புதன், 18 மார்ச், 2015

பெங்காலி மாதிரியா தெரியுது?

கடந்த சில நாட்களுக்கு முன் சென்ற சுற்றுலாவில், கேங்டாக்கிலும், டார்ஜீலிங்கிலும், கடைகளில் ஏதேனும் பேச ஆரம்பிக்கும் போது, ஹிந்தி ஆங்கிலத்தை தவிர்த்து நேரடியாக பெங்காலியில் என்னிடம் பதில் சொல்லவோ, விளக்கவோ ஆரம்பித்தனர். என் பதிலைக் கேட்ட பின்னர் தான் பொதுவாக, ஆங்கிலத்திற்கோ, ஹிந்திக்கோ மாறும் உரையாடல் தொடர்ந்தது. இது போன்ற ஓரிரண்டு நிகழ்வுகள், சென்னையில் நாங்கள் இருந்த பொழுதும் நிகழ்ந்தது உண்டு.  அதிலும் சிக்கிமில் ஒரு உணவு விடுதியில் வங்காள மொழியில் பேசிய மேலாளர் நான் மதுரை என சொல்லியதை சந்தேகம் முழுக்க அகலாத விழிகளுடன் இறுதியில் ஏற்றுக் கொண்டார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கொல்கத்தா விமான நிலையத்தில் மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழலில் அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றேன். முகம் அலம்பியபடி மூன்று பெண்கள் பேசிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த வாஷ் பேசின்களில் இருந்து சில அடிகள் தொலைவில் இருந்த கதவை நோக்கி சென்ற பொழுது, அதன் அருகே தரையை துடைத்து விட்டுக் கொண்டிருந்த பெண்மணி, புன்னகை பூத்த முகத்துடன் என்னவோ சொன்னார். அரையடிக்கும் மேலே ஆரம்பித்த அக்கதவின் கீழே சோப்பு நுரையாக இருந்தது. ஒரு வார்த்தை கூட புரியாத அந்த வசனத்தில், நானாக யூகித்தது, அதன் உள்ளேயும் கழுவி விட்டுவிடுகிறேன், சற்று பொறுக்கவும் என. ஓரிரு நிமிடத்தில் மீண்டும் அந்தப் பெண்மணி, உள்ளேயும் சுத்தம் செய்துவிட்டு அதே பெங்காலியில் ஏதோ என்னிடம் சொன்னாள். இப்பொழுது போகலாம் என அவள் சொல்வதாக சுயமாக மொழி பெயர்த்து உள்ளே சென்ற நொடியில், முகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி தமிழில், ' பார்த்தியா, தெரியாம நாம உள்ள போனதும், நம்ம கிட்ட இந்த பொம்பளை என்னா கத்து கத்துச்சு, இவங்க ஆளுகனதும் எப்படி அமைதியா பேசுது, என்று தொடர்ந்தவளுக்கு 'அவங்கவங்க ஊர்ல இருந்தா அவங்கவங்களுக்கு கிடைக்கிற மரியாதை தனி தான்', என இன்னொருத்தி சொல்லிக் கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டே வெளியே வந்தவுடன், ' நான் மதுரைக்காரி', என சொல்ல நினைத்து அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன். பதிலுக்கு குழப்பத்துடன் புன்னகைத்தபடி, முகத்தை சரி செய்தவரை போதும் என வேகமாக கிளம்பி வெளியேறினர். சற்று பெரிய கண்கள், எடுப்பற்ற மூக்கு, படர்ந்த முகம் இவர்களை குழப்பி, என்னிடம் வங்காளத்தில் உரையாட வைத்திருக்கலாமோ... என்னவோ... :)

3 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை மகளுக்கு வாழ்த்துகள்.

Ezhil.V சொன்னது…

நீங்க எழுதினப்புறம் பார்த்தா அப்படி தோன்றுகிறது....

thambu சொன்னது…

ஏற்கனவே மிதுன் சக்ரபோர்த்தி , கொன்கனா சென் போன்றவர்கள் படங்களில் தமிழர்களாக நடித்தவர்கள் தானே. எனவே நீங்களும் வங்காளிப் படங்களில் கலக்கலாம் போல :)
சற்று நிதானமாக யோசிக்கையில் எனக்கென்னவோ தமிழர்கள் மற்றும் கிழக்குக் கரையோர மண்ணின் மனிதர்களுக்கு உருவ அமைப்பு மற்றும் நிறம் போன்றவைகளில் ஒரு ஒற்றுமை இருப்பது தெரிகிறது. இந்தப் பதிவில் தன் இனம், குழு என தோன்றும் பொழுது மனிதரின் செயல்பாடு மற்றும் தன்னைப் புரிந்து கொள்ள முடியாது என்கையில் மனிதரின் மனதிலிருப்பது அப்படியே வார்த்தைகளாய் வெளிவருவதும் பின்னர் புரிந்திருக்குமோ என்ற எண்ணத்தில் வரும் பதட்டமும் மிக இயல்பாய் பதிந்துள்ளீர்கள். கனிவான எண்ணம் அதனால் உண்டாகும் இணக்கமான புன்முறுவல்,அதனோடு சேர்ந்து வெளிப்படும் அதட்டல் இல்லாத சப்தம், கருத்தைப் புரிந்து கொள்ள மொழி சில சமயங்களில் தேவையே இல்லை. பதிவு வழக்கம் போல் கடந்து வந்த பாதையில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை அசை போடா வைத்தது . மகிழ்ச்சி :) :) :)