திங்கள், 29 ஏப்ரல், 2013

மழை நம் அனைவருக்குமான வரம்!

ஆவியாக்கி எடுத்தது அனைத்தையும் அமுதமாக திருப்பி தரும் மழையைப்  பிடிக்காதவர்களைத் தேட தான் வேண்டும்.

எந்த ஒரு கடின சூழலையும், லேசாக்கி  தரும் சக்தி  மழைக்கு உண்டு. கடந்து  வந்ததில், வருத்தமானவற்றை ஓடவிட்டாலும், அதிலும், மனதிற்கு இதம் தருவதையே திரும்பிப்  பார்க்க செய்யும் மழை. ஓர் மழைக்கால காட்சியைப்
பின்னணியாகக் கொண்டு நினைத்துப் பார்க்கப்படுபவை அனைத்தும் சுகராகம் எழுப்புபவையாகவே  இருக்கின்றன. சோகமாக ஓரிரு வரிகள் வந்தாலும், மழைநீர் தேற்றி, ஆற்றுப்படுத்துகிறது.

அழுக்கும், தூசியும் படிந்துள்ள இடங்களை எல்லாம் சுத்தப்படுத்தி, ஊரையே ஒட்டு மொத்தமாக கழுவி விட்டது போல பளிச்சென்று இருக்கும் காட்சி மழை நின்ற பிறகு நம் கண்களுக்கு கிடைப்பது.
ஊர் மொத்தத்திற்குமான இலவச வாட்டர் சர்வீஸ் - மழை!

இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால், தாங்காத மோசமான சாலைகளை வைத்துள்ளதால், விவசாயத்திற்கு, தேவைப்படும் இடங்களில் தொடர்ந்து பெய்யட்டும் என எண்ணினாலும், ஏதோ ஒரு இடைவெளியில், சொட்டு சொட்டாக, சீரான சாரலாக, அடர்த்தியான மழையாக, பொழிவதைக் காண மனது ஏங்குகிறது. மனதையும் சுத்தப்படுத்தும் வல்லமையும் மழைக்கு உண்டு என்பதாலும் இருக்கலாம்.

வீட்டின் உள்ளேயோ, பேருந்திலோ பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது வரும் மழையை, சாளரங்களின் வழியாக சில துளிகளையாவது கைகளில் பெற்றுகொள்வதை, என்னுடைய பதில் மரியாதையாக நினைத்துக் கொள்வேன்.

பகல், இரண்டு மூன்று மணிக்கெல்லாம், மாலை ஆறு மணி போல் இருக்கும் குறைந்த ஒளியில், அன்னாந்துப் பார்த்தால், மேலே திரண்டிருக்கும் கரிய மேகங்கள், மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தும். கொட்டப்போகும் மழையை அப்பொழுதே கற்பனை பார்க்கத் தொடங்கும் மனது.

வீடுகளில், மழை நீரை மாடியில் இருந்து வடியும் குழாய் வழியாக பிடித்து, தேவைப்படுபவற்றைக்குப் பயன்படுத்தும் பொழுது, நிலத்தடி நீரை உபயோகித்து கிடைப்பதை விட, சிறந்த பலனை எப்பொழுதும்  தரும்.

சாதாரண மனிதனின் சாவின் அன்று பொழியும் மழை, அவனுக்காக அழுகிறது என்று மக்களைப்  பேச வைக்கிறது.






 பாறைகளிலும்,  தரையிலும் செடி கொடிகளின் வழியாகவும் வந்து இறங்கும் அருவியில் மனம்போல் நிற்பதற்கு  ஒப்பானது மழையில் நனைவது என்றாலும், முகத்தை வானத்தை நோக்கி நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் மழைத்துளிகள் அருவியை விடக் கூடுதல் நிறைவைத் தருகின்றன.

 மிக சாதாரணமாக ஒரு கோப்பை தேநீர்க்  குடிப்பதையும், பிடித்தவரோடு நடப்பதையும், சும்மா வேடிக்கைப் பார்ப்பதையும் கூட அழகுபடுத்தி விடும், திறன் வாய்ந்தவை மழை பெய்யும் கணங்கள்.வெளியில் உள்ள வெக்கையை மட்டுமில்லாமல், மனதில் உள்ள வெக்கையையும் குளிர்விக்கின்ற மழை நம் அனைவருக்குமான வரம்.

இடி, மின்னல் இல்லாத மாலை நேர மழையில் நனைதல் சுகம். அப்படி ஒரு நனைதலின் ஈரம் இன்னும் உலராமலேயே இந்த வரிகளைப் பகிர்கிறேன்!  :)

3 கருத்துகள்:

இந்திரன் சொன்னது…

கவிதை, உரைநடை ரெண்டுலையும் சேர்த்தி இல்லாம இருக்கே...!! அனுபவப் பகிர்வு நல்லாருக்கு :))

இந்திரன் சொன்னது…

கவிதை, உரைநடை ரெண்டுலையும் சேர்த்தி இல்லாம இருக்கே...!! அனுபவப் பகிர்வு நல்லாருக்கு :))

கீதமஞ்சரி சொன்னது…

வணக்கம். தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_24.html