புதன், 8 அக்டோபர், 2014

மதுரை to சென்னை


மாட்டுத்தாவணியில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட பேருந்தில் கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் சற்றே சாய்ந்து அமர்ந்திருந்தேன். கால்களை நீட்டியும் அசௌகர்யமாக இருந்ததால்  மடக்கி உட்கார்ந்திருந்த நிலையில் கண்ணாடி ஜன்னல் வெளியே தெரிந்த சாலையை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன். குளிர்சாதன வசதி இருந்ததால், ஜன்னல் ஓரம் கிடைத்தும் அதனை திறக்க முடியாத சூழல் கடுப்படித்தது. மெதுமெதுவாக வேகமெடுத்து ஓடத்துவங்கிய வண்டி மேலூரில் சில நிமிடங்கள் நின்றது. செமி ஸ்லீப்பராக இருந்தாலும், இரவில் பேருந்துப் பயணம் பழக்கமின்மையால் இமைகள் ஒட்டிக் கொள்ள மறுத்தன. பக்கத்தில் இருந்த மார்வாடிப் பெண் என் இருக்கைக்கு நேராக மேலே இருந்த சுவிட்சை சரி பார்த்தபடி, ஏசி சரியா வேலை செய்யவில்லை என்ற தகவலை வருத்தத்துடன் பகிர்ந்தாள். எனக்கெல்லாம் சரியாக வேலை செய்தால் தான் நடுங்கிக் கொண்டே இருக்கும் என்று பதிலுக்கு சொல்லாமல் பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு ஆமோதித்தேன். நான்கு வழி சாலையில் விரைந்து கொண்டிருந்த பல்வேறு பதிவு எண்களைக் கொண்டிருந்த பேருந்துகள் சென்னையை நோக்கியே சென்று கொண்டிருந்ததை பேருந்தின் பின்புறம் எழுதி இருந்ததின் உதவியால் தெரிந்து கொண்டு அவைகள் எந்த நேரத்தில் அந்தந்த ஊர்களில் இருந்து கிளம்பியிருக்கும் என அனாவசிய கணக்கு உள்ளே ஓடியது . 

அதிசயமாக யாரும் பேருந்தில் மொபைலை நோண்டிக் கொண்டிருக்கவில்லை. உள்ளே இருட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை விட, நீண்டு கொண்டே செல்லும் சாலை தன்னை நோக்க செய்தது. மழைச்சாரல் காரணமாக ஏற்பட்ட ஈரம் சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் அழகாக மின்ன எதிர் வரிசையிலும் அவ்வப்பொழுது வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. ஊர்களைக் கடக்கையில் தென்பட்ட பலவகை மரங்களும் ஒரே மாதிரி நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தன. பார்க்கும்  சாலையும் ஊரும் வேறுபாடில்லாமல் விரிந்து கொண்டே சென்றது. அவ்வப்பொழுது வேகத்தடையில் ஏறி இறங்கும் பொழுதுகளில் கூடுதல் விழிப்புடன் பராக்குப் பார்ப்பது தொடர்ந்தது. அடங்கி இருக்க ஊரால் முடியலாம், நெடுஞ்சாலையால் பரபரப்பாகவே இருக்கவே முடியும் போல :)

அலாரம் வைத்த மொபைல் தேவைப்படாது என தெரிந்ததும் கீழே இருந்த பையில் வைத்தேன். சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் கட்டி வைத்திருக்கும் சாமான்கள் என்னவாக இருக்கும் என நீண்டது யோசனை. ஒன்றரை மணிக்கு பெயர் தெரியாத ஊரில் நிறுத்தியவுடன், பத்து நிமிடங்கள் நிற்கும் என்று ஒரு பையன் பலத்த குரலில் அறிவிப்பு செய்தான். நல்ல உறக்கத்தில் இருந்த பக்கத்து இருக்கைப் பெண்ணை தட்டி எழுப்பிய பிறகே வெளியே வர முடிந்தது. கொஞ்சம் வெளிக்காற்றை வாங்கவே இறங்கினேன். அங்கிருந்த கழிப்பறை அருகில் நின்ற சில வண்டிகளில் வந்த பிரயாணிகளுக்கும் உபயோகப்பட்டது.

 பேருந்தின் உள்ளே இருந்த பெயரளவு குளிர்ச்சியை விட வெளியில் மழை நின்ற ஈரம் தந்த குளிர்ச்சி அதிகமாக இருந்ததை உணர்ந்ததும், உள்ளே போய் உடன் அமர்ந்திருந்த பெண்ணை வெளியே போக சொல்லலாம் என நினைத்தால், பாவம் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். இலேசாக கண் சுழலும் போதெல்லாம் ஏதாவது ஒரு டோல்கேட்டில் நின்ற பேருந்து 5,6 வாகனங்களைக் கடந்த பிறகே கண்ணாடிக் கூண்டின் அருகே நின்றது. அந்த நேரத்திலும் அத்தனை பரபரப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக அத்தனை அதிக சம்பளம் கிடைக்காது என்று ஓரத்தில் ஓடியது. வேகமெடுத்து சீறிப் பாயத்தொடங்கிய பேருந்தின் வேகத்தை வெளியில் வேடிக்கைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே அனுபவிக்க முடிந்ததை சீரான சாலைகள் செய்தன. ஏதோ ஓர் ஊரில் இரண்டு மணிக்கு ட்யூப் லைட் வெளிச்சத்தில் திறந்திருந்த டீக்கடைக்கு வெளியே கிடந்த இருக்கையில் கால் நீட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர், அவர் கமிஷன் கொடுக்கும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கலாம். நான்கு மணியைத் தாண்டும் பொழுது ஆவின் பால் வண்டிகள், தண்ணீர் கேன் ஏற்றி செல்லும் வண்டிகள் எங்கள் உடன் பயணிக்க ஆரம்பித்தன. தாம்பரத்தை தாண்டும் பொழுது ஆட்களை நிறைத்துக் கொண்டு செல்லும் பேருந்துகள், சாலையை கடக்கும் மக்கள் என வழக்கமான ஒரு நாள் விடிய ஆரம்பித்திருந்தது. 

செவ்வாய், 7 அக்டோபர், 2014

எனக்கு சௌகர்யமான உடை !

ஜீன்ஸ் வலுக்கட்டாயமாக அணிய சொன்னாலும், பிடிக்காத ஒரு உடை. எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கு கிளம்பினாலும், சேலை உடுத்து என அம்மா சொல்வதை கேட்க பிடிக்காததற்கு ஒப்பானதே 'ஜீன்ஸ் போடு'  என்று சொல்வதும். ( நெருங்கிய உறவினர்களின் திருமணத்தில் மட்டும் சில மணி நேரங்கள் புடவை அணிவதே பெரும்பாடாக இருக்கிறது ) சற்று பின்னால் பார்த்தால், ஷார்ட்ஸ் அணிந்து பள்ளி நாட்களில் மைதானத்தில் ஹாக்கி விளையாடியது அந்த நேரங்களில் எளிதான ஆடையாக இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை டீஷர்ட் + (முக்கால்) பாவாடை அணிவதே வழக்கம். கடந்த பல வருடங்களாக சௌகர்யமான உடையாக சுடிதார் மட்டுமே இருக்கிறது. பிடித்த விதத்தில் தைத்து அணிந்து கொள்ளும் சுடிதார் என்னை என் இயல்பில் வைத்திருப்பதாக உணர்கிறேன். ( என் அம்மாவிற்கு அவர் சேலையில் இருக்கும் பொழுது இந்த உணர்வு எழலாம்) கடையில் சென்று விரும்பி வாங்கவும், அணியவும்,  பிடித்த உடை சுடிதார் மட்டுமே. ஒரு வேளை சுடிதார் அணியக்கூடாது என்று எதிர்மறையாக கடவுளே சொன்னாலும், என் அளவில் கண்ணியமான உடையாக பாவிப்பதால் தொடர்ந்து சுடிதாரையே அணிவேன். ஜீன்ஸ் சில பெண்களின் உடல்வாகிற்கு பாந்தமாக பொருந்துவதைப் பார்த்திருக்கிறேன். சிலருக்கு சேலை பொருந்துவதாகவும் தோன்றும். முன்னாள் முதல்வர் சேலையில் மட்டுமே கம்பீரமாக இருக்கிறார். என் அம்மாவுக்கு கிடைத்திடாத கல்லூரி படிப்பு, சுதந்திரமான ஆடைத்தேர்வு, சுயமாக முடிவெடுக்கும் பொறுப்பு என பல உரிமைகள் எனக்கு கிடைத்திருப்பதற்கு பின்னால் எண்ணற்ற நல்லவர்களின் கடும் போராட்டங்கள்   இருக்கின்றன என்பதை நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக அழைப்பு விடுக்கும் அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொள்ள தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.  

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

நேசித்து வாசிப்போம்... வாசித்து நேசிப்போம்...சுவாசம் உள்ள வரை...!

எழுத்துக்களை கண்கள் உள்வாங்க, உள்ளே விரிந்து கொண்டே செல்லும் காட்சிகளுக்கு இணையாக எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் இல்லை. வாசிக்கும் பொழுதே நொடிப்பொழுதில் நம்மையும் உடன் அழைத்து செல்லும் வல்லமை கொண்டவை எழுத்துகள்.
அ ம் மா என்று எழுத்துக் கூட்டி குழந்தை சரியாக வாசித்த நாளில்,  பசு பால் தரும் என்ற வாக்கியத்தை அர்த்தம் புரிந்து வாசிக்கையில், ஒரு சிறுகதையை புரிந்து கொண்டபடி நம் குழந்தை நமக்கு விவரித்து சொன்ன நாளில் எத்தனை பூரிப்பு பெற்றோர்களாகிய நமக்கு.

மெதுமெதுவாக எழுத்தின் வசீகர சுவை உணர்ந்து, கதைகளைத் தேடத் துவங்கிய நாட்களில், "ரத்னா பாலா",  என்ற சிறுவர்களுக்கான மாத இதழை வீட்டில் வாங்க ஆரம்பித்தனர். மூன்றாம் வகுப்பு தமிழ் பாட வழியில் படித்ததால், இந்த புத்தகத்தில் உள்ள வண்ணங்களும், படங்களும், கதைகளும் வகுப்புப் பாடங்களை ஓரம் தள்ளிவிட்டு ஈர்த்தன. அப்பொழுது வாசித்த 'இஞ்சி தின்ன குரங்கு', என்ற கதையை இப்பொழுதும் நினைவு படுத்த முடிகிறது.
அருகில் உள்ள நூலகத்தில் ஆறாம் வகுப்பில், தாத்தாவிற்கான உறுப்பினர் அட்டையை உபயோகித்து, விடுமுறை நாட்களில் பல சிறுவர்கதைகளை வாசித்துள்ளேன். அந்த கால கட்டத்தில் தான், தெனாலி ராமன், பீர்பால், பஞ்ச தந்திர கதைகள் அறிமுகமாயின.
அம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, சிறுவர்மலர் என்று துரத்திதுரத்திப் படித்த நாட்களில் தெரிந்து கொண்ட ஒற்றை வரி... "ராஜா எவ்ளோ முட்டாளா இருந்தாலும், மந்திரி புத்தியோட இருந்தால் ராஜ்ஜியம் பொழச்சுக்கும்"... என்பது. :)

பள்ளிக்கூடத்தில் நூலகம் என்று ஒன்று இருக்கும். அழகாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்ல அனுமதி கிடையாது. வருடத்திற்கு ஒரு முறை, நூலக அலுவலர்களே, ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்து, மொத்த மாணவிகளுக்கும் கொடுக்கும் புத்தகங்களின் பெயரை எழுதி வைத்துக் கொண்டு வழங்குவர். இரண்டே நாளில் மீண்டும், புத்தகங்களை எந்த சேதாரமும் இல்லாமல் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பு மட்டும் அந்த வழங்குதலில் இருக்கும். தொலைந்த நூல்களுக்கு நூலகர்களின் சம்பளத்திலிருந்து பணத்தைப் பிடிப்பதால், அவர்களின் கவலை அவர்களுக்கு. கொஞ்சமும் யோசிக்காமல், படக்கதை புத்தகங்களை ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவது போல தான், ஏனைய புத்தகங்களும் இருக்கும்.
எட்டு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அறிமுகமான ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றோர்களின் காரணமாக கிரைம் நாவல்களில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதென்னவோ, வன்முறையை, நேர்மையில்லாத கொடூரமான  செயல்களை புத்திசாலித்தனமாக எதிர் கொள்வது போல தோன்றியதால் பிடித்து போய் இருக்கலாம். விறுவிறுப்பு தன்மை காரணமாக வேகவேகமாக பக்கங்களை புரட்ட வைக்கும் கிரைம் நாவல்கள் இப்பொழுதும் ஈர்க்கவே செய்கின்றன.
அதற்கு அடுத்த கால கட்டத்தில் தொடர்ச்சியாக, அனுராதா ரமணன், இந்துமதி, சிவசங்கரி, என்று வாசித்து குறிப்பாக ரமணி சந்திரனின் ஒரு புத்தகத்தைக் கூட விடாமல் படித்து, ஒரு கட்டத்தில் ஒரே மாதிரி உணர்வுகளே அத்தனைப் பக்கங்களிலும் விரவியிருப்பதாக தோன்றி இருக்கிறது.

பொதுவாக புத்தகங்களில், சில நேரங்களில் நாமே எளிதில் கணித்துவிடும் படி இருக்கும் அடுத்தடுத்த வரிகள் சோர்வை உண்டாக்கும்.
அடுத்து கல்லூரி வந்த பொழுது, நா.பார்த்தசாரதி, மு.வ, என்று சிலர் அறிமுகப்படுத்தப்பட்டாலும், விரைவில் அயற்சி ஒட்டிக் கொள்ளும் வகையிலேயே என்னுடைய வாசிக்கும் திறன் இருந்தது. ஆனால், உவமைகள், நேர்த்தியான வரிகள் என்று கற்று கொள்ள நிறைய விஷயங்கள் அந்தப் புத்தகங்களில் இருக்கும்.
மிக நீண்ட காலத்திற்கு ஒருவரின் எழுத்தைத் தேடித் தேடிப் படிக்க முடிந்தது என்றால் அது கல்கியின் எழுத்துகளை தான். அவரின் பல சிறு கதைகளில் உபயோகிப்பட்ட சொற்றொடர்களை சமீபத்திய தமிழ் சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகளில் பயன்படுத்தியதைப் பார்க்கலாம். ('ஆபரேஷன் சக்சஸ், பேசன்ட் டைட்' மாதிரி... )

பொன்னியின் செல்வன், தியாக பூமி, இரண்டுமே நாவல்களின் ஊடே பறந்து சென்று பார்த்து ரசித்து கொண்டாட செய்தவை. மெலிதான நகைச்சுவை, சுவாரஸ்யமாக  வாசிக்க செய்யும் வரிகளின் தொடர்ச்சி, உடன் இழுத்துச்செல்லும் கதை அமைப்பு என்று சகலமும் ஈர்க்கும். அதிலும், பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில், குந்தவை, வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியன், நந்தினி, சேந்தன் அமுதன் உட்பட அனைத்து கதாப்பாத்திரங்களுக்கு பக்கத்தில் நின்று நடப்பவற்றை எல்லாம் நேரடியாக பார்த்து மகிழ்ந்து, வருத்தமுற்று, கலங்கி, சமாதானமாகி என வாசித்த அந்த ஒரு வாரமும் அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையை வேறு எந்த படைப்பும் தந்ததில்லை. அவர் எழுதி உள்ள கதைகளில், காதல், அரவணைப்பு, போன்ற வார்த்தைகளைக் கூட பார்த்து, வெட்கப்பட்டு, யோசித்து, பயன்படுத்தி இருப்பாரோ என்று யோசிக்கும் அளவிலேயே அவற்றின் பயன்பாடு இருக்கும்.

அடுத்து தி.ஜானகிராமன் எழுத்துகளும், ஓரளவு தவறவிடாமல் சேகரித்து வாசித்துள்ளேன். "அம்மா வந்தாள்", வாசித்த காலத்தில் எத்தனைத் துணிவுடன் அந்தக் காலத்தில் எழுதியிருக்கிறார் என அதிர்ந்திருக்கிறேன். அதன் பிறகு படித்த "செம்பருத்தி", வலிய இழுத்து சென்ற மெகா தொடர் போல தோன்றியதால் அவ்வளவு வசீகரிக்கவில்லை. அவரின் பல கதைகளில் வரும் எளிய கதாப்பாத்திரங்கள், அவர்களின் வாயிலாக வெளிப்படும் அந்தக் கால யதார்த்த சமூகம் (இப்பொழுதும் அப்படியே தான் இருக்கிறது) துணிந்து கையிலெடுத்து எழுதிய பல கதைக் கருக்கள், எங்கேயும் போதிக்காமல், அவர் பார்வையை முழுதாக நம் கண்ணில் பார்க்க செய்யும் திறன் ரசிக்க வைக்கும்.

ஜி.நாகராஜன். - 'நாளை மற்றுமொரு நாளே', என்ற நாவலை வாசிக்க, வாசிக்க, இதென்ன இப்படி எழுதி இருக்கிறார் என்று சங்கடம் சிறிது நேரம் தொடர்ந்தது. வாசித்து முடித்ததும், நம்மிடையே வாழும் அதே நேரத்தில் நாம் பார்க்கப் பிரியப்படாத மனிதர்களைப் பற்றிய கதைக் களத்தில், கதாப்பாத்திரங்கள் அவற்றின் இயல்பில் வாழ்ந்திருப்பதை அறிய முடிந்தது. ஆரம்பத்தில் வாசிப்பதற்கு நெருடலாக இருந்த எழுத்துகள், தயங்கி தயங்கி பக்கங்களைப் புரட்ட செய்த வரிகள், போலித்தனமற்ற, அறைகிற உண்மையை உணர, உணர, அது வரை இருந்த அத்தனை தயக்கங்களையும் வரிசையாக உடைக்கிறார் ஜி.என். ஒரு கட்டத்தில் அவருடன் கைகுலுக்கி சௌகர்யமாக பயணிக்க முடிகிறது.
அங்கே ஒரு இடைவெளி விட்டு, அப்படியே ஆன்மீக பக்கம் சாய்ந்து, விவேகானந்தர், ரமணர், ஓஷோ, வேதாத்திரி மகரிஷி என்று ஒரு சுற்று அரைகுறையாக சுற்றியதில், இரண்டு, மூன்று பக்கங்களுக்கு மேலே வாசித்து முன்னேறி செல்ல விட முடியாத கடின முறையில் எளிய உண்மையைக் கூறிய ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்கள் வாசிக்க எனக்கு கடினம் என்பதையும் சொல்ல வேண்டும்.
கடந்த சில வருடங்களில், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, லா.ச.ரா., சுஜாதா, நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், தவிர சமீபத்தில் வண்ணதாசனும் வரிசையாக அறிமுகமாயினர். இதில், எஸ். ரா வுக்கும், நாஞ்சில் நாடனுக்கும் கூடுதல் இடம் புத்தக அலமாரியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தான் படித்து உள்வாங்குதலா என்றால் நிச்சயம் இல்லை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட அனுபவ அலைகளை உருவாக்கிக் கொண்டிருப்பது தான் புத்தகக் கடல். எடுத்த உடனேயே ஆன் ரான்ட் கதைகளை உருகிப் படிப்பவர்களும் உள்ளனர். நாம் நான்காம் வகுப்பில் படிக்கும் பொழுதோ அல்லது நமது நாற்பதாவது வயதிலோ, நம்மை மாற்றக் கூடிய புத்தகம் நம்மை அடையாளம் கண்டு கொள்ளும்.
சென்ற வருடம் மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் வந்து குவிந்த புத்தகங்களை வாங்கிய  மக்கள் பலரும் சொன்ன ஒரே குறை "இருக்கிற புத்தகங்களையே இன்னும் படிக்கவில்லை, ஆனாலும்.............. வந்துவிட்டோம், இருக்கட்டும் என்று சிலவற்றை வாங்குகிறோம்", என்ற இந்த  பதிலுக்குப் பின்னே ஒளிந்திருப்பதை தேடிய பொழுது கிடைத்தவை............
1. நமக்கு விருப்பமான புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில், அதன் தலைப்போ ஆசிரியரோ நிமிடங்களில் தீர்மானிக்க செய்தாலும், தொடர்ந்து நம்மை வாசிக்க செய்வதில் சமயங்களில் பெரிய ஜாம்பவான்களே தோற்றுப் போகின்றனர்.
2. தொட்டதுக்கெல்லாம் அலுத்தும், சலித்தும் கொள்ளும் நமக்கு புத்தம் புதியதாக ஏதோ புதிதாக ஒன்றோ அல்லது பழையதே மாறுபட்ட  கோணத்தில் அளிக்கப்படும் பொழுதோ விறுவிறுப்புடன் வாசிக்கிறோம்.
3. தனிப்பட்ட தேர்வு என்று உண்டு. நானெல்லாம் வார,மாத இதழ்களில் கவிதைகளைக் கண்டால் கூட அந்த பக்கத்தை புரட்டி விட்டு அடுத்த பக்கத்தை பார்ப்பவள. இப்படிப்பட்டவள், ஏதோ எழுதிப் பழக வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் பெரிய பெரிய கவிதைப் புத்தகங்களை வாங்கி அடுக்கினால், அந்த அடுக்கு மாறமால் அப்படியே பத்திரமாக இருக்கும் அலமாரியில். ( தேவையற்ற சொற்களை எடுத்துவிட்டு, சொல்வதை சுருங்க அழகாக சொன்னால் அதுதான் கவிதை - பேஸ்புக் கில் வாசித்து கற்ற கவிதை இலக்கணம்... :)  )
4. நம் எழுத்தை மேம்படுத்த வேண்டும், உரையாடலை செம்மைப் படுத்த அதிக விஷய ஞானம் வேண்டும் என்பவர்கள், மேற்கூறியவை தொடர்பானவற்றையும், அவரவர்கள் பணிபுரியும்  துறையில் அல்லது எதில் அதிக விருப்பமோ அந்த தலைப்பு சம்பந்தமான நூல்களையும்  வாங்கலாம்.
5. பலரும் வாசித்த நூல் என்பதெல்லாம், ஒரு புத்தகத்தை வாங்குவதற்கான அளவுகோல் இல்லை.

ஆசை ஆசையாய் வாங்கி வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் குரலை அவ்வப்பொழுது கேளுங்கள். அதுவும் முடியாவிட்டால், கேட்க விரும்புபவர்களுக்காவது கொடுங்கள்.

 வாசிப்பு...
என்ன செய்யும்?
தெரிந்து கொள்ள, தெளிய வைக்க, பொழுதைப் போக்க, மனதை நெகிழ செய்ய, ஒப்பிட்டு ரசித்து அசைபோட, அறிவை விசாலப்படுத்த, உற்சாகம் பொங்க என இன்னும் இன்னும் பல விந்தைகளை செய்யும் வாசிப்பு. கையடக்க புத்தகம் இத்தனையும் வழங்குமென்றால், வேறு என்ன வேண்டும்?
நேசித்து வாசிப்போம்...!  :)

 (குங்குமம் தோழியில் வெளியானது - ஆகஸ்ட் 16-31)