வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

நானும் கேமராவும் மற்றும் பலரும்! :)

புகைப்படம் என்றாலே பலரையும் போலவே  சிறுவயதில் அதிகப் பிரியம். இத்தனைக்கும் நூறு போட்டோக்களில் ஒன்றில் தான் எனக்கே பிடிப்பது போல இருப்பேன். விஷேச வீடுகளில் புகைப்படக்காரர் பெரிய கதாநாயகனாக கருதப்பட்ட காலங்களில், போட்டோ எடுப்பதை அபூர்வமான வித்தை என்று நினைத்திருந்தேன். அட்டென்சனில் நின்று, சிரிப்பை அடக்கிக் கொண்டு, பெருமை பொங்க பல வீட்டு விஷேசங்களின் பழைய புகைப்பட ஆல்பங்களில் இன்றும் இருக்கிறேன். :)

பனிரெண்டாம் வகுப்பில் பேர்வெல் அன்று காலையிலேயே ஆரம்ப வகுப்பிலிருந்தே உடன் படித்த தோழி தமிழரசி கொண்டு வந்த கேமராவே, முதன் முதலில் நான் உபயோகித்தது. எங்கள் தோழிகளுக்கு நம்மை நம்பி கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற நினைப்பே, பிரிவுக்கு பதில் மகிழ்ச்சியை அளித்தது.

 'உள்ளே பிலிம் எல்லாம் இருக்குமாம் ல, போட்டியா?', என்றதற்கு, 'ம்ம், ப்ளாஷ் மட்டும் அண்ணன், அப்புறம் கொண்டு வர்றேனுச்சு', என்றாள்.
'என்னாது ப்ளாஷ் தனியாவா?? நெனச்சேன், உன்னை நம்பி கேமரா கொடுத்தப்போவே, கடைசில டப்பா கேமராவா?', என்றதற்கு சற்று ரோஷத்துடன் 'அதெல்லாம் நல்லா விழும்', என்றவள், திருப்பி திருப்பி கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பதினோரு மணி வாக்கில் அவள் அண்ணன் வந்து ப்ளாஷ் பொருத்தி, இரண்டு புகைப்படங்கள் எடுத்து விட்டதாக சொன்னாள்.

குறிப்பிட்டக்  கட்டத்துக்குள் உருவங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு,'அப்படி நில்லு இப்படி நில்லு, கையை சேர்த்து வை', என்றெல்லாம் சொல்லிக் கொண்டே மாறி மாறிப் புகைப்படங்கள் எடுத்து தள்ளினோம்.

மற்ற தோழிகள், ஆசிரியைகள், வகுப்பறை, மைதானம், தோட்டம் என்று சுற்றி சுற்றி 38 பிலிம் களையும் காலி செய்தோம்.
அடுத்த நாள் டெவெலப் செய்த பிறகு பார்த்ததில் பத்து போட்டோக்கள் வரை மட்டும் ஓரளவு தெளிவுடன், மீதி அனைத்தும் என்ன என்றே சொல்லமுடியாதபடியும் இருந்த லட்சணத்தைக் கண்டு, அந்த பத்தை மட்டும் பிரிண்ட் போட சொன்னோம். வாங்கிப் பார்த்தால், நான் எடுத்ததில் ஒன்றிரண்டில் முழுமையாக விழுந்திருந்தன உருவங்கள். அவள் என்னை விட கில்லாடி ஆதலால், உருவங்களை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மனம் போல  துண்டாக்கி, கட்டிடங்களையும், தோட்டத்தையும் கவர் செய்திருந்தாள். மூன்று பேர் மட்டும் எடுத்த புகைப்படத்தை கூட கழுத்துக்கு மேலே வெட்டியும், பக்கவாட்டில் மூன்றாவதாக நிற்பவளை காணாமல் போக செய்தும் 'இனி போட்டோன்னு நினைத்துப் பார்ப்பீங்க' என்று புகுந்து விளையாடி இருந்தாள். அதோடு, எங்களுக்கு சுயமாக புகைப்படம் எடுக்கும் ஆசை அடங்கிப் போனது.


நமக்கெல்லாம் வராத திறமை என்று சற்று ஒதுங்கி இருந்தப் பிறகு...... மூன்று ஆண்டுகள் கழித்து கேமரா கைக்கு வந்தது....

கல்லூரியில் இறுதி ஆண்டு , நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்காக, மேலூர் அருகில் உள்ள கிராமத்தில் பத்து நாட்கள் கூடி இருந்தோம். தினமும் மாலையில் ஊர் மக்களுக்காக கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு நாள் மட்டும், அருகில் முகாமிட்டிருந்த மாணவர்களில் சிலரை மட்டும் அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்த ஒருங்கிணைப்பாளர் கூறி இருந்தார். 
 
 
நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க காத்துக் கொண்டிருக்கையில்,
ஜீவா என்ற ஜூனியர் மாணவி கேமரா வை, கையோடு எடுத்து வந்திருந்தாள். எதுக்கு என்றதற்கு
'பிலிம் இல்ல, ப்ளாஷ் மட்டும் அடிக்கும், சும்மா ஒரு கெத்துக்கு ',
'அப்படிங்கிற....... ம்ம்...' என்று பெரிய மடத்தனத்திற்கு சம்மதித்தேன்.

பத்து மாணவிகள் தள்ளி பேராசிரியை அமர்ந்ததால், இவள் கவரை விட்டு, கேமராவை எடுக்கவே இல்லை. கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தது. யாரெனப் பார்த்தால், சில நாட்களுக்கு முன்பு எங்கள் நிகழ்ச்சியை கிண்டல் செய்த ஒருவன் தான் பிரதானமாக செயல்பட்டுக் கொண்டிருந்தான், 'எடு கேமரா வை', என்று அவள் யோசித்தும் வலுக்கட்டாயமாக  எடுக்க செய்தேன்.

அவன் வந்த காட்சியில், ஒரே நிமிடத்தில் ஏழெட்டு  ப்ளாஷ் கள் அடித்த குரூர திருப்தியுடன் இருக்கையில், பக்கத்திலிருந்து எனக்கு கொடு, என்று கேட்கும் குரல்களின் எண்ணிக்கை அதிகரித்தன. ஒரு மணி நேரத்தில், ப்ளாஷ்  போய் விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு இருபது மாணவிகள் வரை அடித்துத் தீர்த்தனர்.

இரவு உணவு முடிந்ததும், அனைத்து மாணவிகளும் உறங்குவதற்கு சென்ற பிறகு, எனக்கு சற்று அருகில் தனது விரிப்பில் அமர்ந்த பேராசிரியை, இன்னொரு பேராசிரியை 'அந்த பசங்க பொலம்பிட்டு போறாங்க, இத்தனை ப்ளாஷ் அடிச்சதுக்கு நாலு போட்டோவாச்சும் எங்களை எடுத்திருக்கலாம்னு', வருத்தப்பட்டு தெரிவித்துக் கொண்டிருக்கையில், 'இதில என்ன இருக்கு', என்று எண்ணியவாறே  உறங்கிவிட்டேன்.
 

அடுத்த நாள் காலை உணவிற்கு பிறகு கூடும் கூட்டத்தில் அன்றைய தினத்திற்கான எங்களின் பணி தெரிவிக்கப்படும். அதற்காக காத்திருந்தால், மிகுந்த கோபமான பார்வையுடன் வந்து அமர்ந்தார் பேராசிரியை .......வாயைத் திறந்ததும் சரவெடி தான்....... ' பத்து பசங்களை பார்த்திட்டா என்ன செய்றோம்னே தெரியாதா? இவ்ளோ அசிங்கமாவா நடந்துக்குவீங்க?, இப்படிப்பட்ட ஒழுங்கீனங்கள் எல்லாம் கேம்ப் க்கு வேணாம், இப்போவே வீட்டுக்கு போயிடுங்க', என்று தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வாட்டி எடுத்து விட்டார்.


எனக்கோ உள்ளே போயும் போயும் இதெல்லாம் ஒரு விஷயம்னு இதுக்காகவா தண்டனை என்று ஓடிக் கொண்டு இருந்தாலும், எங்க போனாலும் கூடவே கூட்டிட்டு போற மேடம், சமயங்களில் அவர் இருந்தாக வேண்டிய இடத்திற்கும் என்னை நம்பி அனுப்புபவர் இடம், இனி எனக்கு கெட்ட பெயர் தானோ என்று பயமும் ஒட்டி இருந்தது. 'யார் யார் எந்திரிங்க', என்று இரண்டாவது முறை எச்சரித்ததும், கேமரா சொந்தக்காரி உடன் நான்கு பேர் நிற்க, மீண்டும் வசவை ஆரம்பித்தார்.

 தாங்க முடியாமல் எழுந்தேன், 'உனக்கு கொடுத்த வேலைக்கு இன்னுமா கிளம்பாம இங்க இருக்க ....', என்று என்னை நோக்கி தொடர்ந்தவரிடம் இருநூறு மாணவிகள் கூடி இருந்த கூட்டத்தில் வழக்கம் போல கடைசியில் இருந்த நான் அருகில் சென்றேன், குரலைத் தாழ்த்தி அவரின் காதுகளில் 'கேமராவை எடுக்க சொல்லி, முதலில பத்து ப்ளாஷ் அடிச்சது நானே தான், விளையாட்டுத் தனமா தான் செய்தேன், அதையே இவங்களும் பாலோ செய்தாங்க. இவ்ளோ சீரியஸ் ஆகும்னு தெரியாது, மத்தபடி அவெங்கள எல்லாம் பிடிச்சிருந்தா பிலிம் போட்டு தானே எடுத்திருக்கணும்?  என்றேன்.


முகத்தில் இருந்த கடுமை குறைந்தது. 'சரி, நீ கிளம்பு', என்றாவறே, மூன்று அணிகளுக்கும் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லியவாறே, அவருடைய வேலைகளில் மூழ்கிப் போனார்.

ஜீவா பின்னாலே வந்து, 'என்ன சொன்னீங்க மேடம் கிட்ட', என்றாள்
'உண்மையை சொன்னேன்'. என்றேன்.

நீதி: 1. சரி எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சரியாக இருப்பதில்லை. 2. துணிஞ்சு ஏதாவது செய்தால், எதிர் வருவதை ஏற்றுக் கொள்ளும் திறன் வேண்டும், அப்படி இல்லை என்றால், நம்மை பற்றிய மாறாத நல்ல அபிப்ராயம் உள்ளவர்களிடம் மட்டும் சேட்டை செய்யலாம் :P














1 கருத்து:

thambu சொன்னது…

இரு வேறு கால கட்டத்தில் ஒரு பொருளின் ஈர்ப்பும் அதன் செயல்பாடு தரும் ஆனந்தமும் இதோடு ஒரு நீதிக் குறிப்பும். அருமை :)