" ஊர் சுற்றிகளாலேயே புதிய இடங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன " - ராகுல்ஜி யின், ஊர்சுற்றி நூலில் வரும் வாசகம்.
ஒரு வகையில் நானும் ஒரு ஊர் சுற்றி தான். :)
டெல்லி,
சிம்லா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு பத்து நாட்கள் சுற்றுலா செல்லும்
வாய்ப்பு சென்ற மாதத்தின் இறுதியில் கிடைத்தது. நம் நாட்டின் தலை நகர்
பற்றி, ஓரளவு தெரிந்திருக்கும் என்பதால், சிம்லா வில் ஏற்பட்ட, பயண
அனுபவங்களை மட்டும் இங்கே பகிர்கிறேன்.
டெல்லியில் சரல்
ரோஹிலா ரயில் நிலையத்திலிருந்து காலை ஆறுமணிக்கு கிளம்பி ஐந்து மணி நேர
பயணத்திற்கு பின் ஹரியானாவில் உள்ள கால்கா என்ற இடத்தை அடைந்தோம்.
அங்கிருந்து பனிரெண்டரை மணிக்கு சிம்லா விற்கு மலை ரயில்.
கால்கா
வில் வெயில் இல்லாமல், லேசாக வீசிக்கொண்டிருந்த காற்றை அனுபவித்துக்
கொண்டிருந்தோம். இன்ஜினுடன் மொத்தமே ஏழு பெட்டிகள் தான்
இணைக்கப்பட்டிருந்தன. ஒரு பெட்டியில் நாற்பது பேர் வரை அமரலாம். இரு
புறங்களிலும், கம்பிகளற்ற கண்ணாடி ஜன்னல்கள், வேடிக்கை பார்ப்பதற்காக.
கால்காவிலிருந்து
சிம்லா, 96 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பேருந்தில் சென்றால், மூன்று
முதல் நான்கு மணி நேரத்தில் அடைந்து விடலாம். ரயிலில் செல்வதற்கு
ஆறிலிருந்து ஏழு மணி நேரம் ஆகிறது. ஆனால், அவசரமில்லாமல், இரு புறமும்,
வேடிக்கை பார்த்துக் கொண்டே சீரான வேகத்தில் செல்வதில் தான் ஊர் சுற்றி
பார்த்த திருப்தி வரும். ( போக வர, பதிநான்கு மணி நேரமும், மலையை சுற்றி
சுற்றி வரும் ரயில்)
ஆங்கிலேயர்கள், நம் நாட்டின் வெயில்
பொறுக்க மாட்டாமல், ஓய்வெடுக்க, உருவாக்கிய மாநிலமே இமாச்சல பிரதேசம்.
மலைப் பகுதியை சீரமைத்து, பாதைகளை உருவாக்கி, முடிந்த அளவு மரங்களை
வெட்டாமல், கட்டிடங்களை கட்டி உள்ளனர். ஆங்காங்கே சில மரங்களின்
வேர்ப்பகுதி சாலையின் ஓரங்களில் தெரியும்.
ரயில் செல்லும்
பாதையில் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சுரங்க வழிகள் மட்டும் நூற்றி
இரண்டு உள்ளன, இதைத் தவிர ஏகப்பட்ட பாலங்கள், வளைவுகள் இருக்கின்றன.
இருப்பதிலேயே அதிக நீளம் உள்ள சுரங்க பாதையின் பெயர் பரோக் ( Barog )
1143 மீட்டர் நீளமானது. ஒவ்வொரு சுரங்கத்தின் உள்ளேயும் ரயில் செல்லும்
பொழுது இருட்டின் காரணமாக குழந்தைகள் ஆரவாரக் கூச்சலிடுவது ரயில் வெளிய
வரும் வரை தொடரும்.
மலை மேல் ரயில் செல்ல செல்ல முதல் இரண்டு மணி
நேரங்களுக்கு, கோடை காலமாய் இருப்பதால், பார்வையில் பட்ட முக்கால்வாசி
மரங்கள், காய்ந்து போய் இருந்தன. "அடடா, இப்போ போய்யா வரணும்" என்று
வருத்தப்பட்டுக் கொண்டிருந்த பொழுது சிறிது சிறிதாக மாறிய பச்சை வண்ணம்,
தரம்பூர் ஸ்டேஷன் வந்த பொழுது முழுதும், பசுமையாக மாறியது. குளிர்ந்த
காற்று வீசத் தொடங்கியதை ரசிக்கத் தொடங்கினோம்.
ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும், இறங்கும் ஆட்கள் எப்படி போகிறார்கள் என்றே தெரியாது அந்த அளவு எல்லா பக்கமும், மலை, மரம் மட்டும் தான்.
ஆங்காங்கே முளைத்தது போல இருந்த வீடுகள் எப்படி கட்டி இருப்பார்களோ என்று யோசிக்கும் வண்ணத்தில் இருந்தன.
ஊசி
இலை காடுகள் பற்றி, பள்ளியில் படித்தது. அவற்றை நேரில் கண்ட பொழுது ஏதோ,
நீண்ட நாள் பழகிய முக நூல் நண்பரை நேரில் காண்பது போல மகிழ்ச்சி ஆரவாரம்
உள்ளே ஏற்பட்டது. சவுக்கு மர இலைகள் போல ஊசி இலைகளைக் கொண்ட மரங்கள்
பார்ப்பதற்கு கிறிஸ்துமஸ் மரம் போன்று இருந்தன. ஓங்கி உயர்ந்த மரங்கள், வழி
நெடுக நம்மை வரவேற்கின்றன குளிர்ச்சியாக.
சம்மர் ஹில்
ஸ்டேஷன் வருவதற்கு முன்பு இருந்தே, ரயில் செல்லும் பாதையின் ஓரங்களில்,
இங்கு பொக்கே யில், செருகப்பட்டிருக்கும், வெள்ளை நிறப் பூக்கள், ஊடே
சிவப்பு, மஞ்சள், நீலவண்ணப்பூக்களும் பெரிது பெரிதாக எண்ணற்று
மலர்ந்திருகின்றன.
ஊரின் உள்ளே பார்த்தாலும், சாதாரண செடியாக இது மாதிரி பூக்களே காணும் இடம் எல்லாம் சிரிக்கின்றன.
கட்டப்படாத பூங்கொத்தாக போகும் வழி எங்கும் காட்சி அளிக்கின்றன.
இரவு
ஏழு மணிக்கு ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது, சூரியனின் வெளிச்சம்
பளிச்சென்று இருந்ததுடன், குளிரின் அளவும் அதிகமாக இருந்தது
வித்யாசமாகப்பட்டது. ஆட்டோவில் சென்று இறங்கினால், அங்கு இருந்து ஐந்து
நிமிடங்கள் நடந்தால் தான், நாங்கள் தங்கி இருந்த சமன் பாலஸ் ஹோட்டல்
வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து தங்கும் விடுதிகளுக்குமே இது மாதிரி நடந்து
தான் செல்ல வேண்டும், ஏனென்றால், குறுகிய பாதையில் வாகனங்கள் செல்லாது.
கடும் கோடைகாலத்தில் சென்றாதாலேயே குளுகுளு என்று மொத்த ஊரும் ஏ.சி,
போட்டது போல ஒரு உணர்வு.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்
பளிச்சென்று விடிந்து விட்டது. படு சுத்தமாக இருக்கும் ஊரின், சாலை
ஓரங்களில், அங்கு கிடைக்கும், பிளம்ஸ், செர்ரி மற்றும் பல விதமான பழ
வகைகளை விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு சிறிய உணவகத்தில், ஆலு பராத்தா
சாப்பிட்டோம், உருளைகிழங்கை வேகவைத்து மசித்து அத்துடன், வெங்காயம்,
கொத்தமல்லி இழை, உப்பு சேர்த்து பிசைந்து வைத்த மாவின் உள்ளே வைத்து மூடி
தேய்க்கின்றனர். தொட்டுக் கொள்வதற்கு அந்த ஊர் ஊறுகாய் பல விதமான
காய்கறிகளுடன் சோம்பு, பெயரளவிற்கு மிளகாய் தூள், உப்பு
கலக்கப்பட்டிருக்கும். இதன் விலை வெறும் பனிரெண்டு ருபாய். ஒன்று
சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். இதற்கு தால் (பருப்பு) வகைகள் தனியாக
வாங்கிக்கொள்ளலாம் . ஒரு சிறிய கிண்ணத்தின் அளவே நூறு ரூபாய்.
ஊரை
சுற்றிப் பார்ப்பதற்கு முந்தைய நாள் பேசிய வண்டியை வர சொல்லி இருந்தோம்.
அதில், அமர்ந்து முதலில்,நாங்கள் சென்றது ஜாக்கு கோவில்( அனுமார் ).
சஞ்சீவி மலையை எடுத்து கொடுத்து , இலட்சுமணன் குணமாகிய பின், எடுத்த
இடத்தில், மலையை வைத்து விட்டு, சிறிது காலம் அனுமார் இந்த மலையில்
ஓய்வெடுத்ததாக சொல்கின்றனர். நீங்க பூஜைக்கு சாமான் வாங்குகிறீர்களோ
இல்லையோ, ஒரு கம்பு ஐந்து ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அளவற்ற
குரங்குகள், அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருக்கும். தடியால் தரையில்
தட்டினால், சற்று விலகி செல்லும். நம்மூரில் உள்ள குரங்குகளை விட
முகத்தில் அதிக ரோமங்களுடன் இருந்தன. இந்த கோவில் தான் சிம்லா வில் மிக
உயர்ந்த இடத்தில் அமைந்து உள்ளது. மிக உயரமான இந்த சிலையை வைத்தே, ஊரின்
எந்த பகுதியில் இருந்தாலும் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து
கொள்ளலாம்.
அம்மா, அப்பா, என்று சொல்லி கொண்டே மலை
ஏறினால் ஐந்தாவது நிமிடத்தில், நீங்கள், பிரமாண்டமான நூற்றி எட்டு அடி
உயரத்தில், செந்தூர வண்ணத்தில் உள்ள அனுமனை தரிசிக்கலாம். பின்பு
அங்கிருந்து மூச்சு வாங்கிக் கொண்டே சென்றால், இரண்டாவது நிமிடத்தில்,
இருபது பேர் அமரக் கூடிய கோவில் உள்ளது. அதில் உள்ளே இருப்பதும் அனுமார்
தான்.
மெது மெதுவாக இறங்கி வந்தால் வண்டி நிற்கும் இடம். நடக்கவே
இந்த பாடு, ஏகப்பட்ட ரிவர்ஸ் எடுத்து வர்ற அளவு, மிக குறுகலான,சிக்கலான
பாதை, பழக்கத்தினால், லாவகமாக வண்டியை ஓட்டினார் அங்குல் ( ஓட்டுனர்).
இங்கே
ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும், பெரும்பாலான வண்டிகள், சாலை ஓரத்திலேயே
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சாலையின் ஒரு பக்கம் மலை , இன்னொரு
பக்கத்தில், தடுப்பு சுவர்கள் கூட இல்லை. ஆங்காங்கே சில கற்கள் மைல்
கற்களை போல. இதில் சீரான பயணம். நான் பார்த்த வரை, யாரும் யாருடைய
வாகனத்தையும் முந்தி செல்ல முயல வில்லை. ஒரு வண்டியின் மீது மற்றொரு வண்டி
இடிக்கிறார் போல் வந்தால், இருவரம் பரஸ்பரம் புன்னகைத்துக் கொள்கின்றனர்.
நம்மூரிலும், இந்த முன்னா பாய் MBBS , முறையை பின்பற்றினால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.
விருதுநகரில், விடுமுறையில் இருந்த
பொழுதே பத்து நாட்கள் ஹிந்தி பேசுவதற்கான பயிற்சி வகுப்பிற்கு சென்றேன்.
ஓரளவாவது சமாளிக்க வேண்டும் என்று. வண்டியை ஓட்டி வந்தவர், ஹிந்தி நீங்கள்
பேசுவது புரிகிறது, ஆனால், கொச்சையாக இருக்கிறது என்றார். உங்கள்
ஊர்க்காரர்கள், நம்மள் போறான், நிம்மல் வர்றான் என்று எங்களை
படுத்துகிறதுக்கு பதில் மரியாதை என்று நகைச்சுவைக்காக சொன்னேன். ( ஒழுங்கா
கத்துக்கணும், சரியா பேச.... :) )
சிம்லா வில் எச்சில்
துப்பினால், ஐநூறு ருபாய் , குப்பை போட்டால், ஐயாயிரம் ரூபாய் அபராதம்
என்பதாலோ என்னவோ, சாலைகள் சுத்தமாக இருந்தன.
கூடவே பயணித்த
அவ்வூர் மாணவன் ஒருவனிடம் பேச்சு கொடுத்ததில் அவன் சொன்னது, மரங்களை
வெட்டுதல் அங்கு குற்றம். ஆனால்,சில மக்கள், தங்கள் வீட்டின் எல்லையை
பெருக்கிக்கொள்ள, அருகில் உள்ள மரங்களின் வேர்களில் அமிலம் ஊற்றுகின்றனர்.
சில நாட்களில் பட்டுப்போன பின்பு, அவர்கள் விருப்பம் போல செய்து
கொள்கின்றனர். :(
ஒவ்வொரு கட்டிடமும், ஒரு கதை சொல்லும். அவ்வளவு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.
காளிபரி
என்ற இடத்திலிருந்து சற்று தூரம் சென்றால், லால் பகதூர் சாஸ்த்ரி சிலை
இருக்கிறது. அங்கு இருந்து நூறு மீட்டர் தொலைவுக்கு அப்பால், வண்டிகள்
எதுவும் செல்லாது. ஓரளவு அகலமான சாலை தான் என்றாலும் மக்கள் அதிகம் கூடும்
இடம் என்பதால் நடந்து தான் செல்ல வேண்டும். பத்து கட்டிடங்கள் கடந்ததும்,
மால் ரோடில், இரண்டாக பிரிகிறது சாலை. பிரிகிற இடத்தில் லாலா லஜபதி
ராயின்சிலை கம்பீரமாக இருக்கிறது. இடது புறம் சென்றால் நகராட்சி கட்டிடம்
உள்ளது.
இரண்டும் சந்திக்கும் இடத்தில் நிழல் குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த
இடத்தில் தான் எம்.ஜி.ஆர், புதிய வானம் புதிய பூமி என்று பாடிய பாட்டு
படமாக்கப்பட்டுள்ளது. வலது புறம் சென்றால், வரிசையாக கடைகள். இங்கு
கிடைக்காத சாமான்களே கிடையாது .
உலக தரத்தில், சாமான்கள் இருக்கிறதோ என்னவோ, விலை இருக்கிறது . :P
அடுத்தடுத்த கடைகள் தான் என்ற பொழுதும்,ஒவ்வொன்றும், ஒவ்வொரு தளத்தில் இருந்தன.
அங்கு
உள்ள இன்டியானா காபி ஹவுஸ் இல் இட்லி கிடைக்கும் என்றதால் சென்றோம். ஒரு
இட்லி பதினாறு ரூபாய். இங்கிருந்து அவ்ளோ தூரம் நம்மூர் ரேஷன் அரிசியை
அனுப்ப முடியுமா என்று தெரியவில்லை. பரிதாபமான வெள்ளை நிறத்தில்
இருந்தது. அதற்கு ஒரு கிண்ணம் சாம்பார் இருபது ரூபாய் கொடுத்து வாங்கி
கொள்ள வேண்டும். காரமில்லாமல் இருந்த சாம்பார் இரண்டு கிண்ணங்கள் , இட்லி
ஒன்று வாங்கி குடித்தேன்.
நடக்கின்ற
பாதையில், இடது புறம் படிக்கட்டு செல்லும், அதில் இறங்கினால், அங்கு ஒரு
தெரு. வலது புறத்தில், மேலே படிக்கட்டு செல்லும், அதில் ஏறினால், அங்கு
சில கடைகள். நெட்டுகுத்தலான மலைப் பகுதியில் நடப்பது கூட திகிலாக
இருந்தது.
இடது புறம், வலது புறம் என்று சொல்லும்
பொழுதெல்லாம், படியில்லாமல், சரிவாக போடப்பட்டுள்ள மாடிக்கும் செல்லும்
சற்றே செங்குத்தான வழியில், ஏறுவதாகவோ, இறங்குவதாகவோ கற்பனை செய்து
கொள்ளுங்கள். சாலையில் நாங்கள் நடக்கும் அழகைப் பார்த்த உள்ளூர்காரர், நேரா
நடக்கதீங்க, குறுக்கும், நெடுக்குமா நடந்தால், களைப்பு தெரியாது என்று
குறிப்பு வழங்கினார். அது போல நடக்கத் தொடங்கியதும் வித்தியாசத்தை உணர
முடிந்தது.
வாழ்க்கையை வெறுத்தவங்க மட்டும் யோசிச்சு போகணும் சிம்லா விற்கு.
ஏனா, நீங்க எங்க நடந்தாலும், கீழே குதிக்கிறதுக்கு வசதியா தான், சாலையின் மறுபக்கம் இருக்கும். :P
முதலில்
சென்ற இடம் , பசுமைப் பள்ளத்தாக்கு... கடுகு அளவு இடம் பாக்கி இல்லாது,
காணும் இடம் எங்கும் பசுமையான மரங்கள் அடர்ந்த பள்ளத்தாக்கு. வண்டியை
நிறுத்தி விட்டு ஓரத்தில் நின்று வேடிக்கைப் பார்க்கலாம்.
அதன்
பின், சற்று தூரத்தில், பத்து பேர் சிலருக்கு சிம்லா வாசிகளின் உடை
அணிகலன்கள் அணிந்து புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்தனர். எல்லா
ஒட்டுனர்களுமே அங்கே வண்டியை நிறுத்துகின்றனர். ( இதற்கு கமிஷன் இருக்கும்
போல )
முதலில் தயங்கும் பலரும், இவனே போட்டு இருக்கான், நாமளும்,
அணிந்து பார்க்கலாம் என்று உடைக்கு மேலேயே அவர்களால் அணிவிக்கப்படும்
அலங்காரங்களை செய்து கொண்டு எடுக்குப்படுகின்ற, புகைப்படங்களை, மாலை அதே
வழியில் திரும்பும் பொழுது பெற்று கொள்ளலாம்.
புத்தகத்தில்
மட்டுமே பார்த்திருந்த கொழுத்த யாக் எருமையை நேரில் பார்த்தோம். நம்ம
ஊர் பூம் பூம் மாடு மாதிரி அலங்காரம் செய்து நிறுத்தியிருந்தனர்.
அரை
மணி நேர பயணத்திற்கு பின், சிம்லா வரும் அனைவரும் தவறாமல் செல்லும்
இடத்திற்கு சென்றோம் . குஃப்ரி சென்று குதிரை சவாரி போகாமல் இருந்தால்,
கடற்கரை சென்று கால் நனைக்காமல் வருவதற்கு சமம்....
வாழ்க்கையில்
முதன் முறையாக குதிரை மீது ஏறி அமர்ந்ததும், அது நடக்க நடக்க
விக்ரமாதித்யன் நாற்காலியில் அமர்ந்தது போல ஒரு கர்வம் ஏற்பட்டது ஏனென்று
தெரியவில்லை. ஆனால், போகும் பாதை எல்லாம் கற்களும் புழுதியும் நிறைந்த
சற்றே செங்குத்தானதுதான், அதே போல, திரும்பி இடது புறம், கீழே பார்த்தால்
பள்ளத்தாக்கு, குதிரைக்காரர் அழைத்துச் செல்ல, பின்னாலே சென்றது. பின்
ஓரிடத்தில், நிறுத்தி எங்களை இறங்கும்படி சொன்னார். மெதுவாக இறங்கி சிறிது
தூரம் நடந்தால், வேடிக்கை விளையாட்டுகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன.
துப்பாக்கியால் சுடுவது, காற்றடைத்த பெரிய பலூனில் உள்ளே வேறு வழியின்
மூலம் செல்வது மாதிரி, பின்னர், மரப்பாலம், இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால்,
குட்டி குட்டியாக பச்சை நிறத்தில் காய்த்த ஆப்பிள்கள் நிறைந்த மரங்கள்
இருந்தன. அங்கயே சில உணவகங்களும் இருந்ததன. இரண்டு மணி நேரம் கழித்து வர
சொல்லி விட்ட சென்ற குதிரைக்காரர் வந்ததும், மீண்டும் குதிரையில் அமர்ந்து,
இறங்க தொடங்கினோம். நடப்பதே இந்த பாடாக இருக்கிறதே. குதிரையை வைத்துக்
கொண்டு படை அமைத்து சண்டை போட்டவர்கள் மீது மரியாதை வந்தது. தூக்கிட்டு
போறது குதிரை என்றாலும், தூக்கி தூக்கி நம்மை போட்டு சவாரி செய்ததால் படு
அலுப்பாக இருந்தது.
இதே போல, பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த, சற்று
கூடுதல் தொலைவில், நல்தேரா என்ற இடம் இருக்கிறது. அடுத்த நாள்
சென்றோம். நாங்கள் போகும் பொழுது கூட, சினிமா ஷூட்டிங் நடை
பெற்றுகொண்டிருந்தது.
மிருகக்காட்சி சாலை. ஒரு கிலோமீட்டர்
தூரத்தை உள்ளே வேடிக்கைப் பார்த்து கொண்டே நடக்கவேண்டும். நடைபாதையின்
இரு புறமும், வேலி அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
நாங்கள்
பார்த்தது ஐந்து மான்கள், இமய மலையில் வசிக்கும், இரண்டு கருப்பு
கரடிகள், ஒரு பிரவுன் கரடி. இறுதியில் பறவைகள் கொஞ்சம் இருந்தன.
வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் உருவாக்கப்பட்ட ஜூ :P
மேற்புற
கூரை இரு புறமும் சரிவாக அமைந்த அழகழகான கட்டிடங்கள் நிறைந்த சிம்லா
மலைப்ரதேசங்களுக்கே உரிய மனதைக் கொள்ளை கொள்ளும் அமைதியுடனும், அழகுடனும்
இருக்கிறது.
சிம்லாவிற்கு தட்பவெப்ப நிலையை அனுபவிப்பதற்கும்,
அமைதியாக ஓய்வெடுப்பதற்கும், குழந்தைகள் குதுகலமாக பொழுதை கழிப்பதற்கும்
செல்லலாம்.
மலை ஏறும் பொழுது, மாறிய வண்ணம் தலை கீழாக
பசுமையிலிருந்து மாறி, சிறிது சிறிதாக காய்ந்த மரங்கள் தெரிய தொடங்கியது.
ஒரு நீள் கனவு முடிந்தது போல வெப்பம் இருந்தாலும்
சிம்லா நினைவுகள் என்றும் குளிர்ச்சியாக இருக்கும் என்னுள்.