக்க வைக்கும் அளவு, சிறிது நேரத்திலேயே தங்கள் பணிகளை சீரிய முறையில் செய்ய ஆரம்பிக்கும். எந்த, கொசுவர்த்தி சுருளோ, திரவமோ, எதுவும் வால் ஆட்ட முடியாது. என்ன, இந்த கொசு மட்டை வைத்து, ஆத்திரம் தீர, எத்தனை நூறு கொசுக்களை நீங்கள், நிமிடக்கணக்கில் கொன்றாலும், அதனை விட, பல மடங்கு அதனின் இனம், பறந்து வந்து, அதற்கான உணவுத் தேவையை தீர்த்துக் கொண்டே தான் இருக்கும். இவ்வளவு ஏன், கொளுத்தும் வெயிலிலும், தன் நுண்ணிய உடலை மிகப் பாதுகாப்பாக வைத்து, மெலிதாக இனப்பெருக்கம் செய்து, இதோ, காற்றடிக்கும் காலத்தில் மெது மெதுவாக விட்ட வேலைகளை தொடர ஆரம்பித்து விட்டன.

ஒளிந்து கொள்ள முடியாத அளவு, நாம் மரம் செடி கொடிகளை நாசப்படுத்தினாலும், சுற்றிலும் தண்ணீர் வாசம் இல்லாத அளவு, கட்டாந்தரையாக  இருந்தாலும், நாம், கண்டுபிடிக்க முடியாத அளவு, தனக்கான இடத்தை தேர்வு செய்யும் திறமைசாலி. நெருக்கமாக உற்று நோக்க வேண்டும் என்ற ஆவலில், வலது புறங்கையின் மேல் அமர்ந்த கொசுவை கவனிக்க ஆரம்பித்தேன். மெதுவாக தோலின் மேற்பரப்பில் வலிக்காமல் உள்ளே நுழைய, நுழைய அதன் கை(!?) , (அதன் சாமர்த்தியத்தை ரசித்துக் கொண்டிருந்த பொழுதே), மெது மெதுவாக  குறைந்து, முழு கையும் மறைந்தது. வெடுக்கென்று உள்ளே ஒன்று பிடுங்கி எறியப்பட்டது போன்ற வலியை தாங்க முடியாமல், கையை ஓங்கி அடிக்கும்  பொழுது, அடடா, என்ன இருந்தாலும், இது என் ரத்தத்தின் ரத்தமல்லவா என்று, கையை உதறினேன். நொடிகளில் மாயமானது அது. மறைந்த கொசு, எப்பொழுது தாக்கும், தன் படைகளையும் அழைத்து வரும் என்று திக் திக் என்று பரபரப்பாக இருக்க வைக்கும்.

எனக்கு ஒரு யோசனை, ஏன் கொசுப்படை என்ற ஒன்றை அரசு ஆரம்பிக்கக் கூடாது? :P

இந்த வெயிலையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழும், கொசு, கடும் பனியிலும் போராடும் என்றே தோன்றுகிறது. :P

1 கருத்து:

விச்சு சொன்னது…

கொசுவினைப்பற்றி இவ்வளவு யோசித்துள்ளீர்கள். இப்போது உள்ள கொசு உண்மையிலேயே வலிமையானதுதான். எதையும் தாங்கும் இதயம் என்பது கொசுவுக்கு மட்டுமே பொருந்தும்.