வியாழன், 16 மே, 2013

முதல்வர் ஜெயலலிதா

பள்ளியில் படிக்கும் பொழுது முதன்முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றதும், மகிழ்ச்சி அடைந்த பல பெண்களில் நானும் ஒருத்தி.

ஆட்சி ஏற்ற புதிதில் நினைப்பேன், ஏன் இப்படி, யாரையும் அருகில் நெருங்க விடாமல், தள்ளியே  வைத்திருக்கிறார் என்று. அதற்கான விடை பேஸ்புக் வந்ததற்கு அப்புறம் கிடைத்தது. ஏதோ ஒரு காலத்தில், அவர் ஒரு நடிகருக்கு டாட்டா காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பதிவு செய்து அதன் கீழ், தனிப்பட்ட அவரின் வாழ்க்கையை  விமர்சித்து சில வரிகள் இருக்கும். அவரின் முதல்வர் பதவியின் கீழ் உள்ள செயல்பாடுகளை விமர்சிக்க வாக்களித்த எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கைக்குள், என்ன உரிமையில் உள்ளே சென்று நோண்டுகிறார்கள் என்று தெரியவில்லை?

இந்த அம்மா பாட்டுக்கு, யாரிடமாவது அருகில் இருந்து பேசுவது போல ஒரு படம் வெளிவந்தால், பலரின் வாய்க்கும் அவல் தான். அதற்காக காலில் விழும் கேவலத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், எனக்குள் எங்கேயோ இருக்கும் ஒரு குரூர புத்தி, 'யப்பா, என்னம்மா, எல்லாரையும் சுத்துல விடறாங்க, நல்லா வேணும்",  என்று எப்பொழுதேனும் குத்தாட்டம் போடுவதையும், நேர்மையோடு ஒப்புக்கொள்கிறேன்.

"சாதனை பேசும் ஈராண்டு
சரித்திரம் பேசும் பல்லாண்டு", என்று எழுதித் தரும் குழுக்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, செயல்களில் காட்டுங்கள், உங்கள் சாதனைகளை.

சரித்திரத்தை விடுங்கள்... வாழ்கின்ற பொழுதே நாங்கள் பேச வேண்டும் ம்மா.

ஏகப்பட்ட வழக்குகள், அவமானங்கள் இவற்றை எல்லாம் ஒரு ஆணுக்கு நிகராக எதிர் கொள்ளும் திறன் உங்களைக் குறித்து மலைக்க வைக்கையில், இலவசம் என்று போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் நேரத்தில் அறிவித்த தேவையற்ற சலுகைகள், புகழ்ச்சியான உரைகளைக் கண்டு இன்னுமும் மகிழ்ந்து கொண்டு இருப்பது இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அதே மாதிரி, நான் செய்தேன், நான் கொண்டு வந்தேன், என்னால் அமைக்கப்பட்டது, நல்லவற்றுக்கும் மட்டும் தன்னை முதன்மைப் படுத்துவதை முழுமையாக விட வேண்டும்.

ஒரு பெண் முதல்வராக இருந்த கால கட்டத்தில்
இத்தனை அணைகள் கட்டப்பட்டன
மின்சார உற்பத்திக்கு பல புதிய திட்டங்கள் போடப்பட்டன
சென்னையைப் போல பிற மாவட்டங்களுக்கும், எல்லா வசதிகளும் சமமாக பிரித்துத் தரப்பட்டன
பக்குவமான மாணவர்களை உருவாக்கும் கல்வி முறை கொண்டு வரப்பட்டது
விலைவாசி கட்டுக்குள் இருந்தது
வேலைவாய்ப்பு பெருகி இருந்தது
நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று கூறி மதுபானக்கடைகளை முற்றிலும் ஒழித்தது
மக்கள் நலத்திட்டங்கள் முழுவதுமாக மக்களை சென்றடைய ஆவன செய்யப்பட்ட அரசாக இருந்தது
.................... இது போன்ற அத்தியாவசியமான மாற்றங்களை நிகழ்த்தி, அடுத்து வருகிற முதல்வர்களுக்கு முன் மாதிரியாக இருங்களேன்.

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பேசும் திறன் பெற்ற முதல்வருக்கு
மக்களின் மொழி முழுதாகப் புரிந்தால் நன்றாக இருக்கும்.

நீ கொண்டு வந்த அதுனால மட்டுமே இது வேணாம்
நீ மட்டும் தண்டமா செலவு செஞ்ச, நான் இதுக்கு மேல செய்வேன்
நீ எனக்கு எவ்ளோ தண்ணி காட்டின, நான் உனக்கு காட்டு காட்டுன்னு காட்றேன் பாரு, என்று
போட்டி போட்டிக்கொண்டு செயல்படுத்தும் வெட்டியான நடவடிக்கைகளைப் பார்க்கையில்
உங்களை துதித்தவர்கள் மட்டுமே, பார்ரா, எங்க அம்மாவை என்று ரசிக்கலாம்.
மற்றவர்களுக்கு?
ஏன்த்தா இதுக்கா, உன்னைய, அங்கன உக்காரவச்சோம்னு தானே தோனும்.

நடத்தியே காட்ட வேண்டும், என்று நீங்கள் பிடிக்கும் அடம், பல தேவையற்ற செயல்களில் மின்னுகிறது.
இதே வீம்பை, நீங்க ஏன், மக்கள் நன்றாக இருக்க வேண்டும்... அதற்காக என்ன வேண்டுமானால் செய்வேன் என்பதில் காட்டக்கூடாது.

என்னென்ன செய்தார் என்று சாதகமாகவும், பாதகமாகவும் பட்டியலிட, ரமணா ஸ்டைலில் இரண்டு பக்கமும், தினந்தோறும் செய்திகளை மூளைக்கு ஏற்றி  போற்றிக்கொண்டும்... தூற்றிக்கொண்டும்.... உள்ள தொண்டர்கள் உள்ளனர். நீங்கள், என்ன செய்தாலும், அவர்கள் அப்படியே தான் இருப்பார்கள்.
அவர்களைத் தாண்டி, உள்ள மக்களாகிய எங்களைப் பாருங்கள்.
கருணை கொண்டெல்லாம் பார்க்க சொல்லவில்லை. நியாயமாக என்ன நோக்கத்திற்காக, இந்தப் பதவி என்று மட்டும் யோசித்து, அதற்குரிய வேலைகளை சரிவர செய்யுங்கள்.


ஈராண்டு சாதனையை நாளிதழ்கள் விளம்பரம் மூலமாக தெரியப்படுத்துவதை விட.......
செய்தியாகவே வெளியிட்டால்............................
எவ்வளவு நன்றாக இருக்கும்! 


இந்த தலைமுறையே வாழ்த்தும்படி, திறமையாக நிர்வாகம் செய்யுங்கள்.
வாழ்த்துகள்!




2 கருத்துகள்:

perumal karur சொன்னது…

ஒரு சாமான்யனின் மனசாட்சியாக இருந்து எழுதியுள்ளீர்கள்..

நல்லது நன்றி

Unknown சொன்னது…

உண்மைதான்..,