வெள்ளி, 28 மார்ச், 2014

சேது...

சேது... நினைவு தெரிந்த நாளிலிருந்தே பிடித்துப் போன ஒரு பெயர்.
இந்தப்  பெயரில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் எங்கேயோ எதன் காரணமாகவோ அல்லது காரணமேயின்றியும் கூட  எனக்குள் புதைந்து போயிருக்கலாம்.

மகன் பிறந்திருக்கிறான் என்றவுடன், அவனுக்கானப் பெயரைத் தேர்ந்தெடுக்கையில் வருண் என்ற பெயருக்கு இணையாக சேது என்ற பெயரும் விருப்பத்திற்குரியதாய்  இருந்திருக்கிறது.

உச்சரிக்கவே அழகாக இருக்கும் பெயராக தெரிகிறது. வாய்விட்டு மகிழ்ச்சியோடு கூப்பிடுவதற்கு என யாருமில்லை. சமயங்களில், வருணிலிருந்து பிடித்தவர்கள் சிலரை பொதுவாக அழைக்க பொதுப் பெயராக "சேது" என கூப்பிடலாம் என்று கிறுக்குத்தனமாக கூட தோன்றியது உண்டு.. :)

நான் நேரிலே பார்த்திராத, அப்பாவின் இரண்டாவது அண்ணன், அவரது இருபத்தாறாவது  வயதிலேயே மறைந்து விட்டார். அவரின்  பெயர் சேதுராமன்.

பனிரெண்டாம் வகுப்பில் ஒரு திருப்புதல் தேர்வை முடித்துவிட்டு, தாத்தா இறந்துவிட்டதாக வந்த மரண செய்தியைக் கேட்டு, மதியமே விரைந்து சென்று பார்த்த அம்மாவின் அப்பா பெயரும் சேது ராமன். (இந்த தாத்தா சற்று  தொலைவில் வசித்து வந்ததால், பார்த்துப் பழகிய நேரங்கள் குறைவே என்றாலும், மற்ற பேரன், பேத்திகளைப் போல சமமான அன்பையே எனக்கும் வழங்கி இருந்திருக்கிறார். ஏதோ ஒரு நாள் அம்மாவிடம் தாத்தா பேசுகையில், வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்ததில் புரிந்தது என்னவென்றால், என்னைப் பற்றிய அவரது அதிகபட்ச கவலையே இந்த உயரத்திற்கு மாப்பிள்ளைத் தேடணும் என்பதே)
பெரிய அளவில் இவர்கள் இருவரும் அகத்திற்குள் நெருங்காவிட்டாலும், இந்த பெயர் அதிகமாகப் பிடித்தே இருக்கிறது.


இறந்து போன இந்த இருவரைத் தவிர, சேது என்ற பெயரில் உறவோ, நட்போ இல்லை. ஆயினும், இந்தப் பெயர் இனம் புரியாத ஒரு வசீகரத் தன்மையோடு இருப்பதாகவே தோன்றுகிறது. இயக்குனர் பாலாவின், "சேது" படம் வெளியான மூன்றாவது நாளே, அந்தப் படம் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே, பெயருக்காக மட்டுமே மினிப்ரியா தியேட்டர் சென்று படம் பார்த்திருக்கிறேன்.


விஜய் டிவியில், ஒரு காலத்தில் மிமிக்ரி செய்து கொண்டிருந்தவர் பெயர் சேது என்று தெரிந்ததிலிருந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். மம்மூட்டி போல சேது பேசும் பொழுது, மம்மூட்டி பேசுவதை விட கேட்க நன்றாக இருக்கும். :)


அத்தனை எளிதில் நடிகர்களை கொண்டாடிப் பழகி இருக்காத எனக்கு, சமீபத்தில் அதிகமாய் பிடித்துப் போன நடிகர்களில் விஜய் சேதுபதி, வந்து சேர்ந்ததில், அவரது பெயரில் இருக்கும் சேதுவும் ஒரு காரணம் என்றால், அது பொய்யில்லை.

இதன் பின்னணியில் பலமான எந்த ஒரு காரணமும் இல்லை. இத்தனை வருடங்கள் கடந்தும், இந்தப் பெயரின் மீது இருந்த ஈர்ப்பு, அப்படியே உயிர்ப்போடு இன்றும் இருக்கிறது. இருக்கும் காலம் வரை, இவ்வீர்ப்பு தொடரும் என்ற நம்பிக்கையும் உண்டு.

மிரட்டும் வெயிலில், ஒரு கண்ணாடிக் கடையில் சில நிமிடங்கள்...!



அடிக்கிற வெயிலில், கண் கண்ணாடி விற்பனை செய்யும் கடையின்  உள்ளே நுழைந்ததும் பாய்ந்து சூழ்ந்து கொண்ட குளிர்ச்சியை, அதே வேகத்தில் அனுபவித்தவாறே தேர்ந்தெடுத்த நாற்காலிகளில் அமர்ந்தோம். மெல்லியப் புன்னகையின் ஊடே எங்களை வரவேற்றவாறே, என்ன மாதிரியான கண்ணாடி வேண்டும் என்று கேட்டார் கடைக்காரர்.

" கண்ணாடி போட்டு இருக்கதே தெரியக்கூடாத மாதிரி ஃப்ரேம் இருக்கணும் ", என்றதும் பதினைந்து வகைக்கும் மேற்பட்டக் கண்ணாடிகளை வரிசைப் படுத்தினார்.

" ஆனா, சைட் ல உள்ளக் கம்பி கொஞ்சம் பட்டையா இருக்கணும் ", என்றவுடன் பலவித வண்ணங்களில் பக்கவாட்டில் இலேசாக பட்டையாக உள்ள கண்ணாடிகளை அடுக்கினார்.


" கருப்பு இல்லாட்டி காப்பி கலர் ல தான் இருக்கணும்", சொன்னவுடன், மீண்டும் நான் கேட்ட வண்ணங்களில் தேர்ந்தெடுத்த சில கண்ணாடிகளை பிரித்து காண்பித்தார். அதில், சிறப்பாகத் தெரிந்ததை, கிட்டத்தட்ட ஏற்கனவே ராம் அணிந்திருந்தது போன்ற ஒன்றை தேர்ந்தெடுத்து அணிய சொன்னேன்.

" கண்ணாடி உங்களுக்கு இல்லையா?" என்று கேட்ட கடைக்காரரிடம்
" இருக்கிற ரெண்டு கூலர்ஸ் வச்சு இன்னும் பத்து வருஷம் ஓட்டிருவேன்", என்றேன்.

கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த ராமிடம்,
" சரி சார், உங்களுக்குப் பிடிச்சிருக்குல, அப்போ இதே கண்ணாடியை பேக் பண்ணிடலாமா?,",
" அதான் சொல்லிட்டாங்கல்ல, பில் கொண்டுவாங்க", என்றார்.


பில் கொண்டு வந்து கொடுத்த கடைக்காரரிடம், உரியத் தொகையைக் கொடுத்து, கண்ணாடிப் பெட்டியை வாங்கிய பிறகு,
" கண்ணாடி போட்டு இருக்கவங்க, கண்ணாடில அவங்க முகத்தை ஒரு நாளைக்கு 1,2 வாட்டி தான் பாப்பாங்க, மீதி நேரம் சுத்தி இருக்கவங்க/கூட இருக்கவங்க தானே பாக்கணும், அப்போ எங்க சாய்ஸ் தான் பர்ஸ்ட்", என சிரித்தவாறே சொன்னதிற்கு பலமாக சிரித்தார்.


கடையை விட்டு வெளியே வந்ததும்,
" இதே மாதிரி கண்ணாடி வேணும்னு வந்ததும் முதலேயே சொல்லியிருக்கலாம்ல", என்ற ராமிடம், " வெயில்ல அலைஞ்சு திரிஞ்சதில சரி டயர்ட், கூட்டமே இல்லாத இந்த கடைல ஒரு பத்து நிமிஷம் சில்லுனு ரிலாக்ஸ் செய்திட்டே, புதுசா வந்திருக்கிற மாடல் எல்லாம் ஒரு பார்வையும் பார்த்திட்டு நம்ம வேலையையும் முடிக்கத்தான் ", என்றேன்.


வெளியே வந்த சில நொடிகளிலேயே, அதெப்படி என்னிடமிருந்து தப்பிக்க முடியும் என ஆக்ரோஷத்துடன் வேகமாக பாய்ச்சிய வெயிலை, மெது மெதுவாக உடல் தாங்கிக் கொள்ளப் பழகிக்கொண்டிருந்தது. இன்னுமும் இரண்டு, மூன்று மாதங்கள் தொடரவும், அதிகரிக்கவும் தயாராயிருக்கிற வெப்பத்தை சமாளிக்கப் போவதை நினைத்து எழுந்த அச்சம், கூலர்ஸ் அணிந்த கண்களுக்குள் மிதந்தது. போக்குவரத்து நெரிசலில், சாலையில் பயணித்தவர்களிடம் பகிர்ந்து வாங்கிய வெக்கையுடன், வீடு வந்து சேர்ந்தோம்.



வியாழன், 27 பிப்ரவரி, 2014

கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதை...

கடந்த சில நாட்கள் மட்டும் காலை உணவாக பழங்கள் எடுத்துக் கொண்டதில், மூன்று நாட்களுக்கு முன்பு ஆரஞ்ச் பழங்கள் சாப்பிட்டேன். முதல் பழத்தை சாப்பிட்டு முடித்திருக்கையில் இடது கடைவாய்ப் பற்களுக்கு இடையே சிறிய அளவிலான சக்கை சிக்கித் துன்புறுத்திக் கொண்டிருந்தது. விரல் நகத்தாலேயே எடுத்துப் போட்டு விட்டு, மீண்டும் பழங்களை சாப்பிட்ட பொழுது ஒவ்வொரு முறையும் சிக்கிக்கொண்டு இருப்பது போல இருந்தது. நாவால் துளாவியும், கைவிரல் நகங்களாலும் எடுத்துப் போட்டுக் கொண்டே கடமையை முடித்தேன். அதற்கடுத்த நாளும், இடது தாடை சற்று வலி கொடுத்ததால் தவிர்க்கலாம் என்று எண்ணியதை தவிர்த்து, மீண்டும் ஆரஞ்சுப் பழங்களை உரித்து சாப்பிட, சாப்பிட வலியின் அளவு வேகமாக அதிகரிக்கத் தொடங்கி இருந்தது. காபி அருந்தும் பொழுது மட்டும், அதன் வெப்பம் பட்டு மட்டுப்பட்ட வலிக்காக, வழக்கத்தை விட கூடுதல் காபி அருந்தினேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை வேளையில் வலி உச்சத்தை நெருங்கி இருந்தது. எங்கேயோ படித்த குறிப்பு நினைவுக்கு வர, சமையலறையில் கிராம்பை தேடி கடவாய்ப் பற்களுக்கு இடையே வைத்து அதக்கிக் கொண்டேன். மெதுவாக அழுத்திக் கடிக்கையில் இறங்கிய சாறு, எளிறுகளில் பரவ, வலி கண நேரத்தில் மறைந்து போனது. பரவாயில்லை என்று என்னையே பாராட்டிக் கொண்டிருந்த பொழுது, கிராம்பின் சாறு காலியாகி, அதன் உருவமும் தூளாகி இருந்தது. மீண்டும் அதே வலி. வரிசையாக ஏழு கிராம்புகள், அரைமணி நேரம் வலியை தாக்குப்பிடிக்க, பழையபடி அதே வலி, கூடுதலாக நாக்கின் ஓரங்கள், கடவாய்ப் பற்களின் எளிறும் பொத்துப் போய் இருந்தன. அரைகுறை தூக்கத்துடன் வலியை சுமந்து, நேற்று காலையில் கிரீன் வாக், மற்றும் கூழாங்கற்கள் கூட்டத்திற்கு தொடர்ந்து வருகை தரும் பல் மருத்துவர் ராஜண்ணாவை மொபைலில் தொடர்பு கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டே விஷயத்தை சுருக்கமாக சொன்னேன். இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிளினிக்கிற்கு, நேரில் வந்தால் தான், சரியாக சொல்ல முடியும் என்றார்.


விரட்டிய வலியால் காலை ஒன்பதே முக்காலுக்கு எல்லாம், கிளினிக் உள்ளே நுழைந்தேன்.
" முகம்  ஒரு பக்கம் வீங்கி இருக்க மாதிரி இருக்கே?"
" நீங்க போலி டாக்டர் இல்லைல, ஏன்னா, பொதுவா வீக்கம் இருக்குனு சொன்னாலும், அப்படியெல்லாம் இல்லையேனு தானே சொல்லணும்"

என்ற பதிலில் டென்சன் ஆன டாக்டர் முகத்தைப் பார்த்து, சற்று உள்ளே மிரண்டு, கடவாய்ப் பல்லை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பதறி,
"என்னை எப்படியாவது காப்பாத்திருங்க டாக்டர் , நெறைய வேலை பாக்கி இருக்கு, ப்ளீஸ் ... " என்றதும், சிரித்துக் கொண்டே பிரத்யேக இருக்கையில் அமர சொன்னார். ( நின்று கொண்டே வேலை பார்க்கும் மருத்துவர் - பல் மருத்துவர் :P )


விதவிதமாக, பற்களின் குறைபாட்டை கண்டறிய, சரி செய்யவென, ஏகப்பட்ட கருவிகளை அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்து, ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. ஆ காட்ட சொல்ல, வாயின் உள்ளே சிறிய கண்ணாடி மாதிரி தெரியும் கருவியை வைத்து, சிறிய ஊசி முனையைக் கொண்ட மற்றொரு கருவியால், இரண்டு பற்களுக்கு இடையே இருந்த ஆரஞ்சு துணுக்குகளை எடுத்த பின், அதை விட இன்னும் மெல்லிய ஊசியால் எடுக்க எடுக்க வந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, " உலகம் அழியப்போகுதுனு ஊர்ல இருக்கிற ஆரஞ்சை எல்லாம் சாப்பிட்டீங்களா?", என்று கேள்வி கேட்டார்.
(வாய் பேச முடியாத நிலையில் இது போன்ற கேள்வியைக் கேட்டவரிடம், சைகையில் பதில் சொல்ல முயற்சிக்கவில்லை. :P )


முதலில் சிக்கிய மெல்லிய துணுக்கு உள்ளே மாட்டிக் கொள்ள, தொடர்ச்சியாக சில துணுக்குகள் அடைத்துக் கொள்ள, நகத்தை உபயோகிக்கும் பொழுதெல்லாம், அது எளிறை அழுத்தி அழுத்தி உண்டாக்கிய வலியை, வழக்கம் போல, பட்டது போதாது இன்னும் வேண்டும் எனக்கு என்பது போல கிராம்பின் உதவியால் பொத்துப் போக செய்திருக்கிறேன். இறுதியில் ஸ்கேலிங் என்று பற்களை சுத்தம் செய்த பிறகு, முக்கால் வாசி வலி குறைந்திருந்தது.

எஞ்சி இருந்த பொத்துப் போனதால் ஏற்பட்ட வலியும் கூட இரண்டு  நாட்களுக்குள் சரியாகும் என்றவாறு மாத்திரை, மருந்து எழுதி கொடுத்தார். இது போன்று மீண்டும் நிகழாமல் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு, மாறுபட்ட அளவுகளில் அமைந்த மேற்பரப்பைக் கொண்ட ப்ரஷ் உபயோகிக்கும்படி ஆலோசனை வழங்கினார்.

"சரி, இந்த மாத்திரை எல்லாம் எங்க கிடைக்கும்?"
"எந்த மெடிக்கல் ஷாப் லயும் வாங்கலாம்."
"அய்யே, இந்த ப்ரிஸ்க்ரிப்ஷன் கீழே விளம்பரம் கொடுத்திருக்கிற கடைல தான் வாங்க சொல்லணும், அப்போ தான், அவங்க திரும்பவும் உங்களுக்கு இது மாதிரி நோட்டு அடிச்சுக் கொடுப்பாங்க', "
என்றதும்,
'"வீட்டில தேட போறாங்க, கிளம்புங்க "
"இருபது நிமிஷத்தில வந்திருவேன்னு சொல்லியிருக்கேன். சரி எவ்ளோ பீஸ்?"
அதெல்லாம் வேணாம், ரத்னவேல் அப்பா, உங்களை மகள்னு சொன்னா, என்னை மகன்னு சொல்றார். அப்புறமென்ன... பீஸ், எல்லாம் வேணாம். மாத்திரை மறக்காம சாப்பிடுங்க"
" எல்லாம் சரிதான், ஆனா, பேஸ்புக் ல, இலவசமா வைத்தியம் பார்க்கிற டாக்டர்னு வால்ல ஹாஸ்பிடல் அட்ரஸ் போட்டுருவேன், ஒ.கே?".
"பீஸ் கொடுத்திட்டுக் கிளம்புங்க".
"குட்...  :)

கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதை - இந்தப் பழமொழி செயல்முறையில் நான் தெரிந்து கொண்ட நாள். எப்படியோ இப்பொழுது இரண்டாவது வலியும் சரியாகிவிட்டது. :)