சனி, 4 மே, 2013

வெடிச்சத்தம் மங்கியது ஏன்?


by Deepa Nagarani (Notes) on Sunday, November 25, 2012 at 5:42pm ( facebook)

இன்றைய(25.11.2012) வண்ணக்கதிர் (தீக்கதிர்) இதழில் வெளி வந்துள்ள எனது கட்டுரை.

வெடிச்சத்தம் மங்கியது ஏன்?

தீபாவளி நாள் பொதுவாக அதிகாலையிலேயே  வெடிச் சத்தங்களுடன் விடியும். வீட்டில் எது பேசினாலும் சத்தமாகப் பேச வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டியில் எவ்வளவு சத்தம் கூட்டி வைத்தாலும் வெடிச் சத்தத்தில் விட்டு விட்டுக் கேட்கும். தொலைபேசியில் பேசுவதோ பெரும் திண்டாட்டம். அந்த அளவு தொடர்ச்சி யாக வெடிச் சத்தம் காதைப்  பதம் பார்த்துக்கொண்டே இருக்கும்.

இந்த ஆண்டு கடந்த 13ஆம் தேதி, விருதுநகரில், எந்த ஒரு சத்தமும் இல்லா மல் ஆறு மணிக்கு விடிந்தது. அம்மாவுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த வேளையிலும் எந்த ஒரு வெடிச் சத்தமும் இல்லாமல், நாளை மதுரைக்கு வருவதாக தெரிவித்தபோது, அவரும் ஆச்சரியத்து டன் சொன்னதும் இதே விஷயம்தான். “தீபாவளி மாதிரியே இல்ல, அவ்ளோ அமைதியா இருக்கு ஊரு.”

தொடர்ச்சியான மின்வெட்டால், தினமும் 18 மணி நேரம் அவதிப்படும் எங்களைப் போன்ற சென்னை தாண்டிய பிற மாவட்டக்காரர்களுக்கே உரிய அனுபவம் இது. இன்வெர்ட்டர் இருந்தும், அதற்கான சார்ஜ் ஏற்றும் அளவுக்கு மின்சாரம் வரா மல், பாகுபாடற்று ஒரு தாய் மக்களாக நிம் மதியற்ற தூக்கத்தால் பல நாட்கள் தவித்த, நோயுற்றவர்கள், வயதானவர்கள், குழந்தை கள் என அனைவரும் பண்டிகைக்கு முதல் நாள், இரவு எட்டு மணியிலிருந்து தொடர்ச்சியாக விடப்பட்ட மின்சாரத் தால் நிம்மதியாகத் தூங்கினர்.

பல வீடுகளிலும் காலை ஏழு மணிக்கு மேல் தான் வாசல் தெளித்தனர். பார்த்த முகங்களில் எல்லாம் ஏதோ ஒரு நிம்ம தியை வழங்கி இருந்தது முந்தைய இரவுத் தூக்கம். இப்படி நிம்மதியான தூக்கமே தேவையான ஒன்றாக இருந்தது அன்று. அதுக் கிடைத்த மகிழ்ச்சியில் வெடியாவது பட்டாசாவது!
என்னுடைய பத்து வயதில், எனக்கும் என் தம்பிக்கும் சம அளவில் பணம் கொடுத்து, வேண்டிய வெடிகளை வாங்கிக் கொள்ளச் சொல்வர் பெற்றோர். ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, முதன் முதலில் திரியைக் கிள்ளி, எரிகின்ற பத்தியை திரியின்  நுனியில் பயத்துடன் வைத்த பின் வெடித்த சீனி வெடி தந்த மகிழ்ச்சியை, வேறு எதுவும் தந்ததில்லை. அடுத்தடுத்த வகுப்புகள் செல்ல செல்ல, குனிந்து பற்ற வைத்து அதன் பின் வெடிப் பது பெரிய வேலையாகிப் போனது, நானும், சோம்பேரியாகிப்போனேன். வெடி களுக்கு பதில், கண்ணுக்கு விருந்தளிக்கும் பட்டாசுகளை மட்டுமே மனம் ரசிக்க ஆரம்பித்தது.

தீபாவளியையொட்டி, சாலைகளில், பத்து பட்டாசுக் கடைகளாவது முளைக் கும் இடங்களில் இந்த வருடம் ஓரிரு கடைகள் மட்டுமே இருந்தன. அவற்றிலும் குறைவான அளவே வெடிகள் இருந்தன. வாங்குவோரும், ஆர்வமில்லாமல், பெயரள வில், பைகளை நிறைத்துக்  கொண்டிருந் தனர். விலைவாசி உயர்வின் காரணமாக ஏற் பட்டிருக்கும் வியாபார மந்தம் பட்டாசி லும் எதிரொலித்தது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் கருகும் மனிதர்கள் பற்றிய உறுத்தலுணர்வு நம்மிடையே பரவிவரு வது இன்னொரு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும்.

காலை ஒன்பது மணிக்கு மேல் அவ்வப் போது, வெடிச் சத்தம் கேட்டது. மாலை ஏழு மணிக்கு மேல, மாடிக்குச் சென்ற போது, நிறைய வீடுகளில், புஸ்வானம், சங்குச்சக்கரம், கம்பி மத்தாப்பு, சாட்டை, போன்றவற்றுடன் ராக்கெட், செவென் சாட் போன்ற வான வேடிக்கைகள்  நிகழ்த் துவதை காண முடிந்தது. இதே ஒரு சில தீபாவளிகளுக்கு  முன்பு, இந்தப் பக்கம் பார்ப் பதா அந்தப் பக்கம் பார்ப்பதா என்று குழம்பச் செய்யும் வண்ணம் சுற்றி சுற்றி, வானத்தில் வர்ண ஜாலம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இம்முறை, ஒரு பக்கம் ஒன்றிரண்டு வர்ணங் களுடன், மத்தாப்புக்  கொட்டினால், சற்று இடைவெளி விட்டு வேறொரு புறம், மத்தாப்பு மழை.

ஓரளவு, எதையும் தவற விடாமல் அந்தப் பகுதியில் உள்ளோர் அனுபவித்த பட்டாசுக் கொண்டாட்டத்தை நானும் ரசித்தேன். இதில் சிலவற்றைப் பற்றி குறிப்பிட வேண்டும்.



மேலே எழும்பும் சில வெடிகள், அதிகமாக சத்தம் கொடுத்துக் கொண்டே வரும், சரி, என்ன கலர் வருமோ என்று ஆவலுடன் பார்த் தால், அது சாதாரண ராக்கெட் ஆக திரும்பி விடும். சத்தம் கொடுக்காமல், லேசான வெளிச் சத்துடன், மேலே செல்பவை, அசத்தும் கலரில் பூப்பூவாக கொட்டும்.
ஒன்று முடியும் தருணத்தில் காத்திருக்க விடாமல், மற்றொன்று நம் கண்ணுக்கு விருந் தளிப்பது, அருமை. வேறு சில, மேலே சென்று டப் டப் சத்தத்துடன், நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டே, அப்படியே  படர்ந்து மஞ்சள் வண்ணத்தில் மனதை நிறைத்தன.

இன்னும் ஒரு வகை வான வேடிக்கை பற்றி யும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த முறை தான், நான் அதனைப் பார்த்தேன். கீழே இருந்து உயர்கிறபோது, பெரிதாக கவனத்தை ஈர்க்காமல், மேல சென்றதும் ஒன்று வெடித்து அதன் ஒளியை ரசித்துக் கொண்டே இருக்கும் பொழுது, இஷ்டம் போல தொடர்ச்சியாக ஒவ்வொரு புறத்திலும் ஒன்றாக ஒழுங்கில்லா மல், வெடித்து, உங்களுக்கு வெளிச்சம்தானே வேணும் என்பது போல பெயரளவில் வெடித்த அந்தப் பட்டாசின் பெயர் தெரிய வில்லை... :

எல்லாம் இருக்க, தொடர்ச்சியான மின் சாரம் இனி அடுத்த தீபாவளிக்குத்தானா என்று உள்ளே கேள்வி எழுந்தபோது, ரசித்த பட்டாசுகளின் வண்ணங்கள் மங்கத் தொடங்கின.

கருத்துகள் இல்லை: