புதன், 17 ஏப்ரல், 2013

வாழ்க்கை - இம்சையான மகிழ்ச்சி, மகிழ்ச்சியான இம்சை!




முகநூலில் அதிகமாக கண்களில் தட்டுப்படுவது பொன்மொழிகள். சொன்னவர்கள், எவரும் பின்பற்றி இருப்பார்களோ என்று சந்தேகப்படும் அளவிற்கு கடினமாகவும் அதே நேரம் அருமையாக இருக்கும், வார்த்தைகளின் தொகுப்பு.

ஏதோ, வாசித்த, மறு நொடியில் நாம் அனைவரும் மாறிப்போவதை போல, நாமும் தொடர்ந்து அவற்றை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நான் பார்த்த வரையில், அந்த நொடியில் அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனைக்கு, அந்த நிமிடத்து மயிலிறகு வருடலாக, அந்தப் பொன்மொழி இருக்கிறது, அவ்வளவே.

வாழ்வைப்  பற்றி வித விதமான, வாக்கியங்களை பார்க்கும் நேரங்களில் எல்லாம் தோன்றுவது, மிகுந்த அழுத்தத்துடன் மனிதன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான் என்பதே. எத்தனை மணி நேரம் மின்சாரம் கூடுதலாக இருந்தாலும், எவ்வளவு தண்ணீர் கூடுதலாக சேமித்து வைத்திருந்தாலும், மன ரீதியில் நிம்மதியற்ற வாழ்க்கையில், எதையோ  துரத்திக் கொண்டிருக்கின்றோம் என்ற வகையில் மட்டும் நாம் எல்லோரும் பொதுவான மனிதர்களே.

எளிதில், எதற்கும் திருப்தி அடையாத மனநிலை. கொட்டிகிடக்கும் நிறைகளை தவிர்த்து குறைகளை பட்டியலிடும் மனது. ஒப்பிட்டுப் பார்த்தே கடத்தப்படும் காலம். மகிழ்ச்சி என்பதை, ஒன்றிரண்டில் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றை மட்டுமே வளையவரும் மனது, என்று கழிகின்றன நாட்கள்.

சரி, இது தான் வேண்டும் என்றால், பிடி என்று விரும்புவதைக் கையில் கொடுத்தாலும், உரியது என்றான பின், சீக்கிரமாகவோ அல்லது மிக சீக்கிரமாகவோ, சுலபமாக தாவி வந்தமரும் தவிர்க்க முடியாத சலிப்பு.

பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்துபவர்கள், எது ஒன்றை மையப்படுத்துவது என்ற எண்ணத்தில், வெளியில் மகிழ்ச்சியோடு இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள், நாள்பட, நடிப்பு அழகாக வசப்படுகிறது. ஒன்றோ, இரண்டோ மட்டும் பிரச்சனைகள் உள்ளவர்கள், உலகத்தையே தூக்கி சுமப்பது போல, கால நேரம் பார்க்காமல், சோக ராகம் இசைக்கின்றனர்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும், என்று தங்களை காக்கும், குறிப்பிட்ட அந்த ஒரே பிரச்சனையிலிருந்து  வெளிக்கொண்டு வரும் சக்தியைத் தேடி அலைந்து, இது தான் என்று முடிவு செய்து பின்பற்றுகின்றனர். சிறிது நாட்களிலேயே, திருப்தியுறாமல், அது சரியில்லை என்று மீண்டும் தேடுதலை தொடங்குகின்றனர்.

வசதி, தேவை அனைத்தையும் தாண்டி, அகம் அணையாத கங்காக, ஏதேனும் ஒரு கவலையை உள்ளே வைத்து, கனன்று கொண்டிருக்கிறது.

துரத்துதலும், தேடலுமாக தொடரும் வாழ்க்கையில், எது கைக்கு வந்தாலும், எதன் மடியில் நாம்  இருந்தாலும் ......... விரைவிலேயே 'என்ன வாழ்க்கை டா', என்று அலுத்துக் கொள்கிறோம்!


ஏதோ ஒரு நொடியில் துயரத்தை கொடுத்தக் காலம்
வேறு எதோ ஒரு நொடியில் மகிழ்ச்சியையும் பரிசளிக்கும் ...
சுழற்சி முறையில், காலத்தால் தரப்படுகிற மகிழ்ச்சியில் அதிக நேரம் திளைக்க முடியாத நம்மால், கஷ்டத்தை மட்டும் கால நேரமின்றி, அசை போட முடிகிறது...
(நம்மை விட, நம்மை இம்சிப்பவர் யாருமில்லை என்பது மட்டும் உறுதி)

உயிர்ப்பான வாழ்க்கைக்கு இறுதி மூச்சு வரை நம்முடன் இருக்கும் சலிப்பையும், அலுப்பையும் சோர்ந்து போகாமல் அனுபவிக்கப் பழகுவோம். எரிச்சலாவதைக் குறைத்து, பதிலாக குழந்தையின் குறும்பை ரசிப்பது போல ரசித்து, இன்னும் என்னென்ன விளையாட்டு அடுத்து, அடுத்து என்று எதிர் நோக்க முயற்சி செய்தால், அதே, வாழ்க்கை, அதே விளையாட்டு தான், எனினும் சற்று மேம்பட்டு ஆடலாம்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

hmm :) nice... Lets Play