சனி, 4 மே, 2013

முதன் முதலில் செய்த ரத்த தானம்!


by Deepa Nagarani (Notes) on Tuesday, December 4, 2012 at 12:53pm ( facebook )

முதன் முதலில் செய்த ரத்த தானம்...

1995-96
நான் B.A , முதல் வருடம்  சேர்ந்தப் புதிது.
அன்று கல்லூரியில் ரத்த தான முகாம்.

எனக்கு அது வரை, என்னுடைய ரத்தம் எந்த வகையைச் சேர்ந்தது என்று கூட தெரியாது.
அங்கே,கொடுக்கப்பட்டப் படிவத்தை நிரப்புவதற்காக, ரத்தத்தைப்  பரிசோதனை செய்தேன்.
A 1 பாஸிடிவ், என்று தெரிந்ததும், ஒரு குட்டி மகிழ்ச்சி, ஏனெனில், எப்பொழுதோ, அப்பா ரத்த தானம் செய்த சான்றிதழில்  பார்த்த ஞாபகம், அவருடையதும்  A 1 பாஸிடிவ் என்று.

கல்லூரி விடுதியில் உள்ள பெரிய வரவேற்பறை உள்ளே நுழைந்தால், வரிசையாக, மாணவிகள்  கையை நீட்டி ரத்தத்தைக் கொடுத்துக்கொண்டேப் படுத்து இருந்தனர். குட்டி குட்டிப் பாலிதீன் பைகளில்  சேகரமாய்க் கொண்டே  இருந்தது ரத்தம்.

நானும், தயாரானேன்.

வலது கையில், கஷ்டப்பட்டு நரம்பை தேடிக் கண்டுபிடித்து, நறுக் என்று ஊசியை குத்தி, ஏற்றி, பக்கத்தில் ஒரு பாலிதீன் பையை வைத்துவிட்டு சற்று தள்ளி சென்று விட்டார் அந்த நர்ஸ். கையை விரித்து விரித்து மூட சொன்னதை, விடாமல் செய்து கொண்டே இருந்தேன். எனக்கு, எதுவும், குறையும் உணர்வெல்லாம் இல்லை. அந்தப்  பாக்கெட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டே,
"இது யாருக்குப்  போகும்,  இதே சினிமாவா இருந்தா, இத வச்சு ஸ்பெஷல் ஸீன் பண்ணி இருக்கலாமே," என்று யோசித்துக் கொண்டே இருந்த பொழுது, ஊசியை நீக்கிவிட்டு, அந்த இடத்தில்  பஞ்சை வைத்து, கையை  மடக்கி வைத்திருக்க சொன்னபடி செய்தேன்.

அதே நேரத்தில் ரத்தம் எல்லாம் கொடுத்திருக்கோம் நாம தான் ஹீரோயின் என்ற  நினைப்பில் வேகமாக எழுந்து துள்ளிக் குதித்து இறங்கினேன்.  அதே வேகத்தில், நடந்து வெளியில் வந்து, எங்களுக்காக சிறப்பாக தயார் செய்திருந்த ஆரஞ்சு பழச்சாற்றைக் குடித்துவிட்டு, அதற்குள் ஏற்பட்ட அனுபவத்தை தோழிகளுக்கு விரிவாக விளக்கிக் கொண்டே, கேண்டீன் அருகில் அமர்ந்தேன்.
(கூட இருந்தததில வேற ஒரு ஜீவனும் ரத்தம் அன்னைக்கு தரல ),


ஏகப்பட்டக்  கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டே இருந்தேன்...


.


.

.

.

.

.

.

.

.


என்னை சுற்றிப்  பெரிய கூட்டம் நிற்கிறது.
அதில் என் தோழியரும்  இருக்கின்றனர்.
"வீட்டில நல்ல தூக்கத்தில, கனவு கண்டா, அங்கயும், இதுக தான" னு, சலிப்பில்,
கண்ணை விழித்து எழுவோம் என்று, முயற்சி செய்கிறேன், முடியவில்லை. :(

அப்போது  தான் கவனிக்கிறேன், எதிரே ஒரு சீனியர் அக்கா, என் கால்களை மேல தூக்கவும், கீழே இறக்க்கவுமாக தொடர்ச்சியாக செய்து கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய தலை, வேற ஒருத்தி மடியில் இருக்கிறது.

எங்கள் பேராசிரியை மற்றும், சற்று நேரம் முன்பு ரத்த தானம் செய்த போது  உடன் இருந்த செவிலியர்கள், மருத்துவர் ஒருவர், எல்லாம் அருகிலே பதட்டத்தோட  அமர்ந்து இருக்கிறார்கள்.

ஏகத்துக்கும் வெளிறிப்  போய் இருக்கும்  அந்த முகங்களைப்  பார்த்ததும்,
"நான் காலேஜ் ல தான் இருக்கேன்னு தெரியுது,
ஆனா என்ன ஆச்சுன்னு மட்டும் தெரியலயே? " என்று கேட்டதும்,

" ஒண்ணுமில்ல (உலகமே அழிந்தாலும், இந்த ஒன்னுமில்லைன்னு சொல்லி ஆரம்பித்தால் தான் ஒரு திருப்தி), நீ பேசிட்டு இருந்திட்டே மயங்கி விழுந்திட்ட", என்றார் மருத்துவர்.

( பேசிட்டே, அப்படியே பின்னால விழுந்துட்டேனாம், இது, பின்னர், உடன் இருந்தோர் சொன்னது)


ஏதேதோ கேள்வி கேட்டுக் கொண்டே  இருந்த மருத்துவர்
ஒரு ஊசியை என் இடது கையில் குத்திக் கொண்டே,

"நீங்க ப்ளட் டொனேட் பண்ணி, நீடில் ரிமூவ் செய்த நொடில வேகமா எழுந்து வந்ததில, கீழ ப்ளட் சர்குலேட் ஆகாம இருந்ததால இப்படி ஆகி இருக்கு.  இப்போ சரி ஆயிடுச்சு..."
"என்ன, பயந்துடீங்களா?" என்று  கேட்டதும்,

"அடுத்த கேம்ப் எப்போ இங்க", என்ற பதில் கேள்விக்குப் புன்னகைத்தார்.

அவர்கள் அனைவரும் வற்புறுத்தியதால் அன்று மதிய உணவு அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். :)

அதன் பிறகு, அடுத்த வருடம் வந்தார்கள் அதே குழுவினர்.
முதல் ஆளாக, நான் தான் ரத்த தானம் செய்தேன்.
இந்த முறை, மெதுவாக, எழுந்து உட்கார்ந்து, பிறகு தான் கீழே இறங்கினேன்.

இன்றும் ரத்த தான முகாம் பற்றிய விளம்பரம் காணும் பொழுதெல்லாம்,
நினைவுக்கு வரும் நான் மயங்கி விழுந்த இந்த நிகழ்வு!

சில திரைப்படங்களில், இறுதியில் காட்டப்படும், விடுபட்ட காட்சிகள் போல, இங்கும் எழுத வேண்டும் என ஆசை... :P

1. எங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு, அப்போவோட அம்மால இருந்து , அம்மாவோட அம்மா வரை, நெறைய பேர் விடாம, துக்கம் விசாரிச்சு, இனி இந்த தப்ப செய்யாத னு "அறிவுரை" வழங்கினப்புறம், சொல்லாம சினிமாக்கு போற வகையில செய்ய ஆரம்பிச்சது தான் அடுத்து ரத்தம் கொடுத்தது...  :)

2. மயக்கம் முதலும், கடைசியும் அதுதான், என் வாழ்க்கையில... இப்படிதான், கடைசிலயும் இருக்குமோ னு பல விதமா யோசிச்சு இருக்கேன். ஆனாலும், கீழ விழுந்த நொடியைக் கூட என்னால ஞாபகத்துக்கு கொண்டு வர முடியல. :) )

கருத்துகள் இல்லை: