ஞாயிறு, 14 டிசம்பர், 2014

டிசம்பர் ஆறு - இரவு ஒரு மணியிலிருந்து காலை வரை

கடந்த டிசம்பர் ஆறு, இரவு ஒரு மணியிலிருந்து காலை வரை மருத்துவமனையில் இருந்த சில மணி நேரங்கள்... 

பகல் நேரத்தைப் போலவே உரையாடியபடி சென்றனர் மருத்துவமனை ஊழியர்கள். நூற்றுக்கணக்கான பணியாளர்கள் எந்த சுணக்கமுமின்றி அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தனர். வெளிநோயாளிகள் இல்லாததால் சற்று வெறிச்சிட்டிருந்தது மருத்துவமனை. பீ.பீ. குளம், வலது புற திருப்பத்திலிருந்து PTR வீடு வரையிலான அந்த சாலை முழுவதும் சீரான வெளிச்சத்துடன், மாலைப் பொழுதைப் போலவே காட்சியளித்தது.  சாலையின் எதிர்புறத்தில் இருந்த வடமலையான் மருத்துவமனையின் இன்னொரு பிரிவின் வாசலின் முன்னே  இருந்த சின்னக்கடையில் ஓரிரு மணி நேரங்களுக்கு ஒரு முறை காபி வாங்கி அருந்திக் கொண்டிருந்தேன். உள்ளே தொடர்ச்சியாக அமர்ந்திருந்த இருக்கை, சௌகர்யமாக இருந்தாலும், எழுந்து நிற்பதும், நடப்பதும், அந்த நேரத்தில் பெரிய இளைப்பாறலாக இருந்தது. மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்து காம்பௌண்ட் சுவர் அருகே நின்ற பொழுது உள்ளே செல்லும் பனியின் வேகம், நர்ஸிடம் வாங்கிய பஞ்சை காதில் அடைத்துக் கொள்ள செய்தது. 

இரவை பெரிய அளவில் துளையிட்டு மிதமான வெளிச்சத்தை மின் விளக்குகள் அந்தப் பகுதி முழுவதும் பரப்பி இருந்தன. முன்னால் நின்றிருந்த காவலாளிகள் தங்களுக்குள் ஏதோ தகவலைப் பகிர்ந்த நிமிடத்தில் அவரவர் இடத்திற்கு திரும்பி இருந்தனர். அருகில் இருந்த ATM காவலாளி பத்தடிகளுக்குள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது, அவரது தூக்கத்தை தொலைப்பதற்காக இருக்கலாம். கூர்க்காக்கள் தவிர்க்கின்ற சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். என்னுடைய ஆச்சரியம் இரவில் சரியான தூக்கம் இல்லாதது தான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணம் என கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு பல்வேறு பட்ட வயதினர் வெகு சாதாரணமாக தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்ததை பார்த்ததும், இவர்களின் உடல்வாகு எப்படி ஏற்றுக்கொள்கிறது என்ற சந்தேகம் எழுந்தது.
காபி குடிக்கும் இடத்தில், ஒரு முறை, டீ குடித்துக் கொண்டிருந்தவர் மிகச்சிறிய ஒலியில், மொபைலில் கேட்டுக்கொண்டிருந்த பிடித்தப் பாடலை, ரசிக்கும் மனநிலை சுத்தமாக இல்லை. மஞ்சள் விளக்கின் ஒளியில் தெரிந்த மரங்களின் அழகோ, வானத்தில் மிதந்த நிலாவோ, கை, முகம் என உள்ளே ஊடுருவிக்கொண்டிருந்த பனியோ வசீகரிக்கவே இல்லை. சால்வையை இறுக்கப் போர்த்திக்கொண்டு, பகலில் பரபரப்பாக இருக்கும் அந்த சாலையின் பேரமைதியுடன் நின்று கொண்டிருந்தேன், சில மணி நேரங்களுக்கு முன்பு கடந்த நிமிடங்கள் உள்ளே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தது. 

# இப்போ... யாவும்; யாவரும் நலம். :)  

7 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி...

மதுரை வடமலையான் மருத்துவமனை வீதியில் நின்று ரசித்ததும் அழகு.

ரிஷபன் சொன்னது…

எப்போ புறச் சூழலை அனுபவிக்கிறீங்களோ.. அப்போ.. நீங்க எப்பவுமே நல்ல உடல் நலத்தோடதான் இருப்பீங்க !

ezhil சொன்னது…

ரசிக்கும் மன நிலையில் இல்லாத போதும் இத்தனை விஷயங்களை கவனித்திருக்கிறீர்களே...

சபீரம் சபீரா சொன்னது…

வாழ்க்கையை வரிசைப்படுத்துபுபவர்கள் நலமுடன் என்றும் இருப்பர், தனக்கான ஒரு நேரத்தில் மற்றவர்களின் ஓடுதளத்தை கூர்ந்து கவனிப்பது யாருக்கு வரும்,பிறரின் எண்ண ஓட்டம் தனக்கான தளமாக ஆக்கிக்கொள்வதும் ஒரு மனவலிமையே வாழ்க தோழி,

சபீரம் சபீரா சொன்னது…

வாழ்க்கையை வரிசைப்படுத்துபுபவர்கள் நலமுடன் என்றும் இருப்பர், தனக்கான ஒரு நேரத்தில் மற்றவர்களின் ஓடுதளத்தை கூர்ந்து கவனிப்பது யாருக்கு வரும்,பிறரின் எண்ண ஓட்டம் தனக்கான தளமாக ஆக்கிக்கொள்வதும் ஒரு மனவலிமையே வாழ்க தோழி,

'பரிவை' சே.குமார் சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...