திங்கள், 29 ஜூலை, 2013

மூழ்கிப்போதலும், வெளியேறுதலும்.......



ஏதேனும் ஒன்றில் மூழ்கி போய் வெளியே வர திணறும் நாட்களை கடக்காதவர்கள் என ஒருவருமே இல்லை எனலாம். அந்த ஏதோ ஒன்று, நட்பாகவோ, பழக்கமாகவோ, ஏன்........ பேஸ்புக் காக கூட இருக்கலாம். எனது அறிவுக்கு எட்டிய இது பற்றிய மிக சிறிய அலசல்.

நாம் கரைந்து போவதற்கென்று எத்தனையோ செயல்கள் இருந்தாலும், அந்த 'ஏதோ ஒன்று', மிச்சம் இருக்கும் இடைவெளியை நிரப்புவதோடு அல்லாமல் அதன் எல்லையை நீட்டித்துக்கொண்டே செல்கிற பொழுது, நம் இயல்பு வாழ்க்கையை சிக்கலாக்கி விடுகிறது.

முன்னறிவிப்பின்றி வந்து நிற்கும் அந்த 'ஒன்றுடன்' பயணிக்கும் நேரமானது, ஒரு நாளின் வெறும் ஒரு மணி நேரமாக இருக்கலாம். அதே அளவிலான நேரம் தினந்தோறும் தொடரவும் செய்யலாம். மீதி இருபத்து மூன்று மணி நேரங்களும் அந்த ஒரு மணி நேரத்தைப் பற்றியே சிந்திப்பதற்கும், சிலாகிப்பதற்கும் மட்டுமே என்று மாறிக் கொண்டே வரும் மோசமான நிலையில், பிரச்சனை வேர் ஊன்ற தொடங்கி விட்டது என உறுதியாக நம்பலாம். சமயங்களில், இந்த ஒன்றை விட, பல மடங்கு உபயோகம் தரும் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அந்த ஒரு மணி நேரமே பெரும் பிரியத்திற்கு ஒன்றாக மாறிப் போய் நிற்பதையும், அதற்கென நேரம் ஒதுக்க முடியாமல் தடுதல் செய்ததாக நினைத்த சகலத்தையும் திட்டுத் தீர்ப்பதை, இந்த பிரச்சனையின் உச்சம் எனலாம்.

வண்டி சீராக போகும் வரை, எல்லாம் சுகமயம்.

இந்தப்பயணத்தில், விரைவாகவோ அல்லது மிக விரைவாகவோ சரி செய்ய முயன்று தோற்றுப் போகும் பிரச்சனைகள் நம்மை நிலை தடுமாற வைக்கும். முரண் ஏற்படும் நேரங்களில் வெளியேற எத்தனிக்கையில் சந்திக்கிற வலி, அடுத்த வேறு ஏதேனும் ஒன்றுடன் சிக்கிக் கொள்வது வரை தொடரலாம். :)

வயது கூடியவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும், ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதற்கு என்று, ஒரு உதாரணம் முன்னமே இருக்கலாம். பொதுவாக ஒப்பீட்டில், சோகமாக இருக்கும் பொழுது கடந்தே சிறந்தது என்றும், மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது கடந்து கொண்டிருப்பதே சிறந்தது என்றும் தோன்றலாம். :)

சற்று உற்று நோக்கினால்.......... மிகச்சரியானவை என்று எதுவுமே இல்லை, என்று தெரிய வரலாம்.

முயற்சிகள் தோல்வியடைந்து சரியாக கையாள தெரியாமல் உடனடியாக வெளியேறியே ஆக வேண்டுமென்றால், இனி வருவது, எத்தகைய பெரிய லாபமாக இருந்தாலும்  தேவையேயில்லை என்று, இது வரை பட்ட கஷ்ட, நஷ்டத்துடன் போதும் என்று விடை கொடுப்பதே, சிறந்த நிவாரணம் என தோன்றுகிறது.


நேரத்தை கடத்த ஏதேதோ போர்வையில் நம்மை இழுத்துப் போட்டுக் கொள்ள வரும் கரங்களை, தகுதிப்படுத்தியே உள் நுழைய அனுமதிக்கிறோம். பலவற்றை ஆரம்பகட்டத்திலேயும்,  மிக சிலவற்றை, பாதியிலேயும் ஒதுக்கித் தள்ள முடிகிறது. தேர்ந்தெடுத்த அந்த ஒன்றிரண்டின் மீதும் முட்டிக் கொண்டு வெளியேறுகையில் .............. நம் சுயத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கிற நிம்மதி ஏற்படுகிறது.
( நாமே நம்மளை மதிக்காட்டி, வேற யாரு மதிப்பா?  :)  )

ஒரே ஒரு முறை தான் வாழ்க்கை. இருக்கும் வரை எதற்கும் கட்டுப்படாமல் இருக்கும், சுதந்திர உணர்வே சுய அடையாளமாக இருக்க வேண்டும் என்பதே என்னின் ஆகப் பெரும் விருப்பம். அதற்கான பயணத்தின் முயற்சியில் இருக்கிறேன்...









கருத்துகள் இல்லை: