சனி, 4 மே, 2013

குமரேசன் அசாக்

 (ஜனவரி 22, 2013 அன்று முகநூலில் பதிந்தது.)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்பு நண்பர் ராஜ் ப்ரின்ஸ் , மூலமாக ஒரு நாள் கான்பெரென்ஸ் கால் மூலம், முதன் முறையாக தீக்கதிர் நாளிதழின் பொறுப்பு ஆசிரியராக இருக்கும் குமரேசன் அசாக் அவர்களிடம் பேசினேன். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், மிக எளிமையாக, நகைச்சுவையாக, சொல்ல வேண்டியவற்றை தெளிவாக சொல்வதில் வல்லவர் என்பதை அறிந்தேன்.

அதன் பிறகு, குறிப்பிட்ட இடைவெளியில், அலைபேசியில் தொடர்பு கொள்வதும், மதுரை வரும் பொழுது வீட்டிற்கு வர முடியாத நேரங்களில், ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் சென்று சந்தித்து விட்டு வருவதும், பிறந்த நாள் மட்டுமில்லாமல், எல்லாப் பண்டிகை நாட்களிலும் மறக்காமல் வாழ்த்துவதும் என்று எங்கள் பேரன்புக்கு உரிய நண்பராகி விட்டார்.

இதில் காலையில் நான் அனுப்பும், sms ஐ பிரித்து, மேய்ந்து வேறொரு கோணத்தில் அதையே பதில் good day, குறுந்தகவலாக அனுப்புவார். இங்கு என்னுடைய பெரும்பான்மையான நிலைத்தகவல்களில் அவருடைய கமெண்ட் கண்டிப்பாக இருக்கும். என்னுடைய மாத்தி யோசிக்கும் பார்வையை இன்னும் கூர்மைப்படுத்த செய்பவரில் ஒருவர். இங்கு, நான் எழுதிய 'அப்பாவின் இளவரசி', 'முதன் முறை செய்த ரத்த தானம்', இரண்டையும் வண்ணக்கதிரில் வெளியிட்டதோடு, 'தீபாவளி வெடி சத்தம் மங்கியது ஏன்?' என்ற கட்டுரையை எழுத வைத்தும் வெளியிட்டவர். ( எழுதுவதில், நான் எவ்வளவு சோம்பேறி என்று என் நண்பர்கள் அறிவர்)

சென்ற முறை சென்னை சென்ற பொழுது, தீக்கதிர் அலுவலகத்தை சுற்றி காண்பித்து, அங்கு உள்ளவர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து, எங்களின் சின்ன சின்னக் கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதில் அளித்தவர்.

ஒரு நாள் ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசும் பொழுது, திறமையான எழுத்தாளரான ராகுல் ஜி, யை அறிமுகப்படுத்தியவர்.

எப்பொழுது பேசினாலும், ஏதாவது ஒரு உபயோகமானத் தகவலை, பேச்சின் ஊடே விட்டு செல்பவர்.

இத்தனை நாட்களில், என்றும், தான் சார்ந்து இருக்கும் கட்சியின் கொள்கைகளை எங்கள் மீது திணிக்காதவர். மற்ற பேச்சுக்களைப் போல தான், கட்சிப் பேச்சும், சில வரிகளில் கடந்து செல்லும்.

காமராஜர், கக்கன் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. இவருடன் பேசும் பொழுது, இவரின், எளிமையும், ஆற்றலும், கடும் உழைப்பும், சேவை மனப்பான்மையும், அந்தத் தலைவர்களுடன் பழகி இருந்தால் இப்படி தான் இருந்து இருக்கும் என எண்ணியதுண்டு.
'அன்பே சிவம்' , விரும்பி ரசித்துப் பார்த்தப் படம். அதில், கமல்ஹாசன், பாத்திரம், இவரை காப்பி அடிக்கப்பட்டது போல தோன்றும் எனக்கு.

ஏகலைவனைத் தேடி குரு வரும் காலம் இது.
என் குருக்களில் ஒருவர் நீங்கள். நன்றி!

கற்றுக் கொள்ளவேண்டும் .... உங்களிடம் உள்ள நல்லப் பண்புகளை...
என்றும் உங்களை மதிக்கின்றோம் ... :)

நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன், மன நிம்மதியுடனும் வாழ வாழ்த்துகிறோம்!

(நிறைய நாட்களாக எழுத வேண்டும் என நினைத்தது, இன்று இறக்கி வைத்து விட்டேன்.

எதுவும் மிகைப்படுத்தி எழுதவில்லை. சொல்லப்போனால், இன்னும் சில விடுபட்டு இருக்கின்றன. ஏனென்றால் அவருக்குப் புகழ்ச்சியும் பிடிக்காது. எனக்கும் புகழ வராது. ஒரு அளவுக்கு மேல் போகும் பொழுது அப்படி ஒரு தோற்றத்தை தந்து விடலாம், என்பதால்......... full stop. 


1 கருத்து:

selvishankar சொன்னது…

//எதுவும் மிகைப்படுத்தி எழுதவில்லை. சொல்லப்போனால், இன்னும் சில விடுபட்டு இருக்கின்றன. //

மிகவும் சரிதான் தீபா..அனைத்து நிறைகளையும் சொல்ல இயலாதுதான்..ஆனால் சொன்ன சில நற்குணங்களே போறும்..

திரு குமரேசன் ஆசாக் அவர்களுக்கு என் அன்பும் வணக்கமும்.