சனி, 4 மே, 2013

பயணங்கள் முடிவதில்லை


by Deepa Nagarani (Notes) on Wednesday, December 14, 2011 at 1:28pm ( facebook )




இரண்டு நாட்களுக்கு முன்பு பாரதி கிருஷ்ணகுமாரின் புத்தக வெளியீட்டு விழாவுக்காக குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தோம் .
பிரம்மாண்ட நதிகளின் சங்கமத்தில் ஒற்றை மழைத் துளியாய் நானும்...
நிறைய எழுத்தாளர்கள் விழாவைப் பற்றி எழுதியும், எழுதிக் கொண்டும், எழுதவும் இருப்பதால்,  எழுத்தாளர் வரிசையில் இல்லாத நான் குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் எடுத்து எழுதுவோம் என்று,  சென்னையில் இருந்து மதுரை வரை ரயில் பயணத்தை எடுத்துள்ளேன்.
12.12.2011, மதியம் 12 .15க்கு, பல்லவனாக வந்த ரயில், வைகையாக திரும்பியது... (நம்மிடம் ரயில் தோற்றுப் போய்விடும், ஒரு நாளில் குறைந்தது இரண்டு வேடங்கள் மட்டுமே என்றால்  நமக்கு பத்தாது)
மாதத்திற்கு  ஒரு முறையாவது ரத்தம்சிந்தி மருத்துவரை ச் சந்திப்பதை நோக்கமாக வைத்துள்ள எங்களது ஐந்து வயது மகன் விழாவிற்கு முதல் நாளே, மாடியில் விளையாடி தலையின் ஓரத்தில் ஒரு தையல் போடும் அளவு காயத்தை பெற்று, தலையைச் சுற்றிப் போட்ட கட்டுடன் ஏறினோம். விருப்பமான ஜன்னல் ஓர இருக்கை ஒதுக்கப்படாததால், வருத்தத்துடன் அமர்ந்திருந்தேன்.
கூட்டம் மிக அதிகமாக இருந்தததால், எங்கள் பெட்டியிலும், ரிசர்வ்  செய்யாமலே ஏறியவர்களால் கை கால் கூட அசைக்க முடியாமல், மிகுந்த வெப்ப காற்றுடன், ”இனிமே ரயில்ல வருவ?” என்ற கேள்வியைக் கேட்டு கொண்டே மிரட்டலுடன் ஒரு திகில் பயணத்தை ஆரம்பித்தோம். எத்தனை பேரிடம் இது  ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கை என்று கூறுவது.

TTE என்ற ஒருவர் விருதாச்சலம் தாண்டியபின் தான் உள்ளே வர முயற்சித்தார். ஒரு வழியாக திருச்சி வந்தபின் ஓபன் டிக்கெட் எடுத்தவர்களை வேறு பெட்டிக்கு மாறி செல்லுங்கள் என்று அவர் சொன்ன பொழுது, பெரும்பாலானோர் அவரவருக்கான நிறுத்தங்களில் இறங்கி சென்றிருந்தனர். திண்டுகல்லை நோக்கி சென்று சென்று கொண்டிருந்த பொழுது, எதற்கு என்றே தெரியாமல், squad  என்ற பெயரில், ஒரு பெண், அனைவரின் பயணசீட்டுகளையும் பரிசோதித்து கொண்டிருந்தார். திருச்சியில் இருந்து மதுரை வரை வசதியான பயணத்தை வழங்கிய தென்னக ரயில்வேக்கு எத்தனை நன்றி(!) சொன்னாலும் பத்தாது.

மகனின் தலையில் இருந்த கட்டைப் பார்த்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு  பெண்மணி,  தன் பிள்ளைக்கும் இப்படி ஒரு காயம் ஏற்பட்ட பொழுது தான் என்ன செய்தேன் என்பதை கூறி என்னையும் பின்பற்றச் சொன்னார், காதுகளில் பொருத்திய வயரில் பாட்டு  கேட்டு  கொண்டு இருந்த நான் சரி , ஆம் என்று மட்டும் சொல்லியும், ஒரு மணி நேரம் தொடர்ச்சியாகப் பேசி, என் கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பு எடுத்த துயர நாட்களை நினைவூட்டினார். 

முடியல... அடுத்து அடுத்து என்று அவராகவே, ஒரே பையனா என்றார் ஆம் என்றவுடன், காலகாலத்தில இன்னொண்ணு பெத்துக்கோ என்றார், நான் சிரித்ததும்,  ஜாதகம் பார்த்தியா, அதில சொல்லி இருப்பாங்களே என்று  இலவச ஆலோசனையும் வழங்கினார். அதற்கும் ஒரு புன்சிரிப்புடன் பாட்டு கேட்பதைத் தொடர்ந்தேன்.(கடவுளே சொன்னாலும் இன்னொரு பிள்ளை எல்லாம் விருப்பம் இல்லை என்று விளக்கி, அவருக்கு  விளங்க வைப்பதற்கு திறன் இல்லாததால் மௌனமாகவே இருந்தேன். வழக்கமாக இது போன்ற கேள்விகள் வரும் பொழுது,   உங்களுக்கு
ஏன்  இரண்டு, மூன்று பிள்ளைகள் என்று கேட்க உரிமை எனக்கு இல்லாத பொழுது... உங்களுக்கும் அந்த உரிமை என்னைக் கேட்க இல்லை என்பதே) ஒரே ஒரு கேள்வி கேட்டேன் "எங்க இறங்கனும் நீங்க".   "திருச்சி" என்றார்...
இனி 15 நிமிடங்களாவது ஆகும்.



எழுந்து கூட்டத்துக்குள் மிகவும் கஷ்டப்பட்டு கழிப்பறைக்குள் சென்றேன். இங்க தான் ஒரு ஆச்சர்யம். நீங்க நம்பித்தான் ஆகணும். எந்த ஒரு அசிங்கமான எழுத்துக்களும் இல்லாத கழிப்பறை. இது போன்று சுத்தமாக வைத்திருக்க உதவிய அந்த முகம் தெரியாத சகோதரர்களுக்கு நன்றி சொன்னேன் மனதுக்குள்.



கட்டுக்கடங்காத கூட்டத்திலும், நிலக்கடலை, சுண்டல், பழங்கள், புத்தகங்கள், இன்னும் பல பொருட்களை விற்று கொண்டு இருந்தனர் சில வியாபாரிகள். ஒருவர் அவர்களை திட்டியப்பொழுது, பழம் விற்கும் பெண் சொன்ன பதில் " எங்க பொழப்பே இது தான் ".

கால் நடக்க முடியாதவரும், கண் தெரியாத ஒருவர் பாடி கொண்டே யாசகம் பெற்றதும், வழக்கமாக காண்கின்ற காட்சிகள் தான் என்றாலும், இதற்கு ஒன்றுமே செய்ய முடியாதா  என வருத்தம்  ஏற்பட்டது. எப்பொழுதும் போலவே.

ரயில் ஒவ்வொருவரும் இருக்கைக்கு போட்டிப் போட்டு அமரும் பொழுது, ஏதோ, நிரந்தரமாக ரயிலிலேயே குடியிருக்கப் போவதைப்போல ஆயுத்தம் செய்கின்ற காட்சிகள் நகைச்சுவையாக இருந்தது.

காணும் இடம் எங்கும் தொங்க விட்டிருந்த மூட்டைகள் மற்றும் மனித தலைகளுக்கிடையே  வேடிக்கை பார்த்ததில், நீர் நிறைந்த ஏரியும், ஆறுகளும், குளங்களும் மனதை நிரப்பின.  வயல் வெளிகளையும் , தோப்புகளையும்  பார்க்கும் பொழுது எழும் மகிழ்ச்சி,  ஒரு செடியும் இல்லாத சில இடங்களை கடக்கும் பொழுது வடிந்து போனது.

கதவின் அருகில் நின்று வெளியே   வேடிக்கைப்  பார்ப்பது எனது எப்பொழுதுமான பயண வழக்கங்களில் ஒன்று. திருச்சியை கடந்திருப்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. பத்து நிமிடங்கள் வெளிக்காற்றை வாங்கியவாறே அடர்ந்த இருட்டில் எதையோ தேடிக் கொண்டு இருந்தேன்.  இந்த மகிழ்வைப் பொறுக்க முடியாத ஒரு நல்ல உள்ளம்,  சென்னையில் இருந்து எங்களுடன் பயணித்த  எண்பது வயது மதிக்க தக்க முதியவர், எழுந்து வந்து, "இங்கே நிக்காதம்மா, போய் உட்காரு" என்றார், கோபமாக சொல்லி இருந்தால், கேட்டு இருக்க மாட்டேன். குணமாக சொன்னதால், வேறு வழியின்றி, இருக்கைக்குப்  போய் அமர்ந்தேன்.


8 .50   க்கு வந்து சேர வேண்டிய வண்டி,  8 . 15 க்கே கூடல் நகரை அடைந்ததும், சந்தோசம், ஏனெனில், இன்னும், ஐந்து நிமிடங்களில் இறங்கி விடலாம் என்று.  ஆனால், அளவுக்கதிகமாக நேர்மையாகப்  பணியாற்றும் ரயில்வே  துறை சார்ந்த ஊழியர்களால்,  இருபது நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்பு, அலுங்காமல், குலுங்காமல், உண்மையிலேயே ரயில் போகிறதா என்று நம்மை குழம்ப வைக்கும் வேகத்தில் ஊர்ந்தது. நான் பந்தயம் கட்டுகிறேன், இப்பொழுதுதான், நடக்கப் பழகி இருக்கும் குழந்தை, நிச்சயம் நாங்கள் சென்ற ரயிலுடன் நடத்தால், எளிதாக ரயிலைத் தாண்டிச் சென்றுவிடும்.
ஒரு வழியாக மிகச்  சரியாக 8 .50  க்கு, மதுரையில் நின்றது.

கருத்துகள் இல்லை: