செவ்வாய், 18 ஜூன், 2013

எழுத்து!

நம் எழுத்து, மொழி, சிந்தனை எல்லாமே முன்னோர்களிடம் இருந்து வழி வழியாக வந்து தற்பொழுது மேம்பட்ட நிலையில் இருப்பவை. அவற்றிலிருந்து வார்த்தைகளை, சிந்தனைகளை சற்று மாற்றி  உபயோகிப்பவர்களே நாம்.

மனதை ஆள்வதை விட எழுத்தை ஆள்வது எளிமையானது. :)

வாசிக்கும், எழுதும், அனைவரையுமே இணைக்கும் பாலமாக (சமூக வலைதளங்களில்) எழுத்து உள்ளது .

எல்லா எழுத்துக்களுக்குமே  வர்ணம் பூசுகிறவர்கள்,
வர்ணத்திற்கு அப்பால் சிந்திக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்!

இதில், பாராட்டை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்படும் எழுத்து தனி ரகம் .

ஒவ்வொருவரின் அனுபவத்துடன், அவர் கற்ற அறிவு, பதிவுகளில் மிளிர்கிறது.

எழுதுவது என்பது எல்லோராலும் முடியக்கூடிய ஒன்றே. சோம்பேறித்தனத்தின் தலையில் நறுக்கென்று  நாலு கொட்டு வைத்து விட்டு, உள்ளத்தில் உள்ளதை விசைப்பலகையின் மூலமாக இறக்கி, திரையில் தோன்றுவதைப் பார்க்கும் பொழுது, நம் மனசாட்சி உயிர் பெற்றது போல இருக்கும்.

எழுத்து, தொடர் பயிற்சியின் மூலம் செம்மைப்படும்.

ஒருவரின் எழுத்தை வாசிக்கும் பொழுது, கடந்து செல்லும் பாதையின் ஓரத்து செடியில் உள்ள தலையை ஆட்டும் பூ, சில நொடிகள் நம் மனதில் அமர்வதைப் போல உணர்வு வந்தாலே அந்த எழுத்து வெற்றி பெற்ற ஒன்றாகிறது.

போதிக்கின்ற எழுத்துக்களை விட மகிழ்ச்சியைத் தரக்கூடிய, கனமில்லாத, எளிமையான எழுத்துக்களையே இங்கு விரும்பி வாசிக்கின்றோம். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கே போதனையையும், ஜனரஞ்சகமாக தரத் தெரிகிறது.

பெரிய அளவில், நீண்ட கால மாற்றத்தை, வெறும் எழுத்து மட்டுமே கொண்டு வந்து விடாது, என்பது என் தனிப்பட்ட கருத்து.

எதையும் சீர் செய்ய முனைவதை விட, பகிர்தலும், இறக்கி வைத்தலுமே அதிகம் இருக்கிறது எழுத்துகளில்.

ஒரு நண்பனிடம் பகிர்வதை விடவும், எழுத்தில் இறக்கி வைத்தலில் சோகம், பாதியாவதும், இன்பம் இரட்டிப்பாவதும் இயல்பாய் நடக்கிறது, குறிப்பாக வேறு எந்த பக்க விளைவுகளுமின்றி...  :)

ஒரு சிலர், எப்பொழுதாவது எனக்காக எழுதியது போல உள்ளது, ஆறுதலாக உள்ளது என்று செல்லும் பொழுது, அட, இந்த மாதிரி கூடுதல் வேலைகளை எல்லாம் எழுத்து செய்யுமா என்று ஆனந்தப் பட்டிருக்கிறேன்.

தொடர்ந்து வாசிக்கின்ற ஒவ்வொரு எழுத்திலும் தெரிவது அவர்களின் அகம்.

எல்லோருக்கும் பிடித்த மாதிரி எழுதுவது என்பது கடினமே.
மேலும், அப்படி ஒருத்தர், உலகத்திலே இல்லை, இருக்கவும் முடியாது. :P
ஆதலால், நேரம் ஒதுக்கி, உற்சாகமாக எழுதத் துவங்குங்கள்!  :)

கருத்துகள் இல்லை: