செவ்வாய், 8 அக்டோபர், 2013

மாத்திரை - உலகத்திலேயே பிடிக்காத ஒன்று!



பொதுவாக அதிக ரசாயனம் கலந்த சோப்புக்கட்டி பயன் படுத்தும் பொழுது, தோலின் வெளிப்புறத்தில், வெடிப்புகள் ஏற்படும் நிரந்தரப் பிரச்சனையை வைத்துக் கொண்டடே, அவசரம் என்று கையில் கிடைத்த சோப்பினைப் பயன்படுத்தி ஓரிரு துணிகளைத் துவைத்தேன். சிறிது நேரத்தில் வலது கை விரல்களின் இடுக்குகளிலும், மோதிர விரல் மற்றும் நடு விரல்களிலும் சின்ன சின்ன வெடிப்புகள் தோன்றின. விரல்களை எளிதாக மடக்கவோ, விரிக்கவோ முடியவில்லை. இலேசாக நீர் வேறு கசிந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பொறுத்துக் கொள்ளக் கூடிய வலி தான் என்றாலும், சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் வீட்டு வேலைகளை ஒரு அளவுக்கு தான், உடன் குப்பை கொட்டுபவருக்கு பகிர்ந்து அளிக்க முடியும். நேற்று முன்தினம் எனக்கு சமைத்து அளிக்கப்பட்ட உணவு, அன்று மாலையே மருத்துவரை நோக்கி ஓட வைத்தது. ( பின்னர் தான் தெரிந்து கொண்டேன், மருத்துவமனைக்கு செல்ல வைப்பதற்காகவே குடும்பமே சேர்ந்து செய்த தந்திரம் என்று)


அப்படி என்ன ஆஸ்பத்திரி பிடிக்காமல் போனது என்றால்......எத்தனை நவீன வசதி செய்யப்பட்டு இருந்தாலும்,  அறைகளில், ஏதோ ஒரு வாசனை சுற்றி சுற்றி வந்து இம்சிப்பதாலேயே, கூடிய வரையில் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து விடுவேன். அதிலும், ஊசி, கூட பரவாயில்லை,  பிடித்த பல வண்ணங்களில் இருந்தாலும், இந்த மாத்திரையை விழுங்குவது எளிது தான், ஆனால் குறைந்தது, இரண்டு நாட்களாவது தேவையே இல்லாமல் ஒரு கசப்பு சுவையுடன், தடித்துப் போனது போல இருக்கும் நாக்கை எப்பொழுதும் பிடிப்பதில்லை. எதற்காக மாத்திரை சாப்பிடுகிறோமோ அந்த வலி மறைந்தாலும், பாடாய்ப்படுத்தும் வாய்க்காகவே மாத்திரை சாப்பிடாமல் வலியைப் பொறுத்துக் கொள்வேன்.
ஒரு வழியாக மாலை ஆறு மணிக்கு, துணிச்சலைத் திரட்டி கிளம்பினேன்.
ஞாயிற்றுக் கிழமையில் கோரிப்பாளையம் பகுதியில் இருந்த எளிய ஒரு மருத்துவமனையில் இருந்த ஒரே ஒரு தோல் சிகிச்சை மருத்துவரை சந்திக்க வந்தாயிற்று. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்று இருந்தேன் அங்கு. நிறைய மாற்றங்களைக் காண முடிந்தது. ஒரே மாதிரி வண்ணமயமான சீருடை அணிந்தப் பெண்களில், சிலர், வரிசையாக இருந்த கணினிகளின் முன்னால் அமர்ந்தவாறே, என்னைப்பற்றிய விவரங்களை ஒருத்தி பதிவு செய்ய, இன்னொருத்தி,'ஸ்பெஷல் ஆ, ஆர்டினரி யா', என்று கேட்டாள். 'என்ன வித்யாசம்', என்றேன். 'ஸ்பெஷல் ன்னா , கன்சல்டிங் பீஸ் 250 ரூபாய் ஒரு மணி நேரத்தில டாக்டரை பாக்கலாம் . ஆர்டினரி ன்னா, 100 ரூபாய் கட்டணத்தில் மருத்துவரை பாக்க மூணு மணி நேரம் கூட ஆகும் ', என்றார். இடத்தை விட்டு கிளம்புவதே முதன்மை நோக்கமாக இருந்ததால், 250 ரூபாய் கட்டணம் செலுத்தினேன். 'ரொம்பதான், நம்ம ஊரு முன்னேறிடுச்சு', என்று மனதுக்குள் நினைத்தவாறே, மருத்துவரை சந்திப்பதற்காக காத்திருப்போருக்கு மத்தியில் அமர்ந்தேன்.

அமர்ந்திருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் முன்னால், சற்றே உயரத்தில் முன்பு பாட்டாக பாடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் திரையில், ரயில்வே ஜங்கஷனில் பார்ப்பது போல, நோயாளிகளை  இரண்டு குழுக்களாகப் பிரித்து எண்களின் வரிசை இருந்தது. முதல் வரிசையில் இருந்தது எனது பெயர். அதன் பிரகாரம்,  நான் மூன்றாவதாக உள்ளே செல்ல வேண்டும். பக்கத்தில் உள்ள வரிசையில் வெறும் பத்து பேர்கள் தான் இருந்தனர். அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றினாலும், புதிதாக ஆட்கள் வரவர பத்து இருபதாகலாம், என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சீருடையில் இருந்தவர்களில் ஒருவர், என்னை அழைத்து எடையையும், இரத்த அழுத்தத்தையும் சோதித்து குறித்துக் கொண்டார் ... எடை தான் அவ்வப்பொழுது மாறிக்கொண்டே இருக்குமே தவிர, இந்த BP எப்பொழுதும் 110/80...
கடந்த சில வருடங்களாக ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. கோபப்படுவதற்கும் இரத்தஅழுத்தத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது என் அனுபவம்....

பத்து நிமிடங்களில், பெயரை சொல்லி அழைத்ததும் உள்ளே சென்றேன். இருக்கையில் அமர்ந்ததும் ஒரு பெரிய, பளிச் வெள்ளை விளக்கிற்குப் பின்னால் கொஞ்சம் டல்லாக தெரிந்த மருத்துவரிடம், வரிசையாக நடந்ததை எல்லாம் சொன்னேன். விரல்களைப் பார்த்தார். அப்போ, 'அந்த சோப் தான் எல்லாத்துக்கும் காரணம்', என்றார். (அந்த நேரத்தில் சோப்பை எதுவுமே செய்ய முடியாத என் மனநிலையை கஷடப்பட்டு சமாளித்துக் கொண்டிருந்தேன் ) ' நீங்க இனி ரெண்டு வாரத்துக்கு கெமிக்கல் கலந்ததை யூஸ் பண்ணாதீங்க' என்றாவாறே யோசித்து சில மருந்து வகைகளின் பெயரை சொல்ல சொல்ல, குறித்துக் கொண்டே வந்தார் ஒரு நர்ஸ். காலமெல்லாம் நான் அப்படி தான் இருந்துவருவதாக கூறியவாறே எழுந்த என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவரிடம், ' தேங்க் யூ டாக்டர்', என்றவாறே நகர்ந்தேன். 




















வெளியே வந்து மருந்துக் கடையில் கேட்டால், ப்ரிஸ்க்ரிப்சன் சீட்டில் இரண்டு வாரத்திற்கு மாத்திரைகள் எழுதப்பட்டு உள்ளன என்றனர். ஒரு வாரத்திற்கு தேவையானதை மட்டும்  தரும்படி கேட்டு வாங்கிய பின், பார்த்தால், அதுவே 300ரூபாயைத் தாண்டி இருந்தது. இரவு உணவை முடித்துக் கொண்டு, இரண்டு மாத்திரைகளை விழுங்கியதும், மின்னல் வேகத்தில் ஒட்டிக்கொண்டது கசப்பு. தூக்கம் கண்களை அழுத்த, மீதி மாத்திரைகளைப் பார்த்தேன். பைசா போனாலும், பரவாயில்லை என்று தள்ளி வைக்க இது வரை என்னால் முடிந்த ஒன்றே ஒன்று இந்த மாத்திரைகள். நாளைக்கு என்னை விட்டு போயிடனும் என்று அவற்றிடம் பேசிவிட்டு, கொடுத்த ஆயின்மெண்ட் ஐ விரல்களில் தடவியவாறே, தூங்கி விட்டேன். நேற்று காலையில் வெடிப்புகள் ஓரளவு மறைந்து இருந்தன, தொடர்ந்து ஆயின்மெண்ட் மட்டும் தடவி வர, மாலையில் முற்றிலும் காணாமல் போய் பழையபடி விரல்களை எளிதில் விரிக்க மடக்க முடிந்தது. ஆனால், ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட்ட மாத்திரைக் கசப்போ, சற்று முன் தான் வெளியேறியது. இப்போ... நலம்! :)

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்பாடா... நலம்...! வாழ்த்துக்கள்...

thambu சொன்னது…

இன்றைய மருத்துவமனை சூழலை அழகாக விளக்கியுள்ளீர்கள் தீபா. வழக்கம் போல் வெளிப்படுத்தப்பட்ட மனநிலை வாசகரும் உணர்ந்து கொள்ளும் விதமாய் சரளமான நடை. சற்று இடைவெளி அதிகமானாலும் பதிவு அருமை :)

thambu சொன்னது…

இன்றைய மருத்துவமனை சூழலை அழகாக விளக்கியுள்ளீர்கள் தீபா. வழக்கம் போல் வெளிப்படுத்தப்பட்ட மனநிலை வாசகரும் உணர்ந்து கொள்ளும் விதமாய் சரளமான நடை. சற்று இடைவெளி அதிகமானாலும் பதிவு அருமை :)