சனி, 4 மே, 2013

என் தம்பி நல்லாசிரியர் விருது வாங்குகிறான்!


by Deepa Nagarani (Notes) on Wednesday, September 5, 2012 at 9:36am ( facebook )
 
 
அரசுப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர் தின விழா அன்று, அரசு வழங்குகிறது. தனியார் பள்ளிகள் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் அவற்றில் பணி புரியும் சிறந்த ஆசிரியர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை.


இன்று...
மதுரை வடமலையான் மருத்துவமனை, மதுரையில் வெகு சில சிறந்த ஆசிரியர்களுக்கு நல் ஆசிரியர் விருது வழங்குகிறது. இருநூறுக்கும், மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் தனியார்  பள்ளியில் மேல்நிலை வகுப்பிற்கு ஆசிரியராகப்  பணியாற்றும், என்னுடன் பிறந்த தம்பி பிரகாஷ் ராஜசேகர் க்கும் இந்த விருது  வழங்கப்படுகிறது. ஒரு அக்காவாக இதில் பெருமை அடைவதை விடவும், ஒரு தனியார் மருத்துவமனை இது போன்ற ஊக்கமளிக்கும் விஷயத்தில் ஈடுபடுவதை மனமாரப் பாராட்டுகிறேன்.

மூன்றரை வருடங்கள் எனக்கு பிறகு பிறந்த என் தம்பி பற்றி மனதில் இந்த கணத்தில் தோன்றுவதை எல்லாம் பதிவு செய்கிறேன். :)

என் தம்பி பிறந்த அன்று மருத்துவமனைக்கு அப்பா, என்னை  அழைத்துச் சென்ற பொழுது, அவன் கால் லேசாக மேல பட்டவுடன், "தம்பி என்னை மிதிச்சிட்டான்", என்று ஆர்ப்பாட்டம் செய்ததாக இன்றும் சொல்வார்.

அவனுக்கு மூன்று வயது இருக்கும் பொழுது, ஒரு நாள், என் பின்னால் வந்து,
 " என்னது மண்ண திங்குற," என்றவனை, " உன் வாயிலேயும் ஏதோ இருக்குனு" சொல்லி திறந்து பார்த்ததில், பொடிப் பொடியாக இருந்த செங்கற்களை அதக்கி வைத்திருந்தான்.
"அம்மா கிட்ட நீயும் சொல்லாத, நானும் சொல்ல மாட்டேன்", என்ற டீலிங் இன்று வரை பல விசயங்களில்  தொடர்கிறது. :P 

ஐந்து வயதில், பள்ளிக்கு செல்லும் பொழுது, தாத்தாவின் சைக்கிள் முன்னால் உட்கார்ந்து செல்லும் பொழுதே, பல முறை கீழே குதித்து வேறு பக்கம் ஓடி இருக்கிறான்.

ஒரு நாள், பள்ளி செல்லும் நேரத்திற்கு இவனைக் காணவில்லை என்று தேடினால், குளிக்காமல் வெறும் கால் சட்டை மட்டும் அணிந்து கொண்டு, இவனது டயர் வண்டியை குச்சி வைத்து தள்ளிக் கொண்டே போய் உட்கார்ந்திருந்தான் பள்ளிக் கூடத்தில்.

பள்ளிப் பருவத்தில், சராசரி மாணவனாகவே இருந்தான். ஐந்து, ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம்,  ஆண்டு இறுதித் தேர்வு முடிவைத்  தாங்கி வரும், கடிதத்தை திறக்கும் முன்பு கூட,
' எல்லாம் நல்லா எழுதி இருக்கேன், ஆனா அந்த சயின்ஸ் தான் ', என்று பதறிக் கொண்டே தான் பார்ப்பான். ஆனால், இதுவரை எந்த வகுப்பிலோ, பாடத்திலோ தோற்றதில்லை.

வீட்டிற்கு வரும் விருந்தினர் வாங்கி வரும் ஏதேனும் விளையாட்டு சாமான், அல்லது தின்பண்டம், ஒன்று மட்டும்  இருக்கும் பட்சத்தில் நான் வேண்டாம் என்று சொன்னால் மட்டுமே அவன் எடுத்துக் கொள்வான்.

பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது , இவனது கணித ஆசிரியரிடம்,
"இரண்டு குயர் நோட்டு தான் கொடுத்து விடணும் னு சொன்னீங்களாம், எனக்கு இனி தேவையேப்  படாத, ஒரு குயர் நோட்டை வீணடிக்காம கொண்டு போடான்னு சொன்னா, நீங்க திட்டுவீங்கனுனு சொன்னதால தான் நான் வந்தேன்" என்றேன்.
ஆசிரியர் அவனை திரும்பி பார்த்த நொடி, கண் எல்லாம் கலங்கி,
"இல்லை சார், எங்க அக்கா தான் சார்... நான் வேணாம்னு தான் சார் சொன்னேன் ",  என்று முடிப்பதற்குள்,
"பரவாயில்லை இருக்கட்டும்", என்று அவர் சொன்ன காட்சியை  நினைவுபடுத்தி,
விருது பற்றி செய்தி சொன்ன அவனிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தேன்.

பத்தாம் வகுப்பில், மதிப்பெண் வாங்கப் போகும் பொழுது, 78 % மதிப்பெண்கள் இவன் பெற்றிருப்பதாக உள்ளே நுழையும் பொழுதே இவன் நண்பன் சொன்னதும்,
"என்னடா இது", என்று அவனை உற்று நோக்க,
"அவெங்க சும்மா சொல்றாங்க, நம்ம போய் பார்ப்போம் வா" என்றான். அறிவிப்பு பலகையில் திரும்ப திரும்ப, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக ஐந்தாறு முறை சரி பார்த்த பிறகு, நண்பர்கள் சொன்னது உண்மை தான் என தெரிந்து மகிழ்ச்சியோடு வீடு திரும்பினோம்.

கல்லூரியில் சேரும் பொழுது, ஒரே நாளில் தியாகராசர் கல்லூரி, மன்னர் கல்லூரி, யாதவர் கல்லூரி , இந்த மூன்று கல்லூரிகளுக்கும், அவனுடன் சென்று விண்ணப்பங்கள் வாங்கி, பூர்த்தி செய்து அளித்த காட்சி நினைவில் நிற்கிறது இன்னும். கல்லூரி, அதன் பின் சேர்ந்த நட்பு வட்டம், அவன் வாழ்க்கையை மாற்றி அமைத்து ஆசிரியராக ஆக்கியது.

அப்பொழுது எல்லாம், என்னிடம், என் தம்பி பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை எனலாம். இத்தனைக்கும், ஒரு அரை மணி நேரம் சண்டை போடாமல், நாங்கள் பேசினாலே அதிசயம். சண்டைக்கெல்லாம்  பெரும்பாலும், காரணம் நானாக தான் இருக்கும், என் தம்பியின் பதில் வினை எனக்கு சாபம் கொடுப்பது மட்டும்  தான், "அதிகமா பாவம் பண்ணின, ஒருத்தனுக்கு அதிக பட்ச தண்டனையாக தான், உன்னைக் கல்யாணம் பண்ண கடவுள் அனுப்புவார் ", என்பதெல்லாம் மிக சாதாரணமாக அவன் வாயில் வந்த வசனம்.

திருமணம் முடிந்த பிறகு, முற்றிலும் மாறிப் போனான். அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்த பொழுதே,  "அக்கா சொல்ற பொண்ணை, தான் கல்யாணாம் பண்ணிப்பேன்" என்று அவன் விரும்பியபடியே  இருவருடங்களுக்கு முன்பு அவனது திருமணமும் இனிதே நடந்து முடிந்தது.

என் தம்பி திறமையான நல்லாசிரியனாக வலம் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு!

ம்ம்...  :)

மீண்டும்...

மதுரை வடமலையான் மருத்துவமனைக்குப் பாராட்டுகள்! 



கருத்துகள் இல்லை: