சனி, 4 மே, 2013

ரசனை...


by Deepa Nagarani (Notes) on Tuesday, February 5, 2013 at 11:46am ( facebook )

              நான் பிறந்து சில மாதங்களில், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, டெல்லி சென்றிருந்த என் தந்தை, தொட்டிலின் மேலே கட்டித் தொங்க விடுவதற்கு ஏற்றார் போல, வரிசையாக அமர்ந்திருக்கும் குருவி பொம்மையை வாங்கி வந்து தொட்டிலின் மேலே கட்டி விட்டதாகவும், அடுத்த நாள் காலையில், ஒரு குருவி கூட மீதம் இல்லாமல், அனைத்தும் பிரிக்கப்பட்டு, பஞ்சு பஞ்சாக தொட்டிலில் கிடந்ததாகவும் சொல்வார். இன்று வரை அவருக்கு உள்ள ஆச்சர்யம், எப்படி அந்த பொம்மை கீழே விழுந்து இருக்கும், அதுவும் எப்படி குப்பைக்கு செல்லும் அளவிற்கு சேதாரம் ஆகி இருக்கும் என்று. பல முறை சொல்லி இருக்கிறார், "அது அவ்ளோ அழகா இருக்கும், ஒரு நாள் முழுசா கூட ரசிக்கல தொட்டிலில கட்டி...  நீ பிச்சுப் போட்டுட்ட " என்று...

இது என் மனதில் தங்கிப் போனது. முதன் முறையாக சென்ற மே மாதம் டெல்லி சென்ற பொழுது, நான் பார்த்து இருக்காத குருவி பொம்மையைத் தேடினேன்,  மனதுக்குப் பிடித்த மாதிரி இல்லாததால், வேறு சில பொம்மைகளுடன், மரத்தில் தொங்கி விளையாடுவதைப் போல இருந்த அழகான குரங்கு பொம்மையை வாங்கி வந்தேன். மதுரை வந்ததும், முதல் வேலையாக, அந்த குரங்கு பொம்மையை எடுத்துக் கொண்டு போய், அப்பாவிடம் கொடுத்தேன். "குருவி பொம்மை கிடைக்கல" என்று சொன்னதற்கு, "இது நல்லா இருக்கு", என்று ரசித்து பார்த்துக் கொண்டே இருந்தவர்  டெல்லியில் தான் இது மாதிரி தரமாகவும், அழகாகவும் கிடைக்கும் என்றார்.



அன்றைய தினம் மாலை வேளையில் அம்மாவின்  வீட்டை  எட்டிப் பார்த்த பொழுது, அவர் அறையின்  கதவின் வலது ஓரத்தில், மேலே அந்த குரங்கு பொம்மை தொங்கிக் கொண்டிருந்தது. மேலே ஓர் ஆணியில் இருந்து ஏதேதோ கம்பிகள் இணைத்து, சின்ன சின்ன வேலைகள் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

அடுத்த நாள் காலையில் பார்த்தால் மிகவும் இறங்கி, கதவின் நடுப்பகுதியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது பொம்மை.
"என்ன ஆச்சும்மா", என்று கேட்டதற்கு,
"வருண் பிடிச்சு இழுத்து விட்டுட்டான். ஸ்ப்ரிங் லூஸ் ஆயிடுச்சு". என்றார் அம்மா.

அன்று மதியம், ஏதேது வைத்து மீண்டும் சரி செய்து,  பழைய உயரத்தில் பொம்மை தொங்க விட்டப் பிறகு தான், மதிய உணவை எடுத்துக் கொண்டார் அப்பா. பள்ளிவிட்டு வந்த, வருண், பொம்மையை இழுக்க வரும் பொழுதெல்லாம், "தொடாதடா", என்று பதமாகவும், இதமாகவும், சில நேரங்களில் மிரட்டியும் சொல்லிக் கொண்டே வந்தேன். அவனும் எத்தனையோ விளையாட்டு சாமான்கள் இருந்தாலும், இது மட்டும், உருப்படியாக எப்படி இருக்கலாம் என்று, அப்பா வேறு பக்கம் சென்ற நேரங்களில் இழுக்க முயற்சித்த நேரங்களில் நானோ, அம்மாவோ பொம்மையைக் காப்பாற்றிக்  கொண்டே வந்தோம்.

ஆனால், விதி வலியது. ஓரிரு நாளில், வழக்கம் போல பையன் தன் கை வரிசையைக் காட்ட, இந்த முறை, தரையில் கிடந்தது குரங்கு பொம்மை. எங்க அப்பாவிற்கோ அவ்வளவு கோபம், வேகமாக வந்த நான் வருணை இழுத்து அவன் முதுகில் ஒரு அடி வைக்க, "அவனை விடு",  என்றவர்....
மீண்டும், அந்த பொம்மையை சரி செய்யத் தொடங்கினார்...

சிறிது நேரத்தில், பழையபடி தயாரானது பொம்மை. இந்த முறை, கதவின் மேல் வருமாறு தொங்க விடாமல், வருண் ஸ்டூல் போட்டாலும், தொட முடியாத உயரத்தில் அதை தொங்கவிட்டார். அந்த கணம் அவர் முகத்தில் சொல்லில் வடிக்க முடியாத நிம்மதியைக் கண்டேன்.

குறிப்பு: எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், இன்று வரை, என் அப்பா, விரும்பி ரசித்த பொருள்களில் அந்த குருவி பொம்மைக்கு அடுத்து இந்த குரங்கு பொம்மை... யோசித்தால், வியப்பாக இருக்கிறது...
நம்மை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் ஆர்வம், ரசனை, விருப்பம், கணிக்க முடியாத படி இருக்கிறது சில நேரங்களில்...  :)


கருத்துகள் இல்லை: