சனி, 11 மே, 2013

வலி பொதுவானது!

ஊசியால் உள்ளே இருந்து குத்திக் கிளறுவது போல புருவங்களின் உட்புறம் ஆரம்பித்த வலி, மெதுவாகப்  பரவி நெற்றிப்பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்து அப்படியே, காதோரங்களின் பின்னே இறங்கி பிடணி வரை பரப்பியிருந்தது அதன் சாம்ராஜ்ஜியத்தை. நொடிகள் கரைந்து கொண்டிருக்கையில், தலையில்  அங்கங்கே ஓங்கி அடித்தது போல இருந்த வலியை கவனித்துக் கொண்டிருந்தாள் நிலா. ஒரு பக்கம், மூக்கிலிருந்து  வழிந்து கொண்டிருந்த நீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே இருந்தது வலது கை. முன்பு இருந்த சைனஸ் தொந்தரவு, நன்கு தூசு தட்டி, கூடுதல் மெருகுடன் மறு ஒளிபரப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தது. வீட்டிலிருந்த வெளிநாட்டுத் தைலத்தைப்  பாதி காலி செய்தும், மருந்துக் கடையில் வாங்கிப் போட்டுக் கொண்ட மாத்திரைகளை விழுங்கியும், வந்துப் பார் என்று சவால் விட்டுக் கொண்டிருந்தது வலி.

சரி, தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று படுத்தால், வலிக்கு சற்றும் குறையாமல் கடினமானப் போட்டி கொடுத்துக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது தூக்கம். மீதமிருந்த தைலத்தை நெற்றியில் தேய்த்துக் கொண்டிருந்த பொழுது, இரண்டு நாட்கள் நண்பரின் உறவினர் வீட்டின் விஷேசத்திற்கு வெளியூர் செல்ல வேண்டும் என்று சொன்ன கணவனை,
'அவ்ளோ தூரம் போகணுமா, அதுவும் நண்பர் திருமணம் என்றால் கூட பரவாயில்லை', என்று நிலா சொன்னது தான் தாமதம், போனது, வந்தது என்று இருக்கிற எல்லாத்தையும் இழுத்து,
 ' எப்ப, பாரு நீ இப்படித்தான், உனக்குனா மட்டும் ஆடுவ உன் இஷ்டம் போல', என்றவனை, எதுவும் எதிர்த்து பேசவோ, தன்னிலை விளக்கமோ கொடுக்க விடாமல்  வேடிக்கை மட்டும் பார்க்க செய்து பிரகாசமாக ஒளிர்ந்துக் கொண்டிருந்தது வலி.

புதிதாக வந்த ஒரு வலி, ஏற்கனவே உள்ள வலியின் வீரியத்தை சற்றுக் குறைக்கலாம், ஆனால் சுத்தமாக மறைய செய்ய திறன் எல்லாம் அதற்கு கிடையாது. இமைகளை மூடக் கூடப்பிடிக்காமல், எத்தனை நேரம் படுக்கையில் கிடப்பது என்று எழுந்து, மாடிக்கு வந்தால், அத்தனைப் பெரிய வானம், நட்சத்திரங்கள், மிதமானக் காற்று, உறங்கும் தெருவின் அமைதி என்று எதிர் வினையாற்றாத இயற்கையின் அற்புதங்கள் இவளின் கரங்களை பற்றிக்கொண்டன. நடக்கவும், மாடியில் உள்ள சுவற்றில் அமரவும் என்று சில மணி நேரங்கள் மறைந்த நிலையில், வலி பழகிப் போய் இருந்தது. காயத்தில் மாறுதல் ஏற்படவில்லை என்றாலும், பழகி விட்டால், கண்ணீரை, கண்கள் கீழே இறங்க செய்வதில்லை.

தாளிட்டுப் படுக்கையில் விழுந்த பொழுது, இன்னும் ஒரு சில மணி நேரங்களில் விடியப் போகிறது, மீண்டும் களத்தில் இறங்க வேண்டும். மறக்காமல், நாளை மருத்துவரைப் பார்க்க வேண்டும். தெம்பில்லாமல், ஆடி சோர்ந்து போவதை விட, புத்துணர்ச்சியை மட்டும் இழக்காமல், வருவதை எதிர்கொண்டு தோற்று போவது மேல் என்று தனக்குள் சொல்லியபடியே தூங்கிப்போனாள்.

இது வரை, வாசித்தது, நம்மிடையே வசிக்கும் ஒரு நிலாவின் கதை.

இவனுக்கா கஷ்டம் என்றெல்லாம் எளிதாக எண்ண வேண்டாம். ஏனென்றால், கஷ்டத்திற்கு கண் தெரியாது.

இவனுக்கு தானே, நன்றாக வேண்டும் என்று குதூகலிக்கவும் வேண்டாம், கண் தெரியாத அதே கஷ்டம், நம்மை  எந்த நொடியும் தாவிக் கெட்டியாகப்பிடித்துக் கொள்ளலாம்.

ஆறுதலான வார்த்தைகள், சரியான நேரத்தில், சரியான நபருக்கு தரப்படுமானால், அதுவே பாதி மருந்திற்கு சமம். அதே நேரத்தில், வருகின்ற எல்லா ஆறுதல்களையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது நம் மனம். ஒரு வேளை, நம்மை பலவீனமானவராக எண்ணி விடுவரோ என்ற அச்சத்தின் காரணமாகவும் மறுக்கலாம்.

பிரியத்துக்கு உரியவர்களிடம், தன் குறைகளை, பலவீனங்களை, வருத்தங்களைப் பட்டியலிடத் தயங்குவதில்லை நம் மனது. ஆறுதல் தேவைப்படினும் அதைப் பொருட்படுத்தாதப் பெருவாழ்வு ஞானிகளுக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம்.

வலியை குறைக்க முடியாவிட்டாலும், அதிகரிக்க செய்யாமலும், உருவாக்காமலும் இருக்கவாவது முயல்வோம்.

முடிந்த அளவு மருந்தாய் இருப்போம்.







4 கருத்துகள்:

விச்சு சொன்னது…

அருமை.. வாசிக்க நன்றாக இருந்தது.//ஆறுதலான வார்த்தைகள், சரியான நேரத்தில், சரியான நபருக்கு தரப்படுமானால், அதுவே பாதி மருந்திற்கு சமம்.//

perumal karur சொன்னது…

உங்கள் எழுத்து மொழி வாசிக்க சற்று ( எனக்கு ) கஷ்ட்டமாக உள்ளது . அது என் குறை தான் . ஆனால் நன்றாக உள்ளது.தொடர்ச்சியாக வாசித்தால் உங்கள் மொழி புரிபடும்.. தொடர்சியாக வாசிக்க முற்படுகிறேன் .

தயவு செய்து மின்னஞ்ச்சலில் பதிவுளை பெற்றுக்கொள்ள வசதி ஏற்ப்படுத்துங்கள் ப்ளீஸ்

தீபா நாகராணி சொன்னது…

உங்களது பேஸ் புக், இன்பாக்ஸ் பார்க்கவும். ப்ளாக் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளவில்லை. இப்போ வரை தெரிந்தது, தட்டுத்தடுமாறி தப்பில்லாமல் போஸ்ட் செய்றது, கமெண்ட் பில்ட்டர் செய்து அனுமதிப்பது. அவ்ளோதான். மற்ற வசதிகள் கற்றுக்கொண்டு, ஒரு நாள் செயல்படுத்துகிறேன்.
(ஆமா...... அவ்வளவு நல்லவா இருக்கு என் எழுத்து... (என்னத்த கன்னையா ஸ்டையில் ல வாசிக்கவும் @Perumal Karur ):P

Rathnavel Natarajan சொன்னது…

எதிர் வினையாற்றாத இயற்கையின் அற்புதங்கள் = அருமையாக மொழியைப் பயன்படுத்துகிறீர்கள். இன்னும் நிறைய கற்றுக் கொள்கிறேன். அருமையான பதிவு. வாழ்த்துகள்.