செவ்வாய், 22 ஏப்ரல், 2014

உச்சி வெயிலுடன், கடந்து சென்ற ஒரு கொடுமை!

சற்று நேரத்திற்கு முன்பு, ராமகிருஷ்ணர் மடத்திற்கு எதிரில் இருந்த பள்ளியில், சில விவரங்கள் கேட்பதற்காக சென்றிருந்தேன். தகவல்களைப் பெற்றுக் கொண்டு வெளியேறும் பொழுது,  மரநிழலில் நிறுத்தியிருந்த வண்டியின் மிக அருகே இன்னொரு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. ஒருவன் அந்த வண்டியில் உட்கார்ந்த படியும், இன்னொருவன் சற்று தள்ளியும் நின்றபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இருவருக்கும் இருபத்தைந்து வயதிற்குள் இருக்கலாம். நேரத்தை பார்த்தபடி, வேகமாக எட்டுவைக்கையில், உட்கார்ந்திருந்தவன் கீழே எச்சிலைத் துப்பினான். ஏதோ சரியில்லாதது போல எனக்குத் தோன்றியது. வெயில் துரத்தியதில், சில வினாடிகளில் வண்டியின் அருகே வந்து நின்றதும், இருவரும் எழுந்து வழிவிட்டனர்.


நான் பயந்தபடியே நடந்திருந்தது, அவன் துப்பியதில் சில துளிகள் சீட்டில் படிந்திருந்தது. கோபத்தில் எதுவும் திட்டிவிட்டால், எதிர் கேள்வியாக , "இது என்ன உன் அப்பன் வீட்டு ரோடா", என்று வரும்,
" ரோட் இல்ல, ஆனா, வண்டி என் அப்பன் வீட்டு வண்டிதான்", என்று சொல்லி தேவையில்லாமல் வெயில் குடித்து மீதி இருந்த எனது சக்தியை வீணடிக்க விரும்பவில்லை.

சற்று என்னை அமைதிபடுத்திக்கொண்டு, வலிய தருவித்தப் புன்னகையுடன், "கர்சீப் இருக்கா தம்பி?" என்று கேட்டேன். சற்று யோசித்தவாறே " இருக்கு" என்றான். " வர்றப்போவே பார்த்தேன், துடைச்சிடு ", என்றதும், மறு வார்த்தை பேசாமல் சுத்தமாக இருக்கையைத் துடைத்தான். அதன் பிறகு என் வண்டியிலுருந்த சிறியதுணியை எடுத்து இலேசாக இருக்கையை, உதறியபடி தட்டிவிட்டேன். ஓரளவு திருப்தியான பிறகு வண்டியைக் கிளப்பிக் கொண்டே, " உன்னை பார்க்கிற இடத்தில எல்லாம் துப்பாதனு சொன்னா நீ கேக்கவா போற, அடுத்தவங்களுக்கு தொந்தரவா இல்லாம எங்கனாலும் போய் துப்பு", என்று சொன்னதை அவன் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் கேட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திருந்தினால் சரி...

thambu சொன்னது…

ஒரு விஷயம் அது நல்லது,கெட்டது ,நியாயம்,அநியாயம் இவற்றை எல்லாம் மீறி ஒருவரின் அணுகுமுறையே அதன் முடிவின் சாதக பாதகம். யாரையும் திருத்துவது அல்ல நமது வேலை. நாமோ நம்மை நம்பியவரோ பாதிக்கப் படாமல் இருப்பதே முக்கியம் . இந்தப் பதிவில் நான் கண்ட விஷயம் இன்றைய காலகட்டத்தில் மிகத் தேவையான ஒன்று 'நிதானமாக ( ஒதுங்கிப்போவது அல்ல ),தீர்க்கமாக (வள வள என்று பேசாது) செயல் படுவது பிரச்சனையை முடிக்கும் '. பதிவின் கருத்து என் வரை இன்றைய அவசியம் :)